விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

இரா.முருகன்


மீண்டும் விஸ்வரூபம் தொடர்கிறது.
முந்திய அத்தியாயம் 68 இணைப்பு கீழே
விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

துர்க்கா பட்டனுக்கு மனசு சந்தோஷத்தில் றக்கை கட்டிப் பறந்தது. கூடவே ஒரு துள்ளி வருத்தமும்.

குழந்தை தீபஜோதிக்குக் கல்யாணம் வந்து கொண்டிருக்கிறது. பட்டனின் முதுகில் ஆனை சவாரி போன தீபம் இப்போது பதினாறு பிராயம் திகைந்த கன்யகை.

அம்மாவா என்று வாய் நிறையக் கூப்பிட்டு நேரத்துக்குக் கழிக்க ஆகாரம் விளம்புவதும், பட்டனுக்கு உடம்பு சுகக்கேடு என்றால் பிஷாரடியைப் பார்க்கக் கூட்டிப் போய் வருவதும், ஆத்மார்த்தமான கூட்டுக்காரிகளின் உள் வீட்டு வர்த்தமானம் பகிர்ந்து கொள்வதுமாக அவள் இப்போது ஒரு ஆத்மார்தமான சிநேகிதியுமாகி விட்டாள்.

துர்க்கா பட்டனுக்குக் கல்யாணம் ஆகிப் பெண் குழந்தை பிறந்திருந்தால் இப்படித்தான் அவன் மேல் பிரியத்தைப் பொழிந்திருப்பாள். அவனும் உயிரையே கொடுக்கவும் இதுபோல தயாரெடுப்பில் சதா இருந்தபடி இருப்பான்.

அவள் விஷயமாக பாண்டி பிரதேசத்திலும் கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளத்திலும் வரன் தேடி அலைந்த அனுபவம் துர்க்கா பட்டனுக்கு இன்னும் மனதில் நிறைவாக இருந்தது.

சுபாவமாகவே அலைந்து சுற்றி நடக்கிறதிலும் இட்ட வேலையைக் கர்ம சிரத்தையாகச் செய்து முடிப்பதிலும் உற்சாகம் கொண்டாடுகிற பட்டனுக்கு, இதெல்லாம் அவனுடைய ப்ரியமான தீபக்குட்டிக்காக என்றபோது இன்னும் இஷ்டமானதாகக் கலந்து போயிருந்தது.

ரெண்டு வருஷ அலைச்சல் இப்போது கல்யாணமாகக் குதிர்ந்ததில் அவனுக்குப் பரம சந்தோஷம். இந்தக் காரணமாக இனியும் அலைய வேண்டியதில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் என்ன, அலைய ஆயிரம் விஷயம் உண்டே. காலாற நடந்து கெறங்கி வராவிட்டால் உறக்கம் எளுப்பத்தில் வருமோ.

எல்லாம் பரிபூரணம் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை சத்தம் கூட்டி துர்க்கா பட்டனை எழுப்புவதில் ஆரம்பித்தது. நீளமாக நிறுத்தாமல் பேசினாள் அவள். பட்டன் கேட்க இல்லை. வேறே யாரோ கேட்க வேண்டியவர்கள் காதில் விழ.

எடோ துருக்கா. நாள் முழுக்க சாப்பாட்டுக் கடை. ராத்திரி வந்து அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு உறக்கம். எழும்பினா பின்னே துணி அலக்கல். பிராதலுக்கு சதா தோசை. கட்டன் காப்பி. திரும்பக் கடை. உன் பொழைப்பு உனக்குப் பெரிசு. இந்த வீட்டுலே அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க காரியம் தான் முக்கியம். என்னடா திரண்டு குளிச்ச பெண்குட்டி ஒண்ணு தங்கக் கொடி மாதிரி வளர்ந்து இருக்காளே. அவளை நல்ல வரனாப் பார்த்துக் கல்யாணம் கழித்து அனுப்பணும்னு ஒருத்தருக்காவது கருதல் உண்டோடா. நான் தான் நெல்லிப்பரம்பு முத்தச்சி மாதிரி ஒச்சை வச்சுட்டு கிடக்கேன். போடி கிழவின்னு அவங்க அவங்க போய் வந்துட்டு இருக்காங்க. எழும்பித் தொலைடா. உன்னை உபத்ரவிக்காம நானே இன்னிக்கு அலக்கிக் கூட முடிச்சுட்டேன். குறிசுப் பள்ளிக்கு ஆஜர் பட்டியல் கொடுக்கப் போயாகணும். அது மட்டும் இகத்துக்கும் பரத்துக்கும் போதும். குடும்பம், குழந்தை குட்டி எல்லாம் எப்படியோ போகட்டும் போ. அடே, எழும்பு.

கையில் வைத்திருந்த துணி காயப்போட உபயோகிக்கும் மரக் கொம்பால் போர்வைக்கு மேலே அவள் லொட்டு லொட்டென்று அடித்தது துர்க்காவின் கால் மூட்டில் இதமான வலியாக வந்து விழுந்தது. அந்த சுகத்தோடு தூக்கம் விழித்த துர்க்கா பட்டனுக்கு நிமிஷத்தில் நிலைமை மட்டுப்பட்டது.

பரிபூரணம் மன்னி புகார் எதுவும் அவனைக் குறித்து இல்லை. அண்ணா வேதையனைப் பற்றி அவளுக்கு இருக்கப்பட்ட குறைச்சல் எல்லாத்தையும் இப்படித்தான் கொட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. துணி உலர்த்துகிற கொம்பு கூட அதற்கு ஒத்துழைக்கிறது. துர்க்கா பட்டன் மட்டும் சும்மா கிடக்க முடியுமா?

மன்னி, நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரி. ஆனா, உங்களை யார் எப்போ கிழவின்னு அபாண்டமா சொன்னா சொல்லுங்கோ, அந்தப் பேப்பட்டியை சவட்டிட்டு வந்துடறேன். மகாலக்ஷ்மி மாதிரி என் மன்னியை நிந்திச்ச தூர்த்தன் வைதாரணி கடந்து ரௌராவாதி நரகம் ஒண்ணொண்ணாப் போய்த் தொலையட்டும்.

அவன் எழுந்து உட்கார்ந்து ரெண்டு கை விரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடக்கி சாபம் கொடுக்க, பரிபூரணம் படு சிரத்தையாக அலக்கிய முண்டும் மற்ற வஸ்திரமும் மடிக் கொடியில் கைக் கொம்பின் துணையோடு உலர்த்திக் கொண்டிருந்தாள்

அவள் மாமனார் கிட்டாவய்யன் காலத்தில் இருந்து இதுதான் வழக்கம். அதாவது மாமியார் சினேகாம்பாள் செய்து வைத்த ஒழுங்குக் கட்டுப்பாடு.

வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு இணையாக மூணு தாம்புக் கயிறுகள் ரெண்டு பக்கச் சுவரிலும் வலுவான இரும்பு முளை அடித்து அதிலிருந்து இறுகிப் பிணைத்துக் கட்டி இருக்கும்.

முதல் கொடியில் சுக்காகக் காய்ந்த வஸ்திரம். எடுத்து முறுக்கி தரித்துக் கொண்டு கிளம்ப வசதிக்காக அது. ரெண்டாம் கொடியில் நேற்றைக்கு அலக்கிய வஸ்திரம் முழுக்கக் காயாமல் கொஞ்சம் ஈர வாடையோடு. கடைசிக் கொடியில் இந்த நாளில் அலக்கின துணி எல்லாம் வரிசையாக ஈரம் சொட்டத் தொங்கும்.

தரித்துப் போக வேண்டியவர்கள் சரியான நேரங் காலத்துக்குத் தரித்துப் போனால் முதல் கொடி சூரியன் உதித்து ஒரு மணிக் கூரில் வெறுமையாகிக் கிடக்கும். பரிபூரணம் குளித்துக் காய வைத்த தலைமுடியில் வெள்ளை வஸ்திரத்தோடு, ரெண்டாம் கொடியில் இருந்து முதல் கொடிக்கு உலர்ந்த துணியும், கடைசிக் கொடியிலிருந்து நடுக்கொடிக்கு பாதி உலர்ந்ததையும் மாற்றுவாள். அப்புறம் அவளோ, துர்க்கா பட்டனோ அலக்கிய துணியை எல்லாம் கடைசிக் கொடியில் அந்தக் கொம்பால் உலர்த்துவதும் அவள் சிரத்தை எடுத்துச் செய்யும் காரியம்.

மடி வஸ்திரம் எல்லாம் தனியா வைக்கணும். அரைகுறை ஈர வஸ்திரம் பிணத்துக்கு உடுத்திக் களைஞ்ச அடி வஸ்திரம் மாதிரி நரகலா வாடை அடிக்கும். அதைத் தனியா போட்டு அக்கடான்னு விட்டா அதுபாட்டுக்கு காய்ஞ்சு அடங்கும். புதுசா அலக்கினதுக்கு இருக்கவே இருக்கு. ஒண்ணொண்ணும் தனி. கலந்துடாதே.

கல்யாணம் ஆகி வந்தபோது சினேகாம்பாள் தன் மருமகளுக்குப் படிப்பிச்சுக் கொடுத்த முதல் வீட்டுப் பாடம் அதுதான். அதுமட்டும் இல்லை. களைந்த வஸ்திரத்தை எல்லாம் பின்னங்கட்டில் பிரம்புக் கூடையில் சேகரிக்கிற ஏற்பாடும் அவள் உண்டாக்கி வைத்துவிட்டுப் போனதுதான்.

அவள் பிறந்து வந்த ஆலப்பாட்டு தமிழ் பட்டன்மார் குடும்ப நடைமுறை அது. வைக்கத்தில் பரிபூர்ணம் வீட்டுப் பரம்பில் துணி காய வைத்து மர அலமாரியில் மடித்து வைத்து அணிந்து கொள்கிற பரிபாடியிலிருந்து ரொம்பவே மாறுபட்டது. பட்டன்மார் ஆச்சாரம்.

மூணு கொடி நடைமுறையில் இருந்து, பூண்டு கிள்ளிக்கூடப் போடாமல் சமையல் செய்வது, அமாவாசைக்கு வெங்காயம் விலக்கல் வரை ஒரே மாதத்தில் கரதலப் பாடமாகக் கற்றுக் கொண்டு சிநேகாம்பாளையே அசத்தி விட்டாள் பரிபூரணம்.

சிநேகாம்பாளுடைய ஆலப்பாட்டுத் தமிழ்க் கொச்சை மட்டும் அவள் நாக்கில் சிக்க மறுத்து விட்டது. என்ன போச்சு. இல்லாமலேயே இப்படி ஒரு தங்க விக்ரகம் போல் ஒரு பெண்குஞ்சைப் பெற்று வளர்த்துப் பெருமையோடு நிற்கிறாள்.

அந்தக் குட்டிக்கு வரன் பார்க்க இங்கே இருக்கிற தடிமாட்டு ஆண்பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் என்ன, அப்பனான இக்னேஷியஸ் வேதையர் சுவாமிக்கு ஆயாசமாக இருக்கிறது. சமையலில் பூண்டு சேர்த்தால் இந்த அசமஞ்சம் போகும். நாக்கில் ஏறின விறுவிறுப்பு காரியத்திலும் தட்டுப்படும்.

சரிதானேடா துருக்கா?

துணி உலர்த்திக் கொண்டே அரைச் சிரிப்போடு துர்க்கா பட்டனை நோக்காமலேயே கேட்டாள் பரிபூரணம். அவள் மனசில் ஓடின எண்ணம் எல்லாம் அர்த்தமானது போல் துர்க்கா பட்டன் அப்போது சொன்னது இது –

மன்னி, கவலையை விடுங்கோ. நான் இன்னிக்கு கடைக்குப் போகலை. தமிழ்ப் பிரதேசத்துக்கு யாத்திரை. ஜாதகம் பொருந்தி இருக்கற சம்பந்தம் கிடைக்காம படி ஏற மாட்டேன். ஜிவ்வுனு ஒரு பூண்டு ரசம் மாத்திரம் உண்டாக்கி சாப்பாடு போட்டு அனுப்புங்கோ.

பூண்டு ரசம் தயாரானது. நம்பிக்கை இல்லை என்றாலும், கிட்டாவய்யன் ஜீவியவந்தனாக இருந்த காலத்தில் ஜோசியனை வைத்துக் கணித்த தீபஜோதிப் பெண்குழந்தையின் ஜன்ம நட்சத்ர ஜாதகமும் அப்புறம் பரிபூரணமே முன்கை எடுத்து துர்க்கா பட்டன் மூலம் உண்டாக்கின ருது ஜாதகமும் கள்ளியம்பெட்டியில் பத்திரமாக நாலு மூலையிலும் மஞ்சள் தடவி பத்திரமாக இருக்கின்றன.

ருது ஜாதகத்தைக் கணித்தது அரசூர் அரண்மனை ஜோசியராக இருந்த அண்ணாசாமி அய்யங்காரின் வம்சத்தில் வந்த பூச்சி அய்யங்கார் என்ற சோழியன். அரசூர் சாமா மூலம் அது சாத்தியமானது.

குழந்தைக்கு அத்தையான பகவதி அம்மாள் சகல ஒத்தாசையும் செய்து அந்த ஜாதகக் கடுதாசை ஒரு பட்டுப் புடவை, ஒரு பவுனில் மோதிரம், காதுக்கு ஜிமிக்கி, தலையில் வைக்க தங்க ராக்கோடி இப்படி நாலைந்து நகைநட்டோடு சர்வ ஜாக்கிரதையாக அனுப்பி வைத்திருந்ததை பரிபூரணம் மறக்கவில்லை.

அந்தப் புடவை உடுத்தத் தயாராக ஜாதகத்தோடு கூடப் பெட்டியில் இருக்கிறது. நகை எல்லாம் வேதையன் பத்திரமாக இரும்பு பீரோவில் பூட்டி வைத்திருக்கிறான். அவனுக்குக் கரிசனம் இல்லை என்று சொல்ல முடியுமா என்ன?

