சைக்கிள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

விக்ரமாதித்யன்


சைக்கிள் இல்லாமல் கணபதியைப் பார்க்க முடியாது; இப்படிச் சொல்வது கூட தப்பு. சைக்கிள் இல்லாமல் கணபதியால் முடியாது. சைக்கிள் என்றால் கணபதி; கணபதி என்றால் சைக்கிள்.

காலையில் அவன் எழுந்து தேவர் டாக்கடைபோய் டா குடித்துவிட்டு வருவதிலிருந்து ராத்திரி சாப்பாடு முடிந்தானதும் கருப்பையாபிள்ளை கடைக்குப் போய்க்கோழிக்கோடு பழம் வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே சைக்கிளில்தான். கர்ணனை யாரும் கவச குண்டலங்களோடு பார்த்திருக்க முடியுமோ என்னவோ, கணபதியை சைக்கிளும் கையுமாகத்தான் பார்க்கமுடியும். கணபதியின் உயிரே சைக்கிள்தான்.

கணபதியிடம் பேனா இரவல் வாங்கலாம்; புஸ்தகம் கேட்டு வாங்கலாம்; எங்கேயாவது கல்யாணத்துக்குப் போகையில் வாட்ச், மோதிரம் கூட இரவல் வாங்கிக் கொள்ளலாம்; பத்து அம்பது கடன் கூட வாங்கிவிடமுடியும்; சைக்கிள் மட்டும் இரவல் வாங்க முடியாது.

கணபதி சைக்கிளைக் குழந்தைமாதிரி பராமரித்து வைத்திருப்பான்; காலையில் குளித்துவிட்டு வந்ததும் சுத்தமாகத் துடைத்து – வாரத்துக்கு ஒரு நாள் தேங்காயெண்ணெய் போட்டு — வைத்துவிட்டு, பிறகுதான் வெளியே எடுப்பான்.

கணபதிக்கு சைக்கிள் ஏன் இவ்வளவு முக்கியமாக வேண்டும். காரணம் இருக்கிறது. கணபதிக்குக்காலே சைக்கிள் தான். பாபவிநாசம் ஊரில் நாலைந்து கணபதிகள் இருந்தார்கள்; அவனை அடையாளம் சொல்ல ஊர்க்காரர்கள் வைத்த பட்டப்பெயர் நொண்டிக் கணபதி.

கணபதிக்கு இடதுகால் ஒச்சம்; சின்னவயசில் டைப்பாய்ட் காய்ச்சல் வந்து என்னவோ ஊசிபோட்டது ஒத்துக்கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டதாம். வலது கால் நல்ல உயரம்; அவன் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால் ஊனம் என்றே தெரியாது. ஆள் அம்சமாக இருப்பான்; நல்ல முகத்தீர்க்கம்; கலர்; சுமாரான உயரம்தான்; கொஞ்சம் சதை போட்டிருக்கும் உடம்பு; எட்டு முழவேட்டிதான் உடுத்துவான்; இல்லை, கைலிதான்; (ஏழெட்டு கைலிகள் வைத்திருப்பான்.) ஆஃப் சிலாக் தான் போடுவான்; அதுவும் ப்ளெயினாகத்தான் இருக்கும்; லைட் கலர்தான்; சட்டை லேசாகக்கூட கசங்கியிருக்காது; தலை சீவி நெற்றியில் மூன்ரு பட்டையாக விபூதியும் இட்டு வந்து நின்றால், பார்க்கப் பெரிய இடத்துப்பையன் மாதிரியே இருக்கும். அவனை முதல் தடவை பார்க்கிற யாருக்கும் கடவுளுக்குக் கண் இல்லையோ என்றுதான் தோன்றும். இவ்வளவு லட்சணமான பிள்ளைக்கு இப்படி ஒரு குறையா என்று நிச்சயம் மனசு கஷ்டப்படும். கணபதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறவனே இல்லை; உள்ளுக்குள் வேதனை இருக்குமோ என்னவோ வெளிப்பார்வைக்கு சந்தோஷமாகத்தான் இருந்தான்.

