புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

புதுவை ஞானம்


PRISM AND SPECTRUM
_
நான் அதிகம் படித்தவன் அல்லன்.அரை வேக்காட்டு அறிவு ஜீவியும் அல்லன். நிறைய பேர்களோடு பிறந்ததாலோ என்னவோ எனக்குப் பலர் மீது அன்பும் பாசமும் உண்டு. “ அருளெனும் அன்பீன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு “ என்றபடிக்கு ஓரளவு வசதியாக இருந்தவரை நான் ஒரு மார்க்சிஸ்ட் ஆக இயல்பாக இருக்க முடிந்தது. தந்தை பெரியார் சொன்னது போல அளவு கடந்த மனிதாபிமானத்தின் காரணமாக எனது சக்திக்கும் புத்திக்கும் மீறிய பணிகளில் ஈடுபட்டேன்.வசதி குறைந்த போது அற்ற குளத்து அறு நீர்ப் பறவை போல தொளோடு தோள் நின்ற தோழர்கள் தாகம் தீர்துக்கொள்ள தடாகம் தேடிப் பறந்து விட்டனர். ஆன போதிலும், அந்த தனிமையும் வறுமையும் ‘ பசித்திரு – தனித்திரு – விழித்திரு’
என்ற , ‘ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி வீடுதோரிறந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்த வடலூர் வள்ளல் காட்டிய வழியில் நடக்க வைத்தது.

துயரம் என்பது என்ன ?

துயர்க் காரணி என்பது என்ன ?

துயர நிவாரணி என்பது என்ன?

எனும் கேள்விகள் தொடர்ந்தன.நமக்குத் தெரிந்த வரை கெளதம புத்தருக்கும் முன்னும் பின்னுமாக பல புத்தர்களும் சித்தர்களும் இக்கேள்விகளுக்கு விடை தேடினார்கள் ஆளுக்கொரு விதமாய் வழி காட்டினார்கள். அதிலொரு வழி காரல் மார்க்ஸ் காட்டியது.

மார்க்ஸ் மூட்டிய அந்தக் கனல் , அவ்வப்போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவில் மக்களின் தன்னெழுச்சியான இயக்கங்களையும், திரட்டப்பட்ட மக்கள் எழுச்சிகளையும் வழிகாட்டி வெற்றிகள் ஈட்டியது. வெற்றிக்கனிகள் எட்டியது யாருக்கு ? சரிசமமாகப் பங்கீடு செய்யப்பட்டதா ? மனித உரிமைகளும் தாபங்களும் மதிக்கப் பட்டனவா ?. அத்தகையதொரு சூழலில் தான் Personal sorrows என்ற பதப்பிரயோகத்தை ஜே.கே (ஜெயகாந்தன் அல்ல , ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி) கையாண்டதைக் கவனித்தேன். அட! தனிப்பட்ட ஒரு மனிதனின் துயரம் மொத்த மானிடத் துயரத்திலிருந்து மாறுபட்டதா என்ன ? ஆம் படைப்புகளும், பார்க்க நேரிட்ட திரைப்படங்களும் சுட்டிக்காட்டின.பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலமோ, ஒரே மாதிரியான ஊதிய விகிதங்களை பெற்றுத் தருவதன் மூலமோ தனிப்பட்ட துயரங்களைக் களைந்து விட முடியாது. மனிதனுக்கு மனிதன் ஆறுதலாக இருக்க முடியுமே தவிர தனிப்பட்ட துயரங்களை மனித சக்தியால் மாற்றி விட முடியாது.

மனிதத் தேவைகள் பல படி நிலைகளில் வெளிப்படுகின்றன. Instinct Level, Emotional Level, Intelllectual Level,Psysic Level உணர்ச்சி – உணர்வு – அறிவு – ஆன்மா என Phyical, Mental, Vital, psychic என உடல் ரீதியான,அறிவு ரீதியான, உயிர் ரீதியான, ஆன்ம ரீதியான தேவைகள் அவற்றின் வெளிப்பாடுகள்,செயற்பாடுகள், செயற்படவும் வெளிப்படுத்தவுமான சுதந்திரம் இப்படி ஒரு கலாச்சாரம் சார்ந்த கேள்வியாய்ப் பரிணமிக்கிறது. அவரவர் வளர்ச்சி நிலைக்கேற்ப இத்தேவைகளின் முன்னுரிமை (priority) அமைந்து ஒன்றுக்கொன்று ஒப்புமை உடைய பல திறப்பட்ட கருத்துக்கள் இயக்கத்தின் சுழற்சி வேகத்தில் தனித்தனி நிறமிழந்து வெண்மையாகின்றன.( SPECTRUM 2, P.1518 UNIVERSAL DELUXE DICTIONARY) நான் மதித்துப் போற்றிய அமரர் தோழர் ஸரோஜ் சவுத்ரி தான் பேசுகையில் “A TRADE UNION IS THE COLLECTIVE MANIFESTAION OF INDIVIDUAL DESIRES.” என மிக அற்புதமாக விளக்குவார்.

இத்தகையதோர் நிறமாலையை (SPECTRUM) முப்பட்டை ஆடி(PRISM) கொண்டு நிறம் பிரித்து ஆய்வு செய்யும் நிறப்பிரிகையிடம் அவர்தம் “முப்பட்டை” என்னவென்று நான் கேட்டதில்லை. யாராவது கேட்டார்களா ? என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் கேட்டேன் “நீங்கள் கையாளும் மொழிநடை பாமர மக்களைச் சென்றடையுமா ? ஆங்கில அறிவு பெற்றவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் ஆங்கிலத்திலேயே எழுதலாமே ? எதற்காகச் சிரமப்பட்டு மொழி பெயர்த்து வெளியிடுகிறீர்கள் ?
என்பது தான் அந்தக் கேள்வி.. இந்தக் கேள்வியைக் கேட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.சொந்தச் சோகம் என்னைக் குடிகாரனாக்கியது. குடிக்கிற பழக்கம் படிக்கிற பழக்கத்தை துரத்தி விட்டது, ஒண்ட வந்தபிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாய்!

துயர்க் காரணி என்பது (ME_NOT ME )எனது – எனதற்றது என்ற கருவில்தான் உதிக்கிறது என்றனர் J.K. யைப் பின்பற்றும் பிரஞ்சு மார்க்சிஸ்டுகளான ANDRE BRETON மற்றும் LEONARD SAINEVILLE ஆகியோர் தமது KRISHNAMURTI AND MARX என்ற நூலில். நம்மூர் மார்க்சிஸ்டுகளும்இதனை ஒப்புக்கொள்வார்கள்.புரட்சி ஒன்றுதான் இந்நிலையை மாற்ற முடியும் என்று ஜேகேயும் மார்க்சும் சொல்கிறார்கள்.எனவே உடனடிப் புரட்சி தேவை என்ற அளவில் ஒத்துப் போய் ஒரு நூலினை எழுதி உள்ளனர்.

அந்த நூல் என் பார்வைக்கு வந்த வேளை, நானோ “ இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ என் கோவே துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்! ” எனவும் “அவனன்றி ஓரணுவும் அசையாது” “சும்மாயிரு சொல்லற மனமே” எனவும் வெளிக்குள் வெளி கடந்து கொண்டிருந்தேன்.Paul Brunton ஆக்கிரமித்தார்.OSHO கலக்கினார்.J.K கவர்ந்தார். நீட்சேவின் ஜரதுருஷ்ட்டிரா காதோடு கிகிசுத்தார். ‘ மலையிலிருந்து இறங்கி மக்களைச் சந்திக்க வேண்டும்’ போல தோன்றிய போது ……….

கலாச்சாரம் பற்றிய, தேசிய இனம் பற்றிய தொன்மங்கள் பற்றிய பல கேள்விகள் முட்டி மோதின. மனம் திறந்து விவாதிக்கவும் மக்களச் சந்திக்கவும் மேடையேதும் இல்லை. இருக்கிற மேடைகளுக்கு வாடகை செலுத்த (LEVI)
பணமும் இல்லை. இருந்த சில நண்பர்களோடு தொலைபேசியில் விவாத்தித்தில் ஓய்வூதியத்தில் பாதிக்குமேல் தொலைபேசிக் கட்டணம் செலுத்தக் கடன் பட்டாகிவிட்டது. இந்த நிலையில் பழம் பெரும் தோழரான அ.மார்க்ஸ்
ஒரு கட்டுரை கேட்கிறார்.(இது நடந்தது கி.பி. இரண்டாயிரம்). எல்லாமே வயித்துக்குத்தாண்டா என தோழர்கள் போன பின் யாருடன் பேச, யாருக்கு எழுத என்னத்தை எழுத ?

ME _ NOT ME என்ற ‘தானை’ (தான் – நான்), தானென்ற அகங்காரத்தை அழித்து விட முடியுமா?

“தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊணும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நானறியேனே ! ”

என திருமூலர் பாடிய நிலையில் நான் ! ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசுக்காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே’ என என் மாஜித் தோழர்கள் !

“அரசன் எங்கே ஆண்டியும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லாரும் ஒன்றாய் இங்கே கூடுவதாலே – நம்
வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே !”

என்று சாவில் தான் சமத்துவம் ஏற்படுமா ? ஆ எழவே ! அப்போது கூட தனித்தனி சுடு காடு – தனித்தனி சுடுகாட்டுப் பாதை ! இந்த இழி நிலை மாறவே மாறாதா ? மாறும் – மாற வேண்டும் !

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே! ”

எனப் பாடிய வள்ளலார் :

“கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்” என வருந்தி விடை பெற்ற வள்ளலார்
மாவட்டத்தில் :

“இது நல்ல தருணம் —
மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாசிரம மெனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாச்சாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றப் புலையும் அழிந்தது”

என்று முழங்கிய அவர்தம் வாக்கைக் காப்பாற்ற மார்க்சீயர்கள் முன் கை எடுக்க வேண்டாமா ?

நான் இத்தகு பெருமை வாய்ந்த வள்ளலார் மாவட்டட்தின் குறிஞ்சிப்பாடி, ச.கு.வேலயுதனார் உயர் நிலைப் பள்ளியில் பழைய நான்காம் பாரம் – ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கும் போது மதிப்பிற்குரிய அறிவியல் ஆசிரியர் முருகேசனார், நிறப்பிரிகை பற்றி பாடம் நடத்துகையில் , வானவில்லின் ஏழு நிறங்களும் தனித்தனியாகத் தீட்டப்பட்ட வட்ட வடிவமானதும் ஒரு இராட்டினத்தில் பொருத்தப் பட்டதுமான அட்டையை அதிவேகமாக சுழற்றிக் காட்டினார். எல்லா வர்ணமும் (வருணமும்) அழிந்து அல்ல இரண்டறக் கலந்து வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஏழு திரை நீக்கி அருட்பெரும் சோதி தரிசனம் கிட்டியதைப் போல வெண்மை ஒளி வீசியது. அப்போது எனக்கு வயது 14, இப்போது (அதாவது கி.பி.இரண்டாயிரத்தில்) 54.

நிறப்பிரிகை எனும் கார்டிசியன் பகுப்பு முறை மாறி நிறமாலையாக (SPECTRUM INSTEAD OF PRISM ) ஆக வேண்டுமானால் இடதுசாரி இயக்கம் தனது மந்த கதியை விடுத்து விரந்து சுழன்று செயல் பட்டால் அமைதி வரும் சாதி மோதலில் சிக்கித் தவிக்கும் வள்ளலார் மாவட்டத்துக்கு.

வள்ளலார் மாவட்டத்தில் பலருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தன- இருக்கின்றன -எதிர்காலத்திலும் இருக்கும். இது எல்லா மாவட்டம், மாநிலம்,நாடுகள் அனைத்துக்கும் பொதுவான நிலை. ஆனால் ‘இருத்தல்’ என்பதே ‘பத்திரமாகவும் அமைதியாகவும் வாழுதல்’ என்பதே ,இன்றைக்கிருப்பது போல் பொத்தாம் பொதுவில் ஒரு கேள்விக் குறி ஆனதில்லையே ! There were problems in life ofcourse, but it had never been a life and death problem. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை இருத்தலின் பேரில் தான் தீர்க்க
முடியுமே ஒழிய, இருத்தலையே பிரச்சனை ஆக்கலாமா ?

பிச்சைக்காரன் பாவம் ! ஒரு வீட்டில் மீந்த பழைய சோறு ,மற்றொரு வீட்டில் கூழ்,பிறிதொரு வீட்டில் ஊசிப்போன இட்டிலி எல்லாவற்றையும் தின்று வாந்தி எடுப்பான். சகிக்கவே சகிக்காது ! புதுவை ஞானத்தின் எழுத்தும் அப்படித்தான். சகிக்காது. மன்னித்து விடுங்கள் !

(இந்தக் கட்டுரை வள்ளலார் மாவட்டம் சாதிக் கலவரத்தில் சிக்கித் தவித்த ஜுன் – ஜுலை 2000 -த்தில் எழுதப்பட்டது. ஆனால் யாருக்கும் அனுப்பப்படவில்லை )

புதுவை ஞானம்.
9/10/06 7:15:36 AM

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

புதுவை ஞானம்



————————-

ஆசான் நாங்குவோ ஜிக்கி ஒரு மேசையில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார்.
தலையை முன்னும் பின்னுமாக அசைத்து ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு
தன்னைக் கடந்ததோர் மோன நிலைக்குள் லயித்தார்.

அவரது சீடரான ஜியோயு கேட்டார், “என்னவாயிற்று குருவே?”
அசைவற்ற உடல் காய வைத்த விறகு போல் ஆகலாம்; எனில்
அசைவற்ற மனம் சாம்பல் போல் ஆகி விடுமா ”
இன்று மேசை மேல் சாய்ந்து உட்கார்ந்த மனிதன் ஏற்கனவே அதில் சாய்ந்து
உட்கார்ந்தவன் அல்ல.

இந்த வாக்கியம் கவித்துவமாகவும் சுற்றி வளைத்துப் பேசுவதாகவும் இருக்கிறது.
ஆசான் ஜிக்கி பதில் அளித்தார்:” நல்ல கேள்வி ! இன்று நான் எனது ஆணவ
மையக் கண்ணோட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டேன். நான் சொல்லுவது என்னவென்று
உனக்குப் புரிகிறதா? மக்களின் இசையை நீ கெட்டு இருக்கிறாய், ஆனால் மண்ணின்
இசையை அல்ல. மண்ணின் இசையை நீ கேட்டிருந்தாலும் சொர்க்கத்தின் இசையை நீ
கேட்டது இல்லை!”

சீடர் ஜியோயு சொன்னார், “நான் அது பற்றிக் கேட்கலாமா?”

“காற்று ஊளையிடுவதை நீ கேட்டதில்லையா? மிகப் பெரிய இந்தப் பூமி மூச்சு
விடும் போது அதனை நாம் காற்று என அழைக்கிறோம். மலை மீதுள்ள மூங்கில்
மரங்களைப் பார். பெரிய முதிர்ந்த மரங்களில் மூக்குத்துவாரங்கள், காதுத்துவாரங்கள்
போன்ற ஓட்டைகளும், குழிவுகளும், திருகி முறுக்கிய கிளைகள் போன்றவையும்
பேனாக்கள், மைக்கட்டிகள் (Grind stones), ஆழமான குட்டைகள், ஆழமற்ற குட்டைகள்
போல இருக்கின்றன. இவை தண்ணீர் விரைந்து ஒடுவதைப் போன்றும் அம்பு காற்றைக்
கிழித்து விரைவதைப் போன்றும், திட்டுவதைப் போன்றும், மூச்சிழுப்பது போலவும் கூவி
அழைப்பது போலவும், கூச்சலிடுவது போன்றும், சிரிப்பது போன்றும், பெரு மூச்சு விடுவது
போலவும் ஓசையிடுகின்றன. துவக்கத்தில் காற்று ஒற்றைச் சுருதியைத்தான் இசைக்கிறது.
அடுத்து லயத்துக்காகவென மற்றொரு சுருதியை எழுப்புகிறது. புயல் இரைச்சலாகச் சீறுகிறது.
புயல் வலுவிழக்கும் போது இந்த எல்லாத் திறப்புகளும் – ஒட்டைகளும் அமைதியடைகின்றன.
காற்று அடங்கும் போது கிளைகளும் இலைகளும் எப்படி அசைகின்றன என்பதை நீங்கள்
கண்டதில்லையா?

சீடர் ஜியோயு சொன்னார்: “புயலின் இசை பரந்தடர்ந்த பாழ் நிலத்தின் திறப்புகளிலிருந்து
வருகின்றது. மக்களின் இசை புல்லாங்குழலில் இருந்தும் இசைக் கருவிகளில் இருந்தும் வருகின்றது.
தேவலோக சொர்க்கத்தின் இசை பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா ? ”

ஆசான் ஜிக்கி பதிலளித்தார்: “இந்த வெவ்வேறு ஓசைகள் வெவ்வேறு விதமான ஒட்டைகள்
வழியே காற்று புகுந்து செல்வதனால் உருவாகின்றன. அவ்வோட்டைகளை இவ்வாறு அமைத்தது
யார்? இவற்றின் பின்னால் இருந்து செயல் படுத்தும் சக்தி எது?”

இந்தக் கேள்வியோடு இந்தக் கதை முடிவடைகிறது. இதன் இறுதிப் பொருள் என்ன என்பது
வாசகரின் சிந்தனைக்கு யூகத்துக்கு விடப்படுகிறது.

தேவலோக இசை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள
உதவும் சில சிந்தனைகள் கீழே தரப்படுகின்றன: ஆசான் ஜிக்கி தேவலோக இசை பற்றி
வெளிப்படையாக விவரிக்கவில்லை. யாருக்கு அதில் ஈடுபாடு இருக்கிறதோ அவர்களே
ஒவ்வொருவரும் அது பற்றிக் கண்டுபிடிக்கட்டும் என விட்டு விட்டார்.

