நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
கண்ணன் பழனிச்சாமி.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்ட நிலையில், தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சில தலைவர்கள் கட்சி மாறியுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தாய்க் கட்சிக்கே திரும்பியுள்ளனர். பல திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். பிரபலமானவர்களை தங்கள் கட்சிக்குள் இணைப்பதில் பா.ஜ.க.-வே முன்னணியில் உள்ளது. பல பிரபலங்கள் கடந்த ஒரு மாதத்தில் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர். இந்தியா ஒளிர்கிறதோ இல்லையோ தங்கள் வாழ்க்கை ஒளிரும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளனர்.
‘நேரு குடும்பமே நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்கிறது. இது ஜனநாயக நாடா ? இல்லை மன்னராட்சி நடக்கிறதா ? ‘ என்று நீண்ட காலமாக கேள்வி எழுப்பிய பா.ஜ.க, இன்று மேனகா காந்தியும், வருண் காந்தியும் தங்களுடன் இணைந்தவுடன், ‘எங்கள் கட்சியுலும் இன்று நேரு குடும்பம் இருக்கிறது ‘ என்று பெருமிதமாகக் கூறுகிறது. இளைய தலைமுறை தலைவர்களில் வருண் காந்தி முன்னணி பெறும் பட்சத்தில், காவிப் படையின் தலைவராக அதன் பிரதம வேட்பாளராக ஒரு நேரு குடும்ப உறுப்பினர் தான் வரப்போகிறார். அப்போது என்ன சொல்லப் போகிறது பா.ஜ.க ? ஆக, சோனியாவையும், பிரியங்காவையும் (அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில்) எதிர்ப்பதற்கு, பா.ஜ.க.வின் கொள்கைகள், தற்போதைய தலைவர்களை விட வருண் காந்தியைத் தான் பா.ஜ.க. நம்புகிறது. நல்ல நிலைப்பாடு தான்( ? ?). ஜனதா தள சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்துள்ளனர். ஆரிஃப் முகமது கான், பங்காரப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர். நஜ்மா ஹெப்துல்லாவும் இணைவார் என நம்பப் படுகிறது. ஆனால், இவர்களெல்லாம் தற்போது அதற்கு கூறும் காரணங்கள் தான் சிரிப்பை வரவழைக்கிறது.
ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய முக்கியத்துவத்தை இழக்கும் போது, மாற்று வழியாக அடுத்த கட்சிக்குச் செல்லும் இவர்கள், இப்படியெல்லாம் பேச எந்தத் தகுதியுமே கிடையாது. மறைந்த மத்திய அமைச்சர் திரு. ரங்கராஜன் குமாரமங்கலத்தை இந்த விஷயத்தில் பாராட்டலாம். தன் அரசியல் சூழ்நிலைக்காக கட்சி மாறினாலும், தேவையில்லாமல் காங்கிரஸை அவர் விமர்சனம் செய்யவில்லை. ‘சோனியாவின் அயல் நாட்டவர் என்ற பிரச்னை முக்கியமானதே ‘ என்று இன்று கூறும் நஜ்மாவுக்கு, கடந்த ஆறு வருடங்களாக இது பிரச்னையாகப் படவில்லையா ? கட்சி கொடுத்த பதவியை அனுபவித்துக் கொண்டே அந்தக் கட்சியை (உங்கள் ஆதாயத்திற்காக) விமர்சிக்கும் போது, அந்தக் கட்சியின் தவறுகள் என்று நீங்கள் கூறும் செயல்களுக்கு ஒருவிதத்தில் நீங்களும் பொறுப்பாகிறீர்கள்.
