‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

வ.ந.கிரிதரன்


பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பொதுவாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்ட பெருமையை, பழைய வரலாற்றைப்பற்றி வாயளக்கின்ற அளவுக்குப் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதில் நம்மவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு நல்லூர் மட்டுமே போதுமானது. ஒரு காலத்தில் இராஜதானியாக விளங்கிய நகரில் இருக்கின்ற ஒரு சில வரலாற்றுச் சின்னங்கள் கூட பரிதாபகரமான நிலையில்தான் காணப்படுகின்றன. புதர்மண்டிக் கிடக்கும் யமுனாரி, கட்டடச் சிதைவுகளுடன் அமைதியிலாழ்ந்து கிடக்கும் பண்டாரக்குளம், தன்னகத்தே ஒரு காலகட்ட வரலாற்றைக் கூறிக்கொண்டிருக்கும் கோப்பாய்க்கோட்டையிருந்ததாகக் கருதப்படும் நிலப்பரப்பு,.. இவையெல்லாம் எத்தனையோ கதைகளைக் கூறி நிற்கின்றன. நல்லூர் இராஜதானியின் பெருமைகளை விளக்கக் கூடிய கட்டடச் சின்னங்கள் மிகச் சொற்ப அளவிலேயே காணக்கிடந்தாலும் தற்போதும் வழக்கிலிருந்து வரும் காணிப்பெயர்கள், வீதிப்பெயர்கள் மூலம் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்களை ஓரளவிற்கு உய்த்துணர முடிகின்றது.

தற்போது காணப்படும் ஆலயங்களான சட்டநாதர் ஆலயம், வெயிலுகந்தத பிள்ளையார் கோயில், கைலாசநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் மற்றும் நல்லைக் கந்தன் ஆலயம் யாவுமே போர்த்துக்கேயரால் இடித்தொழிக்கப்பட்டுப் பின்னர் கட்டப்பட்டவை. இவை நல்லூர் இராஜதானியாக இருந்தபோது உருவான கட்டடங்களாகவில்லாத போனாலும், இராஜதானியாக நல்லூர் நிலவிய போதிருந்த ஆலயங்களின் நகல்களே என்பதால் இவையும் மறைமுகமாக நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பை எடுத்துக் காட்டும் சின்னங்களாகவே திகழ்கின்றன. .

முத்திரைச் சந்தை!

நல்லூர் ஆலயத்திற்குக் கிழக்காகச் செல்லும் வீதியும், பருத்தித்துறை வீதியும் சந்திக்குமிடத்தை அண்டிய பகுதி முத்திரைச் சந்தை அழைக்கபப்டுகின்றது. தமிழர்சர்களின் இராஜதானியாக நல்லூர் இருந்த காலத்தில் இங்குதான் சந்தையிருந்திருக்க வேண்டும். இம்முத்திரைச் சந்தையென்னும் பகுதியினூடு பயணித்த பொழுது , ஒரு காலத்தில் அப்பகுதியில் நிலவியிருக்கக் கூடிய சந்தைக்குரிய ஆரவாரத்தையும், மாளிகையிலிருந்து அதன் நடைமுறைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஆரிய மன்னர்களையும் ஒருகணம் நினைக்காமலிருக்க முடியவில்லை.

தொழிலாளர்களுக்குரிய தென்கிழக்குப் பகுதி!

பொதுவாகச் சந்தை நகரின் மையத்திலேயே அமைந்திருப்பது வழக்கம். நல்லூர் இராஜதானியின் மையமாக இச்சந்தையிருந்திருக்கும் சாத்தியத்தை மனதிலெண்ணி, நகரினூடு வெளிக்கள ஆய்வை நடத்தியபொழுது பல ஆச்சரியம் தரக்கூடிய தகவல்களை அறிய முடிந்தது. இச்சந்தைக்குத்த்தென்கிழக்காக அமைந்துள்ள பகுதியில் காணப்பட்ட பெயர்கள் பொதுவாக தொழிலாளர்களையே குறிப்பதையறிய முடிந்தது. தட்டாதெரு, சாயாக்காரத்தெரு, ‘கொப்பர் ஸிமித் தெரு ‘, ‘டையர்ஸ் தெரு ‘ போன்ற வீதிப்பெயர்கள் அப்பகுதி ஒருகாலத்தில் தொழிலாளர்களுக்குரிய இருப்பிடமாகவிருந்திருக்கலாமென்பதைக் குறிப்பாகக் கூறி நிற்கின்றன.