புவியின் இசை பற்றி விவரிப்பதன் மூலம் முனிவர்கள் பாழ்வெளி பற்றி நாம் காண்பதற்கு
நம்மை அனுமதிக்கின்றனர். அல்லது இயற்கையைக் கண்டுணர நடத்திச் செல்கின்றனர்.
காற்று வீசும் போது ஒரு மனிதன் புல்லாங்குழல் வாசிப்பது போல் துளைகளின் ஊடே
புகுந்து செல்கிறது. அடிநாதமான இணைக்கும் சிந்தனை என்னவெனில் ஒரு சக்தி – காற்று
அல்லது மூச்சு இருப்பில் – இயற்கையில் உள்ள அனைத்துப் பல பொருட்களினூடே புகுந்து
செல்கையில் மொத்த பிரபஞ்சமுமே இசைக்கருவி ஆகிவிடுகிறது. இங்கும் கூட இருப்பில்
உள்ள அனைத்து பொருட்களினூடேயும் புகுந்து செல்லும் சர்வ வல்லமை பொருந்திய சக்தியை
நாம் காண்கிறோம். நம்மிடையே ஊடுருவிச் செல்லும், சர்வ வல்லமைகொண்ட சக்தியை நாம்
காண்கிறோம்.நம்மிடையே ஊடுருவிச் செல்லும், நம்மைச் சுற்றியுள்ளவற்றில் ஊடுருவிச் செல்லும்
அனைத்துமே அழகிய இசையை உருவாக்குகின்றன ஆன்மீக சாம்ராஜ்யத்தின் கூட்டு இசையை
உருவாக்குகின்றன.

தேவலோக இசை என்பது நாம் புரிந்து கொண்டது போல் ஓசைகளின் இசை அல்ல. லயத்தை
நாம் புரிந்து கொண்டோமானால் அது ஒரு அண்டக் காற்று – வாழ்வைப் பிரதிபலிக்கும்
படைப்பையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் ஆரோகண அவரோகணம் மற்றும்
இசையின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால் அதன் லயம் ஆரோகணம் அவரோகணம் நமக்குத்
தெரியும். இருந்த போதிலும் அது ஓசையற்ற ஒரு இசை. இயற்கையின் அழகில் தாரகைகளின்
பால்வீதிகளின் பிறப்பிலும் இறப்பிலும் இயற்கையின் மேன்மையான வெளிப்பாட்டைக் காணத்
தொடங்கினால் எளிய மானிடச்சிறப்பிலும் அது வெளிப்படுகிறது.

மூலம்: ஷ¤வாங்ட்ஸ¤
தமிழாக்கம்: புதுவை ஞானம் 8:46 AM 8/2/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

புதுவை ஞானம்


நாம் சிந்திக்கும் செயல் படும் எந்தவொன்றும்
பயனற்றதோ முக்கியமற்றதோ அல்ல.
ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் செல்லும்
கட்டவிழ்ந்த சக்தி தான்.
மரணமற்ற நம் கடந்த காலத்தை நிர்ணயிப்பவர்கள்
நமது நடவடிக்கைகளின் குழந்தை என
விதியை நிர்ணயித்து இருக்கிறார்கள்.
நமது விருப்பம் ஆழ முயன்று உழுத நிலத்தில் இருந்து
நாமே மறந்து போன நமது செயல்களின்
விளைவுக் கனியை அறுவடை செய்கிறோம்.இந்தக்
கனியைத் தாங்கிய மரம் கண்ணுக்குத் தென்படாததாலும்
தெரிய வராத கடந்த காலத்தில் இருந்து பிறந்த
இக்கணத்தில் நாம் வாழ்வதனாலும்
ஒரு யாந்திரீக சக்தியின் பாகங்களாகத் தோன்றுகின்றன அவை ;
பூமியின் சட்டங்களுடன்பிணைக்கப்பட்டவொரு யாந்திரீக மனதாக
இருந்தபோதிலும், ஒரு உயரிய விறுப்புறுதியின் கருவிகள்தாம் அவை.
எல்லாவற்றையும் கண்காணிக்கும்- மேலிருந்து நோக்கும் விழிகளால்
இன்னமும் பார்க்கப் படுகின்றன அவை.

விதியையும் வாய்ப்புகளையும்
முன் கூட்டி உணரும் ஒரு கலைஞன்
முன்னமே வகுக்கப்பட்ட வடிவத்தில்
கட்டியமைக்கிறான் நம் வாழ்வினை
ஒவ்வொரு அடியெடுப்பின் பின் விளைவும்
தெரியும் அவனுக்கு_கண்காணித்துக் கொண்டிருக்கிறான் அவன்
தாழ்ந்த தடுக்கி விடும் சக்திகளை.

மூலம் :மகான் அரவிந்தர் தமிழாக்கம் :புதுவை ஞானம்.
சாவித்திரி காண்டம் மூன்று , நூல் 4.
——————————————————————————–
சக்திகளின் லீலைகள்
_____________________
கொஞ்சம் புத்தியுடனும், கூர்ந்து நோக்கும் திறனுடனும், அகம் நோக்கிய உள்ளுணர்வுடன் வாழ்பவர்கள்
எவர் ஒருவரும், தமக்குத் தெரியாமலேயே, கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் இயங்குவதையும், லீலை
புரிவதையும்- நாடகமாடுவதையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவதானிக்க முடியும்.யோகத்தின் மூலமோ
அல்லது ஒரு உள்ளுணர்வின் மூலமோ; யோகத்தின் மூலமாக அல்லாமல் ஒருவித உள்ளுணர்வை வளர்த்துக்
கொண்ட சிலர்- சாக்ரடீஸ் போன்றவர்களில் சிலர் தான் இந்த கண்ணுக்குப் புலப்படாத சக்திகளை உணர்ந்து
கொள்கிறார்கள் என்பதுடன் உணர்வு பூர்வமாக அவற்றால் லாபமடைகிறார்கள். அவற்றைப் பயன் படுத்தி
இந்த வழியில் செல்ல வேண்டும் என கட்டுப் படுத்துகிறார்கள். அவ்வளவு தான்.

உள்ளுறையும் சக்திகளின் நாடகம் மிகவும் சிக்கலானது. அவற்றைப் பற்றிய உணர்வு உள்ளவர்கள், அவற்றைக்
கண்டுகொண்டு அவற்றின் விருப்பம் போல ஏன் சம்பவங்கள் நடக்கின்றன என்பதை உண்மையில் புரிந்து கொள்ள
முடியும்.

ஒரு சம்பவத்தை நாம் கவனிக்கும் போது ,அதன் விளைவைக் கொண்டு அதனைப் பற்றி மதிப்பிடவும், விளக்கவும்
செய்கிறோம். அதையும் கூட மிகவும் வெளிப்படையான கூறுகள், சூழ்நிலைகள், அல்லது சாதனங்களைப்
பார்ப்பதன் மூலம் விளக்குகிறோம். ஆனால் ஒவ்வொரு சம்பவமும் ஒரு சிக்கலான வலைப்பின்னலின் விளைவு
என்பதை நாம் கவனிப்பது இல்லை.எனினும் கவனிக்க முடியும். ஏனெனில், எல்லா சக்திகளும் கண்ணுக்குப்
புலப்படாதவை – ஆனால் அவை எல்லையற்றதான ஆன்மீகப் பார்வைக்குப் புலப்படாதவை அல்ல. அவற்றுள்
சில ஒரு மெய்மையை உருவாக்க அல்லது நிகழ்த்திக் காட்ட செயற்படுபவை ஆகும். சில ஏற்கனவே வாழும்
மெய்மைக்கு அருகாமையில் உள்ள நிகழ்வுகளாக,ஒரு வகையில் அப்படிப்பட்டவற்றின், முழுமையில் அடங்கி
உள்ளன.ஆனால் எந்த மெய்மையை விளைவிக்க இந்த சாத்தியக் கூறுகள் உழைக்கின்றனவோ அவற்றின்
பின்னால், உந்து சக்தியாக , எப்போதுமே ஒரு புதிய சாத்தியக் கூறு குறுக்கிட முடியும். அது திடீரென வீரிய
மிக்க சக்தியாய் அந்த வலைப்பின்னலுடன் சேர முடியும். அதற்கும் மேலாக அதே சக்திகளின் இணைவில்
இருந்து வெவ்வேறு விளைவுகள் வரக்கூடும்.

இவற்றிலிருந்து என்ன விளைவுகள் ஏற்படும் என்பது, எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் தெய்வீக ஆணையினால்
ஏற்கனவே தயாராகக் காத்திருக்கும் ஒரு மேலிடத்தின் இசைவால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன.
.இவையனைத்தையும் நமது அறிவு புரிந்து கொள்ளாது, ஏனெனில் அது அறியாமையின் ஒரு கருவி. அதற்கென்று
குறுகிய பார்வையும் கொஞ்சமேயான ஆனாலும் நிச்சயமற்றதும் நம்பகத்தன்மை அற்றதுமான அறிவு அது.
அத்தோடு கூட நேரடியான விழிப்பிற்கான எந்த வழி வகையும் அதற்கு இல்லை.ஏனெனில் இது தான் அறிவுக்கும்
யூகத்துக்கும் இடையிலான வேறு பாடு.யூகம் என்பது நேரடி விழிப்புணர்விலிருந்து பிறக்கிறது. அறிவு என்பதோ
தெரியாத சைகைகள்,குறியீடுகள் ஆகியவற்றிலிருந்து சிரமத்துடன் சேகரித்து உருவாக்கப்பட்ட தகவல்களின்
மறைமுக செயற்பாடு ஆகும்.

சாதாரன அறிவில் இரண்டு விதமான அறியப்படக்கூடிய செல்வாக்குகள் தாம் இருக்கின்றன. அவை ஒருவரது
சிந்தனைகளும் உணர்வுகளும் செயற்பாடுகளும் (ஒரு புறம் )சூழல் மற்றும் பௌதீக சக்திகளின் லீலைகள்
(மறு புறம்)எனவாக இருக்கின்றன. ஆனால் ஒருவர்,விஷயங்களின் உட்காட்சியை அறிந்து கொள்ளத் தொடங்கும்
போது அது வேறு விதமாக ஆகின்றது. சக்திகளின் அனைத்து செயற்பாடுகளும் பிரகிருதியின் உளவியல் மற்றும்
உடலியல் சக்திகள்- நமது இயற்கையின் சுபாவத்தின் மீது செயல் புரிபவை அனைத்தும் நமக்குப் பின்னால் உள்ள
ஒரு உள்ளுணர்வால் ஊக்குவிக்கப் படுகின்றன என்பதை அனுபவ பூர்வமாக உணருகிறார். மிகப்பெரிய பிரபஞ்ச
செயற்பாட்டின் மத்தியில் அவர் இருப்பதனால் ஒவ்வொன்றையும் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரமான ஆளுமையின்
விளைவுகள் என விவரிக்க முடிவதில்லை.
——————————————————————————————————————————————————————————

மறைந்துறையும் உயிர்ச் சக்திகள்.
—————————————————-
தன் இதயத்தின் உள் வைத்து, தான் மட்டும் அறிந்திருக்கும்
எல்லையற்றுப் பரந்ததோர் திட்டத்தின் பகுதிகள் தாம்
அண்டத்திலும் அதற்கு அப்பாலும் நிகழும் அனைத்தும்.
வெளிப்புற நிகழ்வுகளின் வித்துக்கள் அனைத்தும்
அவற்றுக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றன.
தற்செயலை ஒத்திருக்கும் இந்த நோக்கமற்ற விதியும்
புரிந்து கொள்ள இயலாத பிரம்மாண்டமான முடிவுகளும்
காணப்படாத அப்பணியின் ஊமை வரைபடங்கள் தான்.
அறியப்படாத விதிகள் தான்
அறியக்கூடியவற்றை கட்டமைக்கின்றன.
அரிதாக நாம் உணரும் அல்லது வியக்கும்
வாழ்வின் புறத்தோற்றத்தை வரையும் சம்பவங்களோ…….
புலன்களுக்கு எட்டாத அலைவரிசையின்
மறைக் குறிகள் தாம்.
தூலமான பகல் நேரத்தில் தென்படாத
ஒடுக்கப் பட்ட யதார்த்தங்களின்
வெளிப்பாடு தான்.
மர்மங்கள் நிரைந்த இந்த ரகசிய வளைகுடாவை
யாரால் துளைத்து ஊடுறுவ முடியும் ?.
தற்காலிக சம்பவங்களையும் பின் விளைவுகளையும்
எந்த ஆன்மாவின் தேவை ஏற்படுத்தியது என்பதனை
யாரால் புரிந்து கொள்ள இயலும் ?.
அன்றாட நடவடிக்கை எனும் வெளிப்புறத் தோற்றத்தில்
ஆழ்ந்து போயின நமது கண்கள்.
சூழ்நிலைகளின் சக்கரங்கள் உராய்வதைச் செவிமடுத்து
வியப்பிலாழ்ந்து போயின நம் செவிகள்
பின்னணியில் மறைந்துறையும் காரணங்கள்
என்னவென்று அறியாமல்.

மூலம்: மகான் அரவிந்தர். சாவித்திரி-நூல் 1. காண்டம் 4.
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

——————————————————————————————————————————————————————————–
முத்திரையிடப்பட்ட தோற்றுவாய் கொண்டவை நமது உள்ளுணர்வின் அசைவுகள்.
ஆனால் நிழலார்ந்த அந்த உட்பொருளை வாங்க முடியாது யாராலும்.நமது தோழமை
வளர்க்கும் எந்தப் புரிதலும் அதனக் கட்டுப் படுத்தாது.அறிவு அலட்சியப்படுத்தும்
மர்மங்களில் இருந்து நமது நடவடிக்கைகள் பிறக்கின்றன.மிக ஆழமான நமது
எண்ணங்கள் கூட தம்மைப் பற்றிய அறியாமையில் இருக்கின்றன.நமது உடல் கூட
ஒரு ஆச்சரியமான பட்டறைதான் ; நமது பூமியின் வேர்கள் ஆழப் பிளந்து ஊடுருவுகின்றன
பூமிக்குள் – இப்படித்தான் நமது அறிவின் வேர்களும் உயிரின் வேர்களும் காண முடியாத
ஆழத்தில் உள்ளன.
நமது எண்ண ஊற்றுக்கள் உள்ளுக்குள்ளேயே ஆழத்தில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன.
அவற்றுக்கு அப்பாலுள்ள சக்திகளால் நமது ஆன்மாக்கள் இயக்கப் படுகின்றன.அந்த ஆன்மாக்களால்
எட்ட முடியாத நிலத்தடி நீர் போல ஒரு சக்தி செயல் படுகிறது.தான் நினைத்ததை அழித்து விடுவதில்லை அது.
நினைவற்ற புலனுறுப்புகளையும் வழிகாட்டிகளையும் பயன் படுத்தி அதுவே தான், நாம் நினைப்பதற்கும் உணர்வதற்குமான
காரணம் ஆகிறது.ஆழ்மனதின் ஆதிமனிதம், சரியாகப் பயிற்றுவிக்கப்படாத தடுக்கி விழும் விரிவுரயாளர்கள்தங்களது
சின்னஞ்சிறிய அன்றாடப் பணிகளை மட்டுமே அறிந்தவர்கள்.தம் உயிரணுக்களின் பதிவுகளில் சுறுசுறுப்பானவர்கள்.
புலணுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ரகசியங்களில் தெளிவற்ற மறைவிடமாக அண்ட சக்தியின் நற்செய்தியை அது
ஒலி பரப்புகிறது. உயிரின் உட்கணுக்களுக்குள் ஒரு கிகிசுப்பு கேட்கிறது.உணர்வற்ற இருண்ட குகைகளில் அது
எதிரொலிக்கிறது. பேச்சு தாவுகிறது, எண்ணங்கள் துடிக்கின்றன.இதயம் படபடக்கிறது.மனத்திட்பம் பதிலளிக்கிறது.
தசைகளும் நரம்புகளும் மனத்திட்பத்துக்கு அடிபணிகின்றன.இந்த நுண்ணிய உறவுகளை நமது உயிர் மொழி மாற்றம்
செய்கிறது.இவை அனத்தும் ஒரு ரகசிய சக்தியின் வாணிகம் தான்.

மூலம் :மகான் அரவிந்தர் சாவித்திரி நூல் 2. காண்டம் 5.
————————————————————————————————–

உயிர் ஒற்றுமை
————————-
எனது இதயத்தின் உள்ளே இடம் கொடுத்தேன் அனைத்து உயிர்களுக்கும்
எனக்குள்ளே உணர்ந்தேன் அகிலத்தில் உயிர்த்த அனைத்து இதயத் துடிப்பையும்
பகிர்ந்து கொண்டேன் படைப்புகளின் இன்ப கீதம் அனைத்தையும்.
பருகினேன் கசப்பின் பழரசமாய் அனைத்தின் துயரங்களையும்.
உணர்ந்தேன் மற்றவரின் இதயத்தின் ஆத்திரத்தை ……
அனைத்துக் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளும் வந்து விழுந்தன
என் இதயமெனும் சொந்த உலகில்;
ஒரு கோடி இதயங்கள் வெளிப்படுத்திய
ஒற்றை அன்பினைப் பகிர்ந்து கொண்டேன்.
மனிதன் வேட்டையாடும் மிருகமும் நான் தான்
மனிதன் ஏற்றுக் காப்பாற்றும் மிருகமும் நான் தான்.
இன்பம் துன்பம் என்னும் பற்றியெரியும் சிறகை விரித்துப் பறக்கிறேன்.
கரும் நெருப்பும் பொன் நெருப்பும் ஒற்றைக் கருணையை
நோக்கித்தான் பறக்கின்றன.
இணைந்து எழுகிறேன் நான் ஒரு தெய்வீக வான் நிலைக்கு
சக்தியும் அன்பும் மரணமற்ற பேரின்பமும் நோக்கி.
எந்தக் கரங்களாலும் தீண்ட இயலாத
ஆழ்ந்ததோர் ஆன்மீக அமைதி – இந்த
இன்ப துன்ப நாடகத்தின் விளங்காத் தன்மையை
உறுதிப் படுத்துகிறது.

