இந்தியா இருமுகிறது!

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

நாக.இளங்கோவன்


இந்தியா ஒளிர்கிறது என்று ஒரே இரைச்சல்!; ஒளி எப்படி இரைச்சலாகும் என்பதற்கு அண்மைக்காலத்தில் பா.ச.க அரசு பரிசோதனை செய்து காண்பித்தது. மக்கள் வரிப்பணத்தில் ‘உங்க நாடு ஒளிர்கிறது, உங்க வீடு ஒளிர்கிறது ‘ என்று கூப்பாடு போடுவதற்கு செலவளித்த தொகை உரூவாய் 450 கோடி என்கிறார்கள்.

இந்தியாவின் மின் விளக்கு ஒளிர்கின்ற வீடுகள் 56% மட்டுமே. 44% வீடுகளுக்கு மின்சாரமே கிடையாது. இந்த 450 கோடியில் சில விழுக்காட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றிருந்தால் அது அறிவார்ந்த செயலாக இருந்திருக்கும்.

‘எதற்கெடுத்தாலும் போராட்டம்; எதனையும் எதிர்க்கிறார்கள் ‘ என்று ஆளுங்கட்சிகள் பால் பாசம் கொண்டோர் புலம்புதல் உண்டு. இந்தியா ஒளிர்கிறது என்ற இரைச்சலுக்கு எதிராக சில கூச்சல்கள் கிளம்பிய பின்னர்தான் ஆளும் மத்திய அரசுக்கு உரைத்தது. கூச்சல்களும் போராட்டங்களும் இந்த நாட்டில் நிரந்தரமாக இருக்கத்தான் போகின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

ஆக அறிவற்ற செயல், மக்களின் வரிப்பணத்தை சூறையாடுதல், பகட்டான யாத்திரை மட்டும் ஊர்வலங்கள், மாநாடுகள், பயங்கர ஊழல் போன்ற எதற்கும் வாச்பாய் தலைமையிலான அரசு விதிவிலக்கல்ல என்பதை நிறுவுவதாகவே கடந்த 4/5 ஆண்டு கால ஆட்சி இருந்திருக்கிறது.

ஊழல் என்று எடுத்துக் கொண்டால், அதுவும் பா.ச.கவினரிடம் குறைவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் இலஞ்சம் வாங்குவதையே படம் பிடித்துப் போட்டார்கள்.

‘இந்தியா டுடே ‘ இதழின் புள்ளி விவரப்படி, இந்தியாவில் பள்ளிகள் + கல்லூரிகள் + மருத்துவமனைகள் எண்ணிக்கையைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவ்வளவு பேருக்கு மன நிம்மதி கிடைக்க வேண்டியிருக்கிறது.

39% தம்பதியினருக்கு தனி-அறை கிடையாது இந்தியாவில்.

60% வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை.

கிராமப் புறங்களில் 23% விழுக்காடு மக்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி கொண்ட வீடுகள் இருக்கின்றன. காலையில் தொடரியில் (இரயில்)

பயணிப்பவர்களுக்கு இது நன்கு புரியும். சரி நகர்ப்புறத்தில் என்ன நிலை என்று பார்த்தால் அங்கும் 30% பேருக்கு கழிப்பறை வசதி கிடையாது.

10,000 இலக்க மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 6 இலக்க மருத்துவமனைகள். அதிலும் சிறு மருத்துவ மனைகள்தான் அதிகம். அரசு மருத்துவ மனைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கல்வியென்று எடுத்துக் கொண்டால், பா.ச.க அரசு அதையும் காவி வடிவமாக ஆக்கி வருகிறது. அதிலாவது நேர்மை உண்டா என்றால், அதுவும் இல்லை. வரலாற்றையே மாற்றி எழுதி வைத்திருக்கிறது. பொய்யை மெய்யாக்கும் இழிவான பணியை செய்து வருகிறார்கள்.

கடந்த வருடம், கல்விக் கட்டணம் கண் மண் தெரியாமல் ஏற்றப்பட்டதில் பல கல்லூரிகளுக்குப் பிள்ளைகள் படிக்கக் கூடப் போகவில்லை. இது தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.கவின் கொடை. அடிப்படைக் கல்வியின் கட்டணத்தை ஏற்றி விட்டு, மானகைப் (management, iims) படிப்பின் கட்டணத்தைக் குறைக்கிறார்கள். அடிப்படைக் கல்வி கட்டண உயர்வால் கல்வி இல்லாமல் போவது பல்லாயிரக் கணக்கான பேருக்கு. ஆனால், ஐ.ஐ.எம் களில் மொத்தமாகப் படிப்பவர்களே ஓராயிரத்திற்கும் சற்று குறைவே. இது என்ன கல்விக் கொள்கையோ பார்வையோ தெரியவில்லை!

