‘கானா ‘ தாலாட்டு

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

….அனந்த்


தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லியா
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு – நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!

நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா ? – இல்லை
கண்ணை மூட மறந்துஎன்னெப் பாப்பியா ?

முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப்போறேன் சும்மா இருக்கப் போறியா ? – இல்லை
தூக்கச் சொல்லி அடம்பிடிக்கப் போறியா ?

பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன்காரன் தூங்கப் பண்ணத் தேவலே- எனக்கு
அந்தநாளு உடம்புவலி போவலே!

தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் – அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!

வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ – அவ
நடை அளகைப் பாத்து நீயும் திரியுவே!

வயசு காலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! – அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!

பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் – உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!

ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே ? – என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!

தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா ?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு – நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!
****
குறிப்பு: ‘கானா ‘ பாட்டுகள் பொதுவாகச் சென்னைநகரில் புழங்கும் சொற்களைப் பயன்படுத்தி நல்ல சந்தத்தோடு அமைக்கப்படும். மேலுள்ள பாடல் அதே வகைச் சந்ததத்தில் நாட்டுப்புறச் சொற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ‘கிராமத்துக் கானா ‘.

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்