துர்க்கா பட்டன் அலைச்சல் இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஒரு மாசம் போல் ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் ஒரு சேர கடைக்கு மட்டம் போட்டு விட்டு கண்ணூர், சாவக்காடு, ஏற்கனவே சொன்ன ஆலப்புழை, ஆலப்பாடு, கன்னட பூமியில் மங்கலாபுரம், மல்ப்பே இப்படி பல இடம் அலைந்தும் பிரயோஜனம் இல்லை.

வேதத்தில் ஏறின பிராமணர்கள் அரிதாகவே தட்டுப் பட்டார்கள். கொங்கண பிரதேசத்தில் நாலு தலைமுறைக்கு முந்தி அப்படியானவர்கள் இருந்ததென்னமோ வாஸ்தவம் தான். ஆனால் மீனும் மாமிசமும் இல்லாமல் ஆகாரம் உள்ளே இறங்காது அவர்களுக்கு எல்லாம்.

வீட்டுக்கு கல்யாணம் கழித்து வருகிற பெண்குட்டிக்கும் மீன் கறி பாகம் பண்ணத் தெரிந்திருக்கணும் என்பதை வேதையன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

வேதத்தில் ஏறினவனாகவும் இருக்கணும். கோழி முட்டை தவிர வேறே மாமிச பதார்த்தம் புசிக்காதவானகவும் இருந்தாகணும். வயசும் இருபதுக்கு மேலே தாண்டக்கூடாது. ஒரு உத்தியோகம், இல்லையோ பூர்வீகர் விட்டுப் போன ஆஸ்தி, பள்ளிக்கூடம் முழுக்கப் போய் போர்ட் பரீட்சை குடுத்து ஜெயித்த வித்யாப்யாசத் தகுதி இத்தனையும் கட்டாயம் தேவை. கையில் கால்காசு கூட இருக்க வேணாம்.

வேதையன் சொன்னபடிக்கு ஒரு ஒற்றை வரன் கூட அங்கெல்லாம் அமையாது வெறுங்கையோடு திரும்பி வந்தபோது தமிழ்ப் பிரதேசத்தில் இப்படியான குடும்பங்கள் தஞ்சாவூர் பக்கம், சரியாகச் சொன்னால் திருச்சிராப்பள்ளியில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்று குரிசுப் பள்ளிக்கு அந்த ஊர்ப்பக்கம் இருந்து வந்த பிரசங்கியார் தெரிவித்தார். சந்திக்கத் தோதாக சில நபர்களின் பெயர் விலாசமும் அவர் வேதையனுக்குக் கொடுத்தார்.

வேதையனே நேரில் போக முடிவு செய்திருந்தாலும், வருடாந்திரப் பரீட்சை நேரமாதலாம் கூடி வரவில்லை. வழக்கம் போல் துர்க்கா பட்டன் தான் இதற்கும் சுற்றிக் கெறங்க வேண்டி வந்தது.

அடுத்த நாள் தமிழ் பேசுகிற திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தான் அவன். வேதத்தில் ஏறின தமிழ் பிராமணர்கள் இருக்கப்பட்ட ஊர் அது என்று வேதையன் தகவல் சொல்லி இருந்தான்.

போக வேண்டிய இடத்துப் பெயரையும், வழியையும், சந்திக்க வேண்டிய மனுஷர்களின் விலாசங்களையும் எழுதின ஹோ ஏண்ட் கோ கம்பெனி டயரி ஒன்றையும் வேதையன் துர்க்கா பட்டனுக்குக் கொடுத்து வழிச் செலவுக்கு தகுந்த துரைத்தனத்துப் பணமும் ஒரு தோல் சஞ்சியில் பத்திரமாக வைத்துத் தந்தான்.

திருச்சிராப்பள்ளியில் மேரித் தோப்பு எங்கே இருக்கிறது என்று பட்டன் டயரியைப் படித்து வழியை மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் மறந்து விட்டது. பிரம்மாண்டமான அந்த மலைக்கோட்டையையும், மேலே இருக்கிற கணபதி கோவிலையும் சுற்றி வந்து அந்த ஊரின் அதி உஷ்ண சூழ்நிலை காரணமாக உடம்பு தொப்பமாக நனைந்து போய் ரெண்டு தடவை கொள்ளிடத்தில் குளித்து வஸ்திரம் மாற்ற வேண்டிப் போனது.

நல்ல விதமாக வந்த காரியம் முடிந்தால் பக்கத்தில் தான் சீரங்கம், அப்புறம் அதென்ன ஊர், குருக்கள் புடவை கட்டிக் கொண்டு அம்பிகைக்கு பூஜை செய்வாரே. பட்டன் ஈரம் உலராத குடுமியைப் பறக்க விட்டுக் கொண்டு ஆற்றங்கரையில் நின்று டயரியைப் புரட்டினான்.

திரு ஆனைக்காப்பு. கண்ணடை எங்கே போச்சு. மடி சஞ்சியில் இருந்த மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு திரும்பப் படிக்க அது திருவானைக் கோவில்.

ஆனைக்கோவிலுக்கும் போகணும். முன்னால் மேரித் தோப்பு. வேதண்ணா டயரியில் எழுதிக் கொடுத்த தகவல் சரியானது தான். ஆனால் அது போதாது. நாலு பேரை விசாரித்தால் முழுக்க முழுக்க பாண்டித் தமிழில் அல்லாது வேறு அந்நிய பாஷையில் பேசுவது இல்லை இங்கே யாரும்.

பொம்மனா நீர்?

கன்னடம் கலந்த தமிழில் அவனை விசாரித்த இனிப்பு மிட்டாய்க் கடைக்காரன் ஓசூர்க்காரனாம். அவனிடம் முழுக் கன்னடத்திலேயே பேசி ஒரு மாதிரி வாங்க வேண்டிய சகல தகவலையும் வாஙகிக் கொண்டான் துர்க்கா பட்டன்.

அதுக்கு சன்மானம் தரமுடியாது ஆதலால் நாலு பொட்டலமாகக் கட்டிய அரை வீசை அல்வாவையும் காசு கொடுத்து வாங்கியானது. போகிற வீடுகளில் சின்னக் குழந்தைகள் இருக்குமானால் வெறுங்கையோடு போய் நிற்க வேண்டாமே.

ஜோசப் பரசுராம அய்யர் என்ற முதல் விலாசத்தில் வேதையன் குறித்திருந்த மனுஷர் பரலோகம் போய் பதினைந்து வருஷம் ஆகி விட்டது என்று பட்டனுக்குத் தெரிய வந்தபோது விசனமாக இருந்தது.

மேற்படி பரசுராம பட்டரின் புத்திரர்கள் வேதத்தில் இருந்து இறங்கி சுய ஜாதிக்கே திரும்பிப் போனதாகவும், அங்கே அவர்களை ஏற்றுக் கொள்ளாததால், சென்னைப் பட்டணம் போய் வெள்ளைப்படுகிறதை சுவஸ்தப்படுத்துகிற மருந்து தயாரித்து விற்று அமோகமாக ஜீவிக்கிறதாகவும் தெரிய வந்தது.

ஸ்ரீமடத்தின் அங்கீகாரம் அவர்கள் தனத்துக்கும் அவர்களுக்கும் கிடைத்ததால் பட்டணத்தில் சத்காரியங்களை முன்கை எடுத்து நடத்துகிறவர்கள் அவர்கள் தானாம். வேதபாடசாலை, கோவில் கும்பாபிஷேகம், சமஷ்டி உபநயனம், ஜாதகம் பரிமாறிப் பொருத்தம் பார்த்து கல்யாணம் நடத்திக்கொடுக்க ஒத்தாசை செய்யும் மகாசபை இப்படி எத்தனையோ சொல்லலாமாம். ஆனாலும் என்ன செய்ய? முழு பிராமண சம்பந்தம் தவிர வேறே எதையும் கருத மாட்டார்களாம்.

துர்க்கா பட்டன் படி ஏறின அடுத்த விலாசம் ரெண்டு தலைமுறைக்கு முந்தி சீர்காழி பக்கம் அஷ்ட சகஸ்ர வகுப்பு பிராமணர்களாக இருந்து, கலாசாலையில் படிக்க வேண்டி தன உபகாரம் கிட்டியதால் வேதத்தில் ஏறினவர்கள் என்று தெரிந்தது. கல்யாண வயதில் வீட்டில் பிள்ளை இருந்தாலும், மலையாளக் கரையில் பெண் எடுக்க அவர்கள் யோசிப்பதாக துர்க்கா பட்டனுக்கு அர்த்தமானது.

யட்சி மாதிரி மயக்கி ரத்தம் குடிக்கிற பெண்டுகளா நம்ம தேசத்தில் இருக்கப்பட்டவர்கள்? பட்டன் எத்தனை யோசித்தும் அப்படி யாரும் நினைவுக்கு வரவில்லை. இருந்தால் அதில் ஒருத்தி பட்டனைக் கல்யாணம் கழித்து பீஜத்தில் அழுந்தக் கடித்து குருதி பானம் பண்ணி இருப்பாளே?

என்னை விடவா அவளுடைய அரையின் கீழ் உபச்சாரம் லகரி ஏற்றும்?

பட்டன் மனசில் இருட்டுக் குகையில் இருந்து எழுந்து வந்த பரசு சிரித்தான்.

சவமே, செத்து ஒழி.

பட்டன் வெறுங்காலை சவட்டி கல்படியில் உதைத்தபடி கொள்ளிடக் கரையில் இன்னொரு தடவை குளிக்க இறங்கின போது சாயந்திரம் ஆகியிருந்தது.

அவன் திருவானைக்கோவிலுக்குப் போனபோது ராத்திரி அர்த்தஜாமம் முடித்து புடவவ கட்டின குருக்கள் சந்நிதியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

அம்பிகே, நம்ம் தீபஜோதிக் குட்டிக்கு ஒரு நல்ல ஆம்படையான் அமைய ஆசிர்வாதம் பண்ணும்மா.

பட்டன் வேண்டிக் கொண்டபோது தோளில் புடவையை அங்க வஸ்திரம் மாதிர்ப் போட்டுக் கொண்டு தூரத்தில் நடந்த அர்ச்சகர் இருட்டில் திரும்பிப் பார்த்தார்.

பொம்மனா நீர்?

அவர் கேட்டது போல் இருந்தது.

நீ வீட்டுக்குப் போடாப்பா குழந்தே. சம்பந்தம் தானே தேடி வந்திருக்கும்.

யார் குரலோ பட்டன் காதில் சொன்னது. அர்ச்சகர் இல்லை. பெண்குரல். வாத்சல்யமானது. அம்மையைப் போல், பாட்டித் தள்ளையைப் போல்.

என் பேத்தி குட்டியம்மிணிக்கு ஒரு வரன் கிடைக்குமாடா துர்க்கா?

இருட்டில் கேட்ட அந்தக் குரலை சுவர்க்கோழிகள் அடக்கி விட்டன.

துர்க்கா பட்டன் திரும்பத் திரும்பக் கோவிலுக்குள்ளே பார்த்தபடி வெளியே வந்தான்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

இன்னிக்குப் பலபலன்னு விடிஞ்ச மொதக்கொண்டு உனக்கு கடிதாசு எழுதிண்டு இருக்கேன். வயித்திலே பசி. தாகம். தெருவோடு போற வெள்ளைக்காரன் கிட்டே வயித்தைத் தொட்டுக்காட்டி பல்லை இளிச்சு ஒண்ணும் ரெண்டுமா காசு தண்டினேன். நாலு ரொட்டித் துண்டு. நதித் தண்ணீ தகர டப்பாவிலே. போதும்.

இன்னும் கொஞ்சம் நேரத்திலே இருட்டு வந்து கவிஞ்சுடும். அப்புறமா ஆத்தங்கரை ஓரமா, இல்லே பாலத்துலே ஒரு முடுக்குலே கட்டையைக் கிடத்தினா காலம்பற பொழச்சுக் கிடந்தா பாத்துக்கலாம். பிச்சைக்கார பொழப்பு.

அதுக்குள்ளே உனக்கு எழுதி முடிச்சுடணும். தபால்லே அனுப்பக்கூட காசு கிடையாது. அனுப்பினாலும் எனக்குத் தெரிஞ்ச விலாசத்துலே நீ இருப்பியோ, உனக்குப் படிச்சு சொல்ல யாராவது உண்டோன்னு தெரியாது. நீ படிக்காட்டாலும் உன் தாயார் புரிஞ்சுப்பான்னா நிம்மதியோட சாவேன். லோலா என்னைத் தீர்த்துத் தலை முழுகினாலும் லவலேசமாவது அபிமானம் என்பேரிலே இருக்காதா என்ன?

கிராமத்துலே இருந்து கோமாளி உடுப்பும் செத்தவன் கிட்டே திருடின காசும் வயித்திலே அவன் எச்சில் ஊறின ரொட்டியுமா ஓடினேன்னு சொன்னேன் இல்லியா? கால் சுபாவமா நம்ம ஊரு, நம்ம வீடுன்னு இழுக்கறது. மனசு சட்டுனு முழிச்சுண்டுது. பொணமே, எங்கேடா வீடும் மண்ணாங்கட்டியும் தெருப்புழுதியும்?

லோலாச்சி ஒரு தீர்மானத்தொட எல்லாத்தையும் தீர்த்து விடுதலைப் பத்திரம் வாங்கித்தான் ரெண்டு நாளாச்சே. இனிமே படி ஏறினா உன் பொட்டலத்தை அறுத்து வாயிலேயே திணிச்சு சாக்கடைப் பன்னி மாதிரி தெருவிலே கிடத்திடுவா.

ஆமாடா கொழந்தே வைத்தாஸே. கல்யாணியோட குச்சே கதின்னு கிடந்தது கூட உங்கம்மாவுக்கு ஒண்ணும் பஞ்ச மாபாதகமாப் படலே. செட்டியார் கிட்டே சேர்த்து வச்சிருந்த தொகையிலே குறையறதே, என்ன பண்ணினீருன்னு கேட்டா.