மகான் அரவிந்தர் collected poems p.146
————————————————————————————————————

நீலப் பறவை.
——————–

கடவுளின் பறவை நான்
இறை நீல வண்ணமும்
தெய்வீகத் தூய்மையும்
உயரமும் என் வெளி.

இனிமையும் உண்மையுமான
இராகங்களை இசைக்கிறேன் நான்
கடவுளின் செவிகளும் அவன்
சிரத்துக்கு மேல் மிதக்கும்
தேவதையின் செவிகளும் குளிரும் வண்ணம்.
(Seraph :இசையாவின் தரிசனத்தில் வந்த இறைவனின் மேலாக
மிதக்கும் தேவதை.)

மனிதனின் பூமியிலிருந்து
தீயென எழுகிறேன் யான்
துயரத்தின் சுவடற்ற விண்வெளி நோக்கி
மீண்டும் விழுகிறேன் அவன் பிறந்த
துயர பூமியில்- மெய் மறந்த இன்பத்தின்
அக்கினி வித்துகளாய்.

காலமும் வெளியும் கடந்து
சிறகடித்துச் செல்கிறேன் யான்
மங்காதவோர் ஒளியினை நோக்கி
நித்தியத்தின் கருணை முகத்தையும்
ஆன்மீகத்தின் அதிர்ஷ்டப் பறவையையும்
கொண்டு வருகிறேன் யான்.
எனது பவழ விழிகளால் அளக்கிறேன் உலகத்தை
ஞான விருட்சத்தின் கிளைகளில் தாவி அமர்ந்து கொண்டு
சொர்கத்தின் மலர்த் தூவலும்
நித்தியத்தின் நீரோடைகளும்
நனைக்கின்றன என்னை.

கொழுந்து விட்டெரியும் எனது இதயத்திலிருந்து
எதுவுமே மறைக்கப் பட வில்லை
கரையற்றதும் சலனமற்றதும் என் மனம்.
பேரானந்தத்தின் அர்ப்பனக் கலையே
எனது பாடல்-சாகாக் கலையின்
விறுப்புறுதியே எனது சிறகடிப்பு.

முலம் :மகான் அரவிந்தர் Collected poems -Sri Aurobindoo birth centinary Library Vol.5

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

புதுவை ஞானம்


வேர்கள் பட்டுவிட்டால்…..

விதையொன்று ஊன்றப்பட்டது -தகுந்த
வெப்பமும் வெளிச்சமும் ஈரமும் தர
முளையொன்று வெளிவந்தது
வேர் கீழாகக் குருத்து மேலாக.

ஆழமும் அகலமுமாய்க் கீழே
வேர் பிடிக்கப் பிடிக்கத்
தழைத்துக் கிளைத்தது
தாவரமாய் மரமாய்
வானோக்கி மேலோங்கி.

தழைத்துக் குலுங்கித்
தருநிழல் வீழ
ஆடுமாடுகள் இளைப்பாறின
நிழல் தளத்தில்.

பூத்துக்குலுங்குகையில்
தேனருந்திச் சென்றன
தேனீக்கள் வண்டுகள்
காய்த்துப் பழுத்துக்
களைத்து நிற்கையில்
பசியாறிச் சென்றது
பறவைக் கூட்டம்.
கல்லடி பட்டதும்
ஏராளம் ஏராளம்.
மரத்துக்குத்தான்
பூசை பொட்டு
வழிபாடு…..
வேர்களுக்கு ?
வெந்நீர் ஊற்றாமல்
இருந்தாலே போதும்!
.
வேர்கள் வரண்டு விட்டால்
மரம் பட்டுப் போய்க் காய
பட்டமரம் பட்டுப்போச்சு
வெட்டி விறகாக்கு என
விறகாகிப் போய்விடுவீர் !.
ஒரு வேளை விழுதுகள் கூட
வேர் விடலாம் – நீங்கள்
ஆல் போல் வாழ்ந்திருந்து
அருகு போல் வேர் விட்டால் !.
( 6, ஜுன், 2006.)


மிதத்தலும் மோனமும்.

சுழித்துப் பெருக்கெடுத்தோடும் வெள்ளம்
புரட்டிப் போட்டது தெள்ளிய ஆற்றினை
அடியில் கிடந்த அசிங்கங்கள் எல்லாம்
மிதந்து வந்தன மேல் நோக்கி
அடித்துக் கொண்டு போகப்படத்தானே ? !
அமைதி கொள்…….
தெளிவு வரும்
மீண்டும்.
வெள்ளமும்…….. !

பயணத்தின் குறுக்கே வந்த
பாறாங்கல் மனத்தினர்
பாதையை மாற்றினர்.
நன்றி சொல்ல வேண்டும் அந்த
நய வஞ்சகர்களுக்கு – இல்லையெனில்
நசுங்கியன்றோ செத்திருப்பேன்.

கரையோர அலைகளைத் தாண்டிவிட்டால்
ஆர்ப்பரிப்பதில்லை கடல்.
மலையுச்சி எட்டி விட்டால்
சிறகடிப்பதில்லை பறவைகள்.
ஆழத்திலும் உச்சியிலும்
அமைதி மட்டுமா குடி கொண்டுள்ளது ?
தன் முயற்சி அற்ற
மிதத்தலும் மோனமும் கூட !


காக்கையும் இறைவனும்

பறக்கக் கற்கும் வரை
பறந்து தேடி வந்து
பரிந்து ஊட்டும் அலகால்.

உண்ட மயக்கத்தில்
உறங்கிச் சுகம் கண்டு
பறக்க யத்தனிக்காமல்
பம்மாத்து பண்ணினால்
கொத்தித் கொத்தித் துரத்தும்
தன் குஞ்சு பொன் குஞ்சு
என்ற போதிலும்.

காக்கையும் இறைவனும்
தாய் தான் !


தூங்கு மூஞ்சி

நாலு பூ முகிழ்த்திருக்கிறது
தூங்கு முஞ்சி !
நேற்றுப் பெய்த மழைக்கு
நன்றி சொல்லி. ( 23 ஜுன்1997 )


தெம்பளிக்க ஏதாவது ?

ஆன்மீகப் பாதையில்
அழித்தொழிக்கும் புதை குழிகளா ?
சாதனைப் பாதையில்
சோதனைக் குழிகள் !

உபதேசங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன
ஓராயிரம் வழிகளில்- பல்லாயிரம் சித்தர்களால்.

ஒவ்வொரு குறுக்குச் சாலைகளிலும்
ஒவ்வொரு கைகாட்டி மரம்.

நடக்கவோ தெம்பில்லை
பார்க்கவோ தெளிவில்லை.

வழி காட்டியதும் உபதேசித்ததும்
போதும்……போதும்.
தெம்பளிக்க ஏதாவது……………?
(.7,மார்ச் 1997)


தாக்குண்டால்………

நிழலுக்குக் காயம் படாது
நிஜத்துக்குத்தான் !.
(18 ஜுலை 1997)


ஆழம் எது ?

ஆரவாரம் ஆர்ப்பரிப்பு
இரைச்சல் சலனம்
கரையோரம் மலயோரம்
ஆனால்
கடலை விட
ஆழம் எது….
அமைதி எது ….?
(26 ஆகஸ்ட் 1997)


சிக்கிரி காட்டிய பக்கிரி.
வாழ்க்கை ஒரு பாலம்
அதைக் கடந்து
அப்பால் போ ….!
அதிலேயே…..
வீடு கட்டி வசிக்காதே !.
(19,செப்டம்பர் 1997.)


வார்த்தைகளில் அன்பு
நம்பிக்கை ஊட்டுகிறது.

சிந்தனையில் அன்பு
முழுமையை ஊட்டுகிறது

வழங்குவதில் அன்பு
நேசத்தை ஊட்டுகிறது.

(லாவோட்சு )


கொண்டாட்டத்துக்காகவே படைக்கப் பட்டது வாழ்வு
தனியாக நேரம் ஒதுக்கத் தேவை இல்லை – இந்த
உண்மையை நினைவூட்டிக் கொள்வதற்கு .
ஒவ்வொரு நாளையும் விஷேசமானதென
வரித்துக் கொள்ளக் காரணம் காண்பவன்
வாழத் தெரிந்த அதி புத்திசாலி. ( 6, ஜுன், 2006.)
—————————————————————–
puthuvai_gnanam@rediffmail.com

( லாவோட்சு )

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

புதுவை ஞானம்


கண்ணோட்டம்
______________
வெளியே பார்த்தனர் இருவர்
சிறைச்சாலையின் கம்பிகளூடே
ஒருவன் பார்வையில்
சேறும் சகதியும்
மற்றவன் பார்வையில்
நிலவும் தாரகையும்.
பார்க்கும் தோரணையில் தான்
அழகும் அசிங்கமும்
உற்சாகமும் சலிப்பும்
அசட்டையும் படைப்பாற்றலும்.

OSKAR WILDE


மாற்றியது யார் ?
________________

மனோநிலை சிதறிய ஒரு மாது
படபடத்தாள் விடுதி மேளாளரிடம்
” மயக்கம் வருகிறது மார்பு அடைக்கிறது
பக்கத்து அறையில் நாள் முழுதும் ஒருவன்
படாத பாடு படுத்துகிறான் – பியானோவை.
உடனடியாக நிறுத்தாவிட்டால் செத்துப்போவேன்
பிறகு நீர் தான் பொறுப்பேற்க வேண்டும் ! ”

“உங்களுக்கு உதவத்தான் நினைக்கிறேன் சீமாட்டி
ஆனாலும் எனக்கு அச்சமாய் இருக்கிறது.
சிம்பொனி அர்ங்கின் மாலை நிகழ்ச்சிக்கு
சாதகம் செய்பவர் ‘ பெற்றோவ்ஸ்கி ‘ என்றான்.”

“அப்படியா ஆஹா ! ” என்றாள்,புகார் செய்தவள் –
எல்லா நண்பர்களையும் வரச்சொன்னாள்
தொலை பேசியில் தொடர்பு கொண்டு.

FULTON OURSLER


இக்கணம்
_________

இக்கணம் மட்டுமே இருக்கிறது.
நிகழும் இக்கணத்தின்
நொடிப்பொழுதில் தான்
உறைகிறது யதார்த்தம் .
கடந்து விட்டது கடந்தகாலம்
இன்னும் பிறக்கவில்லை
எதிர்காலம்.
இக்கணத்தில் நிகழ்வதைத்தான்
பார்க்கவும் கேட்கவும் முடியும்.
இக்கணத்தை அனுபவித்தால் தான்
விழித்தெழும் உன் புலன்கள்.
காதங்களுக்கு அப்பால் சஞ்சரிக்கும் மனத்தை
இக்கணத்தின் செயலுக்கு இழுத்தால் தான்
படிப்படியாக அனுபவிக்க முடியும்
வியக்கத் தக்க மன நலத்தை .
நித்தியத்தை உய்த்துணரத்
தோரனவாயிலே இக்கணம் தான்.
காலம் என்பது இரு வேறு
சம்பவங்களின் இடைவெளி
இக்கணத்தில் சஞ்சரித்தால்
இடைவெளி இல்லை – இருப்பது
சம்பவம் மட்டுமே !

HARWARD R. LEWIS and
HAROLD S. STREITFELD


கைப்பற்று உண்மையை.
_______________________

எது சரியோ அதைத் துணிந்து செய்
அடித்துச் செல்லப்படாதே
இக்கணத்தின் க்ஷணப் பித்தத்தில்
பற்றிக்கொள் உண்மையைத் துணிவோடு
என்னவாகுமோ ஏதாகுமோ என்ற
சஞ்சலத்தில் சிக்காமல்.

DEITRICH BONHOEFFER


எனது தவறு
_____________

எதனாலும் கேடு விளைவதில்லை
என்னால் தவிர.
துன்பத்தில் உழல்பவன் யான்
எந்தன் சொந்தத் தவறுகளால்.

St.BERNARD


விரைந்து எழு !
______________
முடியுமாயின் விரைந்து எழுந்து விடு
நீண்ட நேரம் தேங்கியிருந்து விட்டாய்
உன்னையே நீ இழந்து விட்டாய்
மானுடத்தின் அனைத்துக் கூறுகளிலிருந்தும்
துண்டாகிப் பிளவு பட்டாய்
புலன்களுக்கும் அப்பாலும்
நாகரிகமடைந்து விட்டாய்
தொடர்பற்று போதையில் வீழ்ந்து
இயந்திரமாய் மேற்குச் சாயலாக
வெளிரிய விழிகள் இயற்கை ஒளிக்கு
கொட்டாவி விடும் நிலைக்கு.

பய பக்தியுடன் தேடிய நல்ல வாழ்க்கை
குருடாகி ,ஊமையாகி ,தொள தொளத்து
சீரழிந்து விட்டது _எழுந்திருக்கவும்
போகவும் ,ஓடவும் வேண்டிய நேரமிது.

ஜன்னலைத் திற ,சூடேற்று குருதியை
துள்ளிக் குதி – ஈரப் புல் வெளியில் .
கூச்சலிடு , உணர்வு கொள் , தேடத்தோடங்கு
அன்னை பூமியின் புதிய வேர்களை .
அப்பால் செல் – அறிந்ததில் இருந்து !

WILLIAM HEDGE PETH


கழற்று மழைக் கோட்டை !
———————————–
சாரணன் ஆக நான் இருந்த போது
ஒரு தலைவன் இருந்தான்
சுற்றுலா அழைத்துப் போக .
ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்
முடிவில் கேள்வி மேல் கேள்வி கேட்பான்.
என்ன பார்த்தாய் ?
மரங்கள் , செடி கொடிகள் ,பறவைகள்
விலங்குகள் அத்தனையும் சொல்ல வேண்டும்.
அவன் அவதானித்ததில் கால் பங்கு கூட
நான் கவனித்ததில்லை_ திருப்திப் படுத்த முடியாது
அவனை — பாதி அளவு கூட.
“உன்னைச் சுற்றிலும் படைப்பு இருக்கிறது ! ”
கதறுவான் அவன் கைகளைப் பரப்பி .
ஒன்றிப்பது இல்லை நீங்கள்
மழைக் கோட்டு அனிவதைக் கை விடுங்கள்
மழை கொட்டும் போது ! .

ARTHUR GORDON


பிரபஞ்ச வித்தை

MICHAEL NOVAK
————————
நிச்சலனமாய் இருந்தது இரவு
காடுகளையும் ஏரிகளையும்
கவிந்த்திருந்தது காரிருள்.

ஒன்றினை ஒன்று கூவியழைக்கும்
கடல் நாரைகளின் கீச்சொலியும்
பிடிபட்ட மீன்களின் கவுச்சி நாற்றமும்
என்னை வந்தடையுமளவு நிலவும் அமைதி .

மென்மையான அலைகளின்
சலசலப்பும் கேட்கிறது
அண்ணார்ந்து பார்க்கையில்
அலங்கரிக்கும் இருளை
தாரகைக் கூட்டங்கள் .

****************************

திகைக்க வைக்கும் பேரழகு

MICHAEL NOVAK
————————————
ஒரு குச்சியைக் கையிலேந்தி -அல்லது
ஒரு மலரினைக் கையிலெந்தி -அதன்
வியாபகத்திலும் லாவகத்திலும்
லயித்திருக்கிறான் ஒருவன்.

திடீரென உலகம் மாறியது அற்புதமாய்
பரிமானத்தின் மேல் பரிமானமாய்
பரிமளிக்கிறது பேரழகாய் .

எதுவுமே எளிமையானதல்ல
சாதாரணமல்ல வழக்கமானதல்ல
ஒருவனின் வியப்பிலிருந்து
தப்பிக்கும் அளவு.


அடி எடுத்து வை !.மெல்ல மெல்ல !!

Gilbert K.Chesterton
————————————————
பனிப் பொழிவின் போதும்
மழை தூரும் போதும்
அடி எடுத்து வை ! மெல்ல மெல்ல !!
மனிதன் தொழுகை செய்ய
ஓர் இடம் கண்டு பிடிப்பதற்காய்.
வெகு எளியது தான் இந்தப் பணி
ஆனாலும்….வழி தவறக் கூடும் நாம்.


பசித்திருக்கும்
பசித்திருப்பதில்லை இந்த உலகம்
விந்தைகளுக்காக. ஆனாலும்
பசித்திருக்கும் ……………….
விந்தைகளின் தேவைக்காக.


வீழும் தாரகை.
———————-
அரை வட்ட வடிவாய் வானில்
ஒளிசிந்திப் போயிற்று ஓர் தாரகை
நிர்ணயிக்கப் பட்டதோர் வடிவில்
கண் சிமிட்டியது ஒளிச் சிதறல் _
அற்புதமானதோர் ஒழுங்கிலும்
எண்ணற்றதோர் கோர்வையிலும் –
அமைதி தவழும் அந்த இரவில்
மழலைத் தனமான அந்தச் சிதறலை
எண்ணிப் பார்க்கையில் வியப்போ வியப்பு.

நட்பு நெகிழும் இந்த ஒவ்வொரு தாரகையும்
ஒவ்வொரு ஆதவன்_, ஒவ்வொரு ஆதவனும்
ஆயிரக் கணக்கான பால் வெளிகளின்
ஒரு அங்கம் என்பது மட்டுமல்ல
அவற்றின் மிகச் சிறிய பகுதி தான்.


மகிழ் நிதியம்
Douglas jerrold
__________________
மகிழ்ச்சி என்பது வளருகிறது
நமது சன்னலுக்கு அருகே.
பறிக்க வேண்டுவதில்லை
மாற்றான் தோட்டத்திலிருந்து !

***********************************************

புதுமையும் வியப்பும்

Mathew
___________________

விலங்கியல் பூங்காவுக்கோ
சர்க்கசுக்கோ செல்வதற்கு
உகந்த வழி ஒன்றுதான் – அது
குழந்தையுடன் அங்கு செல்வதாகும் .

