This entry is in the series 20110327_Issue

வருணன்


அதையும் தா !

காய்ந்த சருகு இதழ்களை
ஈரம் தேடி வருடும் நாவுகள்
கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட
குறை மதி ஊன்
ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய்
குழரும் வார்த்தைகளால்
முகில் துறந்து நிலம் அமரும்
மழையின் பெருவாஞ்சை போல
பேரன்பு திரட்டி அணைத்திறுக்கும்
நடுங்கும் விரல்கள்
அணியாத அணியாய்
கண்களையும் காதுகளையும் இணைத்திடும்
திரவப் பாலம் அவ்வப்போது
அதற்கிணையாய் ஊற்றெடுக்கும்
என் விழியோரம் ஒரு நீரோடை
மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்
ஆதரவு வார்த்தை பறிக்க
அலைந்து தோற்று
அயற்சியே விஞ்சுகிறது.
எனக்கெல்லாம் தந்த எந்தையே
நின் நிலை தாங்கும் மனமொன்றைத்
தருமந்த வரமொன்றையும் தா !

-வருணன்

Series Navigation