வணிகர், வீரர் அரண்மனை ஊழியர்களுக்குரிய பகுதி!

தென்மேற்குப் பகுதியில் காணப்படும் வீதி, காணிப்பெயர்கள் பொதுவாக வணிகர்கள், அரண்மனை ஊழியர்கள், வீரர்கள் போன்றோர்க்குரிய பகுதியாக அப்ப்குதி அமைந்திருக்கலாமோவென்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன.

அரசர், அந்தணர், அரசவைப் புலவருக்குரிய பகுதி!

முத்திரைச் சந்தைக்கு வடமேற்காக அமைந்துள்ள பகுதி நல்லூர் இராஜதானியின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதை அப்பகுதியில் காணப்படும் காணி, வீதிப் பெயர்கள், பண்டாரக்குளம் போன்றவை அறிவித்து நிற்கின்றன. முக்கியமான பகுதிகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

1) சங்கிலித் தோப்பு (மந்திரிமனை அமைந்துள்ள பகுதியின் காணிப்பெயர் சங்கிலித் தோப்பென நில அளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ‘கல்தோரண வாயில் ‘ எனும் முகப்புள்ள பகுதி சங்கிலித் தோப்பெனப் பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், அம்முகப்பு அமைந்துள்ள காணித்துண்டின் பெயர் பாண்டிமாளிகை வளவு என நில அளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

2) சங்கிலியன் வீதி,

3) அரச வீதி,

4) பண்டார மாளிகை வளவு,

5) அரசகேசரி வளவு,

6) குருக்கள் வளவு,

7) அரச வெளி,

8) மந்திரிமனை

சங்கிலித் தோப்பு, சங்கிலியன் வீதி, அரச வீதி, அரசவெளி, பண்டாரமாளிகை வளவு, பண்டாரக்குளம் போன்ற பெயர்களே தமிழ் அரசுக்கும், அவற்றிற்குமிடையிலான தொடர்பினைக் கூறி நிற்கின்றன. பண்டார மாளிகை, பண்டாரக்குளம் போன்ற பெயர்களிலுள்ள ‘பண்டார ‘மென்பது தமிழ் அரசரைக் குறிக்குமென்பது பலரது கருத்து. முதலியார் குல சபாநாதன் இது ‘பரராசசேகர பண்டாரத்தைக் குறிக்கு ‘மென்பார். பண்டாரமென்ற பெயரில் முடியும் தமிழ் மன்னர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள். புவிராஜ பண்டாரம் அவர்களிலொருவன். பரராசசேகரனின் பட்டத்து மனைவியான இராசலக்குமியின் புத்திரர்களிலொருவனின் பெயரும் பண்டாரம். பண்டாரமாளிகை வளவு என்ற பெயரில் வழங்கப்படும், ஆறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தென்னந்தோப்பு, தற்போதைய நல்லூர் முத்திரைச் சந்தையை அண்மித்த, பருத்தித்துறை வீதியை நோக்கிக் காணப்படுகிறது. இவ்வளவின் பருத்திதுறை வீதியை நோக்கிய பகுதியில் பண்டாரமாளிகை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட தூணொன்று காணப்படுகின்றது. இதற்கண்மையில் சிறியதொரு முகப்புடன் கூடிய வயிரவர் சிலையொன்று காணப்படுகின்றது. அம்முகப்பில் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.:

‘இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டாரமாளிகை வாசல் ஸ்ரீ பைரவர் ஆலயம் ஆதிமூலம் உள்ளே ‘

அரசகேசரி வளவு!