புறப்படுவதற்கு முன்னரே
பசுமையாகவும் கிளர்ச்சியுடனும்
குழந்தைக்கு உள்ளிருக்கும்
வியப்புலகைக் காண்பீர்கள் .
வழித்துணையாய்க் கொள்வீர்கள்
குழந்தையை – நீங்கள்
புத்திசாலியாய் இருந்தால்.

பூங்காவிலோ கானகத்திலோ
உற்றுக்கவனியுங்கள் குழந்தையை
தட்டாம் பூச்சிகளையும் வெட்டுக்கிளிகளையும்
விரைவாய் எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் ?
திடுக்கிடுவீர்கள் எவ்வளவு இழந்திருக்கிறோம்
நாம் என்பதை நினைத்து !.

அசட்டையாக நாம் பார்க்கும் உலகைக்
கரிசனத்தோடு தரிசனம் செய்கிறது குழந்தை .
அலட்சியமாக நாம் செவி மடுக்கும் ஒலிகளில்
அற்புமன்பதையில்த இசையைக் கேட்கிறது குழந்தை .

உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு
அப்பாவிக் குழந்தைகளாக ஆனால் ஒழிய
அடி எடுத்து வைக்க முடியாது
சொர்க்கத்தின் நுழை வாயிலில் !.


தரிசிக்கத் தெரிந்தவருக்கு…..
John ruskin.
_______________________
மனித ஆத்மா மன்பதையில்
ஆற்றும் மிகப் பெரிய பணி
எதையாவது கண்டு பிடிப்பதும்
கண்டதைத் தெளிவாகச் சொல்வதும்.
சிந்திக்க முடிந்த ஒருவனால்
நூற்றுக் கணக்கானவர்களைப்
பேச வைக்க முடியும் .
தரிசிக்கத் தெரிந்த ஒருவனால்
ஆயிரக் கணக்கானவர்களைச்
சிந்திக்க வைக்க முடியும் .

தரிசிப்பதென்பது
கவிதையாய்
வரும் பொருளுறைப்பதாய்
மற்றும் சமயமாய்
அனைத்துமாய் .


வியப்பில் வாழ்தல்

Whittaker chambers
___________________
பண்ணைதான் உங்களது அரசாங்கம் -ஆனாலும்
அன்பினாலும் அரிய உழைப்பினாலும்
எழுப்பப்பட்ட மதிற்சுவருக்கப்பால் உலகம் .

கோமளித்தனமான ஆடைகளா
தவிர்க்கப்பட வேண்டும்
சித்திரப்படக்கதைகள் கொண்ட புத்தகங்களா
வீட்டிற்குள் நுழையக் கூடாது
அனுமதி பெற்றே திறக்க முடியும்
தொலைக்காட்சிப் பெட்டகத்தை
அனுமதியோ கேட்டாலும் கிடைப்பதரிது-
இப்படியாகத்தான் சில படங்களைப் பார்த்தீர்கள்.

ஆனாலும் நீங்கள் வளர்ந்ததோ
விந்தைகளின் நித்தியப் பிரசன்னத்தில்
இவ்வாறாக, குழந்தைகளாக இருந்த போது
மனிதர்களுக்குத் தெரிந்திராத
இரண்டு முக்கிய விடயங்களை
அனுபவித்தீர்கள் நீங்கள் அவையோ
வாழ்வெனும் விந்தை பிரபஞ்சமெனும் விந்தை
பிரபஞ்சமெனும் விந்தைக்குள் ஒளிந்திருக்கும்
வாழ்வெனும் விந்தை .

மிகவும் முக்கியமானது என்னவெனில்
நீங்கள்அறியவில்லை அவற்றை
புத்தகங்களிலிருந்தும் – சொற்பொழிவுகளிலிருந்தும்
ஆனாலும் ,
அறிந்தீர்களவற்றை
அவற்றோடு வாழ்ந்து பார்த்து !

அதைவிட முக்கியமானது,
பய பக்தியோடு அறிந்தீர்கள் அவற்றை .
குரங்குத்தனமான மனிதனின் உற்சாகத்தில்
புதியன கண்டு பிடிக்கும் தற்கால அறிவியல் உலகில்
அழிந்தே போயின பயமும் பக்தியும் .
__________________________________

விடை காண முடியா வினா?
Maurice Seehy.


பிரஞ்சுக்காரன் ஒருவன் தேர்ந்தெடுத்தான்
தனது கல்லறைக்கான வாசகத்தை :
“இங்கு ஏன் வந்தோம் ? -என்பதை அறியாமலேயே
இந்த உலகை விட்டுப் போனவன் –
இங்கே உறங்குகிறான் ! ”


உறுதி ஆன அடையாளம்
A.H.Maslow
____________________________________

தேடல் என்பது தீர்த்த யாத்திரை ஆகி விட்டது
இயல்புக்கு மாறான அந்நிய மோகம் கொண்ட
விசித்திர மனிதருக்கு…….
வேறு நாட்டுக்கு அல்லது வேறு மதத்துக்கு
கிழக்கு நோக்கிய பயணம் .

உண்மையான ஞானிகளிடமிருந்தும்
ஜென் துறவிகளிடமிருந்தும் -இப்போதோ
உளவியல் நிபுணர்களிடமிருந்தும்
பெறப்படும் பெரும் படிப்பினை :
“புனிதம் என்பது சாதாரணத்தில் உள்ளது.”
இந்தப் பயணம் ……..
புனிதத்தை எதிர் கொள்ளத் தவறும் போது
எளிதாக மறந்து போக நேரிடும்
அந்தப் பாடத்தை……!

அற்புதங்கள் தேடி அங்கிங்கும் அலைவது
என்னைப் பொறுத்தவரை…….
“அனைத்துமே அற்புதம் தான் !” என
அறியாமையின்…….
உறுதியான அடையாளம் தான் .


ஆழ்ந்து கண்காணித்தல்

H.D.THOREAU
______________________________

என்னை நானே நியமித்துக் கொண்ட
கண்காணிப்பாளனாக இருந்தேன்
பல்லாண்டு காலம் .
உண்மையாகப் பணி செய்தேன்
பனிப் புயல்களுக்கும்
புயல் மழைகளுக்கும் .


தொடரும்………..பின்னர் …..

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

புதுவை ஞானம்


………..செப்டம்பர் பதினொன்று …….சிந்தனைகள்.
…………………………………………………………….

வர்னிக்க வார்த்தைகளே இல்லை
வார்த்தை ஒன்று கூட வடிக்கவில்லை நான்
தெற்குக் கால்வாய்ச் சாம்பல் குவியலில்
கவிதை ஏதும் காணப்படவில்லை
சிதிலங்களையும் மரபணுக்களையும்
சுமந்து செல்லும் குளிர் ஊர்திகளில்
வசனம் ஏதும் வார்க்கப்படவில்லை.

இன்று என்பது ஒரு வாரம்
ஏழு என்பது சொர்க்கத்துக்கு உரியது
கடவுளுக்கும் அறிவியலுக்கும்–எனது
சமயலறைச் சாளரத்தின் வழியே
தென்படுவது கலைந்து போன யதார்த்தம்.

விண் முட்டும் கோபுரம் இருந்த இடத்தில்
விண் மட்டுமே நிலைத்து இருக்கிறது
இரத்தமும் சதையும் உயிர்த்த இடத்தில்
சாம்பல் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

தீயின் நாற்றம் நகரின் காற்றைத்
திணற அடிக்கையில் எண்ணிக் கலங்கினேன்
தங்கையின் உயிரை – முன்னர்
என்றைக்கும் இருந்திராதவாறு.
இப்போதோ…..மீதி இருக்கும்
நம் அனைவரின் உயிர் குறித்தும்

முதலில்…………….
அருள் நிறைந்த கடவுளே ………….இது மட்டும்
தவறாக இருந்து விடக் கூடாதா……………………?
விமானியின் இதயம் நின்று போனதாகவோ
இயந்திரம் பழுது பட்டதாகவோ …………………
இருந்து விடக்கூடாதா……………………………………?

பின்னர்……………..
கடவுளே இது ஒரு கெட்ட கனாவாக……………….
இருந்து விடக்கூடாதா……………………………………..
நான் கண் விழிக்கக் கூடாதா ………………………..?

இரண்டாவது விமானத்துக்குப் பிறகு…………………
அருள் நிறைந்த கடவுளே……………………………….
எங்கள் அண்ணன் தம்பி போல்………………………
தோற்றம் அளிப்பவர்களாக……………………………..
இருந்து போகட்டும் யாரேனும்.

சாகடிப்பதற்காக செத்துப் போக வேண்டுமா…..?
எனக்குப் புரியவில்லை.
பசி வேண்டுமென்று நான் எப்போதும்
பசித்து இருந்தது இல்லை.
துவக்கை இயக்கவோ எழுது கோலை
எடுத்து எழுதவோ எப்போதுமே நான்
சினந்ததே இல்லை.

பெண்ணாக நான் இருந்த போதிலும்-அதுவும்
பாலஸ்தீனப் பெண்ணாக-இப்படிச் சிதைந்து போன
மனிதப் பிறப்பு என்று ஆன நிலையில் கூட
சிதைந்து போனதில்லை இந்த அளவுக்கு.

எப்போதையும் விட எந்த மாற்றமும் இருப்பதாக
நம்பவில்லை நான்-.
உரிமைகள் மிக உள்ள தேசம் தான்
எனினும்…….
பெரும்பாலான அமெரிக்கர்கள்
அறிய மாட்டார்கள்
இந்தியர்கள்,ஆப்கானியர்கள்,
இஸ்லாமியர் ,இந்துக்கள்,சீக்கியர்கள்
இவர்களுக்கு இடையே
எத்தகைய வேறுபாடும் இருப்பதாக.

(மொழி பெயர்ப்பு தான் இது.மூலம் யாருடையது
என்பதை நாட்குறிப்பில் எழுத மறந்து விட்டேன்
மன்னித்து அருள்க.) புதுவை ஞானம்.

*************************************************************************

இன்று நாம் பேசத்தவறினால்
இடுகாட்டு அமைதி கவிந்து விடும்.
ஒவ்வொரு குடும்பமும் கருகிப் போகும்
ஒவ்வொரு வீடும் சாம்பல் குவியலாகும்.
அமைதிக்கு அப்பாலிருந்து
அவலக் குரல் மீண்டும் வரும்……….
யாருமில்லை இங்கு……
யாருமில்லை….யாருமே இல்லை

***************************************************************************

இரத்தம் யாருடையதாகவேனும் இருந்து போகட்டும்
நம்முடையதாயினும் அவர்களுடையதாயினும்
குருதி வடிப்பது மாணுடம் அல்லவா?
கிழக்கிலோ மேற்கிலோ -எங்கு
யுத்தம் நடந்த போதிலும்
அமைதி காக்கும் பூமி
குருதி வடிக்கிறது.
குண்டு மழை எங்கு பொழிந்த போதிலும்
வீடுகளின் மீதேயாயினும்
எல்லைக் கோடுகள் மீதேயாயினும்
கட்டமைக்கும் ஆன்மா காயப்படுகிறது.
வயல் வெளிகள் கருக்கப் பட்டால்
நம்முடைய வயலாயினும் சரி
அயலவர் வயலாயினும் சரி
பஞ்சத்தால் வாழ்வு பாதிக்கப் படுகிறது .

டாங்கிகள் முன்னேறினால் என்ன
பின் வாங்கினால் என்ன
பூமித்தாயின் கருப்பை மலடாக்கப் படுகிறது.
வெற்றிப் பூரிப்பானால் என்ன
தொல்வியின் சோக கீதமானால் என்ன
உயிரோடு இருப்பவர்கள் தான்
சுமக்க வேண்டும் சவங்களை.
எனவே தான்…..ஓய்….நாகரீக மாந்தரே
யுத்தங்கள் ஒத்திப் போடப் படுவதே நல்லது.
தீபங்கள் எரியட்டும் தொடர்ந்து
உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும்.

*******************************************************

உன் வீட்டின் ஒரு அறையில்
தீப்பற்றி எரியும் போது
உறங்க முடியுமா ?
மற்றொரு அறையில்.

உன் வீட்டின் ஒரு அறையில்
பிணம் ஒன்று கிடக்கையில்
இசை பாட இயலுமா ?
இன்னொரு அறையில்.

உன் வீட்டின் ஒரு அறையில்
சவங்கள் அழுகி நாற்றமெடுக்கையில்
தொழுகை நடத்த முடியுமா ?
அடுத்த அறையில்.

அப்படித்தான் என்றால்
உன்னிடம் பேச
ஒன்றுமே இல்லை !

*********************************************************************

கூறு போடப் பட்டு இருக்கிறார் கடவுள்
கோவில்களால்
மசூதிகளால்
தேவாலயங்களால்
கூறு போடப் பட்டு இருக்கிறது மண்
கூறு போடப் பட்டு இருக்கின்றன மாக்கடல்கள்
கூறு போடாதீர் மானுடத்தை
கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்
மிஞ்சி இருக்கும் உங்களை.

***************************************************************************

என் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன
எல்லாக் கண்களின் நீருடன் கலந்து
எல்லா நெஞ்சங்களின் வேதனையும்
என்னுடையது தான்.

*****************************************************************************

நான் ………..
பிளவு படுத்தும்
மதிற் சுவர் அல்ல.
சுவற்றில் ஏற்பட்டுள்ள
சிறிய விரிசல்.

*******************************************************************************

ஒற்றை வீட்டைக் கட்டுவதற்கு
மக்கள் செலவிடுகின்றனர்
ஆண்டுகளையும் வியர்வையையும்.
இருந்த போதிலும்………
எரியூட்டுகிறீர்கள் நீங்கள்
மொத்த நகரத்தையும்.

********************************************************************************

மூலம் : SAHIR LUDHIYANVI
SARVESHWAR DAYAL SAXENA
VINAY MAHAJAN
FIRAQ GORAKPURI
KAMLA BHASIN
BASEER BADAR

SOURCE :
VOICES OF SANITY
REACHING OUT FOR PEOPLE

தமிழாக்கம் : புதுவை ஞானம்.

***********************************************************************************

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

புதுவை ஞானம்


_புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?___________________________________________________________________
T.W.RHYS DAVID அவர்களின் அடியொற்றி தமிழாக்கம் : புதுவை ஞானம்.
_____________________________________________________________________
SOURCE :
(Questions of King Milinda -T.W.Rhys David -tr.;part 1 pp6-7 (Sacred Books of the East,Vol.xxxv, oxford;
Clarendon Press,1890 ; reprinted by Dover Publications, New York, 1963).

———————————————–
பேரரசர் அசோகரின் மறைவிற்குப் பிறகு மவுரிய வம்சம் முடிவுக்கு வந்து விட்டது எனலாம்.அந்தப் பேரரசு உள்நாட்டுப் பிளவுகளாலும் வெளிநாட்டுப் படையெடுப்பாலும் சிதைந்து போயிற்று. வட மேற்கு இந்தியா, மேற்காசியாவில் இருந்து வந்த கிரேக்க மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. இத்தகைய கிரேக்க மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் மன்னர் ‘மென்னாந்தர் ‘ ஆவார்.இவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்ஆட்சி செய்ததாக இந்திய வரலாற்று ஆதாரங்களில் குறிப்பிடப் படுகிறது. அவர் பவுத்த
மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாலும், கிரேக்க கலாச்சாரத்துக்கும் பவுத்த மதத்திற்குமான முக்கிய தொடர்புப் புள்ளியாக இருந்ததாலும், அவரைப் பற்றி சற்று விரிவாகப் பேச விரும்புகிறேன்.

பேரரசர் அசோகர் பவுத்த சமயத்தைச் சார்ந்தவர் என்ற முறையில், தனது கொள்கைகளையும் நம்பிக்கைகளையும், பல மன்னர்களுக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் , அவர்களது அரசவைக்குப் பல தூதுவர்களை அனுப்பினார். ஆனால் அவரது முயற்சிகள் எந்த அளவு வெற்றி அடைந்தன என்பதைத் தெரிந்து கொள்ளும் வழிவகைகள் தென்படவில்லை. ஏனெனில், மேற்கத்திய செவ்வியல் தரவுகளில் இத்தகைய தூதுக்குழுக்கள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை.

பேரரசர் அசோகர் ஆண்ட போது இந்தியா, ஒன்று பட்டதொரு பேரரசாகத் திகழ்ந்தது என்பதோடு கிரேக்க அரசை விட அளவிலும் பலத்திலும் மேம்பட்டு விளங்கியது. ஆனால் மன்னர் ‘மென்னாந்தர் ‘காலத்தில் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. அரசியல் மற்றும் இராணுவ பலம் மேற்கே இருந்தது. இந்தியா பலவீனமுற்றும் சிதறியும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு அடிமைப் படுத்தப் பட்டது. இருந்த போதிலும் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் கிழக்கும் மேற்கும் ஒன்றையொன்று சம பலத்துடன் எதிர் கொண்டன.

பாலி மொழியில் எழுதப்பட்ட பவுத்த இலக்கியங்களில் ஒன்றான ‘மிலிந்த பானா’-வில் மன்னர் மென்னாந்தர் மிக முக்கியமான இடம் வகிக்கிறார். ‘மிலிந்த பானா’ என்பதற்கு மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் என்று பொருள் படும்.அவரது பெயரின் பாலி வடிவம் மிலிந்தா என இருப்பதாலும், நான் பாலி நூல்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாலும் அவரை நான் ‘மிலிந்தா’ எனவே அழைக்க விரும்புகிறேன்.