நான் சீட்டுப் பணத்துலே கொஞ்சம் நெருக்கடி வந்ததாலே எடுத்துண்டேன்டீன்னு சமாளிச்சேன். சீட்டுக் கணக்கைக் காட்டுடா நாயேன்னு விடாம கேட்டதோட மட்டுமில்லாம, அரைகுறையா கணக்கு வழக்கு தெரிஞ்ச ஒரு கிழட்டு காப்பிரியை அதையெல்லாம் பரிசோதிக்கச் சொல்லணும்னு கூட்டி வந்து வேறே பிடிவாதம்.

ஏண்டி சிறுக்கி, நீ ஆம்படையானா, நானா? போகத்துலே கூட நான் தானேடி மேலே எப்பவும்? காசும் மசிரும் உனக்குச் சொல்லிட்டு நான் புடுங்கணும்னு எந்தத் தேவிடியாப் புள்ளை சாஸ்திரத்துலே எழுதி வச்சுருக்கு. சொல்லுடி தேவிடியாளேன்னு நான் அவள் பிருஷ்டத்துலே சூரல் கம்பாலே ரெண்டு தட்டு பலமாத் தட்டினேன்.

இப்படி ஆரம்பமான சண்டை அன்னிக்கு அவ என் இடுப்புக்குக் கீழே இறுக்கிப் பிடிச்சு நெறிச்ச வலியிலே பிராணன் போக நான் கத்தி மூர்ச்சையான மாதிரி மூச்சு அடக்கிச் சவம் போல கிடந்தேன்.

உனக்கும் எனக்கும் தீர்ந்துதுடா ரெட்டி. உன் அசுத்தமான குதம் இந்தப் படியேறி இனிமே வந்தா வெட்டிப் பலி வைக்கவும் யோஜிக்க மாட்டேன்.

கொட்டையை நசுக்கிண்டே நாலஞ்சு காகிதத்தைக் கொடுத்து கையொப்பம் போடச் சொன்னா. கல்யாணியோட ராக்கூத்து அடிச்சுட்டு வந்த அசதியிலே எனக்கு உடம்பே ஓஞ்சு கிடக்கு. இவளானா பத்ரகாளியா ரகளை பண்றா. அக்கப்போர் முடிஞ்சா கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கலாம்.

விடுடி ராட்சசின்னு என்ன மன்னாடியும் பலம் இல்லே. போறது போன்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

கோர்ட்டு கச்சேரி நாலு நாள் அடச்சிருக்கு. திறந்த உடனே சட்டப்படி உனக்கு ரத்து பண்ணின உத்தரவு வந்துடும். ஓடிப் போ சாத்தானேன்னு காறித் துப்பினா.

ஜீவனாம்சம்னு ஒரு சல்லி கூட கொடுப்பேன்னு சொப்பனத்திலேயும் நினைக்காதேடி தடிச்சின்னு வாசல்லே நின்னு மீசையைத் தடவிட்டு கத்தினேன்.

போடா நோஞ்சான். உன் சிரத்திலே இருக்கற ரோமமும் இதுலே எனக்கு இருக்கறதும் ஒண்ணுதான்னு லோலாச்சி எங்கேயோ கைவச்சு அபிநயிச்சா.

நினைச்சுண்டா வழிச்சுப் போடற அந்த மயிருக்குக் கிடைக்கற மதிப்பு கூட இந்த ரெட்டியானுக்கு இல்லை. அங்கே கோமாளி உடுப்போட படியேறி அவளோட புதுப் புருஷனுக்கு, அதாண்டா உன்னோட இன்னத்தி அப்பன். அவனோட நிறுத்தினாளோ, இன்னும் நாலஞ்சு அப்பனை உனக்கு ஏற்படுத்தியிருக்காளோ இந்தக் கடுதாசை நீ படிக்கற போது. தெரியலை போ.

எவனாவது கருப்பனுக்கு ஒத்தாசையா, அவளோட கட்டில் பக்கத்துலே நின்னு மண்ணெண்ணெய் விளக்கு பிடிக்க எனக்கு கவுரதை இடம் கொடுக்காதுடா வைத்தாஸே.

ஓடி ஓடி எங்கெங்கோ குச்சிலும் சாவடியிலும் ஊர்ப் பொதுவிலும் எல்லாம் ராத்தங்கி, யார் யாரோ பெரிய மனசு பண்ணிக் கொடுத்த சகலமான ஆகாரத்தையும் உசிரோடு ஜீவிச்சு இருக்க வேண்டிய ஒரே காரணத்துக்காக சந்தோஷமா ருஜிச்சு சாப்பிட்டேன். நாலஞ்சு காப்பிரிச்சிகளுக்கு ஆம்பிளை தேவடியானாவும் படுத்துப் பணம் பண்ணினேன். தடிமாட்டுக் கருப்பனோ, ஒடிசலா உசரமா வளர்ந்து நிக்கற வெளுத்தானோ கிடைக்காட்ட, வத்தக் காய்ச்சிப் பய வேண்டியிருந்தது அந்தச் சீமாட்டிகளுக்கு.

உங்கம்மா லோலாவைப் பத்தி அப்படி நான் சொன்னா நீ கோபப்படுவே. உனக்கு அது நியாயம். எனக்கு இதையெல்லாம் சொல்றது மனசுக்கு இதம். என்னமோ போ.

கோமாளி உடுப்போட போனதாலே அங்கங்கே கூத்தாட வேண்டியிருந்தது. கள்ளுக் குடிச்ச குரங்கு மூக்குப் பொடியை ஆசனத் துவாரத்திலே ஏத்திண்டு குதிக்கற மாதிரி யாரோ டொம் டொம்முனு கொட்டி முழக்கின தாளத்துக்கு ஆடினேன். இங்கிலீஷும் தமிழும் நம்ம ஊர் பாஷைகளோட கலப்புமா கர்ண கடூரமா வேறே பாடினேன். எவனையும் உக்கார வச்சு சோத்துக்காக வாய் உபச்சாரம் பண்ணலே. மத்த எல்லாம் பண்ணியாச்சு ஏக கோலாகலமா.

சமுத்திரக் கரைப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும் முதல் காரியமா தாணாக் கச்சேரி எதிலும் என் பெயர் அங்க அடையாளம் எழுதி ஒட்டி வச்சிருக்கானான்னு மனசு படபடக்கத் தேடினேன். ஆயிரக் கணக்குலே காசை மோசம் பண்ணிட்டு கட்டின பெண்டாட்டிக்கும் பட்டை நாமம் சாத்திட்டு பொழுது ஒரு பக்கம் விடிஞ்ச போதே தப்பிப் பொழச்சு வந்தவன் ஆச்சே.

ஒருத்தன் ரெண்டு பேர் இல்லே லோலாச்சி அதுவும் இல்லாட்ட பெரிய கருப்பன் செட்டி இப்படி யாராவது புகார் எழுதின மகஜர் கொடுத்திருந்தாலும் துரைத்தனத்து போலீஸ் மோப்பம் பிடிச்சுண்டு வந்து பிருஷ்டத்திலே வெடுக்குனு பிடுங்கி திரும்ப இருட்டு ஜெயில்லே ஜீவ பரியந்தம் அடைச்சு வச்சுடும். மெட்றாஸ்லேயாவது களி கிடைக்கும். இங்கே பூச்சி புழு, நத்தைன்னு வென்னீர்லே வேகவைச்சுப் போடுவான்னு நினைக்கறேன்.

நல்ல வேளையா எந்த தாணாக் கச்சேரியிலும் என் பெயர் இல்லை. லோலா நல்லவதான். போன சனியன் போய் ஒழிஞ்சது. காசு போனா என்ன சம்பாதிச்சுக்கலாம். நிம்மதி திரும்பக் கிடைச்சது பெரிய சங்கதி இல்லையான்னு சமாதானம் செஞ்சுண்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போயிருக்கலாம்.

தோட்ட வேலை ஜனங்களுக்கு இருக்கவே இருக்கு பிராப்தமும் கலியும். நம்ம பிராப்தம் சேர்த்த பணத்தை ரெட்டிக் கண்டாரவாளி அடிச்சுண்டு போகணும்னு நம்ம தலையெழுத்து இருந்தா யார் மாத்த முடியும். தன நஷ்டம்னு ஜோசியன் சொன்னது பொய்க்குமா என்ன? கலி முத்தலை. காசு போனாலும் உசிரு மிச்சம்.

இப்படி மனசைத் தேர்த்திண்டு கரும்புத் தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சக் கிளம்பிப் போயிருக்கலாம். வண்டை வண்டையா ரெண்டு மாசம் திட்டிட்டு பொண்டாட்டியோட படுத்து எழுந்து நித்தியப்படி காரியத்தை கவனிக்கறதுலே அவனவன் முழுகியிருக்கலாம்.

ரெண்டு மாசமாவா நான் தேசாந்தரியா சுத்தினேன்?

பின்னே இல்லியா? இனிமேலும் திரிய முடியாதுன்னு ஸ்திதி. உடுத்த உடுப்பு நஞ்சு போய் லாலி லாலின்னு குண்டியிலே கிழிஞ்சு தொங்கறது. கால்லே வங்குசொறி மாதிரி ஏதோ பற்றி சதா அரிப்பு. இனிமேலும் சுத்தவோ ஆடிப் பாடி பிச்சை எடுக்கவோ கருப்பிகளுக்கு தேக ஊழியம் செய்யவோ இயலாத ஸ்திதி.

பகவானே பார்த்து அனுப்பின மாதிரி யுத்தம் பலமாச்சு. அது வந்ததே ரொம்ப தாமதமாத்தான் எனக்குத் தெரியும். கல்யாணி தான் ஒரு ராத்திரி ஜோலி எல்லாம் முடிஞ்சதும் யுத்தத்துக்கு நம்ம ஊர்லே மட்டும் ஆள் சேர்க்கலே ரெட்டிப் பயலே, இங்கேயும் கட்டு மஸ்தான பசங்களை தேடிக்கிட்டு அலையறாங்கன்னா.

நான் வேணா அதுலே ரெண்டு மூணு பேரை உனக்குப் பிடிச்சுண்டு வரட்டான்னு கேட்டேன். அவள் வேறே யாரோடயாவது சல்லாபமா இருக்கறதை குரிச்சி போட்டு உக்காந்து ரசிக்கணும்னு என்னமோ வெறி. அதுலே அவ வீட்டுக்காரன் மட்டும் வேண்டாம்னேன். அவன் குரங்கு நாயை விடக் கேடு கெட்டவன் ஆச்சே.

கல்யாணி சொன்ன வார் ஆபீசை கடல் கரைப் பட்டணத்துலே பார்த்தேன். நாலோ அஞ்சு பேரா காப்பிரிகள் கால் சட்டையை மாட்டிண்டு தலையிலே பழைய கங்காணித் தொப்பியை பழசு விக்கற கடையிலே வாங்கியோ குப்பையிலே பொறுக்கியோ தூசி தட்டிப் போட்டுண்டு வரிசையிலே நின்னுண்டு இருந்தது கண்ணுலே பட்டுது. நானும் போய் வரிசைக் கடைசியிலே நின்னேன்.

கால்லே அரிப்புத் தாங்காமா சொரிஞ்சு ரத்தம் கட்டிப் போயிருந்த இடத்தைச் சுத்திக் கட்டியிருந்த சுருணையை பிரிக்கலேன்னு உறைச்சது. இதோட போனா குஷ்டரோகின்னு விரட்டிடுவானேன்னு அவுத்து வீசினேன். கேட்டா, ராத்திரியிலே இருட்டுலே ஏதோ ஜந்து கடிச்சு படை மாதிரி கிளம்பிடுத்து. காப்பிரி வைத்தியன் மருந்துலே சுவஸ்தமாயிண்டு இருக்குன்னு சொல்லிக்கலாம். கப்பல்லே ஏத்தி எங்கேயாவது அனுப்பின அப்புறம் நடுக் கடல்லே போடா திரும்பன்னு அனுப்ப முடியுமா என்ன?

எங்கே கூட்டிண்டு போவான்? யுத்தம் எப்படி பண்றது? பிராமணனாப் பிறந்தவன் ஷத்திரியனா யுத்தம் பண்ணவா முடியும்? யாரு, நீயாடா பிராமணன்ன்னு மலையாளத்தான் சிரிக்கற சத்தம் ஸ்பஷ்டமாக் கேட்டது. அந்தக் களவாணி எங்கேயும் போகலே. என் மனசுலேயே விக்கிரமாதித்தன் சுமந்து போன வேதாளம் மாதிரி உப்பு மூட்டை தூக்க வச்சு சதா கூடத்தான் இருக்கான். கல்யாணியைக் கூட அசுர பலத்தோட மூணு போகம் அனுபவிச்சது அவன் தான். நான் இல்லே.

நானும் இல்லே ஸ்வாமி. உடம்பு இல்லாம உசிரோட மாத்திரம் அலைஞ்சுண்டு இருக்கேன். ஸ்தாலி சொம்பைக் கொடுத்தா வச்சுக்க துப்பு இல்லாம தொலைச்சுட்டே. அது கோர்ட்டு கச்சேரிக்கும் உன் தமையன் வீட்டுக்குமா உதச்சு விட்ட பந்து மாதிரி மாறி மாறிப் போய் விழுந்துண்டு இருக்கு. உள்ளே எங்கம்மா வேறே கடைத்தேத்துடான்னு கெஞ்சறா. என் பொண்ணு குஞ்சம்மிணி.

அவன் வழக்கம்போல பிலாக்கணம் பாட நான் காலில் சுத்திச் சீழ் படிந்த சுருணையோடு கூட அவன் நினைப்பையும் அவிழ்த்து வீசி எறிந்தேன். பின்னாலே பார்த்தேன். இன்னும் ஏழெட்டு பேர் என்னை விட சொங்கியா நின்னாங்க. அவங்களை முன்னாலே போக விட்டுட்டு நான் ஆகக் கடைசியா நின்னேன்.