மொத்தத்தில் பணக்காரருக்குப் படிப்பு, பின்னர் சலுகை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

வேளாண்மையைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ‘உன் சமர்த்து, முடிந்தால் விளைவி; விளைந்தால் நீயே சாப்பிட்டுக்கொள்! ‘ என்ற நிலையை அரசுகள் எடுத்து விட்டன.

வேளாண்மையை நம்பி இருப்பவர் ஏதோ ஒரு சிறு தொகை அல்ல. 65% விழுக்காட்டு மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வசதிகள் செய்து தருவதை விட அடக்கு முறையையும், அறிவுரைகளையும் அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்திய அளவில், வெளிநாட்டுப் பெண்மணி பிரதமர் ஆகலாமா என்று மூலைக்கு மூலை கூவுகிறார்கள். இது தவறென்றால் ஞாயமாக வழக்கு மன்றத்திற்குச் செல்ல வேண்டும்! சட்டப்படி எதுவோ அதைச் செய்ய வேண்டும். அதைவிடுத்து, சட்டப்படி ஏற்றுக் கொள்ளப் பட்டதை தேர்தல் பிரச்சாரமாக்கியிருப்பது நாகரிகமான ஒன்றல்ல. அப்படியே அவர்களின் கொள்கையிலே ஞாயம் இருந்தால் பா.ச.க என்ன செய்திருக்க வேண்டும் ? தனது கடந்த அய்ந்தரை ஆண்டுகால + 13 நாள் ஆட்சியிலே, இந்தியாவில்

பிறந்திருந்தால் மட்டுமே பிரதமராகத் தகுதி வேண்டும் என்று சட்டம்

இயற்றியிருக்க வேண்டும்.

அதைச் செய்யவும் இல்லை பா.ச.க. அப்புறம் எதற்கு இந்தக் கூப்பாடு ? இது உண்மையான தேசப்பற்று இல்லை என்று எண்ண இடம் இருக்கிறதல்லவா ?

‘மண்ணின் மைந்தர் ‘தான் நாட்டை ஆளவேண்டுமென்று நினைப்பது நல்ல

சிந்தனைதான். மண் மேல் உள்ள பற்றையும் பிடிப்பையும் உரிமையையும் காட்டுவது அது.

ஆனால், இத்தாலிக்காரர் மண்ணின் மைந்தர் இல்லை என்பவர்கள், தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று சொல்பவரை ‘இனவெறியாளர், தமிழ் வெறியாளர், நாட்டைக் கெடுப்பவர்கள் ‘ என்றெல்லாம் பட்டம் கொடுக்கிறார்களே, அந்த நாக்குதான் நம்மை வியக்க வைக்கிறது.

அப்பொழுது எங்கே போகிறது இவர்களின் ‘மண்ணின் மைந்தர் ‘ வாதம் ? ஒரே நாக்கில் இரண்டு வாக்குகளை உதிர்க்கின்ற குழப்பவாதிகள் இவர்கள்.

ஒன்று சட்டப்படி நடக்க வேண்டும்! அல்லது மனசாட்சிப் படியாவது நடக்க வேண்டும். இரண்டும் இல்லாதவர்களின் கையில் இந்த நாடு!

இரட்டைக் குடியுரிமை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தியா, வெளிநாட்டில் பிறந்து இந்தியாவிற்கு வந்து ஆட்சி செய்ய விரும்பும் இந்தியரை ஆதரிப்பார்களா ? எதிர்ப்பார்களா ?

குசராத்தில் நடந்ததற்கு, வெளிநாட்டில் போய் வெட்கப் பட்டார் வாச்பாயி.

இராமதாசு வன்னிய மாநிலம் கேட்டால் அவரை அருவெறுப்புடன் பார்ப்பவர்கள் காசுமீரத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று நாணமின்றிச் சொல்கிறார்கள்.

ஆந்திர முதல்வர் மாதிரி எல்லா முதல்வர்களும் கிடைக்க வேண்டும். ‘அதோ பார் ஆந்திரா! ‘ என்று வியப்பவர்கள், அங்கு மட்டும் கடந்த வருடம் பட்டினிச் சாவு 2000க்கும் மேல் என்பதை ஆய மறுக்கிறார்கள்.

அருமையான ஆட்சி செய்வதாகச் சொல்லப்படும் சந்திரபாபுவும் தன்மேல் நம்பிக்கையின்றி தன் மேல் விழுந்த அனுதாப அலையை நம்பி தேர்தல் நடத்துகிறார். ஆந்திராவில் பட்டினிச் சாவும் பயங்கரவாதமும் தலைவிரித்தாடுகின்றன. தண்ணீர் இல்லா தமிழகத்தில் கூட பட்டினிச்சாவு ஒரு நூறு இருக்கும் அவ்வளவுதான்! தண்ணீர் வளங்கள் நிறைந்த ஆந்திரத்தில் பட்டினிச்சாவு 20 மடங்கு!