தெலுங்கு தேசத்தில் இருந்து சமீபத்தில் காங்கிரசுக்கு மாறிய சந்திரபாபு நாயுடுவின் தம்பிக்கும் இது பொருந்தும். உத்திரப் பிரதேசத்தில் திரு. கல்யாண் சிங் பா.ஜ.க.-விற்கும், புதுவையில் திரு. கண்ணன் காங்கிரசுக்கும் மீண்டும் திரும்பியது வரவேற்கப்பட வேண்டிய செய்திகள். கல்யாண் சிங்காவது, ஒரு சில சமயங்களில் வாஜ்பாயியையும், அத்வானியையும் தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். ஆனால், பா.ஜ.க.-வில் இணைந்து விடுவார், அதன் புதுவை வேட்பாளரே கண்ணன் தான், இது குறித்து பா.ஜ.க. தலைவர் வெங்கைய நாயுடுவே தொலைபேசியில் பேசி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்த போதும், தன் அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறாமல் இருந்த திரு. கண்ணணை வெகுவாகப் பாராட்டலாம். தமிழகத்தின் மூத்த தலைவர் திரு. கருணாநிதி வழக்கம் போல பேசியுள்ளார். ‘பா.ஜ.க. வுடன் உறவு என்றுமே இல்லை. தே.ஜ. கூட்டணியில் தான் இருந்தோம் ‘ என்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, ‘பா.ஜ.க. வைப் பொறுத்த வரையில் மத்தியில் உறவு, மாநிலத்தில் நட்பு ‘ என்றார். மக்களிடம் உங்கள் முடிவை நியாயப் படுத்துவதற்காக, இப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டு செய்யவே வேண்டாம். அரசியல் கட்சிகள் நீங்களெல்லாம் எப்படியெல்லாம் கூட்டணி வைப்பீர்கள் என்பதை பார்த்து, பார்த்து எங்கள் மனதெல்லாம் பக்குவப்பட்டு ( ? ? ?) நீண்ட காலம் ஆகி விட்டது.
காங்கிரசுடன் நீங்கள் வைத்த அவசரக் கூட்டணிக்கும், நீங்களே அழகாகக் கூறிய பா.ஜ.க. – அ.தி.மு.க. ‘சரணாகதி ‘ கூட்டணிக்கும் சரியாய் போய் விட்டது. ஆகவே, உங்களைத் தேர்ந்தெடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் என்ன செய்வீர்கள் என்பது குறித்து பேசுங்கள். இந்த கூட்டணியை எல்லாம் விட பரபரப்பான செயல்களெல்லாம் தேர்தலுக்குப் பின்பு நடக்கும். எதிரணி அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில், தேச நலனுக்காக ( ? ? ? ?) அணி மாறி, அவர்களுடன் அமைச்சரவையில் பங்கேற்கவும் சில கட்சிகள் தயங்காது என்பதும் எங்களுக்கு தெரியும். ‘மக்கள் பா.ஜ.க. அணிக்கோ அல்லது மாற்றாக காங்கிரஸ் அணிக்கோ வாக்களிக்க வேண்டும். இதைத் தவிர்த்த பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது தேவையற்றது ‘ என்று கூறியுள்ளார். மிகச் சரியான வார்த்தை.
சட்ட மன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில் பா.ஜ.க-விற்கோ அல்லது காங்கிரசுக்கோ தான் வாக்களிக்க வேண்டும். இல்லாவிடில், 1996 – 1999 களில் இருந்த குழப்ப நிலை தான் மிஞ்சும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டன. வழக்கம் போலவே வேட்பாளர் தேர்வில் எல்லாக் கட்சிகளிலும் அதிருப்தி நிலவினாலும், பா.ம.க.-வில் அது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. தங்களின் வழக்கமான அதிரடி நடவடிக்கைகளை கட்சிக்குள்ளேயே காண்பித்துள்ளனர்.
தனித்து நின்றாலே வெல்லக் கூடிய அளவிற்கு செல்வாக்குள்ள தொகுதியை இழந்த போதிலும், தனது கட்சிக்குக் கட்டுப்பட்டு, ‘அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவேன் ‘ என்று கூறியுள்ள திருநாவுக்கரசரை பாராட்டலாம். அவர் அப்படி கூறிய பின்பும், தேவையில்லாமல் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் அ.தி.மு.க. வினரின் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு தான் குறைகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
— கண்ணன் பழனிச்சாமி.
- சிறகுகள்
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- முதன் முதலாய்
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- விடியும்!- நாவல் – (38)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- வாப்பாக்காக…
- பாதை எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாஜக ஒளிர்கிறதா ?
- கண்ணகி கதை இலக்கியமா ?
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- அன்னை
- கரும்பும் கசந்த கதை
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- நெருடல்களற்ற சுகம்
- திரிசங்கு சொர்க்கம்
- புத்த களமா ? யுத்த களமா ?
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- கோஷா முறை
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- கடிதம் மார்ச் 4,2004
- கடிதம் 4, மார்ச் 2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 3,2004
- Frontend – Backend
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- நிராகரிப்பு
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- ‘கானா ‘ தாலாட்டு
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- முடிவுக்காலமே வைட்டமின்
- சூட்சும சொப்னம்
- எல்லாம் சுகமே..
- என்னால் முடியும்
- பூ வண்ணம்
- பாசமே நீ எங்கே ?
- அருகிருக்கும் மெளனம்
- பிளாஸ்டிக்