இப்பகுதியில் காணப்படும் காணித்துண்டொன்றின் பெயர் அரசகேசரி வளவு. காளிதாசனின் வடமொழி நூலான ‘இரகுவம்சத்தை ‘த் தமிழ்ப்படுத்திய தமிழ்க் கவிஞனான அரசகேசரியை ஞாபகமூட்டுவது இந்த வளவு. அரசகேசரியைப் பரராசசேகரனின் மருமகனாக மயில்வாகனப் புலவர் கூறுவார்:

‘… பரநிருபசிங்கனின் மைத்துனனும், பரராசசேகரனின் மருமகனுமாகிய அரசகேசரி என்பவன் இரகுவம்சம் என்னும் நூலை வடமொழியிலிருந்தும் மொழிபெயர்த்து பிராணநடையாகப் பாடித் திருவாரூரிலே கொண்டு போய் அடைந்தான் ‘ (யாழ்ப்பாண வைபவமாலை -50-51).

முதலியார் இராசநாயகமோ சிங்கைப் பரராசசேகரனின்மைத்துனன் எனச்சொல்வார்:

‘..இன்ன காதையின்ற விரும்பொருட்

டுன்னு செஞ்சோற் றுகடபு தூய நூல்

பன்னு செஞ்சோற்பரராசசேகர

மன்ன னின்ப மனங்கொள வாய்ந்ததே.. ‘

சுவாமி ஞானப்பிரகாசரோ இரகுவம்சம் எதிர்மன்னசிங்க பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்டதென்பர். மேற்படி பரராசசேகரன் சிங்கைப் பரராசசேகரனா அல்லது எட்டாம் பரராசசேகரனா என்பதில் நிலவும் குழப்பத்தின் விளவுதான் மேற்படி முரண்பாட்டிற்குக் காரணம்.

குருக்கள் வளவு!

தற்போதுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் குருக்கள் வளவு. தமிழரசர் காலத்தில் அந்தணர்கள் வாழ்ந்த பகுதியானதால் இக்காணி குருக்கள் வளவு என அழைக்கப்பட்டது போலும்.

சங்கிலித் தோப்பும் மந்திரிமனையும்!

தற்போது மந்திரிமனையென அழைக்கப்படும் கட்டடம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்ததாகக் கூறுவர். ஐரோப்பிய, திராவிடக் கட்டடக் கலையின் கூறுகளை இக்கட்டடத்தில் காணலாம். இந்த மந்திரிமனை அமைந்துள்ள காணியின் பெயர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் சங்கிலித்தோப்பென அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி மன்னனுக்குரியதா அல்லது மந்திரிக்குரியதாவென்பதைத் தீர்மானிப்பது சிறிது சிக்கலானது. இருந்தாலும் இப்பகுதிகண்மையில் அரசவெளி, அரசவீதி, சங்கிலியன் வீதி, பண்டாரக்குளம், பண்டாரமாளிகை வளவு என அரசகுலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிகமாக இருப்பதும், மேற்படி மந்திரிமனை அமைந்துள்ள காணித்துண்டு சங்கிலித்தோப்பென நிலஅளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதும் சிந்தனைக்குரியது. தமிழரசருக்குச் சொந்தமான தோப்பொன்று இப்பகுதியில இருந்திருக்கலாம்; பின்னாளில் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அவர்கட்கடங்கி பெயருக்கு ஆட்சி புரிந்த தமிழ் மன்னரின் வம்சத்தவர்கள் காலகட்டத்தில் அல்லது அதற்குப் பின்னர் மந்திரியொருவனின் இருப்பிடமாக இத்தோப்பிருந்திருக்கலாமென்று நினைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை. இவையெல்லாம் மேற்படி வடமேற்குப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கூறி நிற்கும் சின்னங்களாகும்.

அரசதெய்வ முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு!

இந்த வடகிழக்குப் பகுதியில் காணப்படும் முக்கிய வரலாற்றுச் சின்னங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1) யமுனாரி (யமுனா ஏரி)

2) தற்போது காணப்படும் கிறிஸ்தவ ஆலயமுள்ள பகுதி. இதுவே பழைய கந்தசுவாமி ஆலயம் அமைந்திருந்த பகுதி.

3) ஒல்லாந்துக் கட்டடக் கலையினைப் பிரதிபலிக்கும் மாளிகையொன்றின் முகப்பு. பொதுமக்களால் ‘சங்கிலித் தோப் ‘பென அழைக்கப்படும் இப்பகுதிக் காணித்துண்டின் பெயர் ‘பாண்டிமாளிகை வளவு ‘ என நில அளைவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சரித்திரச் சின்னங்களே இப்பகுதி அரச, தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதைப் புலப்படுத்தும்.