அவா யாரையும் துரை ஏறெடுத்தும் பார்க்கலே. நான் இங்கிலீஷ்லே வந்தனம் சொல்லி யார் என்னன்னு வர்த்தமானம் வேறே கூட்டிச் சேர்த்தேன். வாராங்கல் ஸ்வதேசி வரதராஜ ரெட்டி சன் ஓஃப் எர்ரா ரெட்டி சன் ஓஃப் ஒபுல் ரெட்டிகாரு.

துப்பாக்கி பிடிச்சு பழக்கம் இருக்கான்னான். கட்டைப் பேனாவாலே கணக்கு வழக்கு எழுதியிருக்கேன். நல்லா சைவ பட்சணம், மிலிட்டேரி சாப்பாடு எல்லாம் பாகப்படுத்துவேன்னு சொன்னது அவனுக்கு ரொம்பவே இதமா இருந்தது போல.

யோவ் ரெட்டி, துப்பாக்கி பிடிக்க அப்பியாசம் பண்ண வேண்டி வரும். உம்மை இப்போ சிரத்தைக்கு லங்கர்லே சேத்துக்கறோம். சரியான்னான்.

லங்கர்னா என்ன எழவுன்னு தெரியாம முழிச்சேன். ஏய்யா, மதராஸ்காரன்கறீர். நான் இங்கிலாந்து தேசத்துலே பொறந்து விழுந்தது முதல்கொண்டு இருந்தாலும் நாலு வருஷம் டெல்லிப் பட்டணத்துலே இருந்து ஹிந்துஸ்தானி தெரிஞ்சவன். நீயும் அது பேசறவன் தானே? லங்கர் தெரியாதா? ஹிந்துஸ்தானி வார்த்தை.

ஸ்வாமி, மன்னிக்கணும். இங்கிலீஷும் கணக்கு வழக்கையும் தவிர ரெட்டிப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடத்துலே அடிமை பாஷை எதுவும் போதிக்கலே. தனியா வச்சு படிக்க அதுகள்லே ஒரு குசுவும் இல்லேன்னு ரொம்ப அடக்கமா சொன்னதும் அவனுக்குப் பிடிச்சுப் போயிடுத்து.

மாத்ருபாஷையை மண்ணை வாரித் தூத்தற தாசாதிதாசக் கருப்பனுக்கு கடாட்சம் காமிக்கறதே தனக்குப் புண்ணிய காரியம்னு அவனுக்குப் பட்டிருக்கும். அஞ்சேல்னு அடைக்கலம் கொடுத்தான்.

லங்கர்னா சமையல் கட்டாம். வாழக்காய் நறுக்கித்தர, மீன் செதில் போக தேச்சு சுத்தம் பண்ண, மாடும் பன்னிக் கொடலும் எடுத்து மாமிசம் வறுக்க, துரை சாப்பிட ரொட்டித் துண்டும் வெண்ணெய்க் கட்டியும் கொண்டு போய் ஏந்தன்னு வேலை.

யுத்தத்துலே துப்பாக்கியைத் தூக்கிட்டு ஓடறவனுக்கு நீதான் போஷாக்கு கொடுக்கப் போறே. பக்கத்திலேயே கண்ணி வெடி வெடிச்சாலும் கலங்காம ரொட்டி தட்டி அடுக்கிட்டு இரு. மெடல் குத்தி கவுரவம் பண்ணுவாங்க உசிரோட, கையோட காலோட ரிட்டயர் ஆனா.

அவன் என் தோளில் தட்டினான். ஜன்ம எதிரி எந்த தேசம்? யாரெல்லாம் லோக மகா யுத்தத்துலே நமக்கு இஷ்ட மித்திரங்கள்? எதுக்காக யுத்தம்? எங்கே எல்லாம் போய் சண்டை போடணும், இல்லே கோதுமை மாவு பிசையணும்?

ஒரு கண்றாவியும் தெரியலே. ஆனா, இந்த பாவப்பட்ட பூமியிலே இருக்க வேண்டாம். கப்பல்லே போகலாம். பொழச்சுக் கிடந்தா உன்னை, உங்க பெரியம்மா லலிதாம்பிகையைப் பார்க்கலாம்னு நப்பாசை.

லலிதாம்பிகையை எரிச்ச இடத்துலே கள்ளிச்செடி முளைச்சு அதுவும் பூச்சி அரிச்சு உதிர்ந்திருக்கும். சாகறதுக்கு முந்தி அவளுக்கு இன்னொரு கடிதாசாவாது எழுதிட்டுத்தான் கட்டையைக் கிடத்தணும்.

சரிடா குழந்தே, என் கையே எனக்குத் தெரியாதபடி ராத்திரி வந்து கவிஞ்சுடுத்து. அப்புறமா மிச்சத்தை எழுதறேன்.

உன் பொசைகெட்ட அப்பன் மகாலிங்க ரெட்டி.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

மூணு பக்கமும் கரும்புத் தோட்டமும் கிராமமும் சின்னப் பட்டணமுமாக மனுஷ நடமாட்டம் மிகுந்த தரை. கிழக்கிலே எல்லையே இல்லாத சமுத்திரம். இங்கே அங்கே புகுந்து எலி மாதிரி ஊர்ந்து ஓடினால், விரட்டிப் பிடித்து அடித்தே கொன்னுடுவான்கள். இல்லே கடல்லே சாடினாலோ. நீந்தவும் வேறே தெரியாது. கட்டையைப் பிடித்துக் கொண்டு மிதந்தால் அக்கரை சேருவேனோ பரமபதம் அடைவேனோ தெரியாது. கப்பலோ படகோ ஒண்ணும் வருகிற நேரமும் இல்லை.

கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தேன். வெட்டி நிறுத்திய இடம் எல்லாம் காலில் கையில் சிராய்ப்பை உண்டாக்க, நனைந்து கிடந்த தோகை முடை நாற்றம் எடுத்து காலை வழுக்கியது. யாரோ என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். முகம் தெரியாவிட்டாலும் கால் சத்தம் காதுக்குள்ளே இடி மாதிரி கேட்கிறது. பிராணன் ரட்சைப்பட, ஓடாவிட்டால் வேறே மார்க்கம் இல்லை. ஓடு.

வெட்டி அறுத்து, அறுத்து வெட்டி வளர்த்து சத்தெல்லாம போய் என்னைப் போல் சோகையான கரும்புத் தோட்டத்துக்கு நெருப்பு வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பொசுக்கி அழித்து விட்டு அங்கே புதுசாக பயிர் பண்ணுவார்கள். அது வளரும். வெட்டுவார்கள். வளர்ப்பார்கள். அழிப்பார்கள்.

நான் இருந்தால் நீ வளர முடியாது. நெருப்போ, கடலோ, நான் போகவேணும். போறேன்.

முதுகுக்குப் பின்னால் கடல் இரைந்து எக்காளமிட்டு என்னைப் பழித்துக் கொண்டிருந்தது.

உடம்பே லிங்கமாக வளர்த்தி வச்ச மகாலிங்கய்யன் ஓடறான். விடாதே பிடி. இதோ வந்துடறேன். சம்போகம் நடத்தின படிக்கே கூடப் படுக்கிறவளைக் கழுத்தை நெரிச்சும் கொல்ல அஞ்சாத படுபாவி போறான். அந்தப் பொணத்தோட படுத்து மிச்ச மீதி போகத்தையும் அனுபவிச்சு எழுந்திருக்கற நாய்ப் பயல் ஓடறான். ஓடி வாங்கோ. ரம்மண்டி. வரூ. கரும்பு இல்லே. குறியே விஷ விருட்சமா நடக்கிற அசுர ஜீவன். லலிதாம்பிகே, லாராம்பிகே, கல்யாணீ, வாடீ.

ஓடி ஓடி, நாலு கல் தொலைவிலே பழையனூர் கிராம எல்லைக்கு வந்து சேர்ந்தேன். காப்பிரிப் பெயர் எல்லாம் வாயில் நுழையாமல் இருக்கிறதாலே, இங்கே வரப்பட்டவன் அவனவன் பாஷையில் இருக்கற, புழங்கற இடத்தை எல்லாம் நாமகரணம் செஞ்சுக்கற வகையில் அது பழையனூர் தான் எனக்கு.

ஞாயிற்றுக்கிழமை ஆனபடியால், ஊர் ஜனம் முழுக்க மாதா கோவிலில் அடைந்து கிடந்தது. தமுக்கு தட்டிக் கொண்டு கிறிஸ்து நாதரை வாழ்த்திப் பாடுகிற சத்தம் அங்கே இருந்து விட்டு விட்டுக் கேட்டது. இன்னும் அரை மணி நேரம் பிரசங்கம், சங்கீதம் இப்படி பொழுது கழித்து விட்டு அவர்கள் அப்பத்தோடு திரும்புவதற்குள் நான் இங்கே கொஞ்சம் இளைப்பாற வேணும். தூங்கக் கூடாது. அப்புறம் ஒரேயடியாக உறங்கிவிட வேண்டி வரும்.

பசி. எங்கே, யாரைக் கேட்க? யாரையும் கேட்க வேணாம். எந்த வீட்டுக் கதவு அடைந்திருக்கவில்லை என்று பார்த்து தெருநாய் போல நுழஞ்சாப் போதும்.

கோவிலுக்குப் பின்னால் இருபது அடி தள்ளி என்றி மாரிமுத்து வீடு என்பது நினைவுக்கு வந்தது. என்றி வேஷம் கட்டி ஆடுகிறவன். சாமியாடியாக இருந்து வேதத்துக்கு ஏறினவன் என்பதால் ஆட்டமும் பாட்டுக் கட்டுவதும் கூடப் பிறந்து கொண்டுபோன விஷயங்கள். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துநாதர் ஜன்ம தினம் இப்படி வந்தால் கூத்து ஏற்பாடு பண்ணி, பத்து இருபது இளந்தாரிகளைப் பிடித்து பாட்டுப்பாட, வார்த்தை சொல்லப் படிப்பித்து படுதா கட்டி ராத்திரி முழுக்க கோலாகலமாக நடத்தி காணிக்கைப் பணம் வாங்கினவன் இந்த என்றி.

அவன் செயலோடு இருந்த நாளில் நான் கரும்புத் தோட்டத்தில் கணக்கு எழுதிச் சம்பாதித்ததை விட ரெண்டு துட்டாவது அதிகமாகவே சம்பாதித்தவன் என்ற வகையில் எனக்கு அவன் மேல் பொறாமை உண்டு.

லண்டனில் இருந்து தருவித்த வாசனை திரவியத்தை அக்குளில் பூசிக்கொண்டு மணக்க மணக்க மாதா கோவிலுக்கு என்றி ஞாயிற்றுக்கிழமை காலையிலே நடக்கிற போது முன்னால் முப்பதடி அந்த வாசம் மிதந்தபடி பராக் பராக் என்று ராஜபார்ட் காரன் சபா பிரவேசம் நடத்துகிறது போல கட்டியம் சொல்லும்.

ஆனால், இன்றைக்கு இருக்கப்பட்ட என்றி சீக்குப் பிடித்தவன். பெண் சீக்கு வந்து அரைக்கட்டு நசித்து, மதுமேகம் வந்து மூத்திரம் போகமுடியாமல் கட்டி, இன்னும் என்னென்ன ரோகமோ எல்லாம் அவனை இஷ்ட மித்ர பந்துக்களாக சூழ்ந்து படுக்கையில் தள்ளி விட்டன. அதிலும் சதா இருமி, கடைவாயில் சளியோடு ரத்தமும் வடிய வைக்கிற ஷயரோகம்.

சீக்கு முற்றிப் போய் இனிமேல் ஜீவிப்பது சிரமமான காரியம் என்று ஆஸ்பத்திரி டிரஸ்ஸர் நாடி பிடித்துச் சொன்னதால் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறவன். யாராவது வந்து அப்போ அப்போ ரொட்டியும், பாலும், இட்டலியுமாக வைத்துவிட்டுப் போவார்கள். குடிக்க சிராங்காய் நல்ல தண்ணியும்.

நான் என்றியின் வீட்டுக் கதவை மெல்லத் தள்ளினேன். எனக்காகக் காத்துக் கொண்டிருந்த மாதிரி அது திறந்து கொண்டது. உள்ளே இருந்து புழுத்த வாடை மூக்கில் பலமாகப் படிந்தது. இதே வாடையோடு தான் என்றியும் இப்போது ஊர் நினனவில் ஜீவிக்கிறான். வாடைக்குப் பார்த்தால் முடியுமா? என் பசி எனக்கு.

என்றி படுக்கையில் கண்ணை மூடித் தூங்கிக் கொண்டிருந்தான். கட்டில் பக்கத்தில் மர ஸ்டுல். அதிலே கல்லுக் கல்லாக ரொட்டித் துண்டு நாலைந்து. ஒன்றை எடுத்துக் கடித்தபடியே நித்திரை போயிருந்தான் அந்த சீக்காளி. பக்கத்து ஜன்னலில் நாய்ச் சங்கிலி போட்டுக் கட்டி ஒரு பித்தளை போணியும் அது தழைந்து தொடுகிற தூரத்தில் ஒரு மண் ஜாடியில் பழைய தண்ணியுமாக இருந்தது. தண்ணீரை மாற்றாததாலோ என்னமோ, கொசு மிதந்து கொண்டிருந்தது அதில். சங்கிலி படுக்கையில் படுத்தபடியே அவன் வாய் வரை வருமா என்று தெரியவில்லை. தாகம் எடுத்தால் உதடாவது நனைக்க முடியும். அது போதும்.

நான் கால் ஒச்சை எழுப்பாமல் நடந்து போய் வீட்டு உள்ளே ஒரு இடம் பாக்கி வைக்காமல் தேடினேன். வேறே சாப்பிடக் கூடிய தரத்தில் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தால் யாதொண்ணும் கிட்டவில்லை. ஒரு பிடி மீன் வத்தல், பழம்புளி, வெல்லம், கோதுமை மாவு. அஸ்கா. ஊஹும். சமைத்துச் சாப்பிட்டு மாமாங்கம் ஆகியிருந்த அடுப்பில் காளான் முளைத்திருந்தது. விஷமாக இருக்கலாம் என்ற பயம். இல்லாவிட்டால் அதைக் கெல்லித் தின்றிருப்பேன்.