முதலில் அவர் எப்படிப் பட்டவர் என்பதைப் பார்ப்போம்.அந்த நூல் அவரைக் கீழ் வரும் சொற்களால் குறிப்பிடுகிறது. ” மிலிந்தா கற்றறிந்தவர், நாவன்மை மிக்கவர், மதியூகி, செயல் திறன் மிக்கவர், உன்னிப்பாக கவனிப்பவர். அதே வேளையில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் பற்றிய பிரச்சனைகள் மீது உயரிய பாடல்களை இயற்றி சொல்லாலும் செயலாலும் புகழ் பெற்றவர். அவருக்குத் தெரிந்திருந்த கலை அறிவியல் பலப்பலவாகும்.பாரம்பரிய ஞானமும், மதச்சார்பற்ற சட்டங்களும்,சாங்க்யா- யோகா- நியாயா- நியாய
வைஷேசிகா-போன்ற தத்துவங்களும்,கணிதம், இ¨சை,மருத்துவம்,நான்கு வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் வானவியல்,கண்கட்டு வித்தைகள், சித்துவேலைகள்,மந்திரங்கள்,யுத்தக் கலை,கவிதை,விவாதம்(தர்க்க சாஸ்திரம்) என, ஒரு வார்தையில் சொல்வதானால் பத்தொன்பது கலைகளும் அவருக்குத் தலை கீழ்ப் பாடம்”

“ஒரு தர்க்கவியல் நிபுணர் (விவாதக்கலையில் வல்லுனர்) என்ற வகையில் அவருக்கு நிகரானவர் யாருமில்லை என்பதோடு அவர் வெல்லுதற்கு அரியவரும் ஆவார்..வெவ்வேறு தத்துவ சிந்தனை மரபினரால் தலை சிறந்தவர் என அங்கீகரிக்கப் பட்டவர்.அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் , வேகத்திலும் விவேகத்திலும் இந்தியா முழுவதும் மிலிந்தாவுக்கு இணையானவர் யாருமே இல்லை.அவர் செல்வந்தரும் கூட.செல்வத்திலும் செல்வாக்கிலும் வல்லமை வாய்ந்தவர்.அவருக்கிருந்த ஆயுதம் தாங்கிய திரளுக்கு எல்லையே இல்லை.” 1.The questions of king Milinda -T.W.Rhys David -tr.;part 1 pp6-7 (Sacred Books of the East,Vol.xxxv, oxford; Clarendon Press,1890

மேற்கண்ட ஏட்டுரை அந்த நூலுடன் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அரசர் பற்றிய சித்தரிப்பு எவ்வளவு உண்மை வாய்ந்தது என்பதனை நிர்ணயிக்கும் வழி வகை ஏதும் நமக்கில்லை.ஆனால் குறைந்த பட்சம் அக்கால இந்தியாவில் எந்த அளவு கல்வி செழுமையாக இருந்தது, கற்பதற்கு எத்தனை துறைகளில் வாய்ப்புகள் இருந்தன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.


அறிவாளிகளுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான சொற்போர் :
மன்னர் மிலிந்தாவுடன் வரலாற்றுப் புகழ் பெற்ற தனது வாதத்தைத் தொடங்கு முன், தாம் எந்த அடிப்படையில்,
எந்த நிபந்தனைகளின் பேரில் விவாதத்தைத் தொடங்குவது என்பதனை நிர்ணயிக்க முயற்சித்தார். அந்த முயற்சி கீழ் வரும் புகழ் பெற்ற வாசகங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது:

அரசர் சொன்னார், “மதிப்பிற்குறிய அய்யா ! நீங்கள் என்னோடு வாதம் செய்ய வருவீர்களா ?”

” ஒரு கல்விமானாக என்னுடன் விவாதிப்பதாயின் நன்று.ஆனால் ஒரு அரசர் என்ற முறையில் விவாதிப்பதாக இருந்தால் வாதிட மாட்டேன்.”

“அப்படி என்றால் கல்விமான்கள் எவ்வாறு விவாதிப்பார்கள் ? ”

“அறிஞர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் விவாதிக்கும் போது அந்த விஷயம் முடிவு பெறுவதில்லை. அது ஒரு சிக்கலை-முடிச்சை அவிழ்ப்பது போன்றது. ஒருவரோ மற்றவரோ தவறு என்று நிரூபிக்கப் பட்டால் தவறு செய்தவர் தனது தவற்றினை ஏற்றுக் கொள்வார். மாறுபடும் பண்புகளும் அதற்கு எதிரானவையும் உறுதி செய்யப் படுகின்றன. இருந்த போதிலும் இருவருமே சினம் அடைவதில்லை. அரசரே! இவ்வாறுதான் அறிஞர்கள் விவாதம் நடத்துவார்கள்.”

“அரசர்கள் எவ்வாறு விவாதிப்பார்கள்? ”

” மேன்மை தங்கியவரே ! ஒரு அரசர் ஒரு விஷயத்தை விவாதிப்பாராயின், ஒரு கருத்தை முன் வைப்பார். யாராவது அவரது கருத்தில் இருந்து மாறுபட்டால் மாறுபவருக்கு தண்டம் விதிக்க முற்படுவார்.’அவனுக்கு இந்த விதமான தண்டணை வழங்குங்கள் என்று உத்தரவிடுவார்.மாட்சிமை தங்கிய அரசே இவ்வாறுதான் மன்னர்கள் விவாதிப்பார்கள்.”

“மிகவும் நல்லது.நான் அரசன் என்ற முறையில் அல்லாது அறிஞன் என்ற முறையிலேயே விவாதிக்க விரும்புகிறேன்.போற்றுதலுக்குரியவரே ! எந்த தயக்கமும் இன்றி உங்களது சொந்த சகோதரனுடன் பேசுவது போலவோ, ஒரு கற்றுக்குட்டியுடன் பேசுவது போலவோ, அல்லது சாதாரண கடைமட்ட சீடனிடம் பேசுவது போலவோ, அல்லது உங்கள் பணியாளுடன் பேசுவது போலவோ நீங்கள் பேசலாம்.அஞ்சவேண்டாம்! ”

“மிக மிக நல்லது மாட்சிமை தங்கியவரே! “என்று நன்றியுடன் சொன்னார் நாகசேனா.


கணிதத்தைப் பொறுத்தவரை இன்று நாம் பயன் படுத்தும் எண்னுரு (numerals) இந்தோ-அராபிய எண் வடிவம் என அழைக்கப்படுகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம், எனெனில் அது அராபியர்கள் மூலமாக அய்ரோப்பா சென்றடைந்தது.ஆனால் அவை உண்மையில் இந்தியர்களின் கண்டு பிடிப்புகள் .இருந்த போதிலும் , மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த ‘மயன் ‘ மக்கள் அதற்கும் முந்தைய காலத்திலேயே சுண்னத்தை-0–பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மன்னன் மிலிந்தாவின் காலத்தில் இந்திய சமுதாயம் கல்வியிலும் கலாச்சாரத்திலும் மிக உயர்ந்த நிலையை எட்டி இருந்தது என்பது பற்றி எந்த அய்யப்பாடும் இல்லை.

மன்னர் மிலிந்தா கலாச்சாரத்தையும், கல்வியையும் பாரம்பரிய கிரேக்க முறையில் கற்ற பொதிலும் இந்தியக் கல்வி மற்றும் கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்து பரிச்சயப்படுத்திக் கொள்ள முயற்சிகள் எடுத்திருப்பார் எனத் தோன்றுகிறது.கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கல்வியிலும் கலாச்சாரத்திலும் மன்னர் மிலிந்தா ஆழ்ந்த புலமை பெற்றிருந்தது, சாமானிய இந்திய மக்களின் பார்வையில் அச்சமூட்டுவதாகத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை. ஏராளமான இந்திய தத்துவ வாதிகள் அவரோடு வாதம் புரிந்ததாகவும், ஆனால் அனைவரும் தோற்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கிரேக்க மன்னர்களின் வழக்கப்படி தனது உருவம் பொறித்த நாணயங்களை அவர் வெளியிட்டார். அவற்றின் புகைப்படங்களிலிருந்து , மிகவும் அழகான மனிதர் இல்லையென்ற போதிலும் அவருக்கு அறிவார்ந்ததொரு முகம் இருந்தது தெரிய வருகிறது.

இந்திய தத்துவ வாதிகளுடனும், பிராமண மற்றும் பவுத்த மதத்தலைவர்களுடனும் வாதத்தில் இறங்குமளவுக்கு இந்த மனிதரைத் தூண்டியது என்னவாக இருக்கும்?.அன்னிய மக்களை ஆள்பவர் என்ற முறையில் அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு திறம்பட ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் காரணத்துக்காகவே அவர் இவ்வாறு செய்தார் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். வேறு சிலர், பேரரசர் அலெக்சாந்தர் காலத்தில் இருந்தே, மற்ற நாட்டு அறிஞர்களிடமிருந்து கல்வி கற்பது கிரேக்கர்களின் வழக்கம் என்கின்றனர். எனது யூகம் என்னவெனில், அவர் பிளாட்டொவின் -PHILOSOPHER KING – ராஜ ரிஷி தத்துவத்தைக் கடைப்பிடிக்க விரும்பியதாகவே தோன்றுகிறது.அலெக்சாந்தர் அரிஸ்டாடிலிடம் தத்துவம் கற்றார் என்பதை நினைவு கூர்ந்தால் ஒரு வேளை, அவர் வேண்டுமென்றே மாவீரன் அலெக்சாந்தரை பின் பற்ற முயன்று இருக்கலாம் எனவும் தோன்றுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ,மன்னர் மிலிந்தாவின் விவாத முறைகளப் பரிசீலித்தால் கிரேக்க தத்துவ மரபின் பழமையை நினைவூட்டுவதாக இருக்கிறது.அவர் இந்திய மரபுக் கல்வியைக் கற்றிருந்த போதிலும் ,அவரது அடிப்படை சிந்தனை முறையும் , விவாதத்தை அணுகும் முறையும் கிரேக்க மனப்பாங்குடன் ஒத்ததாக விளங்குகிறது.அவரது பெரும்பாலான கேள்விகள் ‘இதுவா-அதுவா’ என்ற அமைப்பு முறையில் அமைந்துள்ளது. அதாவது அவர் இரு விதமான (Premise) தர்க்க முன்மொழிவுகளை முன் வைக்கிறார் என்பதுடன் இவற்றுள் எது சரியானது எனவும் கேட்கிறார்.இந்த விதமான அணுகு முறை கிரேக்க சிந்தனைக்கே உரிய சிறப்பம்சம் என்பதுடன், பொதுவாக மேற்கத்திய சிந்தனையை ஒட்டியதும் ஆகும். அத்தோடு கூட, கேள்விகள் எதிராளிகளைத் திக்குமுக்காட வைக்கும் விதத்தில் வேண்டுமென்றே வடிவமைக்கப் படுகின்றன.அல்லது அதற்குப் பதில் சொல்வதன் மூலம், நடைமுறையில் என்ன பலன் கிடைக்கும் என்பதை யூகிப்பது சிரமம் என்ற விதத்தில் கேள்விகள் வடிவமைக்கப் படுகின்றன.

எடுத்துக்காட்டாக,பூரண காசப்பா என்ற தர்க்கவியல் தத்துவ ஞானியைச் சந்தித்து அவர் நடாத்திய விவாதத்தைப்
பார்ப்போம்:

“வணக்கத்துக்குரிய காசப்பா அவர்களே ! உலகத்தை ஆளுவது யார் ? ”

“பேரரசே ! பூமி உலகத்தை ஆளுகின்றது.”

“ஆனால் வணக்கத்துக்குரியவரே ! பூமி உலகத்தை ஆளுகின்றது எனில் சில மனிதர்கள்
ஆவிட்சி எனும் நரகத்துக்கு செல்கிறார்களே, அதனால் பூமிப் பரப்பிலிருந்து வெளியேறுகிறார்கள்
என்பது எப்படி ? ”

எந்த விடையையும் சிந்திக்க முடியாத காசப்பா வெறுமனே தலையைத் தொங்கப் போட்டு விட்டதாக சொல்லப்படுகிறது .

தங்களது சொந்த அறிவாற்றலில் மயங்கித் தலை கனக்கும் பலரைப் போல, இந்த மாதிரி எதிரிகளைத் தோற்கடிப்பதில், மன்னர் மிலிந்தா ஒரு விதமான மகிழ்ச்சி அடைந்தார் என்பதில் அய்யம் இல்லை. அத்தோடு கூடவே, இந்தியர்கள் அரசியல் ரீதியாக கிரேக்கர்களால் அடக்கி ஆளப்பட்ட போதிலும், கிரேக்கர்களை விட அறிவிலும் ஆன்மீகத்திலும் தாமே சிறந்தவர்கள் எனப் பெருமை பட்டுக் கொண்டதனால், இந்தியர்களின் மூக்கை உடைக்கும் வாய்ப்புகளை மன்னர் மிலிந்தா ஆர்வத்தோடு வரவேற்றார் எனவும் நாம் யூகிக்கமுடியும்.

இருந்த போதிலும் இந்தக் கேள்வி முட்டாள் தனமானது என்பதையும் பூரண காசப்பாவால் ஏன் இதற்கு விடை அளிக்க முடியாமல் போனது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இறப்புக்குப் பின்னர் உயிரிகள் தம் உடலியல் வடிவத்தோடு ஆவிட்சி நரகத்துக்குச் செல்வதில்லை என்று அவர் சுட்டிக் காட்டியிருந்தால் இந்த இக்கட்டில் இருந்து தப்பித்திருக்க முடியும். அதை விட இன்னும் சிறந்த விதத்தில் ஆவிட்சி நரகம் என்பது ஆசைகளின் உலகில் ஆழமானதும் வெப்பம் மிகுந்தது எனவும் சொல்லப்படுகிறது. உண்மையில் மீளமுடியாத துயரத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம் அல்லது உருவகமே தவிர மேலான வேறொன்றுமில்லை. அரசரோ பூமிக்கு வெளியே அப்படி ஒன்று இருப்பதாகக் கருதிக் கொண்டு அங்கே எப்படி ஒருவர் போக முடியும் எனக் கேட்பது யதார்த்தத்தில் முட்டாள் தனமானதாகும்.

உண்மையில் மன்னர் மிலிந்தாவை நாம் இவ்வளவு கடிந்து கொள்ளக் கூடாது. இன்றும் கூட பவுத்தம் பற்றியும் பவுத்த நம்பிக்கைகள் பற்றியும் முட்டாள் தனமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, ஜப்பானைச் சேர்ந்த நவீன அறிவாளிகள் இந்த வகையில் மிக மோசமாக இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அய்ரோப்பியக் கலாச்சாரத்தின் வாயிலாக கல்வி கற்கிறார்கள்.ஆனால் இந்திய சிந்தனை அல்லது இந்திய ஞானம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. இவ்வாறாக பௌத்த மதத்தைப் பொருத்தவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னர் மிலிந்தா வெளிக்காட்டிய அதே அறியாமையையும் தெளிவின்மையையும் அவர்கள் கொண்டிருப்பது இயல்புதான்.

ஜப்பானிய அல்லது கிழக்காசிய நாகரிகத்தை, ஏன் உலக நாகரிகத்தையே கூட புரிந்து கொள்வதற்கு ஒருவர் முயற்சி செய்கையில், பவுத்தத்தின் செல்வாக்கை உதாசீனப்படுத்துவது பொருளற்றது ஆகிவிடும். ஜப்பானியர்கள் கடந்த காலத்தில் ஜீவனுள்ள செல்வாக்கு செலுத்திய பவுத்தத்தைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காததாலும், மேற்கத்திய பகுத்தறிவு வாதத்தை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் உலக விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும் என நினைப்பதாலும் , பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. இப்படி நான் சொல்வதனால் மேற்கதிய பகுத்தறிவு வாதத்தை கைவிட்டு கிழக்கத்திய ஞானத்துக்குத் திரும்ப வேண்டும் எனப் பொருள் படாது. .இதுவா அல்லது அதுவா என்று தேர்ந்தெடுப்பதல்ல பிரச்சனை. இரண்டையுமே திறந்த
மனத்துடனும் நேர்மையுடனும் புரிந்து கொள்ள முயற்சி எடுப்பதே சரியான வழியாகும்.

இதைத்தான் மன்னர் மிலிந்தா செய்தார் எனத் தோன்றுகிறது. அவர் இராணுவ ரீதியில் வெற்றி பெற்றவராகத் தம் பணியைத் தொடங்கினார். பின்னர், தத்துவார்த்த சர்ச்சைகள் மூலம் இந்திய சிந்தனையைப் புரிந்து கொள்ளும் பணிக்கு தமது சக்தியைத் திருப்பி விட்டார். கி.மு.160-க்கும் 140-க்கும் இடையில் காபூல் பகுதி அவரது கட்டுப் பாட்டின் கீழ் வந்தது. இதுவே இன்றைய கால ஆப்கானிஸ்தான் ஆகும். இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் இந்தியா மீது படை எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய இந்தியா வரை தனது ஆட்சியை விரிவு படுத்தினார். இந்தியர்கள் அவரை ” அகில இந்தியாவிலும் பெரிய அரசர் ” என்று குறிப்பிட்டனர். அவரது சாவுக்குப் பின் அவரது எலும்புகள் பரவலாக வினியோகிக்கப்பட்டு, ஏற்கனவே சாக்கிய முனிக்குச்
செய்யப்பட்டது போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் புதைக்கப் பட்டன. இந்த இறுதி விருப்பமான அவரது ஆவல் அப்படியே செய்யப்பட்டது. அவர் சில இந்திய மொழிகளில் பேசியதாகவும், இந்திய நாட்டின் பால் முற்றிலும் ஈர்க்கப்பட்டதாகவும், இதனையே தனது தாயகமாகக் கருதினார் எனவும் சில அறிஞர்கள் முடிவுக்கு வருகின்றனர்.

பரஸ்பர புரிதலுக்கான நேர்மையானதொரு ஆசை இருப்பின்,தேசீயம்,இனம் போன்ற எல்லைகளை எப்படி ஆயினும் எப்போதும் கடக்க முடியும். மற்றவர்களுடன் உரையாடவும் விவாதிக்கவும் ஆசைப்பட்ட மன்னர் மிலிந்தா அது தான் புரிதலுக்கான சரியான வழி என்பதைக் கண்டறிந்தார்.

