நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

பாவண்ணன்



கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் புனைகதைகளையும் இணைய தளங்களிலும் இலக்கியச் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதினார். இதற்கிடையில் நீலக்கடல், மாத்தா?ரி என்னும் நாவல்களை எழுதி முடித்தார். தன் எழுத்தாக்கங்கள் வழியாகவே தன் ஆளுமையை வெளிப்படுத்தி தமிழ்ச்சூழலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவருடைய இடைவிடாத உழைப்பும் அக்கறையும் பெரிதும் மதிப்புக்குரியவை.

வாழ்வின் சிக்கல்தன்மையை முன்வைத்து உரையாடும் இவருடைய சிறுகதைகள் எக்கணத்திலும் அதை எளிமைப்படுத்திப் பார்க்காமல் சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இயங்குகின்றன. இதுவே இத்தொகுதியின் சிறப்பம்சம் என்று சொல்லலாம். ஒருசில கதைகளில் அந்த மையத்தை அவர் எளிதாக வந்தடைகிறார். சிலவற்றில் முட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கிற வழியை விலக்கமுடியாமல் தடுமாறி, சற்றே சுற்றியலைந்து களைப்போடு வந்தடைகிறார். இருவிதமான கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. எத்தருணத்திலும், கலையம்சம் குன்றாமல் ஒரு படைப்பை முன்வைக்கவேண்டும் என்பதில் இவருக்குள்ள ஈடுபாடு பாராட்டத்தக்க ஒன்று. இந்த ஈடுபாடும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும். இவருடைய சிறுகதைகள் புதுச்சேரி, பாரிஸ், இலங்கை என பல களங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவருடைய பின்னணித் தேர்வு ஒரு கதையிலும் பிசகவில்லை என்பதை சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.

“சன்னலொட்டி அமரும் குருவிகள்” இத்தொகுதியில் உள்ள முக்கியமான கதைகளில் ஒன்று. மழைத்தூறலுக்குப் பயந்த குருவிகள் இவை. சொந்தக் கூட்டை இழந்தவை. குளிரும் காற்றும் தாக்க நடுங்குபவை. தொடர்ந்து வானத்தில் பறக்கவோ, மரக்கிளையில் அமரவோ சக்தியில்லாதவை. உட்கார்ந்து ஆசுவாசமடைய அவற்றுக்கு ஈரமில்லாத ஒரு இடம் உடனடியாக தேவைப்படுகிறது. எங்கெங்கோ அலைந்தலைந்து இறுதியாக ஒரு வீட்டை அடைகின்றன. ஆனால் அவற்றுக்கு வீடு தேவையில்லை. சற்றே கொஞ்சமாக இடமிருக்கிற சன்னலோரம் மட்டுமே போதும். வீடு தனக்குரிய இடமல்ல என்பது குருவிகளுக்குத் தெரியாததல்ல. ஆபத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வந்துவிட்டன. அந்த ஆபத்துக்கட்டத்தில்கூட தன் எல்லையை மீறி உள்ளே செல்லவில்லை. நடுக்கத்துடன் ஓரமாக ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் குருவிகளைப்பற்றிய கதை அல்ல இது. கூடில்லாத குருவிகளைப்போல வாழ பொருத்தமான ஒரு இடமோ, நிலமோ இல்லாத மனிதர்களின் கதை. ஒருவன் இலங்கையைச் சேர்ந்தவன். இன்னொருவன் புதுச்சேரிக்காரன். இருவருமே சொந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். தங்குமிடம் தேடி குருவியைப்போல அலைகிறவர்கள். போலிக் கடவுச்சீட்டுகள்மூலம் நாடுவிட்டு நாடு வந்தது பிழையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களுடைய பயணம் ஒதுங்குவதற்கு ஒரு இடம்தேடி. உயிரைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு வேலையையும் தேடி. இலங்கைக்காரனாக அடையாளம் சுமந்து புதுச்சேரிக்காரனும் இந்தியனாக அடையாளம் சுமந்து இலங்கைக்காரனும் பயணப்பட்டு அகப்பட்டுக்கொள்வது ஒருவித துயர்முரண். அந்தத் துயர்முரண் தண்டனைக்குக் காத்திருக்கும் தருணத்திலும் அவர்களை புன்னகை புரியவைக்கிறது. நட்புடன் உணரவைக்கிறது. இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், குருவியின் படிமம் கதைக்கு அழகையும் வலிமையையும் சேர்க்கிறது. எளிமையும் பயமும் கொண்ட பறவை அது. பற்றிக்கொள்ள ஒரு பிடிமானம் தேடி வந்தவர்களை அடையாளப்படுத்த இதைத்தவிர பொருத்தமான படிமம் வேறென்ன இருக்கமுடியும்?