இந்த தரித்திரவாசியின் வீட்டில் இவன் கட்டிலுக்கு சேக்காளியாக வைத்த ரொட்டித் துண்டு தவிர வேறே உருப்படியான விஷயம் கிடையாது. குனிந்து அதை எடுத்தேன். போகம் முடித்து உச்சகட்ட சுகம் அனுபவித்து ஓய்ந்து தூங்கி எழுந்தவள் யோனி மாதிரி பிருபிருவென்று காய்ந்து கிடந்தது. பிராணன் போகிற நேரத்திலும் மனசில் வருகிறது அந்த ரூபம்தான். நரகத்துக்குப் போனால் போச்சு.

ரொட்டித் துண்டில் எறும்பு மொய்த்தது. ஜன்னல் ஓரமாக எடுத்துப் போய்ப் பொறுமையாகத் தட்டினேன். எறும்பு எல்லாம் உதிர்ந்து கொஞ்சம் மாவை அவசரமாக வாயில் அள்ளிக்கொண்டு நானாதிசையிலும் ஓடி மறைந்து போனது. நல்ல வேளை, கரப்பான் பூச்சியும் பாச்சை பல்லியும் பாத்யதை கொண்டாடிக் கொண்டு வந்து மொய்க்கவில்லை. இல்லை அதெல்லாம் ராத்திரியே வந்து திருப்தியாகக் கழித்து, இது மேலேயே கழிந்துவைத்து விட்டுப் போயிருக்குமோ.

எக்கேடும் கெடட்டும். மிச்சம் இத்தனையாவது விட்டு வச்சிருக்கே. என்னிக்கு சுட்டெடுத்த ரொட்டியோ. யார் கொண்டு வந்து வீசி எறிந்ததோ. அவர்கள் சொர்க்கம் போகிறபோது நல்ல ரொட்டியை ரெண்டு கையிலும் பிடித்தபடி போய்ச் சேரட்டும்.

சங்கைக்குரிய மார்க்கு பதினொண்ணு திருவசனம் ஒன்பது. அவர்கள் ஓசன்னா சொல்லியபடி நடந்து. போகிறதுக்கு முந்தி, நம்ம கோவில் குட்டியார் பெண் முந்தாநாள் மங்களகரமான வெள்ளியன்று ருதுவான படியாலே கனவான்களும் சீமாட்டிகளும் குழந்தையை ஆசிர்வாதம் பண்ணி நாலு காசு நன்கொடை கொடுத்தால் குழந்தை கல்யாணம் உங்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும். பரலோக சாம்ராஜ்யம் நல்ல மனசுக்காரர்களுக்குக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கிறது. நடந்து போனார்கள். திருநாமத்தை உச்சரித்தபடி வருகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சங்கீதம் பதினேழு. சீரேசு ராஜனே செவி கொடுத்துக் கேளுமய்யா பரிவோடெம் பிரார்த்தனையை. பாடலாம். காணிக்கை தட்டு வந்துட்டு இருக்கு. காசு போடாம எளுந்திரிக்காதே ஜேம்ஸே. நரகத்துக்குப் போகாதே.

பிரசங்கியார் உச்சமான குரலில் முழங்கி இடைவேளை விட்டுப் பாட்டு எழுந்து கொண்டிருந்தது இங்கே இருந்தே காதில் விழுந்தது. என்றிக்கு ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்க இப்படி காசு சேர்த்துக் கொடுத்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

பிரசங்கி உடையான். என்றி குலாலன். அப்பா வகையில் மானாமதுரைப் பக்கம் மண்பாண்டம் செய்து கையிலும் மனசிலும் படிந்த தொழில் தேர்ச்சியோடு இங்கே வந்தவன். செங்கல் சூளை வைத்து கையைச் சுட்டுக் கொண்ட பிற்பாடு கூத்தாடக் கிளம்பிவிட்டான். சக்கரம் கைவிட்டாலும் கைக்கரகமும் தமுக்கு தப்பட்டையும் கைவிடவில்லை அவனை.

சட்டி பானையை விட்டு விட்டு, சிலுவையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வேதத்தில் ஏறினாலும், வேத பாடசாலையில் பழைய ஆகமமும் புதுசும் படிச்சுத் தேர்ந்து பிரசங்கி ஆனாலும் ஜாதியை யாரும் எதுக்காகவும் மறக்காத காரணத்தால் என்றிக்கு வெறும் பிரார்த்தனை. கோவில் குட்டியார் பெண்குட்டி திரண்டால் காசு பணம் ஆசிர்வாதப் பணம்.

இன்னும் ரெண்டு சங்கீதம், இடையிலே கல்யாண வார்த்தை அறிவித்து ஓலை படித்தல், மரண ஓலை சம்பிரதாயத்துக்காகப் படித்து ஆத்மா நித்திய உறக்கம் கொள்ள பிரார்த்தனை, மிச்ச பிரசங்கம்.

பரிசுத்த ஆவி கொஞ்சம் தாமதமாக பிரசங்கிக்குள்ளே இறங்கினால் அதுக்கு முந்தி நான் ரொட்டி தின்றுவிட்டுக் கிளம்பிவிடுவேன். சொல்லேண்டா என்றி. ஊஹும் அந்தக் சீக்குக் கோழி தூங்கின படிக்கே இருந்தான்.

மண்பானையில் இருந்து அழுக்கு போக தண்ணீரை உள்ளங்கையில் வடித்து விட்டு ரொட்டித் துண்டு மேலே தெளித்து நனைத்து சாப்பிட்டேன்.

அசுரப் பசி. முழுக்கச் சாப்பிட்டு முடித்தும் இன்னும் கொஞ்சம் குடுடா பிரம்மஹத்தி என்றது வயிறு. வேறே என்ன இருக்கு?

சீக்காளியோட ஜாமான் தான் புழுத்துப் போய் கிடக்கு. பல்லாலே கடிச்சு எடுத்து, சுட்டுத் திங்கறியா? தூரத்தில் சமுத்திரம் அக்கறையாக விசாரித்தது.

இந்த ஷயரோகி பாதி கடித்து தூங்கிப் போனதால் கையில் மிச்சமிருந்த அரையே அரைக்கால் ரொட்டித் துண்டு.

எச்சில் தான். பாதகம் இல்லை. கொடுடா பன்னி.

என்றி தூங்கினாலும் தூங்குவேனே தவிர கையை விடமாட்டேன் என்று அடம் பிடித்தான். கையை என் தொடைக்கு நடுவே வைத்து முறுக்கி ஒரு வழியாக அதை விடுவித்தேன். ரொட்டியைக் கொடுத்து விட்டு அவன் கை கீழே விழுந்தது அப்புறம் ஒரு அசைவும் இல்லாமல் தேமேன்னு அது பாட்டுக்கு கிடந்தது.

அவன் செத்துப் போயிருந்தான்.

என் புத்திக்கு அதுவரை உறைக்காத விஷயம். உடம்பே வயிறாக ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்ததால் புத்தி மரத்துப் போயிருக்கு. இந்தக் கல்யாணிக் குட்டி இடுப்புக்குக் கீழே நான் உசிரோடு ஜீவிக்க, மிச்ச உடம்பை, புத்தியை எல்லாம் வாத நோக்காடு பிடிச்ச மாதிரி மரக்க வச்சுட்டாள். தேவிடியா முண்டை.

ஆமாடா ரெட்டியானே, நீ செத்தா உன் பெண்டாட்டி மோதிரம் கழட்டின முண்டை. நான் தேவிடியாத் தொழில் செஞ்சா உனக்கு வெத்தலைப் பொட்டியும் கூஜாவும் வாங்கித் தரேன். கிராக்கி பிடிச்சு வா. கமிஷன் தரேன்.

கல்யாணி காமம் சொட்டச் சொட்ட சிரித்தாள். ரவிக்கை முடிச்சை அவிழ்த்து திரும்பப் போட்டு அப்புறம் அவிழ்த்து.

கரும்புக் கொல்லையைத் தீவைத்துப் பொசுக்கின மாதிரி இந்த மனசை, அது காட்டுகிற ரதிக்கிரீடை கூத்தை எல்லாம் சொக்கப்பனை கொளுத்தி எரிக்க முடியுமானால் எம்புட்டு நன்றாக இருக்கும்.

பொணத்தோட கையிலே இருந்து ஜபர்தஸ்தாகப் பறித்த எச்சில் ரொட்டியையும் சாப்பிட்டு முடித்தேன். என்றியின் புழுங்கின நாற்றம் என்மேல் பூர்ணமாகக் கவிந்திருந்தது இப்போது. அவன் செயலோடு இருந்த காலத்தில் வழித்து வழித்து கம்புக்கூட்டில் பூசிக் கொண்ட புனுகோ, அத்தரோ, லண்டன் சீமாட்டிகளை வசப்படுத்தும் செண்டோ காலி பாட்டில் கிடைத்தால் கூட சரி. மண்பானை தண்ணீரில் அலம்பி மேலே அபிஷேகம் செய்து கொண்டு இந்த பீடை வாடையிலிருந்து தப்பிக்கலாம். சாவு வாடை போகும்.

வேணாம். சுகந்த பரிமளம் தான் சாவு வாடை. ஆள் இருக்கிறான் என்று காட்டிக் கொடுத்து விடும். இதுவே எதேஷ்டம்.

வாயைத் துடைத்துக் கொண்டு படுக்கைக்குக் கீழே இருட்டில் கையை விட்டுத் துழாவினேன். இரும்பில் பெட்டி ஒண்ணு கரகரவென்று இழுத்த இழுப்புக்குக் கல்யாணி மாதிரி கூடவே வந்தது. களவாணிச்சி. குடிகெடுத்தும் அவள் நினைப்பு மாயமாட்டேன் என்று கூடவே வருகிற மருமம் தான் என்ன.

பெட்டிக்குள் ஒண்ணும் ரெண்டுமாக முன்னூறு ரூபாய் வச்சிருந்தான் என்றி. மேலே பழுப்பேறிய காகிதத்தில் ‘நான் பரலோகம் போனால், கல்லறை செலவுக்கு’ என்று செலவு உத்தேசத்தையும் ஸ்பஷ்டமாக எழுதி வச்சிருந்தான். ஆரியக் கூத்தாடினாலும், அரையில் ரோகம் வந்து அழுகிச் சொட்டினாலும், காசு காரியத்தில் கண் வச்ச புத்திசாலி அவன். என்னைப் போல பைத்தியம் இல்லை.

கோமாளி உடுப்பு, ஒட்டு மீசை, ஏசுநாதர் கூத்தில் ராஜா ஒட்டிக்கும் கத்தாழை நார்த்தாடி, அப்புறம் அட்டைக் கருப்பாக ஒரு சிமிழில் கண்மசி இத்தனையும் அந்தப் பெட்டிக்குள் இருந்தது. பிலாத்து ராஜா உடுப்பு கூட மேல் சட்டை மட்டும் கிடைத்தது. அப்புறம் ஒரு பொட்டலம் அரிதாரம். தண்ணியில் கலக்கினால் நுரை வழிந்து கொண்டு கருப்பாக கையெல்லாம் பூசியது. சாத்தான் வேஷம் கட்ட ஏற்பட்டதாக இருக்கும். எனக்கு எடுப்பான சாயம் தான். பூசிக் கொண்டேன்.

நான் கட்டியிருந்த சாரத்தை அவிழ்த்து விட்டு கோமாளி கால்சட்டையை மாட்டிக் கொண்டேன். கருத்தான் ராவுத்தர் கப்பலேறப் போகிற மாதிரி ரெண்டு பக்கமும் தொளதொளவென்று வழிந்து அது இடுப்பிலேயே நிற்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. ஹென்றியின் இடுப்பு சாரத்தை கீழே இருந்து நாலு அங்குலம் அகலத்துக்குக் கிழித்து அதை இடுபைச் சுற்றி கால்சராயோடு சேர்த்துக் கட்டினேன். மேலே பட்டுத் துணியில் அந்துருண்டை மணக்க பிலாத்து குப்பாயம். மீசையும் தாடியும், கண்ணில் மசியும், கன்னத்தில் கருப்புச் சாயமும் ஏற எந்த தேசக்காரன் என்று சொல்ல முடியாத ஒரு அடையாளம்.

ஹென்றியின் தொப்பி கதவுக்கு மேல் ஒட்டடை அடைந்து கிடந்ததை எம்பி எடுத்து தூசு துப்பட்டை போகத் தட்டி விட்டுத் தலையில் போட்டுக் கொண்டேன்.

ஞாபகமாக, ஹென்றி சேர்த்து வைத்திருந்த காசை ஒரு தம்பிடி விடாமல் அள்ளி கால்சராயில் திணித்துக் கொண்டேன்.

பரலோக சாம்ராஜ்யம் போக இங்கிலீஷ் தேச ராஜா லண்டனில் அடிச்சு அனுப்பின காசு பிரயோஜனப் படாதுடா என்றி. பிரசங்கி வந்து பார்த்துட்டு புதைக்க ஏற்பாடு செய்வார். கோவில் குட்டியார் பெண் திரண்டுகுளிக்கு சேர்த்த காசிலே கொஞ்சம் போட்டா நீ கல்லறைத் தோட்டத்துலே இருமித் துன்பப்படாமல், தும்மி சளியைத் துப்பாமல் தூங்கலாம். நான் வரட்டுமா? ஜாக்கிரதையா இருடா பொணமே.

ஓரமாக வைத்திருந்த குச்சியை ஊணிக் கொண்டு விந்தி விந்தி நடந்து ஊர்க் கோடிக்குப் போகும் போது மாதா கோவிலில் இருந்து கூட்டம் இறங்கிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தாறு

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

இரா.முருகன்


விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தாறு இரா.முருகன்

1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

அடே வைத்தா, அந்த ராட்சசி கல்யாணி திட்டம் செய்து வைத்திருந்தது இந்தப் படிக்கு இருந்தது.