நாக சேனரின் அறிவாற்றல்:

பிரபலமான துறவிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து அவர்களுடன் வாதம் புரிவதற்கான ஒவ்வொரு மன்னர் மிலிந்தா பயன்படுத்திக் கொண்டார் என்பதனை நாம் கண்டோம்.அனால் நீண்ட காலமாக தனக்கு நிகரானவர் எனக் கருதும் ஒரு எதிராளியை சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. “மொத்த இந்தியாவும் வெத்து வேட்டு தான். இங்கே பதர்கள் தான் இருக்கின்றன. பிராமணர்களோ அல்லது துறவிகளோ என்னுடன் வாதிக்கும் வல்லமை கொண்டவர்களாக இல்லை! ” என அவர் அலுத்துக்கொண்டதாகச் சொல்லப் பட்டது.3 ibid p.1o

அத்தகைய ஒரு நிலைமை; பிராமணர்கள் , பவுத்தர்கள் , மற்றும் அந்த காலத்திய இதர மதவாதிகள் ஆகியோருக்கு தரும சங்கடமாக இருந்தது. மன்னர் மிலிந்தா பற்றிய முகவுரையில், பவுத்த சங்கத்தைச் சார்ந்தவர்கள் மன்னர் மிலிந்தவுடன் வாதம் புரிந்து வெல்லும் திறமை படைத்த துறவி ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர் எனச் சொல்லப்பட்டது.

இந்த காலகட்டத்தில் தான் நாகசேனா பிரவேசம் செய்கிறார். ஒரு பெரிய யானை பிறந்த அதே வேளையில் பிறந்த காரணத்தால் அவருக்கு நாகசேனா எனப் பெயரிடப்பட்டது எனவும், ‘ நாகா’ என்ற வார்த்தை இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் யானையைக் குறிக்கிறது எனவும் நமக்கு சொல்லப்படுகிறது. நாகசேனா என்ற பெயர், நாட்டின் தலைவர் மன்னர் மிலிந்தா என்பதைப்போல் அறிவின் தலைவர் நாகசேனா என்று அடையாளப் படுத்துவது போலவே தொன்றுகிறது.

அந்த நூலைப் படித்தால், நாகசேனா ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்ததாகவும், மிக இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் வெகு ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது. குழந்தையாய் இருக்கும் போதே மூன்று வேதங்களையும் கரைத்துக் குடித்து விட்டதாகவும், ஆனால் பின்னர் அவை முட்டாள் தனமானவை என்று அறிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி பவுத்தத் துறவி ஆகி விட்டார் எனவும் சொல்லப்படுகிறது. வெகு சீக்கிரத்திலேயே இந்த இளம் துறவி வெல்லற்கரிய வாதத்திறமை உடையவர் என இந்தியா முழுவதும் அறியப்பட்டார். .அவரது பெருமை மன்னர் மிலிந்தாவின் தலை நகரான ஷகாலாவுக்கும் எட்டியது.

அவர்கள் இருவரும் வாதத்தில் ஈடுபட வேண்டும் என்பது தவிர்க்க இயலாதது எனவாயிற்று. ஆனால் அப்படி நிகழுமுன் நாகசேனா எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டி வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். ஏனெனில் பவுத்த சமுதாயத்தின் ஒட்டு மொத்த கவுரவமும் அவரது செயற்பாட்டை நம்பி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும்.

அவரது எதிராளியோ அன்னிய நாட்டிலிருந்து படையெடுத்து வென்றவர். மன்னர் மிலிந்தா வெறுமனே ஒரு அரசியல் இராணுவத்தலைவர் என்றிருந்தால் நாகசேனாவின் பொறுப்பு அவ்வளவு கடினமானதொன்றாக இருக்கப் போவதில்லை. பிரச்சனை என்னவென்றால் அவரது எதிராளி மிகவும் உயர்தரமான அறிவாளி . அதுவும் மேற்கத்திய கல்வியிலும் கலாச்சாரத்திலும் உச்ச நிலையை எட்டி இருப்பவர்.எனவே இந்த இரு மனிதர்களின் மோதல் என்பது கீழை நாட்டுத் தத்துவத்துக்கும் மேலை நாட்டுத் தத்துவத்துக்கும் இடையிலான மோதல் என முக்கியத்துவம் அடைந்து விட்டது. நாகசேனா இந்த விவாதத்தில் தோற்றுப் போனால் அவரது கவுரவம் மட்டும் பாழாய்ப் போகும் என்பதில்லை , பவுத்த நம்பிக்கையே ஆட்டம் கண்டு விடும் என்ற பேராபத்து நிலவியது.

நாகசேனாவைப் பொறுத்தவரை வாதத்தில் இறங்குவதற்கு ஒப்புக்கொள்ள பெருமளவு தைரியமும் வைராக்கியமும் தேவை என்ற போதிலும் தர்மத்தின் சிறப்பியல்பின் மேல் முற்று முழுதான நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் அய்யமில்லை.தனது முடிவை அவர் தனது ஆசானான ரோகனாவிடம் தெரியப்படுத்தியபோது,”மன்னர் மிலிந்தா மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மன்னர்களும் வந்து கேள்விக் கணை தொடுக்கட்டும், நான் எல்லாப் புதிர்களயும் விடுவித்து தீர்வு காண்பேன்” என்று சொன்னதாகத் தெரிய வருகிறது. 4 ibid p.23

தலைநகர் ஷாகலாவை நாகசேனா அடைந்தது பற்றி அந்த நூல் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது. ” அவர் ஒரு சங்கத்தின் தலைவர், ஒரு பள்ளியின் ஆசிரியர், புகழ் பெற்ற துறவி, மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர், கற்றறிந்தவர், புத்தி கூர்மையுடையவர், பெருந்தன்மையும் திறமையும் வாய்ந்தவர், திறமையான தர்க்கவாதி, அடக்கமான பண்பு எனினும் தைரியம் மிக்கவர், பாரம்பரியத்தை முற்றோதியவர், திரிபீடக வித்தகர், வேத வாக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். மிக உயரிய பவுத்த உள்ளுணர்வு கொண்டவர்.பள்ளிகளில் கற்றுத்தரப்பட்ட அனைத்திலும் மேதாவி, மிக சிக்கலான விஷயங்கள் அனைத்திலும் உள்ள பல்வேறு தார
தம்மியங்களை விளக்கும் பேறறிவு படைத்தவர்.பரிநிர்வானமடையும் ஒன்பது வகைப் பிரிவுகளையும் மனப்பாடம் செய்தவர்.ஒவ்வொரு சொல்லையும் பொருளையும் பகுத்துணரும் ஆற்றல் கொண்டவர். உடனடியானதும் பலதரப் பட்டதுமான சிக்கல்களுக்கு கைவசம் பதில் வைத்திருப்பவர், மொழிவளம்,நாவன்மை,இவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர், அவருக்கு பதில் அளிக்கவோ எதிர்த்துப் பேசவோ ஒதுக்கித் தள்ளவோ யாராலும் முடியாது.கடல் போன்ற அசைவற்ற ஆழமும் மலைகளின் அரசன் போல் நகர்த்த முடியாத கனமும் கேடுகளுக்கெதிரான போரில் வெல்பவராகவும், இருளை விரட்டி ஒளியைப் பாய்ச்சுபவராகவும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்பது போல் பேச்சாற்றல் மிக்கவராகவும், எதிர் வாதம் செய்பவரை, மாற்றுக் கருத்தாளரை நொறுக்கித் தள்ளுபவராகவும் இருந்தார்.” 5 ibid34-35

இவ்வாறாக இந்த சித்தரிப்பு இந்திய மரபுப்படி நாகசேனாவைப் புகழ்ந்து பாடுகிறது. மனம் சோர்ந்து போகும் அளவுக்கு இருக்கும் இந்த சித்தரிப்பினை பிற்காலத்தில் யாரோ நாகசேனாவின் மேன்மையை எடுத்துக்காட்டும் விதத்தில் சேர்த்திருக்கக்கூடும்.எனினும் பவுத்த நம்பிக்கையைப் பரப்பும் ஒரு முன் மாதிரியான நபர் பற்றிய பொதுவான சித்தரிப்பு என இதனை வாசிக்க முடியும்.எப்படி இருந்த போதிலும் முடிவில் இந்த சித்தரிப்பு புகழ் பெற்ற மன்னரும் கிரேக்க உலகின் பிரதி நிதியுமான ஒருவரை வாதத்தில் வென்று அவரை பவுத்த மதத்துக்கு மாற்றியதில் வெற்றி கண்டதால் இவற்றை மிகை நவிற்சி என்று சொல்லிவிட முடியாது.

அந்த மன்னர் மிலிந்தா நாகசேனரிடம் எழுப்பிய கேள்விகள் யாவை? அவற்றுக்கு அவர் சொன்ன பதில்கள் யாவை என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையிலேயே மிக்க மன உறுதியும், பொறுமையும், புத்தி கூர்மையும் அவருக்கு இருந்தது தெரியவருகிறது.எந்தவொரு நபரும் எளிதில்பதில் அளித்து விடக்கூடிய கேள்விகளுக்குக் கூட மிகத்திறைமையான பகுப்பாய்வு செய்து வரிசைக் கிரமமான வாதங்களைப் பொதித்து பதில் சொல்வது குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக,புத்தரின் இருப்பு பற்றி நிரூபிக்கும் புகழ் பெற்ற அவரது வாதத்தைப் பார்ப்போம்.

” நாகசேனா அவர்களே! நீங்கள் புத்தரைப் பார்த்ததுண்டா ? ”

“இல்லை. அய்யா ! ”

“உங்கள் ஆசான்கள் புத்தரைப் பார்த்து இருக்கிறார்களா ? ”

“இல்லை.அய்யா ! ”

“அப்படியானால் மதிப்பிற்குறிய நாகசேனா அவர்களே புத்தர் எங்கும் இல்லை. ” 6 ibid p 109

இந்த கட்டத்தில் இந்த வாதத்துக்கு நாமாய் இருந்தால் என்ன பதில் சொல்வோம் என்று நம்மையே கேட்டுக் கொள்வோம்.நமது எடிராளி ஒரு கிரேக்கர். நேர்காட்சி வாதி. அனுபவ பூர்வமான சாட்சியம் வேண்டும் என்று விரும்புகிறார். பவுத்த வரலாற்றிலிருந்து சாக்கியமுனி இருந்தார் என்பதற்கான நேரிடையான சாட்சியமாக நாம் எதை வைக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். ஆனால் நாகசேனா வேறு விதத்தில் இந்தக் கேள்வியைக் கையாளுகிறார்.

” பேரரசே! நீங்கள் இமய மலையில் பாயும் யூகா நதியைப் பார்த்திருக்கிறீர்களா ? ”

“இல்லை அய்யா.”

“உங்கள் தந்தையார் கண்டதுண்டா ?”

” இல்லை அய்யா.”

“அப்படியானால்….மாட்சிமை பொருந்தியவரே ! அப்படிப்பட்ட ஒரு நதி இல்லை ? ”

“அது இருக்கிறது. நானும் எனது தந்தையும் கண்டதில்லை ஆயினும் அது அங்கே இருக்கிறது.”

“அது போலவே தான் பேரரசே ! நானோ எனது ஆசான்களோ அந்தப் புனிதரைப் பார்த்ததில்லை. ஆயினும் அப்படி ஒருவர் இருந்தார்.”

“நல்லது. நாகசேனா அவர்களே ! ”

இந்த விதமாக நாகசேனர் சாக்கிய முனியின் இருப்பைப் பற்றி மன்னர் மிலிந்தாவை நம்பவைத்தார்.இப்படிப்பட்ட உரையாடல் ஜென் இலக்கியத்தில் காணப்படுவதை ஒருவர் நினைவு கூற முடியும்.அல்லது இது ஒரு விதமான சொற்சாலம்/ வார்த்தை விளையாட்டு என்று தோன்றும். இருந்த போதிலும் கூட, ஒருவர் இதனை எவ்வாறு நோக்குகிறார் என்பதைப் பொறுத்து, மேற்கத்தியர்களின் இருப்பு பற்றிய கோட்பாட்டினை கிண்டலாக விமர்சனம் செய்வதையும், உள்ளீடான பொருள் கொண்டிருப்பதையும் காணமுடியும்.அரசரின் வாதத்துக்கு நாகசேனர் விடை அளிக்கும் முறையானது, அரசரின் கேள்விகளான வாதங்களையே வரிசைப் படுத்தி இயற்கை ஆகவும் தவிர்க்க இயலாதவாறும் அரசரை நாகசேனரின் நிலைக்கு ஒத்துப்போக வைப்பதையும் காணலாம். இது தான் கிழக்கத்திய
ஞானத்தின் உண்மையான வெளிப்பாடு என்பதாக எனக்குத் தோன்றுகிறது. காலப் போக்கில் மன்னர் மிலிந்தா நாகசேனரை புத்தரின் பிரதம சீடரான சாரிபுத்திராவுக்கு இணையான ஞானம் உள்ளவர் என ஏற்றுக்கொண்டதாக நமக்குத் தெரிய வருகிறது.சாரிபுத்திரா ” ஞானத்தில் தலை சிறந்தவர் ” என்று சித்தரிக்கப் படுகிறார்.

யூகா நதி பற்றிய ஒப்புமை மிகவும் பொறுத்தமானதாகத் தோன்றுகின்றது. இந்தியாவின் பல நதிகள் இமயமலை மேல் தமது தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன. மலையிலிருந்து இறங்கும் போது பிரவாகம் கொண்டு நிலத்தை செழுமைப் படுத்தி பிறகு கடலில் சங்கமிக்கின்றன. அதே போல், சாக்கிய முனியின் போதனைகள் காலத்தால் பழமையான கட்டம் தொடங்கி நாகசேனாவின் காலத்தில் நாடு முழுவதும் பரவி இருந்தது என்பதோடு இந்திய மக்களின் அறிவையும் மனதையும் வளப்படுத்தி இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சாக்கிய முனி அடக்கமாகி விட்டார். ஆனால் அவர் நிறுவிய மதம் அவ்வளவு பிரபலமாகி செல்வாக்கு பெற்று இருந்ததே அவரது இருப்புக்கும் சிறப்புக்கும் சாட்சியமாகி உள்ளது.

நவீன காலத்திய மேற்கத்திய அறிஞர்கள் அவ்வப்போது சாக்கிய முனி என்ற ஒருவர் இருந்தாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.எனவே அந்தக் காலத்தில் மன்னர் மிலிந்தா போன்றவர்களுக்கு அத்தகைய சந்தேகம் இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அரசர் தனது வாதத்தை தொடங்கும் போது ஒருவர் கண்ணால் காண முடிந்ததை மட்டுமே உண்மை என்று நம்ப முடியும் என்ற கருதுகோளில் இருந்து ஆரம்பிப்பதால் மற்றவர்களின் கருத்தினை சரியா என்று நிர்ணயம் செய்வதில் அந்த அணுகு முறை ஒரு கருவி ஆக முடியும் என்ற போதிலும், தன்னளவில் தவறானதாகும்.நம்மால் காண முடியாத, தொட்டுணர முடியாத பல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் இருப்பை நாம் நம்புவது தான் சரியானதாகும்.மன்னர் மிலிந்தாவின் அறிவுக்கோட்பாட்டின் குறுகிய தன்மையைச் சுட்டிக்காட்டி நாகசேனா வாதத்தை உடைத்து எறிகிறார்.

ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி சில விதமான சிந்தனைகள் இயற்கையாகவே கீழ்த்திசை மக்களுக்கு எழுகின்றன. ஆனால் அவை மேற்றிசை மக்களுக்கு புரிந்து கொள்வதில் சில சிரமங்களை ஏற்படுத்துகின்றன. துறவி நாகசேனாவும் மன்னர் மிலிந்தாவும் கீழ்த்திசை மற்றும் மேற்றிசை சார்ந்த தத்துவ வாதிகள் என்ற முறையில் திறந்த மனதுடனும் துணிவுடனும் வாதத்தில் ஈடுபட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் என்ற இந்த நூலுக்கு கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய வரலாற்று அறிஞர்கள் இரு சாராருமே இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எளிதில் புரியக்கூடியது ஆகும்.

கிரேக்கர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்த சில பவுத்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவதில் இந்த நூல் மதிப்பு மிக்கதாகும். அத்தோடு கூடவே பவுத்த நம்பிக்கையாளர்கள் இந்தக் கோட்பாடுகளை, இது பற்றி புரியாதவர்களுக்கு எவ்வாறு விளக்கினார்கள் என்பதையும் இப்படைப்பு எடுத்துக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக கீழ் வரும் உரையாடலில் மன்னர் மிலிந்தா நாகசேனாவிடம்-கர்மா, மறுபிறப்பு, நிரந்தரமான/ நித்தியமான ஒரு ஆன்மா இல்லாமை ஆகியவை பற்றிய கேள்விகளை எழுப்புகிறார்.

“அரசர் கேட்டார் : மீண்டும் பிறப்பது எது நாகசேனா அவர்களே ? ”

“பெயரும் வடிவமும் மீண்டும் பிறக்கிறது.”

“அதே பெயரும் அதே வடிவமும் மீண்டும் பிறக்கிறதா என்ன ? ”

“இல்லை.ஆனால் இந்தப் பெயராலும் இந்தவடிவத்தாலும் செய்யப்பட்ட செயல்கள் ; நல்லதும் கெட்டதும் ஆன இந்தச் செயல்களால்(கர்மாவால்) மற்றொரு பெயரும் மற்றொரு வடிவமும் மீண்டும் பிறக்கின்றன.”