கணபதியின் அம்மா விக்ரமசிங்கபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆஸ்டலில் ‘மேட்ரன் ‘ ; சாப்பாடு போக சம்பளம்; ஆனால் ராவும்பகலும் விடுதியில்தான் இருக்கவேண்டும்; பிள்ளைகளுக்குத் தலைவலி காய்ச்சலென்றால் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவதா, யாராவது எப்பவாவது பெரியமனுஷியாகி விட்டால் ஊரில் கொண்டு போய் வீட்டில் விட்டுவருவதா, எந்த ஒரு காரியத்துக்கும் ராமலக்ஷ்மி அம்மா இல்லாமல் தீராது.

கணபதி ஒத்தை – ஒரு மகன்; அம்மாவுக்கு அவன்தான் எல்லாம். அப்பா பிழைப்புக்காக சிலோன் போயிருந்தார்; கணபதியைக் கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வந்தாள் அம்மா. ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் மகனை உயர்நிலைப்பள்ளி படிக்கவைத்து, கல்லூரியில் சேர்த்து, பல்கலைக்கழத்துக்கும் அனுப்பி வைப்பது இந்த அன்பினால்தான் சாத்தியமாகியிருக்கும். எலிமெண்டரி ஸ்கூல் படிக்கிறபோதெல்லாம் அம்மாதான் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவாளாம்; வந்துகூட்டிக்கொண்டு போவாளாம்; அம்மாதான் தூக்கிச் சுமந்து கொண்டு போய்விட்டிருக்கிறாள்; கணபதியே சொல்லியிருக்கிறான்.

கணபதி ரொம்ப புத்திசாலிப் பையன்; புத்திசாலியென்றால் பாடப் புஸ்தகத்தில்தான்; மனப்பாடம் பண்ணுவதில் மன்னன்; வகுப்பில் எப்போதும் முதலில் இருப்பான்; பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை வேறு கிடைத்துவந்தது; சரசரவென்று தமிழ் எம்.ஏ. வரமுடிந்தது. பி.ஏ.வில் முதல் வகுப்பு; மதுரைப்பல்கலைக்கழகத்தில் சுலபமாக இடம் கிடைத்தது. சங்க இலக்கியத்திலிருந்து சிற்றிலக்கியம் வரை, தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை எல்லாம் அவனுக்கு அத்துபடி.

விடுமுறைக்காலங்களில் கணபதி ஊருக்கு வரப்போக இருக்க, பெண் சிநேகிதம் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது; காதல் திருமணம்; அகப்பாடல்கள் படித்துவிட்டு காதலிக்காமல் இருக்கலாமா ? எம்.ஏ. முடிப்பதற்கு முன்பே கல்யாணமாகி விட்டது. தமிழ்ப் பேராசிரியர்கள் வந்திருந்து வாழ்த்திவிட்டுப் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். வெள்ளிக்கிழமை மத்தியானமானாலே கணபதிக்குப் பரபரப்பு வந்துவிடும்; பஸ்பிடித்து பாபவிநாசம் போய்விடுவான்; திங்கள் கிழமை காலை வகுப்புக்கு வந்துவிடுவான். கணபதியின் காதலோ கல்யாணமோ அவன் படிப்பைப் பாதித்துவிடவில்லை; ஒரு வேளை, அவன் முதல் வகுப்பில் வருவதற்குக்கூட உதவியாக அமைந்திருக்கலாம். இதையெல்லாம் யார் சொல்ல முடியும் ?

*

கணபதி பாபவிநாசத்தில் ஒரு பெரிய பங்களாவில் இருந்தான்; மனைவி கைக்குழந்தை, அவன் மூன்று பேருக்கும் அவ்வளவு பெரிய பங்களா வேண்டியதில்லை; ஆனால் அதுதான் கணபதி. புருஷனும் பொண்டாட்டியும் வாரம் தவறாமல் அம்பாசமுதிரத்துக்கு சினிமா போய்விட்டு வருவார்கள்; கல்யாணவீடு, சடங்கு வீடுகளுக்குத் தவறாமல் போய்ச் செய்துவிட்டு வருவார்கள்; வாழ்க்கையின் எந்த நல்ல விஷயத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான்; அவன் மனைவியும் அதுக்கு ஈடாக நின்றதுதான் ஆச்சரியம். அவளுக்கும் வாடல் வருத்தம் தெரியாது.

