அத்தனை ஒளவையும் பாட்டிதான் – 4

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


வெள்ளிவீதியின் குரல் கேட்டார்களோ ?

(எயினர் குரம்பை. ஈந்தின் கீற்றுகளாலே ஆன குடிசை. அதில் ஒரு பெண், மான் தோலில் படுத்துக் கிடக்கிறாள். வெளியே விளாமரத்தில் ஒரு மான் கட்டப்பட்டுள்ளது. அருகில் பாறையால் ஆகிய உரல். குழந்தை அழும் சத்தம் அவ்வப்போது)

(அதைக் கடந்து சென்ற பாணர்கள் அங்குள்ள வேம்பு மர நிழலிலும் விளா மர நிழலிலும் தங்கியிருக்கின்றனர். எயினியர் தேக்கிலையில் சோறு வைத்து, சுட்ட மான்கறியை உணவாக வைத்துப் பாணர்களுக்குப் பரிமாறுகின்றனர்.)

எயினி-1 :எங்கள் உணவு இதுதான் ஒளவை. எங்கள் விளைநிலத்தில் இதுதான் விளைகிறது.

ஒளவை :இது என்ன ஈந்தின் விதைபோலச் சிவந்த அரிசிச் சோறு… (ஒரு வாய் சுவைத்து) நன்றாக இருக்கிறது.

எயினி-2 :பசித்த வாய் சுவையறியாது.

ஒளவை :பசி எங்களுக்குப் பழகியதுதான். இந்த அரிசி பெரிதாக இருந்தாலும் மலையடிவாரத்தின் மணம் இருக்கிறது.

எயினி-1 :நாம் கடந்து வரும்போது சில எயினர் குடிகளைப் பார்த்தோமே. இல்லையா ?

ஒளவை :ஆம்.

எயினி-1 :அவர்களுக்கு இதுகூடக் கிடையாது. அவர்களுக்கு விளைநிலமே கிடையாது.

ஒளவை :பிறகு…

எயினி :காலையில் கடப்பாரையுடன் காட்டுக்குப் போவார்கள். எறும்புப் புற்றை இடிப்பார்கள். அங்கு எறும்புகள் சேர்த்த புல்லரிசி… உவர்மண் ஊற்றில் ஒட்டிக்கிடக்கும் நீரை அள்ளி அதில் சமைப்பார்கள். சமையல் பானை கூட உடைந்த வாயுடையது. ஓவாய்ப்பானையாய் ஒழுகும்.

ஒளவை :அங்கு மான் தோலில் ஒரு பெண் படுத்திருந்தாளே…

எயினி-1 :ஆமாம். அவள் குழந்தை பெற்றிருக்கிறாள். அதனால் அவள் புல்லரிசி தோண்டப் போகவில்லை.

ஒளவை :அவர்கள் உங்கள் குடியினர் இல்லையா ?

எயினி-2 :எங்கள் குடிதான். ஆனால் நிலம் பிரித்துவிட்டது. இந்தப் புன்புலத்தை நாங்கள் கைப்பற்றிக்கொண்டோம். ஏதோ விளைகிறது. உண்கிறோம். இதுதான் எங்கள் அரண்மனை. இதுதான் எங்கள் விருந்து.

ஒளவை :பாணர்கள் எங்களுக்கு இன்னதுதான் உண்ணவேண்டும் என்றில்லை. கிடைப்பது அமிழ்து. நீங்கள் அன்போடு தருவது இன்னும் இனிது.

(பாணர்கள் உணவுண்டு எழுகிறார்கள். எயினர் ஒளவையின் அருகில் வந்து….)

எயினி :உன்னைப்போல் ஒருத்தி – பாடினி ஒரு நாள் தனியாக இங்கு வந்தாள்.

ஒளவை :எதற்கு ?

எயினி-1 :தன் காதலனைத் தேடி.

பாடினி-1 :காதலனைத் தேடி அதுவும் தனியாகவா ?

பாணர்-1 :ஒரு பெண் தன் காதலனைத் தேடி அலைவது முறையன்று.

ஒளவை :காதலிக்குக் காதல் மட்டுந்தான் முறை. அவளை இற்செறிப்பது இப்பொழுது வந்தது. அந்தக்காலம் காதலுக்குத் தடையில்லை… காதலன் காதலியைத் தேடி வருவான். காதலியும் காதலனைத் தேடி வருவாள். அன்பு செலுத்துவதற்கு என்னமுறை வேண்டிக்கிடக்கிறது ? நல்லது. அந்தப் பெண் யார் ?