“அது அப்படி ஆகுமாயின் அய்யா,இந்தப் புதிய உயிரி அதன் தீய கர்மங்களில் இருந்து விடுபடாதா ? ”

“முதியவர் சொன்னார் : ஆம் அது மீண்டும் பிறக்காமல் இருக்குமாயின் விடுபடும். ஆனால் மீண்டும் பிறந்திருக்கிறது என்பதனால், மன்னரே, அதன் தீய கர்மங்களில் இருந்து விடுவிக்கப் படவில்லை.” 8 ibid pp,72-73

இங்கே நாகசேனா ஒரு நிரந்தர அல்லது நித்திய ஆன்மா இல்லையென்பதை விளக்குகிறார்.”பெயரும் வடிவமும்” அதாவது மனமும் உடலும் ஒரு நபரை ஒரு பிறவியில் இருக்க வைப்பதானது மறு பிறவியில் பிறக்கும் ஒரு ஒரு நபரின் மனதுக்கும் உடம்புக்கும் மாறுபட்டதாகும். ஒரு பிறவியில் சேரும் நல்லதும் கெட்டதும் ஆன செயல்கள்(கருமம்) மற்றொரு பிறவிக்கான ஊற்று சக்தியை வழங்குகிறது.

பவுத்த தத்துவம், அய்ந்து குணங்கள் அல்லது கூட்டுத்தொகை ( five aggregates or goons )மூலம் புலன் உணர்ச்சி கொண்ட உயிரிகள் உருவாக்கப் படுகின்றன என்று சொல்கிறது. இந்த அய்ந்தினுள் ‘சிகி ‘ அல்லது வடிவம் என்பது பொருளாயதம் அல்லது தசை மூலம் (Matirial or fleshly elements ) கொண்டதைக் குறிக்கிறது . மற்ற நான்கும், கண்ணோட்டம்,மனக்கோட்பாடுகள்,விருப்புறுதி,உள்ளம் (உள்ளுணர்வு) என்ற உயிரின் மனம் தொடர்பான மூலகங்களைக்குறிக்கின்றன. இந்த அய்ந்து மூலக்கூறுகளும் அடுத்தடுத்த பிறவியில் ஒரு மானிடப் பிறப்பு வருவதற்கு இணைந்து செயல் படுகின்றன.ஒரு நிரந்தர சாராம்சமோ நிரந்தர ஆன்மாவோ மனிதப் பிறவியில் இல்லை.

ஒருவர் ஒரு பிறப்பில் செய்த கருமங்கள்/செயல்கள்தான் அடுத்தடுத்த பிறவிகளில் ஒரு மனித உயிரியை உருவாக்கும் அய்ந்து மூலகங்கள் கூட்டுகளாகின்றன என்பதைப் பார்த்தோம்.ஆனால் கேள்வி என்னவென்றால், முந்தைய பிறவியில் உள்ள உயிர் அடுத்த பிறவியில் வரும் உயிருக்கு எப்படி தொடர்பு உடையதாகிறது என்பதாகும்.மேலே நாகசேனா குறிப்பிட்டதை ஆராய்ந்து பார்த்தால் இந்த இரு உயிர்களும் ஒப்புமை உடையனவும் அல்ல ஒப்புமை அல்லாதனவும் அல்ல.ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சிந்தனை தோற்றத்தில் எதிரெதிரானதும் முரண் பட்டதுமான இத்தகைய கோட்பாடுகளை அடிக்கடி பயன்படுத்துகிறது. ஒரே சமயத்தில் ஒப்புமையும் ஒப்புமை இல்லாமையும் ஆன இந்த கோட்பாட்டினை நாம் புரிந்து கொண்டால் தான் பவுத்தர்களின் மறுபிறப்பு
அல்லது உடல் விட்டு உடல் மாறிப் பிறப்பது (Rebirth or transmigration ) என்ற கருத்தினையும் நித்திய ஆன்மா ஒன்று இல்லை என்று மறுக்கும் கருத்தினையும் புரிந்து கொள்ள இயலும்.இந்த செயல் பாட்டிற்கு ஊக்குவிக்கும் சக்தியான கரும வினை பற்றிய கோட்பாட்டினையும் நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

இதனை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமானால், உடல் மாறிப் பிறப்பதான பவுத்த தத்துவங்கள் இன்னும் கூட அறிவார்த்தமாக இருப்பதைக் காணலாம்.அதற்கு மாறாக, ‘ஒரு நித்திய / நிரந்தர ஆன்மா அல்லது சாரம் இருக்கிறது, உடல் மாறிப் பிறக்கும் போது அதன் இருப்பு தொடருகிறது ‘ என்ற கோட்பாடு மிகவும் இறுக்கமும் முரன்பாடுகள் உடையதாகவும் இருக்கிறது.

ஒரு பிறவியும் அதற்கடுத்த பிறவியும் கருமவினை என்ற சக்தி மூலம் எவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது என்பதனை அரசருக்குத் தெளிவு படுத்துவதற்காக பல்வேறு ஒளிவு மறைவற்ற சித்தரிப்ப்களை நாகசேனா அடுக்கிக் கொண்டே போகிறார்.இறுதியில் அரசரை ஒப்புக்கொள்ளவைப்பதில் வெற்றி அடைகிறார்.இந்த உறையாடல்கள், பவுத்த மதம் தனது கொள்கைகளுக்கு ஆதரவாக கிரேக்க தத்துவம் போலவே, தர்க்க ரீதியானதும் சொல்லாற்றல் மிக்கதுமான வாதங்களை எப்படி பயன் படுத்துகிறது என்பதனை விவரிக்கின்றன.

பவுத்த மதம் பற்றி மன்னர் மிலிந்தாவும் நாகசேனரும் இரு நீண்ட முழுமையான விவாதத்தை நடத்திய பின் கீழ் வரும் சித்தரிப்பு தரப்படுகிறது :

” பிறகு, நாகசேனா கொடுத்த விளக்கங்களால் திருப்தி அடைந்த மன்னர், ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள சரிகை வேலைப்பாடுடன் கூடிய சால்வையை நாகசேனாவுக்கு அணிவித்து சொன்னார் : “மதிப்பிற்குறிய நாகசேனா அவர்களே ! இதன் மூலம் 800 நாட்களுக்கு உங்களுக்கு உணவு அளிக்க உத்தரவு இடுகிறேன். அத்தோடு கூட சட்டபூர்வமான எது ஒன்றையும் எனது அரண்மனையில் இருந்து நீங்கள் எடுத்துச் செல்லலாம்.” பெரியவர் தனக்குப் போதுமான வசதி இருப்பதாகக் கூறி மறுத்து விடவே மன்னர் மீண்டும் சொன்னார், “அய்யா உங்களுக்கு உயிர் வாழ போதுமான வசதி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.ஆனால் நீங்கள் வாதத்தில் என்னை ஒப்புக்கொள்ள வைத்த பின்னரும் ஏதும் வாங்கிக் கொள்ளவில்லை என்ற பொதுமக்களின் அவதூறு, மற்றும் நான் வாதத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் கூட நன்றியறிதலாக எதுவும் தரவில்லை என்ற அவப்பெயர் இரண்டிலிருந்தும் உங்களையும் என்னையும் காப்பாற்ற வேண்டும் ” என வேண்டிக்கொண்டார்.

“அப்படியானால் தங்கள் சித்தப்படியே ஆகட்டும் பேரரசே! ” என்றார் நாகசேனர்.9 ibid pp 134-5

அவர்கள் இருவரும் பிரிந்ததும் நாகசேனா தனது ஆஸ்ரமத்துக்குத் திரும்பினார்.விவாதத்தில் இறங்கிய இரு பெரிய மனிதர்களுமே தங்கள் வாதத்தின் போக்கினையும் முடிவையும் பற்றித் திருப்தி அடைந்தனர்.அரசர் நல்ல திறமையான கேள்விகளைக் கேட்டார், துறவி அவருக்குத் தக்க பதில் அளித்தார் என இருவருமே ஒத்த முடிவுக்கு வந்தனர்.அரசர், தான் கூர்மையான தெளிவான கேள்விகளை துறவியிடம் எழுப்பினோம் என மகிழ்ச்சி அடைய வில்லை என்பதனையும், துறவி , தான் மிகவும் கவனமாகவும் சொல்லாற்றலுடனும் மிகவும் சிரமமான வாதத்தை எதிர் கொண்டதாகக் கருதவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருவருடைய திருப்தியின் ஊற்றுக்கண்ணும், தங்களது தனிப்பட்ட உணர்வுகள், போட்டி-பொறாமைகளை ஒதுக்கி வைத்து விட்டு உண்மையை உன்னிப்பாகத் தேடினோம் என்பதில் தான் இருந்தது. இது மனித குலத்தின் நேர்மை என்ன என்பது பற்றியும்
சொல்லாடலின் உண்மையான இயல்பு பற்றியும் நமக்குச் சொல்கிறது.

அறிவாளிகளுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான சொற்போர் :

மன்னர் மிலிந்தாவுடன் வரலாற்றுப் புகழ் பெற்ற தனது வாதத்தைத் தொடங்கு முன், தாம் எந்த அடிப்படையில், எந்த நிபந்தனைகளின் பேரில் விவாதத்தைத் தொடங்குவது என்பதனை நிர்ணயிக்க முயற்சித்தார். அந்த முயற்சி கீழ் வரும் புகழ் பெற்ற வாசகங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது:

அரசர் சொன்னார், “மதிப்பிற்குறிய அய்யா ! நீங்கள் என்னோடு வாதம் செய்ய வருவீர்களா ?”

” ஒரு கல்விமானாக என்னுடன் விவாதிப்பதாயின் நன்று.ஆனால் ஒரு அரசர் என்ற முறையில் விவாதிப்பதாக இருந்தால் வாதிட மாட்டேன்.”

“அப்படி என்றால் கல்விமான்கள் எவ்வாறு விவாதிப்பார்கள் ? ”

“அறிஞர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் விவாதிக்கும் போது அந்த விஷயம் முடிவு பெறுவதில்லை. அது ஒரு சிக்கலை-முடிச்சை அவிழ்ப்பது போன்றது. ஒருவரோ மற்றவரோ தவறு என்று நிரூபிக்கப் பட்டால் தவறு செய்தவர் தனது தவற்றினை ஏற்றுக் கொள்வார். மாறுபடும் பண்புகளும் அதற்கு எதிரானவையும் உறுதி செய்யப் படுகின்றன. இருந்த போதிலும் இருவருமே சினம் அடைவதில்லை. அரசரே! இவ்வாறுதான் அறிஞர்கள் விவாதம் நடத்துவார்கள்.”

“அரசர்கள் எவ்வாறு விவாதிப்பார்கள்? ”

” மேன்மை தங்கியவரே ! ஒரு அரசர் ஒரு விஷயத்தை விவாதிப்பாராயின், ஒரு கருத்தை முன் வைப்பார். யாராவது அவரது கருத்தில் இருந்து மாறுபட்டால் மாறுபவருக்கு தண்டம் விதிக்க முற்படுவார்.’அவனுக்கு இந்த விதமான தண்டணை வழங்குங்கள் என்று உத்தரவிடுவார்.மாட்சிமை தங்கிய அரசே இவ்வாறுதான் மன்னர்கள் விவாதிப்பார்கள்.”

“மிகவும் நல்லது.நான் அரசன் என்ற முறையில் அல்லாது அறிஞன் என்ற முறையிலேயே விவாதிக்க விரும்புகிறேன். போற்றுதலுக்குரியவரே ! எந்த தயக்கமும் இன்றி உங்களது சொந்த சகோதரனுடன் பேசுவது போலவோ, ஒரு கற்றுக்குட்டியுடன் பேசுவது போலவோ, அல்லது சாதாரண கடைமட்ட சீடனிடம் பேசுவது போலவோ, அல்லது உங்கள் பணியாளுடன் பேசுவது போலவோ நீங்கள் பேசலாம்.அஞ்சவேண்டாம்! ”

“மிக மிக நல்லது மாட்சிமை தங்கியவரே! “என்று நன்றியுடன் சொன்னார் நாகசேனா. 1o ibid p46

தத்துவார்த்த நிலைபாட்டுக்கும், அரசியல் அதிகாரத்துக்கும் இடையிலான பாகுபாட்டை துவக்கத்திலேயே உறுதி செய்து கொள்ளநாகசேன விரும்பினார்.அரசியல் அதிகாரம் செலுத்தும் மனிதர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன் படுத்தி அதன் கனத்தால் தங்களது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்.அப்படி தங்கள் கருத்து செல்லுபடியாகவில்லை என்றால் எதிரியைப் பணிய வைக்க ஆதிக்கத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்பது யாவரும் அறிந்த ஒரு உண்மை.ஆனால் இந்த செயல் முறை உண்மையைக் கண்டு பிடிக்க இட்டுச் செல்வதில்லை என்பதோடு, இதனை ஒரு தத்துவ வாதம் எனவும் சொல்லமுடியாது.உண்மையில் அரசர்களுக்குத் தகுதியான செயல் முறையும் அல்ல இது.ஏனெனில் கட்டாயப் படுத்தி வாங்கும் ஒப்புதல் உள்ளத்தில் இருந்து வருவதில்லை என்பதோடு மதிப்பற்றதும் ஆகும்.

இந்த ஏட்டுரைப் பகுதியை பவுத்த அறிஞர்கள் பண்டைய காலத்து பேச்சுரிமை கருத்தாய்வு ஆகிய கோட்பாடுகளின் எடுத்துக்காட்டு எனக் குறிப்பிடுகின்றனர்.பொதுவாக மக்கள், பேச்சுரிமை என்பது ஜனநாயகத்தின் சிறந்த அடையாளம் எனக் கருதுகின்றனர். என்ற போதிலும் இக்கருத்து அய்ரோப்பாவில் சமீபத்திய நூற்றாண்டுகளில் தான் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் பண்டைய இந்தியாவில் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கான அமைப்பு இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. இது இந்திய மக்களின் மனோபாவத்தின்
ஒரு பகுதி என்பதுடன் அவர்களது தரும சிந்தனைக்கு அல்லது நேர்மைக்கு அடையாளம் என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்த கோட்பாடு பவுத்த சிந்தனையின் பரவலால் மேலும் வலுப்படுத்தப் பட்டது.

இந்த நூல் மன்னர் மிலிந்தாவும் நாகசேனாவும் விவாதித்த 262 கேள்விகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யப்படாத பல விவாதங்கள் இருப்பதாகவும் அவற்றின் எண்ணிக்கை 304 எனவும் சொல்லப்படுகிறது.

மன்னரின் கேள்விகளுக்கு நாகசேனா தெளிவாகவும் , அழுத்தம் திருத்தமாகவும், முற்றிலும் பொருத்தமான விதத்திலும் பதில் அளிக்கிறார். ஒவ்வொரு குறிபிட்ட கேள்வி பற்றிய விவாதத்தின் முடிவிலும், ” நீங்கள் சொல்வது சரிதான்.நாகசேனாஅவர்களே! நீங்கள் சொன்னது நியாயம் என்பதனை நான் உணர்ந்து கொள்கிறேன்,”என்று உறுதி செய்கிறார்.இந்த வழியில் படிப்படியாக பவுத்த நம்பிக்கையின் பல்வேறு அம்சங்களின் ஊடாக வாசகர் அழைத்துச் செல்லப் படுகிறார்.அவர் உணர்ந்து கொள்ளுமுன்னரே வாசகர் மிகவும் அடிப்படையானதும் முழுமையானதுமான உண்மையை அறிந்து கொள்கிறார்.

இவ்வாறாக இந்த நூல் பவுத்தத்தின் அறிமுகமாகப் பணி புரிகிறது. இந்த காரணத்தால் தான் , தேரவாத புத்த பிக்குகளுக்கு (துறவிகளுக்கு) பயிற்சி அளிக்கும் பாடத்திட்டமாக பிற்காலத்தில் பயன் படுத்தப்பட்டது.இந்த வாதங்களைத் தொகுத்தவர்கள் உண்மையில் இப்படிப்பட்டதொரு நோக்கத்துக்காகவே முறையாகப் பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

விவாதிக்கப்பட்ட பல கேள்விகளுள் ‘ஷாகுபுக்கு’ என்ற பதத்தின் பொருள் பற்றிய சுவாரஸ்யமான பகுதி ஒன்று இருக்கிறது. அது மற்றவர்களுக்குப் போதிப்பதிலும் அவர்களை விமோசனம் அடைய வைப்பதிலும் கைக்கொள்ள வேண்டிய இரு அணுகுமுறைகளுள் ஒன்றைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

இதனை படிப்பதன் மூலம் ஒருவருக்கு, இந்தப் பதத்தைப் புரிந்து கொண்டதில் மன்னர் மிலிந்தாவுக்கு பிழையான புரிதல்களும் தவறுகளும் இருந்ததையும் SOKA GAKKAI என்பவர் இந்தப் பதத்தைப் பயன் படுத்தியது இன்னும் பலர் பிழையான புரிதல் கொண்டிருப்பதையும் காண முடியும்.

புத்தருடைய வாசகமான “தண்டனைக்குரியவனுக்கு தண்டனை வழங்கு ” என்பதை முதலில் சுட்டிக் காட்டுகிறார். பின்னர் : “இப்போது, நாகசேனா அவர்களே தண்டனை என்றால், ஒருவரது கையை அல்லது காலை வெட்டுவது சாட்டையால்/ சவுக்கால் அடிப்பது,விலங்கு பூட்டுவது, சித்திரவதை செய்வது, மரணதண்டனை வழங்குவது, பதவி இறக்கம்செய்வது என்பனவாக இருக்கின்றது.இப்படி எல்லம் சொல்வது போற்றுதலுக்கு உரியவருக்கு அழகு இல்லை. எனவே புத்தர் இவ்வாறு (தண்டிக்குமாறு) சொல்லி இருக்க மாட்டார்.” 11 ibid p254

இத்தகைய தவறான புரிதலை எவ்வாறு விளக்குவது என்பதே புரியவில்லை.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘தண்டனை’ என்ற பதத்துக்கு நிலவிய பொருளுக்கும், இன்றைய காலத்தில் நிலவும் பொருளுக்கும் ‘ஷாகுபுக்கு’ என்பது வன்முறை என்ற தவறான புரிதலும், அதன் மீதான விமர்சனம், தவறான புரிதலின் விளைவு என்பதும் கடந்த காலத்திலும் சரி நிகழ் காலத்திலும் சரி ஒன்றேதான் / அதுவேதான்.