—-

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!

நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளருக்குரிய பகுதிகள், குருக்கள், போர் வீரர், வணிகருக்குரிய இருப்பிடங்கள், நகரைச் சுற்றியமைந்திருந்த மதில், நகரைச் சுற்றி அமைந்திருந்த ஏனைய கோட்டைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பிரபலமான முருக ஸ்தலமாக விளங்கிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றிப் போர்த்துகேயரின் நூல்களான Conquest of Ceylon, Early Christianity in Ceylon போன்ற நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. Conquest of Ceylon நூலினை எழுதிய குவேறாஸ் சுவாமிகளின் (Queroz) குறிப்புகளின்படி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக விளங்கியதையும், இக்கோயிலைச் சுற்றி நெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நூல்களின்படி மேற்படி கந்தசுவாமி ஆலயம் தற்போது காணப்படும் கிறித்தவ ஆலயமுள்ள பகுதியிலேயேயிருந்தது என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது. யமுனாரிக்குச் செல்லும் ஒழுங்கையில், அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் இப்பெரிய கோயிலின் மதிலினைச் சேர்ந்ததென்பதேயென்று கலாநிதி கந்தையா குணராசா கூறுவார் (வீரகேசரி 15-08-93).

யாழ்ப்பாண வைபவமாலை முதலாவது சிங்கையாரியராசன் நல்லூரில் இராதானியை அமைத்தது பற்றிப் பின்வருமாறு கூறும்.

‘..சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு, நாலுமதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பூங்காவும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில் யமுனாநதித் தீர்த்தமும் அழைப்பித்துக் கல்ந்துவிட்டு, நீதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனாவீரர் இருப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியிற் பிரமகுல திலகரான கெங்காதர ஐயரும், அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும் மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோவில், தையல்நாயகியம்மன் கோவில், சாலைவிநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ்செய்து வாழ்ந்திருந்தான்… ‘ (யாழ்ப்பாணவைபவமாலை; பக்கம் 27).

யாழ்ப்பாண வைபவமாலையின் ‘உதயதாரகை ‘ ‘ப் பிரதியின்படி ‘தென்றிசைக்குக் கைலை விநாயகர் கோவிலையும் ‘ மேற்படி மன்னன் அமைத்ததாக அறியக் கிடக்கின்றது. மேற்படி வைபவமாலையாரின் கூற்றில் மிகுந்துள்ள வரலாற்று நெறியின்மையைப்பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். சிங்கையாரியன் நல்லூரையல்ல, சிங்கை நகரையே முதலில் தலைநகராக்கினான் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும்.

முதலியார் இராசநாயகத்தின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘ நல்லூர் இராஜதானியைப் பற்றிப் பின்வருமாறு கூறும்:

‘..கனகசூரியன் தன் புத்திரர்களுடனுஞ் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் வந்து, விஜயபாகுவுடன் போர் புரிந்து அவனைக் கொன்று தான் அரசனாகி நல்லூரிலிருந்து அரசாண்டான். தன் பழைய ராஜதானியாகிய சிங்கைநகர் அழிந்து காடாய்ப் போந்தால், நல்லூர் பலவளங்களாலுஞ் செறிவுற்றிருத்தலைக் கண்டு அதனையே புதுக்குவான் வளைந்து, இராசவீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், நறுமணங்கமழும் செவ்விய மலர் பொலிந்திலங்கும் சிங்காரவனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரமக்களிருக்கைகளும், பலவகை அணிநலஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், தட்டார், இரத்தின வணிகர், புலவர், இசை நூல்வல்ல பாணர், இவர்களிற்கு வெவ்வேறிருக்கைகளும், உயர்குடி வணிகர் வாழ் மாளிகை மறுகுகளும், வேதமோதுமந்தணர் மந்திரங்களும், உழுவித்துண்ணுங் காணியாளரோங்கிய மாடங்களும், மருத்துவர், சோதிடர் வாழும் வளமனை வீதிகளும் உழுவித்துண்போருக்குதவி பூண்டு உழுதுண்டு வாழ்வார் குடிகளுமாகிய இவைகளை வேறுவேறு தெருக்களிலமைப்பித்து ‘இந்திரன் நகரோ, குபேரன் நகரோ ‘ எனக் கண்டார் வியப்புறக்கவின் பொலிந்திலங்கும் நல்லூரை நல்லூராக ஆக்கினான்.. ‘( யாழ்ப்பாணச் சரித்திரம்; பக்கம் 76-77).