எயினி-2 :வெள்ளிவீதி. அவள் பாடிய பாடலை நான் பாடிக்காட்டட்டுமா ?

பாடினி-1 :உனக்குப் பாட வருமா ?

ஒளவை :என்ன கேள்வி இது…யாருக்குத்தான் பாட வராது. குழந்தையின் அழுகுரல் கேட்கிறது ‘ பார் அந்த மகவு இசைக்கும் பாட்டுக்கு நிகராக நீ, நான்… யாராவது பாட முடியுமா ? நீ பாடு பெண்ணே.

எயினி-2 :நிலந்தொட்டுப் புகாரர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரில்

கெடுநரும் உளரோ நம் காதலோரே.

ஒளவை :அருமையான பாட்டு. இனிமையாகப் பாடினாய்.

எயினி :அவள் பாடியது இருக்கட்டும். இதைக் கூத்தாக எங்களுக்கு ஆடியும் பாடியும் காட்டுவாயா ?

ஒளவை :அவ்வளவுதானே… தொகுசொற்கோடியா ‘ இந்தப் பாடலின் வரலாற்றைத் தொகுத்துச் சொல். பிறகு உன் கோட்டுக் கருவியை ஊது…

தொகுசொற்கோடியன் :அதாவது..வெள்ளிவீதி என்ற புள்ளிமான்….

ஒளவை :அவள் புள்ளிமானல்லள்.. பெண்.

தொகுசொற்கோடியன் :நீ குறுக்கிடாதே ஒளவை. ஒரு பெண் என்று சொன்னால் சுவையில்லை. புள்ளிமான் என்றால் தான் சுவை.

தொகுசொற்கோடியன் :வெள்ளிவீதி என்ற புள்ளிமான் காதல் வயப்பட்டாள். உறுதி சொன்ன காதலன் வராமல் போனதால் காடுமலை கடந்து தேடினாள் தேடினாள்…

(கோட்டுக்கருவியை ஊதப் பாட்டுக் காட்சி தொடங்குகிறது)

வெயில் வெறி தீர்க்கும் பாலைவெளிகளே

வெள்ளிவீதியின் குரல் கேட்பீர்களோ ?

துயரில் பாலையாய் நானும் எரிகிறேன்

துணையைத் தேடி ஊர் ஊராய்த் திரிகிறேன்

கரிந்து போன தளிரில் அரும்பில்

காதலர் முகமும் கரிந்து போனதோ ?

எரியும் மூங்கில் காட்டி எனது

இன்னிசைக் குழலும் எரிந்து போனதோ ?

கோடைக் காற்றில்.. வாகையின் நெற்றுகள்

ஆடுகளப் பறைபோல் ஆர்ப்பரிக்கும்

நீரிலாக் கரைகளை யானை வெறிக்கும்

வேங்கை அதனது குருதி குடிக்கும்

மண்ணில் புதைந்தால் கிழங்காய்க் கிடப்பான்

வானில் சுடரும் மீனாய் இருப்பான்

தண்ணீர்க் கடியில் முத்தாய்ச் சிரிப்பான்

தலைவன் எப்படித் தனியே நடப்பான் ?

நிலத்தில் தாமே புதைபவர் இல்லை

வானில் ஏறச் சிறகொன்றும் இல்லை

கடல் மேல் காலால் நடந்திடுவாரா ?

காதலர் என்ன தொலைந்திடுவாரோ ?

நாடு நாடாய் அயர்வின்றி நடப்பேன்

ஊர்ஊர் தோறும் பெயர்சொல்லிக் கேட்பேன்

வீடுவீடாய்த் தேடும்போது

ஓடிப்போகும் வழிதான் ஏது ?

Series Navigation

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)

அத்தனை ஒளவையும் பாட்டிதான்- 3

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

இன்குலாப்


பழையப் பாலைப் பண்ணும் பறையும்….

இளைஞன் : அதோ…. மரநிழல்……

பாணர் : ஆமாம் மராமரம்…. அதிலும் இலைகள் இல்லை….

ஒளவை : வெயில் நிழல் வலை பின்னியது போல…. கட்டம் கட்டமாய் நிழல்கோடுகள்.

பாடினி-1 : ஆமாம் ஒளவை…. கொளுத்தும் இந்த கோடையில் மண்ணிலும் ஈரமில்லை… மரத்திலும் பசுமை இல்லை….