மன்னர் மிலிந்தாவின் எதிர்ப்புகளுக்கு பதி சொல்லும் வகையில் நாகசேனா தொடர்ந்து ‘ஷாகுபுகு’ என்ற பதம் இங்கே ‘தண்டனை’ என்ற பொருளில் பயன் படுத்தப்படவில்லை. மாறாக அடங்க வைத்தல் என்ற பொருளில் எனும் பொருலில் பயன் படுத்தப் படுகிறது. ஷோஜி – பன்படுத்தல் என்ற பதத்துக்கு ஈடாகப் பயன் படுத்தப்படுகிறது என விளங்க வைத்தார். அவர் மேலும் சொல்லிக் கொண்டே போகையில் : “திமிர் கொண்ட மனது அடக்கப்பட வேண்டும். ஈன புத்தி பண்படுத்தப்பட வேண்டும்.கெட்ட மனது அடக்கப்பட வேண்டும்.நல்ல மனது வளப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பற்ற சிந்தனை அடக்கப்பட வேண்டும் சரியான சிந்தனை வளப்படுத்தப்பட வேண்டும். தவறான கருத்துக்குப் பலியானவன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.பெருந்தன்மையான இதயம் வளப்படுத்தப்பட வேண்டும்.கொள்ளைக்காரன் அடக்கப்பட வேண்டும், நேர்மையானவன் வளப்படுத்தப்பட வேண்டும்.

பின்னர், தன்னுடைய புரிதலில், தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து நாகசேனாவின் விளக்கங்கள் சரியானவை என ஏற்றுக்கொள்கிறார். சாராம்சத்தில்,நாகசேனாவின் “ஷாகுபுக்கு’-கட்டுப்படுத்தல் செயல் முறைக்கு மன்னர் ஆட்படுத்தப் படுகிறார்.

புத்தரின் மும்மணிகள், தருமம்,சங்கம் பற்றிய தனது எல்லா அய்யப்பாடுகளும் தெளிவாகிவிட்டதால் இறுதியில் மன்னர் மிலிந்தா மிக்க மகிழ்ச்சி அடைந்தார் என்று அந்த நூல் சொல்லுகிறது.தன்னுடைய சொந்தப் பெருமை அகங்காரம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பரிசுத்தமான நம்பிக்கையை ஈட்டினார்.தீட்சை பெறாமலேயே பவுத்த மதத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரில் ஒரு விகாரையை(மடத்தை)நிறுவி நன்கொடை ஆக அளித்தார். அதற்கும் அப்பால் தனது அரச பதவியைத் துறந்து, தனது மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஒரு பவுத்தத் துறவியாய் ஆகி ‘அர்ஹத்’ எனப்படும் நிர்வாண நிலையை, மீண்டும் பிறவி எடுக்காத பேற்றினைப் பெற்றார் என்று சொல்லப்
படுகிறது.

இந்த கால கட்டமானது தீட்சை பெறாத நம்பிக்கையாளர்களின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளித்த மகாயான பவுத்தம் முன்னுக்கு வந்து கொண்டிருந்த காலம்.அதனுடைய செல்வாக்கின் காரணமாக ‘ஷாகுபுக்கு’ என்னும் செயலூக்கம் மிக்க துரித முறையில் புதிதாக மதம் மாறியவர்களைப் பற்றிய பிரதி பலிப்பு நூல் முழுவதும் காணக்கிடைக்கிறது. தனது ‘ஷாகுபுக்கு’ முறையினால் பேரரசரை மதம் மாற்றிய நாகசேனரின் உத்வேகம் பின்னர் மகாயான பவுத்தத்தைப் பின் பற்றியவர்களிடம் நேரடியான ஊக்கத்தை விளைவித்தது.மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவ வாதிஅளின் விவாதம் நம்பிக்கைகளின் நேரடியான மோதலைப் பிரதி பலித்தது. இவ்வாறாக கி.மு.இர்ண்டாம் நூற்றாண்டிலேயே மேற்கத்திய உலகின் பகுதியான கிரேக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தத்
தொடங்கி விட்டது என்பதை நாம் காண முடியும்.
-முடிவுற்றது-

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு ஜப்பானியர். பிரதி எடுக்கையில் அவரது பெயரும் நூலின் பெயரும் விடுபட்டிருப்பது வருத்தத்துக்குரிய நிகழ்வு.பல ஆண்டுகளுக்குப் பிறகு மொழி பெயர்க்கப் பட்டாலும் எந்த மூல நூலின் தூண்டுதலின் பேரில் கட்டுரை எழுதபட்டதோ அந்த நூலாசிரியர் உலகம் அறிந்த பெரும் புள்ளி என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. . இதன் ஆங்கிலப் பிரதியை எப்போதோ எனக்கு வழங்கிய மதிப்பிற்குரிய ஆய்வாளர் திரு. பெ. சு. மணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

———————————————————————————————————————————————————————————————
puthuvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

புதுவை ஞானம்


மின்னியல் வித்தைகள்
_____________________
வண்ணங்களையும் வடிவங்களையும்
மழையாய்ப் பொழிகிறது
கணிணிகளால் இயக்கப்படும்
படக்கருவி.

ஜொலிக்குமொரு அமீபா
கூரையில் உருவாகிக் கீழே
இறங்கிச் சூழ்கிறது உங்களைச்
சிகரெட் புகையாய்……
மறைந்து போகிறது பின்னர் .

மானுட வெள்ளிப் படிவமாய்
உயிர் கொண்ட திரையாய்
மின்னியல் கலீடாஸ்கோப்பில்
தொழில் நுட்பமெனும் முப்பட்டை ஆடியில்
வானவில்லின் துண்டுகளாய் நீங்கள்.

மிதமிஞ்சிக் கதறுகிறது முனகுகின்றது குரல்
கூக்குரல் இடுகிறது கொம்மாளக் கும்பல்
உருப்பெருக்கெடுத்த பேய்க் கூச்சல்
கேட்கப்படுவதில்லை_உணரப்படுகிறது.

உராய்ந்து கொண்டு செல்கிறது மானிடத் திரள்
உடையிலும் உடலிலும்
வெப்பமும் வியர்வை நாற்றமுமாய்
ஒரே நெருக்கடி.

மொத்த விளைவோ ஆச்சரியப் படுமளவு
மகிழ்ச்சியோடும், கிளர்ச்சியோடும் , நிறைவோடும்
வீடு திரும்பக் கூடும் நீங்கள்.
போதை மருந்தின் சுகமே போல
இப்படிப் பட்டதோர் கும்பல்.

உணர்வுகள் கிளர்ந்தெழுந்தாலும் கூட
சலிப்பூட்டும் மின்னியல் வித்தைகள்.
மீண்டும் கிளர்ச்சியடையவோ
தூண்டுதல் வேண்டும் மீண்டும்.

மூலம் :HOWARD R LEWIS and
HAROLD S STREITFELD
________________________


சலித்துப் போனீர்களா ?
________________________

தொலைக் காட்சிப் பெட்டகத்தைத் திறந்தால்
உலகமே ஊடுறுவுகிறது உங்கள் வீட்டிற்குள்.
முந்தைய தலைமுறையினர்
கனவிலும் காணாத காட்சிகளைக்
காண்கிறோம் நாமும் குழந்தைகளும்.
நிலவின் வெண் படலத்தில்…………….
விண்கலத்தில்………………………………..
மிதக்கின்றனர் இப்புவியின் மாந்தர் !
நிமிடங்கள் கழியக் கழிய
வருகிறது கொட்டாவி விழுகிறோம் படுக்கையில்
தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு.

அரை மணி¢த் தியாலத்துக்குள்ளேயே –
படைப்பிலிருந்து இது வரை
மனிதன் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்
மகிழ்விப்பது இல்லை நம்மை.

குண்டு வீச்சுகளும் விமானக் கடத்தல்களும்
சகிக்க முடியாத கொடுமைகள் பலவும்
வண்ண உயிர்ப்புகளாய் ஜொலிக்கிறது
கண் முன்னே……எதிர் வினை புரிகிறோம்
இன்னும் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து
இன்றேல் அருந்துகிறோம் பீர்- ஒரு குவளை.

ஒவ்வொரு காட்சியிலும் எப்படி சகிக்க முடியும் ?
அட்டூழியங்களையும் அநியாயங்களையும்.
எப்படி இருக்க முடியும் ?
சலிப்பில் மூழ்காமல் .


ஊர்தி பாதி _ ஓட்டுனர் பாதி
_______________________

இயங்கூர்திகள்……
மனிதனின் நீட்சி என்ற
மெக்லுகானின் கருத்தை எண்ணி
வியக்கத் தொடங்குகையிலேயே
தம்முடைய நீட்சியாக
மாற்றி விட்டனவே
மனிதனை
இயங்கூர்திகள்.

கார்கள் எனப் பரவலாக
நாம் அழைக்கும் கனத்த ஓடுகள்
நமது கால்களின் – ஆத்மாவின்
நீட்சியாகி விட்டன .
வாழுகின்றன நம்முடன் அவை
வாழ்கிறோம் நாமும் கூடவே
சக உயிரிகளாக.

ஊர்திகளுக்கும் ஓட்டுனர்களுக்கும்
இடையிலான உறவு – இரு
இனங்களின் இசைவு என்பது
யதார்த்தம் ஆகி விட்டது .

பாதி மனிதன் பாதி இயந்திரம்
ஹ்யக்கிரீவனாக
குதிரை முகமும் மனித உடலுமாய்
ஊர்தி ஓட்டுனர் .

JEFFREY SCHRANK
AUTO MAN –CYBORG


ஆனால்….எங்கோ
shannon Dickson,15 year old Texan Boy.
____________________

இயந்திரமாகப் பயன் படுத்தப் படுகிறது
எனது தலைமுறை.
எப்படி மாற்ற முடியும் ?

கணிணிகள் கைப்பற்றுகின்றன
மூளையின் பாத்திரத்தை
மேலும் மேலும் குழப்புகிறது
மின்னணுவியல்.
விடை எங்கோ வெளியில் தான் !

MARGARET MEAD


என்னைப் பார் !
______________

என்னைப் பார் ! என்னைப் பார் !
உயிருடன் இருக்கும் போதே
என்னைப் பார் !
கதறுகிறது மனம் -உள்ளீடற்ற
வெற்றுச் சுவர்களின் பின்னேயிருந்து.
பிரதிபலிப்பைக் கடக்க விடாத படி
எண்ணிக்கை இடப்பட்டு விட்டேனா ?
சூனியமாக…….அப்படியாயின்
கடவுளின் பேரால் கேட்கிறேன்
விலகி நில்லுங்கள்…………!
எனது நிழல் என்னைத் தொடரும் அளவும்
நிச்சயிக்கப்பட்ட வெற்று வெளியைச்
சென்றடையும் அளவும் !.


உலகே.!….நான் இளைஞன்.
_______________________

உலகே ! நான் இளைஞன்
தங்காத ஓர் தேடலில்
பீட பூமிகளிலும் சம வெளிகளிலும்
தகித்து வெளுத்த பாலை வெளியிலும்
திரிந்து அலைகிறேன்.

கதறி அழுகிறேன் கொட்டும் மழையில்
ஏறுகிறேன் சிகரங்களில் ஆர்வமுடன்
பசியோடும் இலட்சிய வெறியோடும்.
விழுந்து இடருகிறது எனது ஆன்மா
கிழிக்கும் முள்வேலிகளிலும்
தவறான பாதைகளிலும்.
மாலையின் நீண்ட நிழல்களில்
அச்சுறுத்துகின்றன சாவும் வாழ்வும்
வாய்விட்டுச் சிரிப்பேன்
நாளை எனது நம்பிக்கை வளருகையில்.
உலகே…நான் இளைஞன்
உனது நம்பிக்கை எனும் பகல் பொழுது.
உண்மையான ஞானத்தைத் தேடுகிறேன்
உன் வழியில்….ஒரு கை கொடுப்பாயா ?


குழப்பம்
_______

இப்போது இவ்வளவு
விரைவாக எதையும்
அவதானிக்க இயலாது
உலகம் தோன்றுவதற்கு
முன்னரும் அப்பாலும்
எங்கிருக்க முடியும் நான்.


எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?
_______________________________________

தந்தையர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
மற்ற கடமைகள் ஓயும் வரை……………..
பிள்ளைகளுடன் அறிமுகம் செய்து கொள்வதற்காய்.
மகள்களின் மேல் உண்மையிலேயே
மேலும் மேலும் கவனம் செலுத்த
காத்துக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள்.
கணவன் மனைவியர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
ஒருவரை ஒருவர் நெருக்கமாய் அறிந்து கொள்ள.
ஆனால் காலம், அன்னியோன்னியம் ஆவதற்கு
அனுமதிப்பதில்லை மக்களை.
எப்போது வாழத் தொடங்கப் போகிறோம்
இது தான் வாழ்க்கை என்பதாக ?
இது தான் நமது காலம்
இது தான் நமது நாட்கள்
கடந்து கொண்டே போகின்றன அவை.
இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?.


எண்ணிக்கையா ?……….தரமா ?
____________________________
கல்லூரி மாணவன் சொன்னான் _
வேறு படிப்புக்கு மாறப்போகிறேன்.

பரபரத்துப் போகிறேன் தேர்வுக்குப் படிப்பதில்
ஒரு புத்தகத்தையும் புரிந்து கொள்ள நேரமில்லை
மறந்தே போனேன் புத்தகத்தை ரசித்து மகிழ்வதற்கு .

நமக்கும் இதுதான் நிலையா ?
நிலவும் பரபரப்பு வாழ விட வில்லையா ?
அமைதியாக அமர்ந்து அசை போட முடியவில்லையா ?

அளவில் மூழ்கி தரம் மறந்து போனால்
வாழ்வதில் என்ன லாபம் ?
மனிதனுக்கு .


வாழ்வா ? சாவா ?
_________________

பிறப்பில் சுறுசுறுப்பாக இல்லாதவன்
இறப்பில் அவசரம் காட்டுகிறான்.


தானியங்கி மயமாதலுக்கு எதிராக…..
__________________________________

ஒரு வேளை……..நாம்
தானியங்கி மயமாதலுக்கு எதிரான
நிலை எடுக்க வேண்டியதாக மாறக்கூடும்.
ஏதோவொரு வகையில் வறையறுக்கப்பட்ட
கணிணி£யாய் மாறி வருகிறோமோ ?
மாறிவருகிறோம் பழக்க தோஷத்தில்
இயந்திரத்தனமாய் எண்ணவும்
எதிர் வினை புரியவும்.

சக மனிதர்களையும் வாழ்வையும்
பொறுத்தவரை ஒத்திப்போடுவது நல்லது
இயந்திரத்தனமாக எண்ணுவதையும்
எதிர் வினை புரிவதையும்.

அப்படிச் செய்வது உதவும் நமக்கு
இயந்திரமாக்கப்பட்ட உட்பகையை
வெருட்டி ஒட்டும் மந்திர வாதியாக.
தயார்ப்படுத்துமது நம்மை
முற்றிலும் புதிய கோணத்தில்
எல்லாவற்றையும் பார்க்க .
விடுவிக்குமது நம்மை
வறையறுக்கப்பட்ட இயந்திர மயமான
இயக்கத்தில் இருந்து.
இட்டுச்செல்லுமது நம்மை
புதிய மனத்தோடும் புதிய நோக்கோடும்
யதார்த்தத்தை தரிசிக்க.

BOB DYLON


Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

புதுவை ஞானம்



சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம்
தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால்
வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும்
இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல
என்பதோடு – சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன.அவையாவன : உலகம்
மற்றும் அனுபவம் என்பதன் பொருள் என்ன ? நான் யார் ? உயிர் வாழ்தலின் நோக்கம் என்ன ?
என்பன பற்றிய அறியாமை ஆகும்.பழமையான இந்த அறியாமைத் தடையை வெட்டி வீழ்த்தித்
தகர்ப்பது துயறுற்று உழலும் இப்பூமியின் மீது நீடித்த அமைதியைக் கவிய வைக்கும் என நான்
நம்புகிறேன்.

நமது சிக்கலான கால கட்டத்தில் ,உலகப் பிரச்சனையின் மையக்கருவைக் கண்டுணர்வது மிகவும்
எளிதானது. மனம் எனும் மறைவான ஊற்றிலிருந்துதான் எல்லாச் செயல்களும் சுரக்கின்றன,
மனிதர்கள் எப்போது சரியாகச் சிந்திக்கிறார்களோ அப்போது தான் சரியாக நடப்பார்களே ஒழிய
அதற்கு முன்பாக சரியாக செயல்பட மாட்டார்கள். அவர்களது செயல்கள் அவர்களது சிந்தனையை
விட எப்போதும் உயர்வாக இருக்க முடியாது .ஏனெனில், அவர்களது ஓசை மிக்க காலடிப் பயணங்கள்
கேட்க இயலாத மனதின் பிரகடனங்களால் தீர்மானிக்கப் படுகின்றன.

உலகத்தின் கசப்பான துயரங்களும், மிருகத்தனமான பாவங்களும் ; பழைமை அறியாமை என்ற
நோயின் அறிகுறிகள்.அந்த நோய்க்கான ஒரே மருந்து புதிய அறிவு தான். அறைகுறைப் பிரக்ஞையிலும்,
மேம்பட்ட வாழ்வுக்கான பக்குவமற்ற முயற்சிகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு
பகுத்தறிவாளனுக்கும் மேலே சொல்லப்பட்ட மூன்று கேள்விகளுக்குமான விடையைத் தேடும் முயற்சி
தவிர்க்க இயலாதது. மனத்தயக்கத்தில் மருண்டு கிடக்காமல் உண்மையின் ஒளியை வெளிக்கொணர்வது
அவர்களது கடமை ஆகும்.

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து- மூலம் :Beyond yoga.By- -PAUL BRUNTON

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்