ஓரளவு ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் பரவாயில்லை. தமிழகத்திற்கு வரும் முதலீட்டாளர்கள், அடுத்த பறனையைப் (flight) பிடித்து வெங்காலூர்க்கு(bangalore) ஓடிவிடுகிறார்கள். கேட்டால், ‘அரசினரைக் கவனிக்க வேண்டும்; அதற்கு முன் பூசாரியின் அனுமதியும் வேண்டும்; நாங்கள் என்ன செய்ய ‘ என்கிறார்கள்.

ஏதோ இந்தியா இல்லையென்றால் கணியுலகே இல்லை என்ற நினைப்பு இன்னும் இந்தியர்க்கு உண்டு. மொத்த உலகின் கணினிச் சந்தையிலே கடந்த 10 ஆண்டுகளாக இன்னும் 2% பங்கை மட்டுமே வைத்துக் கொண்டே இந்த பேச்சு பேசுகிறது. டாட்டா, இன்போசிசு, விப்ரோ என்ற மூன்று நிறுவனங்களும் ‘பில்லியன் டாலர் ‘ கும்பணி என்ற நிலையை எட்டியிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இந்தியாவில் இருப்பவர்களை எல்லாம் சேர்த்தாலும் கணினித்துறை வணிகம் 9 பில்லியன் மட்டுமே. இது ஐ.பி.எம் மின் கணினிச் சொவ்வறைத் துறையின் வணிகத்தில் 4ல் ஒரு பங்கு மட்டுமே.

குறிப்பாக கவனிக்கத் தக்கது என்ன வென்றால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியக் கணினித்துறையில், கணிமேதைகள் இருக்கக்கூடிய கணினித்துறையில் உலகளாவிய ஒரு புதுக்கும் இன்னும் வரவில்லை ( சிறு அளவில் பரம் கணினி மட்டும் விதிவிலக்கு; கூடவே அசோக் சுன்சுன்வாலாவின் WLL புதுக்கைச் சொல்லலாம்). டாட்டாவோ, விப்ரோவோ, இன்போசிசோ பில்லியன் வெள்ளியைத் தாண்டியும் அந்த நினைப்பு அவர்களுக்கு இன்னும் வந்ததாகத் தெரியவில்லை.

வெறும் சேவகர்களாகவே வாழ்ந்து விடப் பழகிவிட்டனர் போலும்!.

உடனே, நமக்கு ‘ஏதோ இந்தளவு விஞ்ஞானம் வணிகத்தில் வளர்ந்திருக்கிறோம் – இன்னும் முன்னேறுவோம் ‘ என்று நம்பிக்கை கொள்ளலாமே என்று எண்ணத் தோன்றும்.

ஆனால், ஒரு 10/15 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவ்வளவு விஞ்ஞான வாழ்க்கை இல்லாவிடினும் மக்களிடம் அமைதி அதிகமாக இருந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!

மத விசம் ஏறி விட்டது. மேலும் மேலும் அந்த விசத்தை ஏற்றிக் கொள்கிறோம். சாதியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பன்னாட்டு சேவகர்களானதில் பெருமிதம் கொள்கின்றோம். நம் நாட்டு வேளாண்மையைக் கைவிடுகிறோம்.

பூச்சிக் கொல்லி மருந்து கொண்ட பெப்சி, கோக்கை தடுத்தோம், ஆனால், மீண்டும் அது சரியாகிவிட்டது என்று பொய் சொன்னோம். சாதாரண குளிர்பானங்களைக் கூட தடை செய்ய நம்மால் முடியாத கோழையாகி விட்டோம்.

நிறைய ஊழல் செய்கிறோம். அடிப்படை வசதிகளில் கூட நாம் முழுமை அடையவில்லை. அதற்கான அறிகுறியும் கூட இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் இந்தியா என்ன செய்கிறது என்று பார்த்தால் இந்தியா ஒளிரவில்லை. பெரிய சாதனைகள் நடக்க வில்லை. கடற்கரையில் மண்வீடு கட்டி விட்டு கைதட்டும் குழந்தைகளைப் போல இந்தியா ஒளிர்கிறது என்று கும்மியடிக்கின்றனர் பா.ச.கவினர்.

ஆகவே, ‘இந்தியா இருமுகிறது! ‘ என்றுதான் சொல்லவேண்டும். அது குருதி கக்கும் முன் காக்கக் கூடிய அரசும் தலைமையும் வேண்டும் இந்தியாவிற்கு. இந்தியர்களின் முயற்சியான ‘பா.ச.கவிற்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் ‘ என்ற எண்ணமும் ஏமாற்றத்தை அளித்திருப்பது உண்மை.

அன்புடன்

நாக.இளங்கோவன்

***

elangov@md2.vsnl.net.in

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்