பாணர் : அந்த காட்டாற்றில் நடந்து வந்தோமே…. கொஞ்சம் கூட நீர் இல்லை….

இளைஞன் : நீர் இருந்ததற்கான சுவடு கூட இல்லை…

பாடினி-1 : கரை நெடுக வெறும் மரம்…. ஒரு பிடி நிழல் கூட இல்லை. பிறகு முள்ளை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் உடை மரங்கள்.

இளைஞன் : பிறகு கூர்மையான பரல்கள்.

பாடினி-2 : (நடுவயதினள்) இதோ பார்… என் கால்களைப் பரல்கள் குத்திக் கொப்புளங்கள்…. சிறு நெல்லிக் காய்களைப் போல். கால்களோ வெயிலில் ஓடிக் களைத்த நாயின் நாக்குப் போல சிவந்து விட்டது.

பாடினி-2 : பேசியது போதும்…. இந்த மராமரத்து நிழலிலாவது உட்காருவோம்….

(பாணர் கூட்டம் நிழலில் போய் உட்கார்கிறது. நடுவயதினள் மரத்தின் அடியில் சாய்கிறாள். முழங்காலை நீட்டிக் கொள்கிறாள். ஒளவை அருகில் உட்கார்ந்து கால்களை நீட்டியபடி மரத்தில் சாய்கிறாள்.)

(நண்பகல் பாணர் கூட்டம் தள்ளாடியபடி நடந்து வருகிறது. நடுவில் ஒளவையும் பாணர் கூட்டத்தில் இளைஞன் ஒருவன் தனது முழவுக் கருவியைத் தட்டியபடி)*

பாணர் : நல்லது. கொளுத்தும் பாலை வெளியில், நிழலையாவது காட்டிய கொற்றவைக்குப் பறையடித்துப் பரவுவோம்…. (தடாரிப் பறையைக் கொட்டுகிறார்)

இளைஞன் : கொற்றவை எங்கே நிழலைக் காட்டினாள்…. ? நானல்லவோ காட்டினேன்….

பாடினி-1 : கவலைப்படாதே…. உனக்கும் பறையடிப்போம்…. கடைசியாக.

இளைஞன் : ஏன் கடைசிப்பறையைப் பற்றிப் பேசுகிறாய்…. திருமணத்துக்குப் பறை கொட்டமாட்டார்களா ?

பாடினி-2 : ஒளவை, என் கால்கள் நோகின்றன. அந்த வாயாடியை (இளைஞனைச் சுட்டி) இப்படி வந்து உட்காரவிடு. என் கால்களை பிடித்து விடப்பா… (ஒளவை சிறிது நகர இருவருக்கும் நடுவில் இளைஞன் வந்து உட்காருகிறான்)

ஒளவை : நடந்து நடந்து கால்கள் சோர்ந்தன….

பாடினி-2 : நடந்து சோர்ந்தது கொஞ்சம். நடமாடிச் சோர்ந்தது கொஞ்சம்.

இளைஞன் : (கால்களைப் பிடித்து விட்டபடி) வயிறு பசிக்கிறது.

பாணர்-1 : உண்பதற்கு ஏதாவது மிஞ்சியிருக்கிறதா ?

பாடினி-2 : என்ன மிச்சம்….. உலர்ந்த ஒரு சில மீன்கள்…. இந்தத் துணியில்.

பாணர்-1 : அவரை, துவரை, அரிசி என்று எதுவும் இல்லையா ?

பாடினி-2 : அவரையும் இல்லை. துவரையும் இல்லை…. கடைசியாக நாம் ஆடி முடித்தபோதே எல்லாம் தீர்ந்து போய்விட்டன.

இளைஞன் : அப்பா…. இப்படி ஒரு அழகான நிழலைக் காட்டிய கொற்றவை…. கொஞ்சம் உணவையும் காட்ட மாட்டாளா ?

பாணர்-1 : கொற்றவையைப் பழிக்காதே…. சினந்து விடுவாள்… தேடிப்பார்ப்போம், ஏதாவது காட்டுக் கீரைகள் கிடைத்தாலும் கிடைக்கும்.

பாடினி-1 : உமக்குக் கூரு கெட்டுப் போய்விட்டதா ? கண்ணுக்கெட்டிய தொலைவில் ஏதாவது ஒரு பசுமை தலை நீட்டியிருக்கிறதா ?

இளைஞன் :(எழுந்து வந்து பார்த்துவிட்டு) அதோ அந்தக் குன்றுக்குப் பக்கத்தில் சில குடிசைகள் தெரிகின்றன. நாம் அங்கே போவோமா ?