அவன் வீட்டுக்கு யார் போனாலும் காலையில் இட்லிவரும்; மதியம் தயிரோடு சாப்பாடு; சாயங்காலமானால் பிஸ்கட்டோடு டா; ராத்திரி சப்பாத்தி அல்லது உப்புமா; எதுவும் வேளை தப்பாது.

கணபதியின் ரசனையே தனி. சோப்பென்றால் மார்கோ; பவுடரென்றால் குடிகூரா; தலைக்குத் தேய்க்க நீலி பிருங்காதி தைலம்; பாமோலிவ் பற்பசை; சங்கு மார்க் கைலி. முகத்தைப் பளபளவென்று வைத்திருப்பான். உதட்டுக்கு மேல் சின்னதாக பட்டையாக மீசை ஒதுக்கியிருப்பான்; ஷெல்ப் ஷேவ்தான்; முடிவெட்டிக் கொள்ள மட்டும்தான் கடைக்குப் போவது; அதுகூட சிசர் கட்டிங்தான் முடிவெட்டியதே தெரியாது வெட்டிக்கொள்வான்.

எம்.ஏ.,வில் நவீன இலக்கியம் ஒரு பகுதி வைத்திருந்ததில், கணபதி தன் ஆர்வத்தில் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தான்; தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், வண்ணநிலவன் இவர்கள் தாம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்; புரியும். மெளனி, சுந்தரராமசாமியெல்லாம் படிப்பான் படித்துவிட்டு வந்து மணிப்பாண்டியனிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பான்.

படிக்கிறவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை; செல்லப்பிள்ளையாகத்தான் அம்மா வளர்த்திருந்தால்; அவன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டதே இல்லை. குடும்பமாயிற்று; குழந்தையாயிற்று; அம்மாதான் நிறை செலுத்திவந்தாள். கணபதிக்கு வேலை இல்லை; தமிழ் எம்.ஏ.,வுக்கு சுலபத்தில் வேலை கிடைக்கிற மாதிரி இல்லை. தமிழ் எம்.ஏ.,படிப்பே வேஸ்ட்தான்.

அம்மாவின் சம்பளத்தில் எவ்வளவுதான் முடியும். கணபதி கண்கலங்கிவிடக்கூடாதே என்று அம்மா கடன் வாங்கினாள்; வீட்டுக்காரி வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாதே என்று கணபதி கடன் வாங்கினான்; ஊரைச் சுற்றி கடன்; யார் யார் தருகிறார்களோ அவர்களிடமெல்லாம் கடன்; எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் கடன். அடுத்த மாசம் வேலைக்குப் போய்விடுவான் என்று அம்மாவுக்கு நம்பிக்கை; வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்து அடைத்துவிடலாம் என்பது கணபதி நினைப்பு.

கண்ணாடிக்கடை ரவி அண்ணாச்சியிடம் போய் நின்றிருக்கிறான் ஒருநாள். ‘எவ்வளவு பாக்கி தரணும் அண்ணாச்சி ‘ என்று கேட்டிருக்கிறான்; அண்ணாச்சி கணக்கெல்லாம் பார்த்துவிட்டு ‘அறுபத்தேழு ரூபாய் ‘ என்று சொல்லியிருக்கிறார். கொடுக்கிறதுக்குத்தான் கேட்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். டா சொல்லிவிட்டு வந்த கணபதி, ‘மேக்கொண்டு முப்பத்தி மூணு ரூபா குடுங்க அண்ணாச்சி.. நூறு ரூபாயா தந்துர்றேன் ‘ என்று கேட்டிருக்கிறான். அண்ணாச்சி என்ன சொல்ல என்று தெரியாமல் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

ஒரு நாள்.. இவனுடைய சங்கரி சொன்னாள்; ‘என்னத்தான்…கணபதியண்ணன் அம்மா பேர்ல மூணு பில்லு இருக்கு; எட்டு நூறு ரூபாய்க்கு மேல வருது. ‘ஆடிட் வருது, கட்டிருங்கம்மா ‘ ன்னு சொல்லிவிட்டேன்; ‘இப்ப கைல இல்ல.. நீயே கட்டிரு சங்கரி ‘ன்னு அம்மா சொல்லியனுப்பிட்டு, என்ன செய்ய. கைல இருந்து போட்டுக் கட்டிருக்கேன்…என்னிக்கு வாங்க. ‘

