ப மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ப மதியழகன்


வெறி கொண்ட பேரலைகள்

சங்கிலியால் பிணைத்தது போன்று
உறுமிக் கொண்டுள்ளது
சீறிப் பாயும் அலைகள்
வானுயர எழும்புகிறது
பரிதி பார்ப்பதற்கு பயந்து
மேகங்களுக்கிடையே பதுங்கிக்
கொள்கிறது
கடல் தனது கரங்களால்
கட்டிடங்களை கபளீகரம்
செய்கிறது
கரையை மோதும் அலையின் வேகம்
கண்டு உடம்பு நடுங்குகிறது
வாகனங்களை உருட்டித் தள்ளியபடியே
வெள்ளம் ஊருக்குள் நுழைகிறது
வெறி கொண்ட வேங்கையென
கடலலைகள் பாய்கிறது
கடல் எல்லை தாண்டி வந்துவிட்டதை
எண்ணி
பறவைகள் அச்சம் கொள்கின்றன
சடலங்கள் குவியலாக
தண்ணீரில் மிதக்கின்றன
பிணந் தின்னிக் கழுகுகள்
வானில் வட்டமிடுகின்றன
ஆழியின் கோரத்தாண்டவம
பேரழிவை ஏற்படுத்திச் சென்றது
கடல் சென்ற தடத்தைப் பார்த்து
மனித இனம் பேரச்சம் கொண்டது
சமுத்திர சர்ப்பம் தனது பிளவுண்ட நாக்கை
அடுத்து எப்போது நீட்ட இருக்கின்றது.

பசலை

தாழைக்குத் தண்ணீர் வேண்டும்
கொண்டலுக்கு மழையாகும்
கொடுப்பினை வேண்டும்
காற்றே சற்று நேரம் சும்மா கிட
மழையை எங்கே அழைத்துச் செல்ல
முயல்கிறாய் நீ
வெள்ளிச் சுருணையைப் போல்
மின்னல் ஒளி இறங்கிற்று
கரடுமுரடான பாதையில்
ரதம் செல்வதைப் போல்
வானம் இடித்திற்று
மகனைப் பிரிந்த தாய் போல
ஆகாயம் அழுதிற்று
மண் தான் பெற்ற
பெரும் பேறுக்காக
முகிலுக்கு நன்றி நவின்றிற்று
மழை விடைபெறும் சமயம்
பசலை பீடித்த பெண் போல
பூமி ஏங்கிற்று.

பிறை

நிலவற்று வானம்
மூளியாய் இருந்தது
வானத்துச் சந்திரனைக்
காணாத குழந்தை
யாரோ களவாடிவிட்டதாக
அப்பாவிடம் புகார் கூறியது
நிலா வளர்வதும், தேய்வதும்
அதற்கு வியப்பைத் தந்தது
விண்மீன்களை
ஆகாய ஆடையின்
துளைகளாக அது கருதியது
பறவையின் பாஷை
அதற்குப் புரிந்தது
மழையை கண் இமைக்காமல்
பார்த்து ரசித்தது
பொம்மைகளுடன் படுத்துறங்கியது
இரவுக்கனவுகள் விரியத் தொடங்கியது
சொப்பனம் என்பதை அறியாமல்
குழந்தை விளையாடிக் களித்தது
கண்விழித்ததும் தன் கூட விளையாடிய
கடவுளை தேடத் தொடங்கியது.

நீராம்பல்

அந்திநேரத்து வானம்
சூரியனை விழுங்கும்
ஆகாயத்தில் நட்சத்திரங்கள்
சிறுபுள்ளியாய்த் தெரியும்
கடல் தனது சுயரூபத்தை
மூடியே மறைக்கும்
மின்னலின் பேரொளி
கண்ணையே பறிக்கும்
இடிவந்து விழுந்து
பூமியைப் பிளக்கும்
கார்முகிலைப் பார்த்து
மயில் தோகையை விரிக்கும்
மழையின் ஸ்பரிசத்துககு
மரங்கள் ஏங்கியே தவிக்கும்
கும்மிருட்டானதை அடுத்து
பறவைகள் கூட்டுக்குத் திரும்பும்
கடலுடன் சங்கமிப்பதை எண்ணி
நதிநீர் ஓடியே களைக்கும்
காகித கப்பல்கள் கனவுகளைச்
சுமந்தபடி
கவிழ்ந்து போய் கிடக்கும்
நீரின் அளவையே நீராம்பல்
கொண்டிருக்கும்.