ஒளவை : கொஞ்சம் பொறு. பசிக்குப் பழகாதவன் போல…

இளைஞன் :இருந்தாலும் ஒளவையே, இவ்வளவு தொலைவு நடந்தபிறகு குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல்…

ஒளவை : இந்தக் சுரைக் குடுவையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. குடி.

இளைஞன் : சுரைக் குடுவையில் வெறுந்தண்ணீரை மட்டுந்தான் வைத்திருக்கிறாயா ?

ஒளவை : பேசாதே… வறட்சியில் நாக்கு உள்ளே போய் விடப் போகிறது. குடி.

(சுரைக்குடுவையில் தண்ணீர் வாங்கி இளைஞன் குடிக்கிறான்.)

இளைஞன் : அப்பா.. கொஞ்சம் வேட்கை குறைந்தது… இனிப் பசிக்கு என்ன செய்வது ?

ஒளவை :வா. காற்றைச் சாப்பிடுவோம்.

இளைஞன் : என்ன ஒளவை… காற்றைச் சாப்பிடச் சொல்கிறாய்.

ஒளவை : அது ஒன்று தான் வேலிகளுக்குள் அடைபடாமல் வெளியே திரிகிறது. நல்லது, உனக்குக் காற்றை வேட்டையாடத் தெரியுமா ?

இளைஞன் : காற்றை வேட்டையாடுவதா ? சுரைக்குடுவையில் தண்ணீர்தானே கொண்டு வந்தாய் ? ஆமாம் காற்றை எப்படி வேட்டையாடுவது ?

ஒளவை : அதோ, உன் யாழை எடு.. (பாணனைக் காட்டி) நீ உன் முழவின் வார்களை இறுகக்கட்டு, (மற்றொரு பாணனைக் காட்டி) நீ பறையை பொருத்தமாகத் தட்டு. எல்லாம் சீராக அமையட்டும். இப்பொழுது இந்த வலைகளுக்குள் காற்று வந்து விழுகிறதா இல்லையா என்று பார்… உன் யாழில் பாலைப் பண் வந்து நடமாடட்டும். இந்த இசை அதோ அந்த எயினர் குடியிருப்பை எட்டும்….

பாணர் : பாலைப்பண்… மதங்கொண்ட யானையையே நிறுத்திவிடுமே..

இளைஞன் : என் பசியை நிறுத்துமா ?

ஒளவை : செவிக்கு விருந்து படை. வயிற்றுக்கு விருந்து தானாக வரும். வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும்.

(பாணர்கள் மெல்லமெல்ல இசை கூட்டிப் பாலைப்பண் இசைக்கின்றனர்.. சிறிது நேரம் இசை தொடர்கிறது. தொலைவிலிருந்து சில எயினர்கள் வில்லும் அம்புமாய் வருகின்றனர்.) அவர்கள் அருகில் வர இசை நிற்கிறது.**

எயினர்-1 : ஏன் இசைப்பதை நிறுத்தினீர்கள் ?

பாணர்-1 : நீங்கள் யார் ?

எயினர்-2 : நாங்கள் எயினர்கள்.

பாணர் : இங்கு எப்படி வந்தீர்கள்… ?

எயினர்-1 : உங்கள் இசை எங்களைக் கூட்டி வந்தது.

பாடினி-1 : இசைகேட்க வந்த உங்களுக்கு அம்பும் வில்லும் எதற்கு ?

எயினர்-3 : நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டோம். வழியில் உங்கள் இசை கேட்டது வந்தோம்.

பாடினி-1 : கண்ணுக்கெட்டிய தொலைவில் கானல் பறக்கிறது. நீங்கள் வேட்டையாட ஒரு பறவை உண்டோ ?

பாடினி-2 : வழியெல்லாம் வறண்டு கிடக்கிறது. எந்த விலங்கு இந்த வெயிலில் வெளியே வரும் ?

எயினர்-1 : விலங்குகள் வராவிட்டாலும் வணிகர்கள் வருவார்கள்… வண்டிகளிலும் கழுதைகளிலும் சாத்து சாத்தாக வருவார்கள். பொதி பொதியாகப் பொருள் கொண்டு வருவார்கள்.

பாடினி-1 : சரி… அவர்கள் பொருள்களை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

எயினர்-1 : (சிரித்தபடி) நாங்கள் அவர்களை வேட்டை ஆடுகிறோம்.