*

காலையில் எழுந்து பல்விளக்கிவிட்டு அம்மா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, வில்ஸ் ஃபில்டர் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் புறப்படுகிற நேரம்; கணபதி பதட்டத்தோடு இவனைத் தேடிக்கொண்டு வந்தான். ‘என்ன ‘ என்பது போலப் பார்த்தான் இவன். ‘மாடிக்கு வாங்க.. ஒரு விஷயம் பேசணும் ‘ என்றான். ஏதோ ஒரு காரியமாக வாசல் பக்கம் வந்த சங்கரி இவர்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு விசாரித்தாள்; இவன் ‘ஒண்ணும் இல்ல…சும்மாதான்… ‘ என்று மழுப்பினான். ஆனால் இவளுக்கு புரிந்து போயிற்று, கணபதியண்ணன் என்னவோ சிக்கலில் மாட்டிக்கொண்டான். இவன் கேட்டான்: ‘என்ன கணபதி ….சொல்லுங்க… ‘

‘இல்ல .. வந்து.. டாணா மைனர் பாண்டியன் சைக்கிள எடுத்திட்டு போயிட்டாரு.. வட்டி கட்டல; சொல்லிட்டிருந்தாரு; காலையில வந்து தூக்கிட்டு போயிட்டாரு. அம்மாட்டயும் சொன்னேன்..இனிமே எங்கியும் கேட்க முடியாது, வாங்க முடியாது; என்னால ஒண்ணும் செய்யக் கழியாதுன்னுட்டாங்க. ஒரு ஐநூறு ரூபா இருந்தா கொடுத்திட்டு சைக்கிள் மீட்டுறலாம்… வர்ற மாசம் அம்மாவுக்கு ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் கிடைக்கும்.. நீங்க வீட்ல சொல்லி வாங்கிக் கொடுத்தீங்கன்னா திருப்பித் தந்துருவேன். ‘

இவன் சங்கரியைப் பார்த்து, ‘என்னடி…எங்கியாவது வாங்கிக் கொடுக்க முடியுமா… ‘ என்று கேட்டான். பொதுவாகச் சொன்னாள்: ‘அண்ணன் தந்துரும்னா பெரியவனுக்கு முடியிறக்கத் திருப்பதி போறதுக்காக வச்சிருக்கத வேணா எடுத்துத் தர்றேன்.. ஆனா அண்ணனைக் காசு விஷயத்தில நம்பமுடியாத. ‘

*

இவளுக்கும் புதன்கிழமை தான் விடுமுறை. அன்றைக்குத்தான் சினிமாவுக்குப் போகமுடியும். இவனும் சங்குவும் தியேட்டரைவிட்டு வெளியே வந்து நடந்து கொண்டிருந்தார்கள். சங்கு இவன் தோளைத் தொட்டு சற்று தள்ளிக் கையைக் காட்டிக் காண்பித்தாள்.

கணபதி சைக்கிளை உந்தித் தள்ளி — ஓடுகிற குதிரையில் ஏறுவதுபோல — ஒரு வேகத்தில் கூடவே போய் ஏறிக் கொண்டான்; கொஞ்சம் தள்ளி மெதுவாக பின்னால் அவன் மனைவி கேரியரில் ஏறிக்கொள்ள, சைக்கிள் மீண்டும் வேகமாகக் கிளம்பியது.

இவன் திரும்பி சங்கு முகத்தைப் பார்க்க, ஒரு அபூர்வமான புன்னகை பளிச்சிட்டது.

==============

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்

சைக்கிள்-

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

இரவி ஸ்ரீகுமார்.


இந்த கதைக்கு ஹீரோ சரவணன்.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற காப்பி கொட்டை அரவை கடையில்

மேனேஜர்,சேல்ஸ்மேன், பியூன் எல்லாம்.

அது ஒரு செயின் ஸ்டோர்.