ப.மதியழகன்

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ப மதியழகன்


நிலாமுற்றம்
================
வானிலுள்ள வெள்ளித்தட்டு
சாதம் பரிமாறுபவர்
கைகளுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி காட்டும்
குழந்தைகள் எட்டிப் பிடிக்கப் பாயும்
தூக்கியெறியப்பட்ட கால்பந்து போல
அந்தரத்தில் நிலவு
நிலாச்சோறு சாப்பிடும்
கூட்டத்தோடு கலந்துவிடும்
பெளர்ணமி அன்று நிலா
கடலலைகளை
உயரெழும்ப வைத்து
வேடிக்கை காட்டும்
வெண்மதி
அமாவாசை அன்று
யார் வீட்டிற்கு
விருந்துக்குச் செல்வான்
சந்திரன்
குழந்தைகளுக்கு சோறூட்டும்
தாயிடம் கை நீட்டும் நிலா
கடைவாயில் வழியும் எச்சிலோடு
தனக்கும் ஒரு கவளம்
வேண்டி
எல்லோரையும் அண்ணாந்து
பார்க்கச் செய்யும்
அம்புலியை யாருக்குத்தான்
பிடிக்காது.

===============================
பித்து
================
சூசகமாய்ச் சொன்னார்கள்
அவளுக்கு கோட்டி பிடித்து விட்டதென
பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தாள்
ஆனால் அவிழ்ந்த கூந்தலும்
கலைந்த சேலையும்
அவளை அவ்வாறாக
எண்ண வைத்தது
காரணத்தை விசாரித்தால்
கதையொன்று சொன்னார்கள்
எல்லை அம்மனை அவமதிச்சா
இப்படித்தான் ஆகுமென்றார்கள்
எனக்குத் தெரிந்த மருத்துவரிடம்
அவளை அழைத்துச் செல்ல
அனுமதி கேட்டால்
மருந்தால சரியாகாது
ஆத்தா மனசு வைச்சாத்தான்
தெளியுமென்றார்கள்
எங்கும் செல்லமுடியாமல்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
அவளை பார்த்துவிட்டு
வந்த பிறகு
இரவில் கண்ணுறக்கம் வரவில்லை.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ப மதியழகன்


விளிம்பில்

கன்று ஈனுகிறது
பசு
சித்திரை வெயில்
உடலை வாட்டுகிறது
பருவம் தப்பி
பெய்கிறது மழை
விளைநிலங்களெல்லாம்
மனைகளாகிறது
கலியுகத்தில்
கடவுள் வீதியில்
அனாதையாகத் திரிகிறார்
வானம் போதுமா என்கிறது
பூமி போதுமே என்கிறது
இது சரியில்லை என்கிறது
கடல்
முக்காலமும் உணர்ந்த ஞானி
பிச்சை கேட்கிறான்.

மெளனத்தின் காலடித்தடம்

அவர்கள்
பேசிக் கொள்வதில்லை
ஒரே வீட்டில் தான்
இருக்கிறார்கள்
சைகைகளால் கூட
வார்த்தைகளை
பரிமாறிக் கொள்வதில்லை
அந்த வீட்டின் கதவுகளுக்கு
பூட்டு இல்லை
வீடெங்கும் விலையுயர்ந்த
பொருட்கள் இருக்கின்றன
அவைகளை அவர்கள்
உபயோகிப்பதில்லை
திருடன் புகுந்துவிடுவானோ
என்ற பயமுமில்லை
தாமரை இலை தண்ணீர்
போன்றது
அவர்களுக்கும் அந்த வீட்டிற்குமான
உறவு
வாழ்வின் அநித்யத்தை
உணர்ந்து வாழும்
அந்தர ஆன்மா அவர்கள்.

தீர்ப்பு

கேட்காமலே பதில் வரும்
மனைவியிடமிருந்து
அன்பு பகிர்ந்தளிக்கப்படும்
தாயிடமிருந்து
நேசம் பரிசோதிக்கப்படும்
காதலியிடமிருந்து
பாசம் பரிமாறப்படும்
குழந்தைகளிடமிருந்து
அக்கறை விநியோகப்படும்
கடன் கொடுத்தவர்களிடமிருந்து
நலமாய் வாழ வாழ்த்து வரும்
நண்பர்களிடமிருந்து
போகும் போது வருவதும்
வரும் போது போவதும்
இருக்கும் போது இறப்பதும்
இறந்த பின்னும் இருப்பதும்
கடைசி தருணங்களில்
கபளீகரமாவது
சிங்கத்தின் வாயினிலா
இல்லை
முதலையின் விழுங்கலிலா
யாருக்கும் விதிவிலக்கில்லை
தண்டணையிலிருந்து
மரணம் பீடு நடை போடும்
இப்புவனத்தில்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்