யுத்த காலமாச்சா? பெரிய தோட்டம் துரவு எல்லாம் வாங்கி வளச்சுப் போட்டு நிர்வாகம் பண்ணுகிற பரங்கித் துரைகளும், சின்னத் தோதில் தோட்டம் போட்டுப் பயிர் வளர்க்கும் உன் மாதா லோலா மாதிரிப்பட்ட கருப்பு சீமாட்டிகளும் தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காமல் ரொம்பத் துன்பப் பட்டார்கள்.

ஏற்கனவே வேலைக்கு இருந்த ஆட்கள் மெய் தளர்ந்தோ சீக்குப் பிடித்தோ இல்லேன்னா, எல்லாம் அலுத்துப் போயோ, பொறந்த பூமிக்குத் திரும்பப் போக துடியாகத் துடித்தார்கள்.

இருந்தாலும், பட்டாளக்காரன் துப்பாக்கி வச்சு சுட்டுத் தள்ளிச் செத்தாலும் அதெல்லாம் சொந்த ஊரிலே, பந்தப்பட்டவர்கள் கூடி இருக்க நடக்கணும் என்று பல பேர் வாய்விட்டுச் சொல்லிக் கேட்டிருக்கேன். புருஷனும் பெண்டாட்டியுமாக வந்தாலும், தனிக்கட்டையாக இங்கே உழைத்துப் பணம் சேர்க்க வந்தாலும், இதே கதை தான். இதே மாதிரி நினைப்பு தான்.

போகிறவர்கள் போகிறதும் புதுசாக வருகிறவர்கள் அவர்கள் இருந்த குச்சுக்குள் மீந்து போன பழைய சட்டி பானையை எடுத்து வீசி விட்டுப் புதுப் பானையும் சருவமுமாக நுழைவதும் இத்தனை வருஷம் நடந்ததுதான். ஆனால், போறவனைப் போக விட்டு, புதுசாக வர ஆள் கிடைக்காமல் துரைகள் பட்ட கஷ்டம்தான் எவ்வளவு.

கரும்பைக் கண் மாதிரி காத்து தண்ணீர் பாய்ச்சி, பூச்சி பொட்டு அண்டாமல் வச்சு அறுத்து எடுக்கணும். அப்புறம் ஆலைக்குக் கொண்டு போறது, நறுக்கித் துண்டு போடறது, உலையிலே ஏற்றிக் காய்ச்சி சர்க்கரை எடுக்கறது இதெல்லாம். இந்த வரிசைக் கிரமத்துலே எங்கேயாவது தப்பு நடந்தா, பொழப்பு நாறிடும் போ.

வேலையிலே இருக்கறவனுக்கு அதிக வேலை செய்ய சம்பளம் கொடுத்துப் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. பதினாறு மணி நேரம் ஒரு நாள் போல உழைக்க மாட்டுக்குக் கூட முடியாதே. மனுஷன் எம்மாத்திரம்?

அப்புறம் தான் இங்கே வர ஆள் பிடிச்சு அனுப்பற ஏஜண்டுக்கு கமிஷன் கொடுக்கற ஏற்பாடு ஆரம்பமாச்சு. தமிழ் பேசற தஞ்சாவூரா, மாயவரமா, தெலுங்குக்கார வாராங்கல்லா, ஓங்கோலா, மலையாள சமுத்திரக் கரையா, வங்காளமா, கிராமம் கிராமமா அங்கே எல்லாம் போய், தோட்ட வேலைக்கு ஆள் சேர்க்கற வேலை.

முன்னாடியும் இது நடந்தது. நான் கூட புதுச்சேரியிலே இருக்கப்பட்ட ஒரு பெண்பிள்ளை மூலமாத்தான் இங்கே வந்தேன். அப்போ எல்லாம் வர்றவன் ஏஜெண்டுக்குப் பணம் கொடுப்பான். வந்து சம்பாதிச்சதிலே கொஞ்சம் கொஞ்சம் மாசா மாசம் அடைக்க வேண்டி வரும். இது ஒரு மூணு வருஷம் நடந்தா, அக்கடான்னு கடன் தொல்லை இல்லாம அப்புறம் காசு சேர்க்கலாம்.

யுத்த காலத்திலே வர்றவன் ஒரு தம்பிடியும் யாருக்கும் தர வேண்டாம். சகலமும் வரவு கணக்குத்தான். அவனை மனோவசியம் செஞ்சு அவன் பாஷையிலே பேசிக் கப்பலேற்றி விடற ஏஜெண்டுக்கு இந்தக் கமிஷனை தோட்ட முதலாளி கொடுக்கணும். அதான் புது நியதி.

சமுத்திரத்துக்கு அக்கரையிலே ஆயிரத்தெட்டு ஏஜெண்ட் வச்சுண்டு ஒவ்வொருத்தனுக்கும் பணப் பட்டுவாடா பண்றது பிடுங்கல் ஆச்சே. ஆகக் கூடி, இங்கேயே இருந்து ஊர்லே ஆள் அம்பு படையை நியமிச்சு நிர்வாகம் பண்ணி சப்ஜாடா இதையெல்லாம் செய்யற நாலைஞ்சு பேர் இருந்தா தொரைகளுக்கு காசு போக்குவரத்து நடத்த சுலபம். கல்யாணி உத்தேசிச்சது அப்படி ஒரு ஏஜண்ட் ஸ்தானத்தைத்தான்.

என் கூறுகெட்ட வீட்டுக்காரனை கப்பல் ஏத்தி நம்ம பூமிக்கு அனுப்பிச்சது எதுக்குன்னு நெனச்சீரு ரெட்டியாரே?

கல்யாணி என்னைக் கேட்க நான் வழக்கம் போல் அவள் ஸ்தனத்தை வெறித்தேன்.

நாம ரெண்டு பேரும் குஷியா சிருங்காரக் கேளிக்கை நடத்தி சுகத்தை சதா அனுபவிக்கத்தான்.

விடிஞ்சாலும் விட்டுப் போகாத மோகத்திலே மிதந்தபடிக்குச் சொன்னேன்.

அதுதான். அதேதான். இந்த சுகமும் சொர்க்கமும் தொடரணுமா வேணாமா?

வேணும் தான். ஆனா, அவன் திரும்பி வந்துடுவானே? அப்புறம் ராத்திரியிலே பூனை மாதிரி வந்து பாலைக் குடிச்சுட்டுப் போக வேண்டியிருக்கும் போ.

நான் நாற்காலியில் கால் பரப்பி உட்கார்ந்தபடி ஏக்கமாகச் சொல்ல என் தாவாக்கட்டையை நிமிர்த்தி தந்த சுத்தி செய்யாத வாயால் முத்தம் ஈந்தாள் கல்யாணி. அந்த வாடை கூட விடிகாலையில் மனசுக்கு ரம்மியமாக, ரொம்ப வேண்டி இருந்தது. உனக்கு ஸ்திரி பந்தம் அனுபவமானதும் நான் சொல்றது புரியும்.

கல்யாணி குனிந்து என் கால் பக்கம் நெருங்கி உட்கார்ந்து கால் ரெண்டையும் எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டாள்.

அவனை தீர்த்துட்டா?

அவள் கபடமாகச் சிரித்தாள். கொலை கிலை செஞ்சுடப் போறாளோன்னு மிரண்டு போனேன் நான் ஒரு நிமிஷம்.

தூக்குக் கயிறை தீர்க்கமா முகர்ந்து பார்த்துட்டு தப்பிப் பொழச்சு வந்தவன் நான். கல்யாணியைக் கொன்னதுக்காகத் தூக்கு தண்டனை. இப்போ கல்யாணி அவளோட ஆம்படையானைக் கொல்ல ஒத்தாசை செஞ்சு அதுக்கும் தூக்கு.

வேண்டாம்டி கண்ணு, அவனை ஒண்ணும் பண்ணிடாதே. ஆயுசோட கை காலோட அவன் பாட்டுக்கு நடமாடிட்டு இருக்கட்டும். நாய், பன்னி மாதிரி ஒரு உபத்திரவமும் கொடுக்காத பிறவி.

நான் நைச்சியமாகச் சொல்ல அவள் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் வாயில் என்ன கொழக்கட்டையா என்று கேட்க வேண்டாம். அந்தத் தகவலை மட்டும் அசங்கியம் கருதித் தவிர்க்கிறேன்.

பல்லும் மற்றதும் சுத்தம் செய்து கொண்டு நான் திரும்ப வந்தபோது அவள் கருப்பட்டிக் காப்பி கலந்து சூடு பறக்க நீட்டினாள். ஆடி அயர்ந்த உடம்புக்கு இதமான பானம் அது. நீ குடிச்சிருக்கியோ?

என் வீட்டுக்காரன் ஊர்லே இருபது முப்பது சப் ஏஜெண்ட்மாரை ஏற்படுத்திட்டு வருவான். இன்னும் ரெண்டு மாசத்துலே ஐநூறு பேரைக் கொண்டு வந்து இறக்கிடலாம் பார்த்துக்கிட்டே இருங்க. துரைகள் கிட்டே இருந்து கமிஷன் வகையிலே அப்புறம் நெறைய நமக்கு வரதுக்கு வாய்ப்பு நெருங்கிட்டு வருது.

அவள் சந்தோஷமாகச் சிரித்தபடி சொன்னாள்.

எனக்கு அந்தக் காசிலே எதுக்குப் பங்கு? அவள் வீட்டுக்காரனுக்கும் அவளுக்கும் தானே அதெல்லாம். சப் ஏஜெண்ட்களுக்கு கொஞ்சம் போல பிய்த்து விட்டெறிந்தால் மிச்ச ஆப்பம் முழுசும் இந்தப் பூனைகளுக்குத்தானே.

வீட்டுக்காரனுக்கு ஒரு தொகை கொடுத்து பந்தத்தை தீர்த்துக்கலாம்னு உத்தேசம்.

கல்யாணி சொன்னபோது பரம சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது.

அப்புறம் ரெட்டியாரும் நானும் தான். நீரு லோலா தடிச்சியை விட்டுட்டு இங்கேயே வந்தாலும் மூணு வேளையும் ஆக்கிப் போடத் தயாரா இருக்கேன். இல்லேன்னாலும் பாதகமில்லே. அங்கே அவ,இங்கே இவ. உம்ம அரைக்கெட்டுலே சதா மழைதான்.

காமம் சரி. அனுபவிக்க நான் இல்லியா காசு கொடுக்கணும்?

எதுக்கு ரெட்டியாரே. என் பணம் உங்க பணம்னு வித்தியாசம் இருக்கா என்ன? இந்த உடம்பே உங்களுக்குன்னு ஆன பிற்பாடு அல்ப விஷயம் பணம் என்ன?

நான் ஜிவ்வுனு மனசுலே றெக்கை கட்டிப் பறந்தேன். ஆம்பிளை வேசைத்தனம்கிறயோடா வைத்தா? என்னமோ போ.

துரை கமிஷன் வந்து சேர கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனா டாண்ணு வந்துடும். உமக்குத்தான் இதெல்லாம் அத்துப்படியாச்சே. சம்பளப் பட்டுவாடா, பிடித்தம், ஓவருட்டயம் இதெல்லாம் எந்த துரையாவது ஏமாத்தி இருக்கானா? அவனவன் பொண்டாட்டி கண்ணுலே மண்ணைத் தூவிட்டு அடுத்த ஊரு தொரைசானியோட படுத்தாலும் படுப்பானே தவிர உழைச்ச துட்டை தராமல் போவானா?

நிச்சயம் மாட்டான்கள் இவங்க எல்லோரும். எனக்கும் தெரியும்.

சப் ஏஜெண்ட்களுக்கு முன்கூட்டியே கொஞ்சம் தொகை கொடுத்தால் தான் சுறுசுறுப்பா ஆள் பிடிச்சு அனுப்ப ஆரம்பிப்பாங்க. ஜெகஜாலப் புரட்டனுங்க நான் பார்த்து வச்சிருக்கறவன் எல்லாம். தில்லிக்கு ராஜாவா இருந்தாலும் சாமர்த்தியமாப் பேசி வசப்படுத்தி, கப்பலேத்தி அனுப்பிடுவானுங்க.

அவளோடு நானும் சிரித்தேன்.

ரெட்டியார் தயவு இருந்தா சப் ஏஜெண்ட் பயலுகளுக்கு இந்தத் தொகையை வெட்டி விட்டுடலாம்.

பொடி வச்சுப் பேசினாள் கல்யாணி. நான் கருப்பட்டிக் காப்பியைக் குடித்து முடிக்கிற வரைக்கும் என் பக்கத்தில் பவ்யமாகக் கை கட்டி நின்றபடி இருந்தாள்.

அவள் சொன்னது எனக்குப் புரிந்தது.

நான் நம்ம தோட்டம், மற்ற அண்டை அயல் தோட்டம் இங்கெல்லாம் வேலைக்கு வந்த நம்ம ஊர் ஜனங்களுக்காக மாசாந்திர சீட்டு ஒண்ணு நடத்தி வந்தேன். பிரதி மாசம் பிறந்து ஒரு ரூபா கொடுத்து சீட்டெடுப்பிலே விழுந்தா ஐநூறு ரூபாய். அப்புறம் அதை குறைஞ்ச வட்டி கொடுத்து அடைச்சா போதும். விழாட்டாலும் பாதகமில்லே. அஞ்சு வருஷத்துலே கணிசமான தொகை கைக்கு வரும்.

ஊர்லே, வீட்டுலே சுப காரியச் செலவு, அசுப காரியச் செலவு, குலதெய்வம் கோவிலுக்கு பிரார்த்தனை, கள்ளுத் தண்ணி வாங்கின கடனை அடைக்க. நிலம் நீச்சு வாங்கிப்போட, இப்படி இங்கே வரக்கூடிய எல்லோருக்கும் எதுக்காவது கணிசமான பணம் எப்பவும் தேவைப்பட்டதாலே, சீட்டைத் தள்ளி எடுக்கவும் சதா போட்டா போட்டி.

