திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஞாபகம்

This entry is in the series 20080117_Issue

துவாரகன்



இரவின் ராகத்தை மீட்கும்
பூச்சிகளின் ‘சில்’ லென்ற இரைச்சல்.
மெல்லத் திரை விலக்கி
என் உள்ளம் சேர்த்து வைத்த
உன் நினைவுப் பொதியின்
முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொட்டுகிறது.
அவை போத்தலிலிருந்து கொட்டிய
மாபிள்களாக,
நாலாபக்கமும் சிதறி வீழ்கின்றன.
உன் ஞாபகமாய் இருந்த
எல்லாத் தடங்களையும்
ஒவ்வொன்றாய்
நான் இழந்து விட்ட பின்பும் கூட@
மனிதர்களை இழந்த தெருக்கள் எல்லாம்
உனதான ஞாபகத்தில்…
மூச்சடைத்து, முகம் புதைத்து
மனது விம்மிப் போகிறது.
என்றாலும்,
மிக நிதானமாக
தன் உயிர்ப்பை ஞாபகப்படுத்தும்
என் வீட்டுச் சுவர்மணிக்கூட்டின்
ஓசையைப் போல்,
இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
இயங்கும் வரை.


mskwaran@yahoo.com

Series Navigation

About துவாரகன்

துவாரகன்

View all 11 articles →

ஞாபகம்

This entry is in the series 20030530_Issue

தமிழ்மணவாளன்


எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு
நாடகம் பார்க்கச் செல்லும் போது
இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய்.
அழுது கொஞ்ச நேரத்தில்
அப்படியே உறங்கிப் போவேன்.

அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச
‘நல்ல பையன் சொன்னதைக் கேட்பான் ‘
எனச் சொல்வாய் பெருமையாய்.
நாடகம் பார்த்ததிலும் அதிக திருப்தியோடு
தீர்ந்து போகுமென் நாடக ஆசை.

கோபத்தில் அப்பா அடித்துத் துரத்த,
அவர் கடைக்கு போன சமயம்
கொல்லைப் பக்கம் அழைத்து
சாப்பிடச் செய்வாய்.

வார விடுமுறையில் வந்து செல்கையில்
அப்பா கொடுக்கும் அதேயளவு
நீயும் கொடுப்பாய்
‘போதும் போதும் ‘ என்பேன் நான்.
அந்தப் பணம் கொடுப்பதற்காய்
எத்தனைச் சிக்கனமாய்
இருந்தாய் நீ.

ஆயிரமாயிரமாய் சம்பாத்ித்து
அவசியமானவையெல்லாம்
வாங்க செலவு செய்ய முடிகிறது
என்னால் இப்போது.
ஆயினும்
விரல் குவித்து அடுக்கிய
சில்லரைகளைத்
தருவாயே
அந்த இன்பம் எப்போதுமே
சற்றுக் கூடுதல் தான் அம்மா.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

About தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

View all 31 articles →