கனகசூரிய சிங்கையாரியனின் புத்திரனான சிங்கைப் பரராசசேகரன் காலத்து நல்லூரைப் பற்றி முதலியார் இராசநாயகம் பின்வருமாறு கூறுவார்:

‘…கனகசூரியனுக்குப் பின் அவன் முதற் குமாரன் சிங்கைப் பரராசசேகரன் என்னும் நாமத்தோடு கி.பி.1478இல் அரசனானான். இவனே சிங்கையெனும் பெயரி முதன் முதல் தலைப் பெயராக அமைத்தவன். இவன் தந்தையினுஞ் சிறந்தவனாய் நக்ரிற்கு வடபாலில் சட்டநாதர் திருத்தளியையும் தென் திசையில் கைலாயநாதர் கோயிலையும் குணபாலில் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும் குடதிசையில் வீரமாகாளியம்மன் திருபதியையும் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையினுமணிபெற விளங்க வைத்தான். கந்தசுவாமி கோயில்றகண்மையில் ஓர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள்ளே பெய்வுத்து, அதனை யமுனையேரி (யமுனாரி) எனப்பெயர் தந்தழைத்தான்.. ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம்; பக்கம் 77).

நல்லூர் இராஜதானியைப் பொறுத்தவரையில் பல்வேறு ஆவணங்களை நுணுகி ஆராய்ந்த முதலியார் இராசநாயகம் வந்தடைந்த முடிவே ஏற்கக் கூடியதாகவுள்ளது. செண்பகப்பெருமாள் என்ற சபுமல் குமாராயாவின் படையெடுப்பின்போது சிங்கைநகர் உட்பட யாழ்நகர் முழுவதுமே அழிந்துவிட, அவன் நல்லூரில் புதிய இராஜதானியை அமைத்தான். கோட்டையில் ஏற்பட்ட அரசுரிமை காரணமாக அவன் விஜயபாகு என்பவனை நல்லூரில் பொறுப்பாக நிறுத்திவிட்டுச் சென்ற சமயம், முன்னர் செண்பகபெருமாளிடம் தோற்றுத் தமிழகம் சென்றிருந்த கனகசூரிய சிங்கையாரியன் தன்னிரு புத்திரர்களான பரராசசேகரன், செகராரசேகரனுடன் மீண்டும் படையெடுத்து வந்து, விஜயபாகுவிடமிருந்து முன்னர் இழந்த இராச்சியத்தை மீளக் கைப்பற்றிக் கொண்டது வரலாற்று நிகழ்வு. இவன் காலத்திலும், இவனது மகன் காலத்திலும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பைப் பொறுத்தவரையில் பலமுக்கிய மாற்றக்களைக் கண்டது. நல்லூர் இராஜதானியாகியபின்னர் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளை, சிங்கைநகரும் நல்லூரும் ஒன்றென நினைத்துக் குழம்பியதால் தான் போலும் கைலாயமாலையாரும் அதனை ஆதாரமாகக் கொண்டு வைபவமாலையினைப் படைத்த மயில்வாகனப் புலவரும் சிங்கை நகரை இராஜதானியாக்கிய ஆரியமன்னன் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளாக எண்ணிவிட்டனர் போலும். அதிகமான வரலாற்றாய்வாளர்களும் முதலியார் இராசநாயகத்தின் கருத்தினை ஏற்றுக் கொள்வதாலும், வைபவமாலையாரின் கூற்றில் காணப்படும் வரலாற்று நெறியின்மையினை முதலியார் இராசநாயகத்தின் கருத்தே சீர் செய்வதாலும், அதுவே எனக்கும் சரியாகப் படுகிறது. இந்த அடிப்படையிலேயே நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்கலைச் சரியானதாக ஏற்றுக் கொண்டு கவனத்தை ஏனைய தகவல்களின்பாற் திருப்புவோம்.

—-

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்