சென்னையில் மட்டுமல்ல பாண்டிச்சேரி, மற்றும் தமிழகத்தில் கிட்டத்தட்ட

எல்லா டவுன்களிலும் கிளைகள் உள்ள ஒரு ‘காஃபி கிரைண்டிங் ஸ்டோர்ஸ்’.

சரவணன் அந்தக் கடையில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.

மிக ஏழைக் குடும்பம். இவன் சம்பாதித்து ஏதாவது அனுப்பினால் தான், அவன் தாயாரும்,தம்பியும் சாப்பிடமுடியும்.தம்பி படிக்க முடியும்.

அப்பா- இருக்கிறார், அவ்வளவு தான்.

உள்ளூர் ஸ்பின்னிங் மில்லில் சூப்ரவைஸர் வேலை.நல்ல சம்பளம்.

சம்பளத்தை வீட்டுக்குத் தராத எத்தனையோ இந்திய குடிமகன்களில் ஒருவர்.

‘ஆறிலிருந்து அறுபதுவரை ‘ சினிமாவில் வரும் சின்ன வயசு ரஜினி மாதிரி தான் சரவணனும். கட்டாயத் தியாகி.

பன்னிரெண்டாம் வகுப்பு முதல் வகுப்பில் பாஸ்.

காலேஜ் சேரக் குடும்ப சூழ்நிலை சரியில்லை.

மாமாவின் கட்சிக்காரர் சென்னையில், குரோம்பேட்டையில்

வைத்துள்ள காஃபிப் பொடி அரவைக் கடையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேவையாம்.

சரவணன், பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அன்றே பண்ருட்டியிலிருந்து பஸ் ஏறினான்.இதோ, கடையைப் பார்த்துக் கொள்கிறான்.

மாதச் சம்பளம் 1000 ரூபாய்.

சாப்பாடுப் பேட்டா ஒரு நாளைக்கு 10 ரூபாய்.

பத்து ரூபாய் மூன்று வேளை சாப்பாட்டிற்கும் சேர்த்து. தங்கும் இடம் சரவணன் பொறுப்பு.

அதற்கு முதலாளி உதவ மாட்டார்-பணமாகவோ, இடமாகவோ.

‘ஊர் உலகத்தில பெரிய படிப்பு படிச்சவங்களுக்கே வேலை கிடைக்கறது குதிரை

கொம்பா இருக்குது. வேலையை ஒத்துகோடா ‘ – அம்மா மூக்கை சிந்தினாள்.

தம்பி, வழி அனுப்ப பஸ் ஸ்டாப் வரை வந்தான்.

‘மாமா, நானும் அண்ணன் கூட மெட்ராஸ் போறேன்.

அங்க ஏதுனாச்சும் வேலை தேடிக்கறேன்.

எனக்கு படிப்பு வேணாம். ‘-அழுதான்.

குமரன் மூன்றாம் வகுப்பு படிக்கும் சின்னப்பையன்.

சரவணன் அவனை சமாதனம் செய்தான்.

புத்தி சொன்னான்-

தான் படிக்க முடியாததை, அவனை தான் நன்றாக சம்பாதித்து படிக்க வைக்க இருப்பதை.

சென்னையில் இருந்து ஊர் வரும்போது, ஒவ்வொரு தடவையும்

அவனுக்கு ஏதாவது பொருள் வாங்கி வருவதாகச் சத்தியம் செய்தான்.

இதோ ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.

இது வரை ஊருக்கு போகவில்லை.

மாதாமாதம் அவனுக்கே குறைந்தப் பட்சம் 500 ரூபாய் செலவாகி விடுகிறது.

மீதி 500 ரூபாயை அம்மாவிற்கு அனுப்புகிறான்.

இத்தனைக்கும் அவன், இன்னும் இரண்டுப் பேரோடு சேர்ந்து ஒரு அறையை

வாடகைக்கு ஊரின் ஒதுக்குப் புறமான இடத்தில் எடுத்து இருக்கிறான்.

வாடகையில் அவன் பங்கு 150 ரூபாய்.

350 ரூபாயில் அவன் மதியச் சாப்படுப் போக

காலை நாஷ்டாவிற்கு, இரவிற்கு ஏதாவது என இரண்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரவணன் எப்போதாவது தான் GST ரோடில் இருக்கும் கடைக்கு நடந்து வருவான்.

அதற்கு அவனுக்கு அரை மணி நேரம் ஆகிறது.

ஊரிலிருந்து, அவன் சைக்கிளை எடுத்து வந்திருந்தான்.

‘இப்படி எல்லாம் ஆவும் ‘- எடைப் போட்டது சரியானதில் அவனுக்குத் திருப்தி.

எங்கேயும் சைக்கிள் பவனி தான்-

கடை வேலையாக இருந்தாலும் சரி.சொந்த வேலையாக இருந்தாலும் சரி.

நண்பன் கூட சொன்னான் –

‘சைக்கிள் மெய்டெனன்ஸ்கு முதலாளிக் கிட்டே காசு கேளு சரவணா ‘.

சரவணனுக்குத் தெரியும், இங்கு இருப்பது பொம்மை முதலாளி.பினாமி.

கேட்டால் தாவா கேட்பார்.இல்லாவிட்டால், சாக்கு சொல்வார்.

நிஜ முதலாளி, பக்கத்து மாநிலத்தில், தேசிய கட்சியில் பலம் வாய்ந்த அரசியல்வாதி.

அந்த மனிதரிடம் ஒரு காசுப் பெயராது.

‘வேண்டாம் மணி.நானே பார்த்துக்கறேன் ‘

மணி, இவனை பிழைக்கத் தெரியாதவன் என்று சொன்னான்.

சொல்லிவிட்டு போகட்டும்.

சைக்கிளை பராமாரிக்க அவனுக்குத் தெரியும்.

அம்மாவைப் போலவே, அவன் சைக்கிளும்.

வெய்யிலோ,மழையோ,பந்த்தோ இல்லை கலாட்டாவோ-

அவன் போகவேண்டிய இடத்திற்கு சமர்த்தாக அழைத்துச்செல்லும்.

சரவணன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டான்.

இத்தனை நாட்கள் அம்மாவைப் பிரிந்து இருந்ததில்லை.

‘இந்த ஞாயித்துக் கிழமை பண்ரூட்டி போகணும் ‘

முடிவு செய்தான்.

மணி எட்டு அம்பது.

இரவு ஒன்பது மணியோடு கடையின் அன்றைய வியாபாரத்தை

ஏறக்கட்டி விடலாம்.

சரவணன், கடையை மூடுவதற்கு தயார் செய்தான்.

அப்போது தான் கவனித்தான்.

கடைக்கு எதிர்தாற் போல் இருந்த காம்பெளண்டினினை ஒட்டி ஒரு கிழ மனிதர் சாய்ந்து சரிந்து உட்கார்ந்திருந்தார்.

எழுபது வயது இருக்கும்.

சரவணனுக்கு அவர் உட்கார்ந்திருந்த விதம் கலக்கத்தை கொடுத்தது.

கடையை வேகமாக மூடினான்.

வலதுப் பேண்ட் பாக்கட்டினுள் சாவியைத் திணித்துக் கொண்டான்.

கடையின் அன்றைக்கு வசூலான கேஷ்ஷோடு இருந்தப் பேக்கை சைக்கிளில் அவசரமாக மாட்டினான்.

கிழவரிடம் ஓடினான்.

‘தாத்தா…தாத்தா.. ‘-அவரை தொட்டு எழுப்பினான்.

கிழவர் அரைக் கண்களைத் திறந்தார்.

‘ம்.. ‘-முணகல்.

ஷேவ் செய்யப்படாத முகம், வெள்ளை முடிக் களைகளோடு.

பல சுருக்கங்களோடு நெற்றி.

விரிசல் விழுந்த ஆடிகளோடு கண்ணாடி.

லாரி நிறைய உணவினைக் கொண்டு நிரப்பினாலும் பள்ளம் விழுக்ககூடிய, ஒட்டிய வயிறு.

இப்படியாகக் கிழவர்.

சரவணனின் பதற்றம் கூடியது.

‘தாத்தா… ‘-அவருடைய கூன் விழுந்த தோள்களை உலுக்கினான்.

கிழவரிடமிருந்து எந்த விளைவும் இல்லை.

சரவணன், கடந்துச் சென்ற கார்களை நிறுத்தப் பார்த்தான்.

ஒரு வெள்ளை அம்பாசிடர் நின்றது.

******

‘சரி தம்பி தாத்தாவை ஜாக்கிரதையா பாத்துக்க..சரியா..நான் வரட்டா ? ‘-

வெள்ளை அம்பாசிடர் மனிதர் கிளம்பினார்.

சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

யாருக்கு யார் தாத்தா ?

வயசுக்கு மரியாதைக் கொடுத்து தாத்தா என்று சொன்னால்

இது என்ன வம்பு ?

‘தம்பி உன் பேரு என்ன ? உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறாரு.. ‘-நடு வயது நர்ஸ் சொன்னாள்.

சீஃப் டாக்டரிடம் போனான்.

‘வாப்பா..இவருக்கு இமீடியட்டா டிரீட்மெண்ட் கொடுக்கணும். அதுக்கு உடனடியா ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்டிடு. பணம் கட்டின உடனே டிரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுடலாம் ‘- இவனின் பதிலை எதிர்பார்க்காமல் கண்ணாடியை துடைத்துப் போட்டப்படி சீஃப் டாக்டர் போனார்.

கடைக்கு வந்தான்.மணி பத்திருக்கும்.

நல்ல காலம் சைக்கிள் சமர்த்தாக இருந்தது.கேஷ் பையும் தான்.

எடுத்துக் கொண்டான்.

நர்ஸிங்ஹோமில் பணத்தைக் கட்டினான்.

இரண்டாயிரம் ரூபாயைத் தவிர இன்னும் ஒரு நூறு இருந்தது.

அன்னிக்கு நல்ல வியாபாரம்.

‘இதுக்கு தான் போல. ‘-சரவணனுக்குத் தோன்றியது.

நிமிடங்கள் கரைந்தன.

இரவு இரண்டு இருக்கலாம்.

இன்னும் இவன் இருப்பிடம் போகவில்லை.

நண்பர்கள் கவலைப்படுவார்கள்.

வெளியில் வந்து ‘டா ‘ குடித்தான்.

திரும்பி வந்தப் போது, வேறு ஒரு நர்ஸ் இவனை எதிர்ப்பார்த்து நின்றிருந்தாள்.

கூடவே டாக்டர் ஒருவர்.

‘இதப் பாருப்பா. உன் தாத்தா..டிரீட்மெண்ட்டுக்கு ரெஸ்பண்ட் பண்ணாம்மா இறந்துட்டாரு.

இன்னும் ஒரு ஐந்நூறு ரூபாய் ஹாஸ்பிடல் சார்ஜ் பாக்கி இருக்கு.

அதைக் கட்டிட்டு பாடியை எடுத்துக்க. ‘- சொல்லிவிட்டு தன் கடமையை செவ்வனே செய்த திருப்தியில் டாக்டர் தன்னுடைய அறையை நோக்கி.

‘என்னது…தாத்தா இறந்துட்டாரா ? ‘- சரவணன் திகைத்தான்.

‘இன்னும் ஐநூறு ரூபாக்கு எங்க போறது ? ‘

அவனுக்கு ஹாஸ்பிடல் ஏசி யிலேயும் வியர்த்தது.

‘செத்துப்போய்ட்டப் பெரீவரு யாரோ எவரோ…எனக்கு என்ன வந்தது..

பணம் கட்டாம போயிடலமா ? ‘-நினைத்தப் படி நடந்தான்.

சைக்கிளிடம் வந்தான்.

அங்கிருந்த ஹாஸ்பிடல் பெஞ்சில் உட்கார்ந்தான்.

யோசிக்க ஆரம்பித்தான்.

‘கார்த்தால மொத காரியமா சைக்கிளை வித்து பணமாக்கனும். இறுதி சடங்கு வேற இருக்கே.அவ்வளவுக்கு சைக்கிள் போவுமா ? ‘

அவனின் யோஜனைத் தொடர்ந்தது.

******

ravi_srikumar@hotmail.com

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்