எனக்கும் லாபமாச்சே. சீட்டுப் பணத்தை அட்டியில்லாமா சம்பளம் வாங்கினதும் அவனவன் கொடுத்துடுவான். பத்திரமா ஐந்தொகை போட்டுப் பதிஞ்சு வச்சுப்பேன் எல்லாத்தையும் ஒரு காசு கூட விடாமல். கணக்குலே நான் சுத்தம். அதுலே மட்டுமாவது.

இப்படி சீட்டு பிடித்த பணத்தை இங்கே அடகுக்கடை நடத்த நம்ம ஊர்லே இருந்து வந்த பெரிய கருப்பன் செட்டியார் வசம் ஒப்படைத்திருந்தேன். அந்த வகையில் பத்தாயிரம் ரூபாய் செட்டியாரிடம் இருந்தது.

உன் அம்மாளும் என் பிரியமான பெண்டாட்டியுமான லோலா சீமாட்டியும் பெரிய கருப்பன் செட்டியார் வசம் நல்ல வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாள். சிக்கனமாக ஜீவனத்தை நடத்தி, உனக்கும் சந்ததிக்கும் வேண்டி சேர்த்து வைத்த அந்தப் பணத்தை நானும் அவளும் பாத்தியஸ்தராக இருந்து செட்டியாரிடம் கொடுத்து வைக்க, வாங்க உரிமை இருக்கிறதாக ஏற்பாடு.

அந்த வகையில் கிட்டத்தட்ட அரை லட்சம் ரூபாய் உங்கம்மா சிறுவாடுப் பணமாகப் பெருந்தொகை சேர்த்திருந்தாளடா என் கண்ணு வைத்தீஸே.

ஒரு முப்பதாயிரம் ரூபாய், இல்லேன்னா, இருபத்தஞ்சு. ரெட்டியார் கடனாக் கொடுத்தா, ஆயுசு பூரா கடன் பட்டிருப்பேன் சந்தோஷமா என்றாள் கல்யாணி. என் கடனை துரை கமிஷன் கிடைச்சதும் பைசல் பண்ணிடறேன்னா.

என்னையும் தீர்த்துடாதேடி கல்யாணிக் குட்டி. ஒக்கல்லே வச்சுக்கோ. இல்லே ரவிக்கை முடிச்சுக்குள்ளே முடிஞ்சுக்கோன்னு நான் அதை பிரிக்க ஆரம்பிக்க, வேணாம், விடிஞ்சு நேரமாச்சு, வீட்டைப் பார்க்கப் போம் என்று துரத்தி விட்டாள்.

ஆக, என் சீட்டுப் பணம் முழுசாக பத்தாயிரம் ரூபாய், லோலா உயிரைக் கொடுத்துச் சேர்த்து வைச்சதில் ஒரு இருபதாயிரம் ரூபாய். செட்டியாரிடம் ஒரே தவணையில் கேட்டால் சந்தேகப்படுவார் என்று மாசத்தில் நாலைந்து தினத்தில் பணம் திரும்ப வாங்கினேன். முதல் தடவை போனபோது செட்டியார் கேட்டார்.

என்ன வே, தொடுப்பு வகையிலே செலவு ஜாஸ்தியாச்சோ?

மனுஷன் மகா புத்திசாலி. சட்டுனு எல்லாம் புரியற கல்பூர புத்தி. இல்லாமலா, காசு கொடுத்து வாங்கி காசு பண்ண இப்படி சமுத்திரம் தாண்டி வந்திருப்பார்?

அதெல்லாம் இல்லே செட்டியார்வாள். சீட்டுக்காரன் ஒவ்வொத்தணும் ஒவ்வொரு செலவுன்னு கையப் பிசஞ்சபடி வந்து நிக்கறான். சீட்டு பணம் வாங்கினதுக்கு மேலேயே கடனாக் கொடுத்து வசூலிக்க வேண்டி இருக்கு. நம்ம மனுஷாளாச்சே. நாமதானே உதவி செய்யணும், சொல்லும்.

நான் தலையைக் குனிந்தபடி சொன்னேன்.

உதவி, உபத்திரவம் எல்லாம் இருக்கட்டும். ஆரியக் கூத்தோ, காப்பிரிக் கூத்தோ. எதை ஆடினாலும் காசு காரியத்திலே கண்ணு வையுமய்யா.

செட்டியார் கண்ணை சிமிட்டிக் கொண்டு திண்டில் சாய்ந்து உட்கார்ந்தார். பொழுது போக்காகப் பேசுகிற உற்சாகம். அவர் நல்ல மனநிலையில் இருந்தால் எனக்கும் நல்லதுதான்.

ரெட்டியாரே. இதைக் கேளும். எங்க பக்கம் ஏகப்பட்ட நிலபுலம் வச்சிருக்கற உடையார் உண்டு. அவுஹ வீட்டு வளவிலே உக்கார்ந்து கணக்கு அய்யர் கண்ணைக் கவிஞ்சுக்கிட்டு கிரமமா வரவு செலவுக் கணக்கு எளுதுவாரு.

அதுக்கென்ன இப்போன்னு கேட்க நினைச்சேன். போறது, செட்டி காசு தரணுமே.

ரெண்டு போகம் விளையற நெலமாச்சே ஓய் நமக்கு. வரவை விட செலவு கூடுதலா எழுதியிருக்கீரே அப்படீன்னு உடையான் கேட்டபோது பாப்பான் என்ன பதில் சொன்னான் தெரியுமா?

எனக்கெப்படித் தெரியுமய்யா நீரே சொல்லும் என்றேன்.

உடையாரே, உம்ம நிலம் தான் ரெண்டு போகம். உமக்கு தினசரி மூணு போகமாச்சே. செலவு ஏறாம என்ன பண்ணும்னாராம் அய்யர்.

செட்டியார் சிரித்தபடி எடுத்துக் கொடுத்த பணத்தை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு போய் அப்படியே கல்யாணியிடம் கொடுத்தேன்.

முப்பதாயிரம் ரூபாய் அவள் கைக்குப் போய்ச் சேர்ந்ததும் சிரிப்பாய் சிரித்தது செட்டியார் மட்டுமில்லை. ஊரிலே மிச்சம் மீதி எல்லோரும்.

கல்யாணி காணாமல் போயிருந்தாள்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

இரா.முருகன்



25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை

கற்பகம், கற்பகம். எங்கேடி போனே?

வீடே அமைதியாகக் கிடந்தது. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்க மாட்டார்கள். அதுகளுக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்து விடுவதாலும், பள்ளிக்கூடம் கொஞ்சம் தொலைவிலே இருப்பதாலும் மதியம் கழிந்து மூணு மணி வாக்கில்தான் திரும்ப ஜட்காவில் வந்து இறங்குவார்கள். கற்பகம் அகத்துக் காரியம் எல்லாம் முடித்து விட்டு குரோஷா வேலை, பாசிமணி கோர்த்த கிருஷ்ணன் படம் என்று கொஞ்ச நாழி பொழுது கழித்து விட்டு, மகா பக்த விஜயம் பைண்ட் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மெழுகு சீலை தலகாணியில் தலை வைத்துப் படுத்தால் பாதியும் முழுசுமாகப் பகல் நித்திரை போய்விடுவது வழக்கம்.

பக்த விஜயத்தைக் கையில் எடுக்கறதுக்கு முந்தி வாசல் அழிக்கதவை அடச்சுத் தாழ்ப்பாள் போட்டுக்கோடி. எவனாவது ரைட் ராயலா உள்ளே வந்து பக்த விஜயம், மடிசார் விஷயம் எல்லாத்தையும் லாவிண்டு போயிடுவான்.

ஆபீஸ் போகிறபோது நீலகண்டன் தவறாமல் கற்பகம் காதில் சொல்வது இது. லாவிண்டு போறதாகப் பயம் உண்டாக்கும் விஷயங்களில் அவனுடைய அழகுப் பொண்டாட்டியும் அடக்கம். பின்னே இல்லையா? கதவை மட்ட மல்லக்கத் திறந்து போட்டுக் கொண்டு தூங்கினால் எவனாவது வந்து.

வந்து என்ன பண்ண? மடிசாரை உருவுவதற்குள் எட்டு ஊருக்கு கத்திவிட மாட்டாளா கற்பகம்? அவளோட அம்மா அவள் பிறந்ததுமே முதல் காரியமாக கோரோஜனை கொடுத்தில்லையா தஞ்சாவூர் மிடுக்கோடு கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமான அதிகாரக் குரலை அவளுக்கு சொந்தமாக்கி இருக்கிறாள்.

செவிடனாக எவனாவது உள்ளே புகுந்திருப்பானோ. சீ, பாழும் மனசே. சும்மா கிட.

ராஜாத்தி, எங்கேடி செல்லம் இருக்கே?

நீலகண்டன் கூச்சலும் இல்லாமல் மெல்லிய சுவரமும் இல்லாமல் தேனொழுக அழைத்தான்.

உச்சந்தலையில் வெய்யில் இறங்கும் பகல் நேரத்தில் இப்படி மோக வசப்பட்டு வழிவது அவனுக்கே விபரீதமாகப் பட்டது.

குளிரக் குளிர தயிர் சாதமும் மாவடு ஊறுகாயும் கொட்டிக் கொண்டு அலைச்சல் தீர கொஞ்சம் உறங்கி மதியம் கழிந்து வெளியே கிளம்புகிற திட்டத்துக்கு ராஜாத்தியும் செல்லமும் ஏக இடைஞ்சல் ஆகிவிடும்.

வீட்டு முகப்பில் இருந்து சமையல் கட்டுக்கு நுழையும் வழியில் மெழுகுசீலை தலகாணியும் பக்த விஜயம் பைண்டு புஸ்தகமும் தட்டுப்படவில்லை. சமையல் கட்டிலேயே கையைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு இந்தப் பெண்டு உறங்கிப் போய்விட்டாளோ?

கல்ப்பு.

இது பரவாயில்லை. சமையல் கட்டில் அவனுடைய குரல் முன்னால் நுழைந்தது.

ஊஹும். அங்கேயும் கற்பகத்தைக் காணோம்.

தட்டில் விளம்பிய சாதமும் மேலே சாம்பாரும் பாதி சாப்பிட்ட ஸ்திதியில் இருந்தது. மோர்க் கச்சட்டி மட்ட மல்லக்கத் திறந்து கிடக்க, ஊறுகாய்ப் பரணி வாயில் கட்டிய வெள்ளைத் துணி அவிழ்ந்து லீலை முடிந்த கோலம் போல தொங்கிக் கொண்டிருந்தது.

பாதி சாப்பாட்டில் எங்கே போனாள்?

நீலகண்டன் மனம் முழுக்க இனம் புரியாத பயம். தோட்டச் சுவருக்கு அந்தப் பக்கம் நாய் குரைக்கிற சத்தம் கேட்டது.

சுவர் ஏறிக் குதித்து எவனாவது களவாணி நுழைந்து எச்சில் கையோடு இலைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த கற்பகத்தைத் தோளில் சாத்திக் கொண்டு திரும்ப சுவர் ஏறிப் போய்விட்டானா? தயிர் சாதம் அப்பிய வாயோடு அவளை.

கல்ப்பு. என் கண்ணம்மாடீ.

வந்துட்டேன்னா.

அவன் குரல் திரும்ப உயரும் முன்னால் சமையல் கட்டில் அவசர அவசரமாக நுழைந்தாள் கற்பகம்.

ஏண்டி கழுதே எச்சல் கையோட எங்கே போய்த் தொலைஞ்சே. வாசல் கதவும் தேவடியா வாசல் மாதிரி தெறந்து கெடக்கு. உன்னை நம்பி நான் எல்லாத்தையும் போட்டது போட்டபடிக்கு ஆபீசுக்குப் போறேன் பாரு. நீ ஒரு நாள் இல்லாட்டாலும் ஒரு நாள் எல்லாத்தையும் வழிச்சு வாரிக் கொடுத்துட்டுத்தான் நிக்கப்போறே. கம்ப்ளீட்லி ராப்ட் ஆப் எவ்வரிதிங்.

என்ன உளறல் உமக்கு? தேவிடியா சவகாசம் வேறே வந்தாச்சா? ஹெட் கிளார்க் ஹெட் மட்டும் இல்லே மத்ததும் இங்கிலீஷ்லே தான் அதிகாரம் தூள் பரத்துமோ.

அததோட அதிகாரத்தையும் அடங்கிப் போறதையும் நித்தியப்படிக்கு நீதான் பார்க்கறியேடி.

நீலகண்டன் குரலை சமாதானமாக்கினான். தலை குளித்திருக்கிறாள் கழுதை. அள்ளி முடிந்து மனசை அலைக்கழிக்கிறாள். நாயுடுவும் டாக்குமெண்டும் நாசமாகப் போகட்டும். இப்படியே இவளை ஊஞ்சலில் சரித்து.

பசங்க வர்ற நேரம். பள்ளிக்கூடம் திறந்து நாலு நாள் தானே ஆச்சு. பாவாடைக்காரா கொடுக்கற பாடப் புஸ்தகத்தை எல்லாம் கட்டித் தூக்கிண்டு சீக்கிரமே வந்துடும் ரெண்டும். அட்டை போடணும் அதுக்கெல்லாம். வேலை காத்திண்டுருக்கு. கையை எடுங்கோ.

வலிந்து ஏற்படுத்திக் கொண்ட அவசரமாக அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விலகி கற்பகம் ஊஞ்சலில் உட்கார்ந்தாள். அந்த அவசரத்திலும் அவன் உதட்டில் வெற்றிலை வாசனையோடு முத்தமிட மறக்கவில்லை அவள். தஞ்சாவூர்க்காரிக்குக் கோபத்தைத் தணிக்கிற வழியைச் சொல்லியா தரணும்?

எச்சக் கையோட எங்கேயும் தொலையலேன்னா. சாப்பிட்டு கையை அலம்பிண்டு போனேன். வாசல் கதவையும் சாத்தி அடச்சுட்டுத்தான்.

தொறந்திருந்ததேடி தங்கம்.

மண்ணாங்கட்டி. நீங்க அழுத்தமா என்னையோ எவளையோ நினைச்சுண்டு ஓங்கி இடிச்சிருப்பேள். தலையாலே தான்.

நீலகண்டன் துரைமார்களும் சாவும் ரோஜாப்பூ மாலையும் நெக்ரோபோபியாவும் இல்லாத உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தான்.

அடுத்தாத்து வக்கீல் மாமிக்கு குரோஷாவிலே ரோஜாப்பூ போடச் சொல்லிக் கொடுத்திண்டிருந்தபோது காளை மாடு பசுவை அழைக்கற மாதிரி ஏங்கலோட உங்க குரல் கேட்டது. மாமி சொல்றா. பாருடி, பகல்லேயே உங்காத்து மனுஷர் அம்புவிட வந்துட்டார். போய்ட்டு வாடியம்மான்னு குங்குமம் கொடுத்து அனுப்பறா. மானம் போறது.

காவேரிக்கரைக்காரி ஓய மாட்டாள். சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டுத்தான் வேறே பேச்சை எடுப்பாள். அவள் கிடக்கட்டும். அந்த எச்சல் இலை?

காணோம். சமையல் கட்டு தரை மொறிச்சென்று கிடந்தது. கல்சட்டி வாயை இறுக்கிக் கட்டி வெள்ளைத்துணி கட்டினது கட்டின மேனிக்கு இருந்தது.

என்ன பிரமை இது? பிரமையா இல்லே கண்கட்டு வித்தையா? ஏதாவது துர்தேவதை இவள் வெளியே போன பிற்பாடு உள்ளே நுழைந்திருக்குமோ?

நாதமுனி பீக்காட்டுப் பிசாசு என்றோ வேறே ஏதோ கண்றாவிப் பெயரிலோ சாயந்திரங்களில் கதை கதையாகச் சொல்வானே.

அவன் மாமியார் ஒரு துஷ்டிக்குப் போனபோது கூடவே அந்தப் பிசாசு வீட்டுக்குள் வந்து விட்டதாம். சாப்பிட இலை போட்டு உட்கார்ந்தால் அன்னத்துக்கும் காய்கறிக்கும் நடுவிலே ஒரு கரண்டி நரகலும் திடீரென்று வீட்டில் தட்டுப்பட ஆரம்பித்ததாம்.

பீத்துண்ண வச்சுட்டா சாமி என் மாமியா. அப்புறம் பூசாரியைக் கூட்டியாந்து கோடாங்கி அடிச்சு. அதான் ரெண்டு நாள் ஆபீசு பக்கமே தலை காட்டலே.

அவன் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் திரும்பி வந்தபோது விஸ்தாரமாகச் சொன்னதை அப்போது நம்பவில்லை நீலகண்டன். ஆப்பக்காரிச்சி கூட எங்கேயோ ஊர் சுற்றி விட்டு சால்ஜாப்பு சொல்கிறான் என்று டெபுடி சூப்பரண்ட் கிட்டே கூட சொன்னான். ஆனால் இப்போது நாதமுனி சொன்னதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஐயர் அகத்துக்குள் அந்த பீக்காட்டு சமாச்சாரம் எல்லாம் வருமோ என்ன? லலிதா சகஸ்ரநாமமும் ஆவணி அவிட்டம் முடிந்து காயத்ரி ஜப தினத்தில் நிறுத்தாமல் புரோகிதர்கள் ஆளாளுக்கு நேரம் ஒதுக்கி முறை வைத்துச் சொல்லும் முறை ஜபமுமாக வேதம் ஒலிக்கிற வீட்டில் அதெல்லாம் எதுக்கு வரணும்?

வேதமாவது, மண்ணாவது. சாப்பாட்டு இலையில் நரகல் தட்டுப்பட தலைவிதி இருந்தால் யாரைக் கொண்டு எத்தைக் கொண்டு அதை வழிச்செறிய?

நீலகண்டன் சமையல்கட்டை ஒட்டி பூஜை அறைக்குள் திரும்பினான். இருட்டும் கொஞ்சம் குளிர்ச்சியுமாக இருந்தது அந்த இடம். வெட்டிவேர்த் தட்டி வாசனையும், காலையில் ஏற்றி வைத்து அணைந்து போன தீபத்தில் நல்லெண்ணெய் வாடையும், கட்டிக் கற்பூர வாடையும் சேர்ந்து சுகமாக இருந்தது.

போகட்டும். எல்லாக் கவலையையும் விட்டொழிக்கலாம். துரை சொர்க்கம் போன புண்ய திவசம் இன்னிக்கு. சந்தோஷம் கொண்டாட வேண்டிய தினம்.

இங்கே கொஞ்சம் அக்கடா என்று படுத்தால் என்ன? முதல்லே சாப்பிடணும். சாப்பிட்டு விட்டுப் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். அதுக்கு முந்தி அந்த காகிதக் கட்டை எடுக்க வேணும். நாயுடு காத்திருக்கிறான்.

அதுக்கும் முன்னால் மாடப்புரையைக் காலி செய்து விடணும். அந்த ஸ்தாலிச் செம்பு அங்கே தான் இருக்கு. வீட்டில் குறக்களி காட்டுவது அதுக்குள்ளே இருக்கப்பட்ட பீக்காட்டு தேவதையா இல்லை முனியா?

அவன் அவசரமாக மாடப் புரை இருட்டில் துழாவ இழைகிற ஜந்து ஏதோ கையில் ஊர்ந்து அப்புறம் தரையில் விழுந்தது.

அம்மாடீ. பூரானா?

அவன் போட்ட சத்தத்தில் கற்பகம் பூஜை அறைக்குள் வந்துவிட்டாள்.

ஏன் என்ன ஆச்சு? எதுக்கு அலறணும்? கேக்கறேன். அலங்க மலங்க முழிச்சுண்டு நிக்கறேளே. என்ன ஆச்சு?

அவனை தோளில் தட்டி பலமாக அசைத்துவிட்டு அப்படியே புடவை விலக்கி மாரில் சாய்த்துக் கொண்டு ஸ்தனங்களால் அவன் முகத்தில் அழுத்தினாள். போன நிமிஷ அதிர்ச்சியும் பயமும் எல்லாம் போக, வியர்வையும் கறிவேப்பிலை வாசனையுமாக இருந்த அவளில் அடைக்கலமானான் நீலகண்டன்.

குழந்தே. ரொம்ப பசியா இருந்ததுடா. அதான் சாப்பிட உட்கார்ந்தேன். சரி, நீங்க ஆம்படையானும் பொண்டாட்டியும் அந்யோன்யமா இருக்கற இடத்துலே இந்தக் கிழவிக்கு என்ன வேலை. நான் வெளியிலே போயிடறேன். சாப்பிட்டுட்டுத் தானே என்னை திரும்ப கூட்டிண்டு போகப்போறே. மெல்ல வா. நான் காத்துண்டு இருக்கேன்.

நீலகண்டனுக்கு மாத்திரம் முணுமுணு என்று கேட்ட சத்தம். ஸ்தாலிச் சொம்பு தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அது பூஜை அறைக்கு வெளியே உருண்டது.

ஐயோ, இந்தக் குரல். மனசை ஈரப்படுத்துகிற இது நிச்சயம் துர்த்தேவதை இல்லை. அம்மா கோமதியா? பகல் நேரத்தில் தயிர் சாதமும் மாவடுவும் சாப்பிட இறங்கி இருக்கிறாளா? ஆவக்காய் ஊறுகாய் என்றால் அவளுக்கு இஷ்டமாச்சே.

இது அம்மா இல்லை. அவள் குரல் இப்படி இருக்காது. கற்பகத்தை விட அதிகாரமாக, எல்லாவற்றையும் கட்டி ஆள்கிற தொனியில் இருக்கப்பட்டது இல்லையா அது? இந்த அடங்கின குரலும் வார்த்தைக்கு வார்த்தை குழந்தே குழந்தே என்று ஹிருதயத்துக்குள் இருந்து கூப்பிடுகிறதும். எங்கே எப்போதோ கேட்டிருக்கிறோம். சின்ன வயசில் எங்கேயோ பிரயாணமாக குடும்பத்தோடு போனபோது. எங்கே? மலையாளக் கரைக்கு ஒரு விசை போனபோதா? அது ஏன் அந்தப் பிரயாணம் மட்டும் இப்போது ஞாபகம் வருகிறது?

நீலகண்டன் மெல்ல கற்பகத்தின் ஆலிங்கனத்தில் இருந்து விலகினான். அவன் முகம் வியர்த்திருந்தது. கற்பகம் முந்தானையால் ஒற்றி எடுத்தாள்.

இருங்கோ, கொழுமோர் காய்ச்சிக் கொண்டு வரேன். ரொம்பத்தான் பயந்திருக்கேள்.

அவள் சமையல் கட்டுக்குள் நடந்தாள்.

ஏய், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் என்ன பச்சைக் குழந்தையா மோரும் மத்ததும் குடிக்க?

அப்புறம் ஏன் இப்படி பகல் நேரத்திலேயே பிரமை பிடிச்ச மாதிரி ஒரு கூச்சல்? அது சரி, ஆபீசுக்கு கிளம்பிட்டு இதென்ன இப்பவே திரும்ப வந்து நிக்கறேள்?

கொஞ்சம் தொணதொணக்காம இருக்கியா. துரை படார்னு மார் அடைச்சு பரலோகம் போயிட்டான். இன்னிக்கு எல்லோரும் அவாத்துக்கு மாலையும் மத்ததும் எடுத்துண்டு போறா. நான் இப்படி வந்தாச்சு. தலை போற வேலை.

சாப்பாட்டு கூடை எங்கே? அதுலே ரெண்டு ஆப்பிள் பழம் வச்சுருந்தேனே? இருக்கோ?

எல்லாம் ஆபீசுலே இருக்குடி. சாதத்தைப் போடு. சாப்பிட்டு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிண்டு போறேன்.

சாயந்திரத்துக்கா கல்லறை இருக்கப்பட்ட இடத்துக்குப் போகப் போறேள்? வேண்டாம்னா. சொன்னாக் கேளுங்கோ. குளிச்சுட்டு கோவிலுக்குப் போயிட்டு வாங்கோ. துரைக்காக வேணும்னா பத்தாம் நாள் காரியத்தன்னிக்கு மோட்ச தீபம் மயிலாப்பூர் கோவில்லே ஏத்திடலாம்.

ஏண்டி அவா ஆச்சாரப்படி ஒரே நாள்லே குழியைத் தோண்டி பொதைச்சு கல்லை மேலே வச்சு சிலுவை நட்டுடுவாடி. பத்தும் பதினஞ்சும் நமக்குத்தான். சரி சாதம் போடு. பசி உயிர் போறது.

ஆனாலும் வர்ற மனுஷன் சாப்பாட்டுப் பாத்திரத்தை இப்படியா விட்டுட்டு வருவீர்? அதிலே வச்ச சாதமும் கூட்டு கறியும் ராத்திரி கெட்டுப் போய் நாளைக்கு நாத்தம் குடலைப் பிடுங்குமே?

எல்லாம் வெளியிலே எறிஞ்சுட்டு சுத்தமா அலம்பிக் கொண்டு வரேன். போதுமா?

உங்க ஆபீசுலே பத்து பாத்திரம் தேய்க்க பெண்டுகள் இருக்காளா என்ன?

உண்டே. நான் தான் தேடிப் போய் மடியிலே உக்காத்தி வச்சுத் தேய்க்கணும்.

இந்த அலட்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. ஒரு நிமிஷம் தனியா விட்டா பீக்காட்டுப் பேயைக் கண்ட மாதிரி கத்த வேண்டியது.

நீலகண்டன் மர பீரோவைத் திறந்தவன் கொஞ்சம் நிதானித்தான்.

உனக்கு யார் பீக்காட்டுப் பேயைப் பத்திச் சொன்னது?

இதுக்காக ஆள் போட்டா தகவல் சொல்ல வைக்கணும்? நீர் தானே அன்னிக்கு அதான் சித்ரா பௌர்ணமிக்கு.

அவள் சட்டென்று நிறுத்தினாள். நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

நீலகண்டனுக்கு ஞாபகம் வந்தது. ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் மேலே பட நக்னமான மேனி கலந்து ரமித்த நடுராத்திரியில் போகம் முந்த விடாமல் இருக்க பேயையும் பிசாசையும் பற்றி கற்பகம் காதில் சொன்னபடி இயங்கினவன் அவன்.

மர பீரோவின் உள்ளறையில் இன்னும் கொஞ்சம் மக்கி அந்த மலையாளக் காகிதக் கட்டு கிடந்தது. பத்திரமாக வெளியே எடுத்து கையில் தூக்கிக் கொண்டு நடக்கும்போது சில்லென்று ஏதோ காலில் பட்டது.

ஸ்தாலிச் செம்பு.

சாப்பிட்டு வெய்யில் தாழக் கிளம்பலாம்டா குழந்தே. எனக்குத்தான் எதுவுமே கொடுத்து வைக்கலே. கற்பகத்தையும் குழந்தைகளையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோ. சும்மா கண்டதுக்கும் பயந்து நடுங்காதே. கொழுமோர் உடம்புக்கு நல்லது.

முணுமுணுவென்று குரல் ஒலித்து அப்புறம் அந்தக் கூடம் முழுக்கக் கவிந்த மௌனம். ஊஞ்சல் அசைகிற சத்தம் அப்புறம். ஊஞ்சலை ஓரமாகத் தள்ளிக் கொண்டு சமையல்கட்டுக்குள் போனாள் கற்பகம்.

ஸ்தாலிச் செம்பை வெறித்தபடி நின்றான் நீலகண்டன்.

(தொடரும்)

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

இரா.முருகன்

இரா.முருகன்