“நாராய் நாராய் செங்கால் நாராய்” என்பது இன்னொரு அழகான சிறுகதை.
தீராத வாழ்வின் துயரத்தை உணர்த்தும் சத்திமுத்தப்புலவரின் கவிதையைப்போலவே நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதையும் வாழ்வின் துயரத்தை முன்வைக்கிற ஒன்று. வானில் பறக்கும் நாரையின் பயணம் ஒரு செய்தியைச் சுமந்துகொண்டு பறக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் துயரத்தில் தோய்ந்திருக்கும் மனைவியிடம் தான் உயிர் பிழைத்திருப்பதையே செய்தியாகச் சொல்லியனுப்பிய புலவரின் அன்றைய துயரக்கதைதான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்நிறைந்த இலங்கைச்சூழலில் உயிருடன் இருப்பதே இன்றைய தேதியில் ஒரு பெரிய செய்தி. அதைச் சுமந்தபடி கடலுக்கு மேலே வானத்தில் அங்குமிங்கும் பறந்துகொண்டிருக்கின்றன நாரைகள். செய்தி சுமந்த நாரைகள் வானத்தில் பறந்துகொண்டிருக்க, புவியின்மீது ஒவ்வொரு கணத்திலும் உயிருக்குப் போராடும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காண்கிறோம். பதுங்குகுழி வாழ்க்கை, துப்பாக்கிமுனைக் கேள்விகள், எதிர்பாராத மரணங்கள் என எல்லாமே கட்டுக்கோப்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பீதிநிறைந்த படகுப்பயணத்தை வாசிக்கும்போது நம் மனமும் பீதியில் துவளுவதை உணரமுடிகிறது.

மனத்தின் கோலத்தை நுட்பமான சித்தரிப்புகளுடன் உணர்த்தும் சிறுகதை “புலியும் பூனையும்”. புலியும் பூனையும் வேறுவேறு ஆளல்ல. புலியாக இருக்கும் ஒருவரே ஒரு சமயத்தில் பூனையாகப் பதுங்கிப் பம்முகிறார். காலம் முழுக்க சீற்றம் நிறைந்த புலியாகவும் உறுமும் புலியாகவும் நகம்கொண்ட பாதத்தால் அறைகிற புலியாகவும் முரட்டுப் பிடிவாதமும் முறைக்கும் விழிகளும் கொண்ட புலியாகவும்மட்டுமே பார்த்த ஒருவரை சூழ்நிலையின் நெருக்கடிகள் பின்வாங்கிப் பதுங்கவைக்கின்றன. ரௌத்திரத்துக்கு நேர்எதிராக நடுக்கத்தை புலியின் முகத்தில் முதன்முதலாகக் காணநேர்கிற ஒருவர் எப்படி உணரக்கூடும்? உறுமலான அதட்டல்களால் கிட்டத்தட்ட ஒரு அடிமைபோல தன்னை நடத்துகிற கணவன் நடுங்கித் தடுமாறுவதை மிகஅருகில் உட்கார்ந்து அணுஅணுவாகப் பார்க்க நேர்கிற மனைவி எப்படி உணர்வாள். அதைத்தான் படிப்படியாக சித்தரித்தபடி செல்கிறது கதை. முதலில் ஒரு நம்பமுடியாமை. அச்சம். மரபின் பழக்கம் அவளை அப்படி அழுத்துகிறது. பிறகு மனஆழத்தில் சட்டென திரண்டெழுகிறது ஒருவித எதிர்ப்புணர்வு. தன் களிப்பு வெளிப்பட்டுவிடாதபடி அச்சமெனும் போர்வையைப் போர்த்தியபடி உள்ளூர கணவனுடைய நடுக்கத்தைக் கொண்டாட்டத்தோடு பார்க்கிறாள் அவள். ஆவேசத்துக்கும் நீண்ட உரையாடலுக்கும் இடம்கொடுக்கக்கூடிய தருணங்களில் எல்லாம் அவை வெளிப்பட்டுவிடாதபடி கவனமாக எழுதப்பட்டுள்ளது சிறுகதை. எந்த இடத்திலும் கலைத்தன்மைக்குப் பாதகம் நேராதபடி பார்த்துக்கொள்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நான் படித்த அளவில் இக்கதைகள் எனக்கு வழங்கிய அனுபவத்தையே இங்கு முன்னுரையாக எழுதியிருக்கிறேன். இத்தொகுதியை முதன்முதலாக வாசிக்க நேர்கிற இன்னொரு வாசகர் இதே திசையில் செல்லவேண்டும் என்பது எவ்விதமான கட்டாயமும் இல்லை. அவருடைய சுதந்திரப் பயணத்துக்கு இக்குறிப்புகள் ஒருபோதும் தடையாக இருக்காது. ஆனால், தன் வாசிப்பின் முடிவில் இதேபோல இன்னொரு முன்னுரையை அவர் எழுதிப் பார்க்க இது தூண்டுகோலாக இருக்கும்.

(நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு பாவண்ணன் முன்னுரை )

—————————————————————————————————–
சன்னலொட்டி அமரும் குருவிகள்- நாகரத்தினம் கிருஷ்ணா
விலை ரூ.75
வெளியீடு:
புதுமைப்பித்தன் பதிப்பகம்
ப. எண். 57, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை -600 083
தொலைபேசி 044 -24896979

_____________________________________________

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

பி.கே.சிவகுமார்


நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி:

நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வாரைக் கொண்டுவந்துள்ளார்.ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”

நாகரத்தினம் கிருஷ்ணாவின் முன்னுரையிலிருந்து:

”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் – புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்’ என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.

அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”

சிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் – லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் – நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் – ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் – விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் – இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் – நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.

மொத்த பக்கங்கள் 120. விலை ரூபாய் 70. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

பி.கே.சிவகுமார்



நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி:
நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வாரைக் கொண்டுவந்துள்ளார்.ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”

நாகரத்தினம் கிருஷ்ணாவின் முன்னுரையிலிருந்து:
”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் – புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்’ என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.

அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”

சிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் – லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் – நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் – ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் – விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் – இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் – நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.

மொத்த பக்கங்கள் 120. விலை ரூபாய் 70. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

அறிவிப்பு


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு