From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

மணி சுவாமிநாதன்


இந்தக் கட்டுரைக்கு ‘குப்பனுக்கும் சுப்பனுக்குமான ஆன்மீகம் (Spirituality for Dummies) ‘ னும் தலைப்புக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை, யாராவது மெகா தொடர் ஆரம்பிக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுக்கொடுக்கிறேன்.

நான் ஆன்மீகம் பயில ஆரம்பித்ததெல்லாம் வெகுசமீபத்தில்தான். முதலில் ஆன்மீகம் என்றால், பெரிய பெரிய சாஸ்திரிகள், வேதவிற்பன்னர்கள், ராமாயண, பாரத கூடுதல்-பிரசங்கிகள், மகாதேவ மாயானந்தாக்கள், ரிட்டையர்டு பெரியவர்கள் என்றெல்லாம்தான் நினைவுக்கு வந்தார்கள். என்னை மாதிரி குப்பனுக்கும் சுப்பனுக்கும் அது புரியாது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆறுமாத கால அனுபவத்தில், அறிவுஜீவிகளைக் காட்டிலும் குப்பனுக்கும் சுப்பனுக்கும்தான் ஆன்மீகப் பயிற்சி எளிதாக வரும் என்பதை அனுபவப் பூர்வமாகத் தெரிந்துகொண்டேன்.

மனத்தை அலைய விடுவது என்பது ஒரு survival skill. கடவுள் பார்த்துக் கொடுத்த வரம்.

எப்படி வேட்டைப்புலி தனது இரையைத்தேடி அலைகிறதோ, அப்படியே புள்ளிமானும் புல்லை மேய்வதோடு அல்லாமல், சதா தனது பார்வையை நாலாபக்கங்களிலும் அலையவிடவேண்டும். புலி மனது அலையாவிட்டால், இரைகிட்டாமல் பட்டினியால் புலியும் செத்துவிடும், புள்ளிமான் மனது அலையாவிட்டால் புலிக்கு இரையாகி புள்ளிமானும் செத்துவிடும். ஆகவே மனத்தை அலையவிடுவது ஒரு survival skill.

எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டல்லவா ? தேவைக்கு மாத்திரம் மனத்தை அலையவிடாமல், எல்லாநேரமும் மனத்தை அலையவிடும்போதுதான், பிரச்சினையே வருகின்றது. வேட்டையாடிய புள்ளிமானை, பசிபோக ருசியாக புசித்த புலி, மனத்தை அமைதிப்படுத்தி நிழலில் தூங்கி ஓய்வு எடுக்கும் நேரம், எம்பெருமானின் திருவடியை சரணடைந்த நேரமாகும். (புள்ளிமானை ஓடஓட துரத்தி வேட்டையாடிய நேரமும் எம்பெருமானை சரணடைந்த நேரமே. அதுபற்றி இன்னோரு முறை).

ஆனால், பசி நீங்கிய புலி, மன நிறைவு பெறாமல் அடுத்த வேளைக்கும், அடுத்த வாரத்துக்கும், ஏன், ஏழு தலைமுறைக்கும் தேவையான புள்ளிமான்களைக் கொன்றுகுவித்து, ஸ்டாக் செய்வோம் என்று பேராசைப்பட்டு அடுத்த புள்ளிமானுக்காக மனத்தை அலையவிடும்போதுதான், அது எம்பெருமானின் திருவடிகளை விட்டு விலகிச் சென்றுவிடுகிறது.

தேவைக்கு மாத்திரம் மனத்தை அலையவிடுவதற்குப் பெயர்தான், இறைபக்தி. கோயிலில் போய் பூஜை, புனஸ்காரம், அர்ச்சனை செய்வது எல்லாம் வெறும் டிராமா. தேவைக்கு மாத்திரம் மனத்தை அலையவிடுவதென்பது அவ்வளவு எளிதான காரியமே அல்ல. சொல்லப்போனால், எல்லாக் கடவுளர்களும் மதங்களும் கண்டுபிடிக்கப் பட்டதன் நோக்கமே, ‘தேவைக்கு மாத்திரம் மனத்தை அலையவிடுவது ‘ என்கிற கண்ட்ரோலை, கடிவாளத்தை கையில் பிடிப்பதற்காகத்தான். ‘தேவை ‘ என்பதில், எதெல்லாம் அடங்கும் என்று ஆராய ஆரம்பித்தோமானால், இன்னோரு திரியில் புராணம் பாடவேண்டியிருக்கும். அதை இன்னோரு காலம் கவனிப்போம்.

மன நிசப்தத்தைப் பெறுவதற்கான பயிற்சிகளில் ஒன்றுதான் தியானம் என்பது.

தியானம் என்று ஆரம்பத்தில் பயிற்சி செய்ய அமரும்போது, ஒவ்வொரு முறையும் ‘புள்ளயார் புடிக்க, குரங்காய் முடிஞ்சிப் ‘ போய்விடும். மற்றநேரமாவது மனத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். ஆனால் தியானம் என்று (ஆசையாக!) உட்காரும்போதுதான், ஊரில் இல்லாத சிந்தனைகள் எல்லாம் நமது அட்ரஸ் தேடிக்கண்டுபிடித்து, கூட்டணி வைத்து நம் மனக்கதவை வந்துதட்டும். மனத்துக்குள் ஒரே கொசமுசாவாகி, ரொம்ப சீக்கிரத்திலேயே விசிலடிக்கத் தயாராகும் பிரஷர்குக்கர் மாதிரி, மண்டை எந்நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கும்.

அதற்கு பரிகாரமாக பெரியவர்கள் சில உபாயங்களை சொல்லிச் சென்றுள்ளார்கள். மனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மந்திரம் ஏதேனும் ஜபிக்கவேண்டும். கடவுளின் படத்தை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பிள்ளையாரை மனத்தில் அப்படியே நிலைநிறுத்தி (தெய்வ சிந்தனையை விட்டு விலகினால், அது தெய்வத்துக்கு செய்யும் அவமானமல்லவா ?) தியானித்தால், மனம் ஒருமைப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பார்கள் பெரியோர்கள்.

ஆன்மீகக் கத்துக்குட்டிகளுக்கு, இந்த பிள்ளையார் யுக்தி உண்மையிலேயே மிகவும் கைகொடுக்கும். சில விநாடிகளுக்கு. அப்புறம் முதலில் கை கொடுத்த அதே பிள்ளையாரே அப்புறம் தும்பிக்கை கொடுப்பார். அந்தத் தும்பிக்கை இருக்கிறதே, மனக்கண்களுக்கு முன்னால், மெல்லத் தூண்டில் மாதிரி ஆசைகாட்டி சிந்தனையை எங்கோ ஹைஜாக் செய்துகொண்டுபோய், கடைசியில் zoo வில் கொண்டுபோய் விடும். Zoo வில் எப்போதோ பார்த்த தும்பிக்கை வைத்த யானை, திரும்பவும் நினைவுக்கு வரும்.

யானை மட்டுமா, கட்டுரையில் முதலில் படித்தோமே, அந்தப் புலியும், புள்ளிமானும் (அட! இங்கதான் இருக்குல!) கூட அடுத்தடுத்த கூண்டுகளில் இருக்கும். அப்புறம் என்ன, எங்கெங்கெல்லாமோ பயணிக்க ஆரம்பித்த மனசு, மிருகக் காட்சிசாலைவரை வந்துவிட்டு, குரங்கைப் பார்க்காமல் போகுமா ? குரங்கைப் பார்த்த மாத்திரத்தில், inspiration வந்து மனசு தானும் அதுவாகவேப் பாவிக்க ஆரம்பித்துவிடும். ‘தத்தித் தாவுது மனசு ‘ என்று சும்மாவா, தனது படத்துக்கு டைட்டில் வைத்தார் மும்தாசு.

இதுதான் ‘புள்ளயாரு புடிக்க குரங்குல முடிஞ்ச ‘ கதை. மீண்டும் பிள்ளையாரின் பிம்பத்தை கொழுக்கட்டை மாதிரி திரும்பவும் மனத்தில் பிடித்துவைக்க என்ன செய்யவேண்டும் ? முதலில், கொழுக்கட்டையைப் பற்றிய நினைப்பை அறவே களையவேண்டும். அடுத்து குரங்கை பிள்ளையாராக மாற்றுவதைப் பற்றி யோசிக்கவேண்டும். எப்படி, குரங்குக்கு பிள்ளையார் வேஷம், காஸ்ட்யூம் போட்டுவிடுவதா ?

மனத்தில் வீற்றிருப்பதோ குரங்கு. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சாற்றுவது பரிணாமத் தத்துவம். நாமோ, ஒருபடி மேலேபோய் குரங்கிலிருந்து தெய்வத்தையே அல்லவா வரவழைக்க ஆசைப்படுகிறோம்! சீரியஸாக…, எப்படி பிள்ளையாரை திருப்பிக்கொண்டுவருவது ?

எந்த ரூட்டில் பிள்ளையார் ஹைஜாக் செய்யப்பட்டாரோ, அதே மாதிரியாக சாமர்த்தியமாக இன்னோரு ரூட்டில்போய் குரங்கை ஹைஜாக் செய்யவேண்டும். எப்படி பிள்ளையார், தும்பிக்கை, யானை, zoo, புலி, புள்ளிமான் என்று கிளைகிளையாக தாவிப்போய் குரங்கைப் பிடித்தோமோ, அதே மாதிரி ரிவர்ஸ் கியரில் வரவேண்டும்.

மனத்தில் வீற்றிருக்கும் குரங்கை, நமது நண்பனாகக் (அது இங்கே யார் சொல்லமாட்டேன்!) கருதி நட்புக்கண்ணோடு (friendly eye-contact) ஏறெடுத்து கனிவாகப் பார்க்கவேண்டும். பார்வையில் இப்போது அனுமார் தெரிவார். இப்போது மனசை கண்ட்ரோலோடு தாவ விடவேண்டும். நினைவுகளை அலைபரப்பு செய்யத் துவங்கவேண்டும். ஆஞ்சநேயா… அனுமந்த்தையா… இஷ்ட தெய்வமே… விக்னேஸ்வரா… கணேஷா… பிள்ளையாரே… என்றுவந்து முடிக்கவேண்டும்.

பிடித்த பிள்ளையாரை மனத்தில் ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்து (நிச்சயம் ‘குரங்குப் ‘பிடியாக அல்ல. அந்தத் தவறை மீண்டும் செய்யவேண்டாமே!), திரும்பவும் தியானிக்க ஆரம்பித்தால், இந்தத் தடவை மனசு நிச்சயம் ஒருமைப்படும்.

இப்படியாக மெல்ல மெல்ல நமது மனத்தை ஆளக் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் செய்யும் கோமாளித்தனங்களுக்கெல்லாம் சாட்சியாக இருப்பதற்கு பெயரல்ல மனசாட்சி என்பது. நமது மனசை ஆட்சி செய்யும் ஆற்றலுக்குப் பெயர்தான் மனசாட்சி என்பது.

இந்த மாதிரிப் பயிற்சிகளை அன்றாட நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் ஆன்மீகம் என்பது. சைவ, வைஷ்ணவ, கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் எல்லாமே சொல்லவருவது இந்த மாதிரி ஆன்மீகக் கருத்துக்களைத்தான்.

தேவையான நேரத்தில், தேவையான பாதையில் மனத்தைச் செலுத்தமுடிவது, மற்றநேரங்களில் மனத்தை அமைதியாக ‘சும்மா இருக்கச் ‘ செய்வது – இதுதான், அருணகிரிநாதர் முதல் முன்னோர்கள் பலர் அருளிச்செய்துள்ள ‘சும்மாயிரு ‘த் தத்துவம். ‘சும்மாயிருக்க ‘ முடிகிறபோதுதான், ஆண்டவனைச் சரணடைகிறோம். இந்த சரணாகதித் தத்துவத்தை மனத்தில் கொண்டு நான் எப்போதும் சொல்வதுதான், ‘எம்பெருமானின் திருவடிகளே சரணம் ‘ என்பது.

எம்பெருமான் கிருபை உங்கள் எல்லோர்க்கும் நிச்சயம் உண்டு.

அன்பன் மணி சுவாமிநாதன்

rangabashyamp@yahoo.com

Series Navigation

மணி சுவாமிநாதன்

மணி சுவாமிநாதன்