பாடினி-2 :அவர்களையா ?

எயினர்-2 :அவர்கள் பொருள்களை ? எதிர்த்தால் அவர் களையுந்தான்.

பாடினி-1 :அதாவது…

எயினர்-1 :ஆமாம் நாங்கள் கொள்ளையடிக்கிறோம்.

பாடினி-2 :கொள்ளையடிப்பது குற்றமில்லையா ?

எயினர்-2 :இந்த வணிகர்களைக் கொள்ளையடிப்பதா ? குற்றமா ? (சிரிக்கிறான்) இதோ பாருங்கள் நாங்கள் இந்தப் பாலை மண்ணில் மட்டுந்தான் கொள்ளையடிக்கிறோம். இவர்களோ எல்லா மண்ணிலும் கொள்ளையடிக்கிறார்கள்.

பாடினி-1 :அது அவர்கள் தொழில்

எயினர்-1 :இது எங்கள் தொழில்

பாணர்-1 :அவர்கள் யாரையும் போய் வழிப்பறி செய்வதில்லை. வில்லையும் அம்பையும் காட்டி எதையும் விற்பதில்லை.

எயினர்-2 :அவர்கள் சொல்லைக் காட்டி நம்மைச் சூறையாடுகிறார்கள்.

எயினர்-1 :இதோ பாருங்கள். இந்தப் பாலை வெளியை என் பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மண் முழுவதும் மரங்கள் அடர்ந்த காடுகளாய் இருந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

பாடினி-2 :என்ன ?

எயினர்-1 :ஆமாம். அந்தக் காலத்தில் எங்கள் வில்லும் அம்பும் எங்கள் வழியில் குறுக்கிடாத மட்டுக்கும் மனிதர்களைக் குறிவைத்ததில்லை. வேட்டைக்கு ஏராளமான விலங்குகள். மாமரக் கிளைகள் எல்லாம் கனிகளின் சுமையால் மண்ணைத் தொட்டன.

எயினர்-2 :இங்கே ஓர் ஆறு கூட இருந்ததாம். அதுவும் மண்ணுக்கடியில் புதைந்து போய்விட்டது.

பாடினி :இந்தக் காடுகளுக்கு என்ன நேர்ந்தது ?

எயினர்-2 :போங்கள். உங்கள் அரசர்களைப் போய்க் கேளுங்கள்.. அவர்கள் அரண்மனைகளின் கதவுகளைப் போய்க் கேளுங்கள். உத்தரங்களைப் போய்க் கேளுங்கள். பஞ்சணை தாங்கியிருக்கும் கட்டில்களைப் போய்க் கேளுங்கள். இந்த வணிகர்களின் வானுயர்ந்த வீடுகளைப் போய்க் கேளுங்கள். எங்கள் காடுகள் கொல்லப்பட்டு நாடுகள் உருவானக் கதையைச் சொல்லும்.

எயினர்-1 :எங்களை இந்த வெட்ட வெளியில் நிறுத்தியவர்களை நாங்களும் நிறுத்துகிறோம்.

எயினர்-2 :கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிக்கிறோம்.

எயினர்-1 :உங்கள் மன்னர்கள் தலைக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள். (தாடியைத் தடவியபடி) நாங்கள் முகத்துக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள்.

(அச்சமயம் எயினர் குலப்பெண்கள் அங்கு வருகிறார்கள்)

எயினி-1 :இங்கென்ன செய்கிறீர்கள் ?

எயினர்-1 :இவர்கள் பாணர்கள்.. இவர்கள் பாட்டுக் கேட்டு வந்தோம்.

எயினி-2 :நாங்களுந்தான்… (பாணர்களை உற்றுநோக்கி விட்டு…) ஐயோ… இன்னும் பசி ஆறவில்லையா ? முகமெல்லாம் வாடி… வாருங்கள். நமது குடிலுக்குச் செல்லுவோம்.

எயினர்-2 :அடடா, இவர்கள் உணவுண்டார்களா என்று எங்களுக்குக் கேட்கவே தோன்றவில்லை ‘

எயினி-1 :கொள்ளையடித்துக் கொள்ளையடித்து உங்கள் உணர்வுகளே மரத்துப் போய் விட்டன.

இளைஞன் :யார் கொள்ளையடிக்கவில்லை.. வணிகர்கள் கொள்ளையடிக்கவில்லையா ? அரசர்கள் கொள்ளையடிக்கவில்லை ? உழவர்கள் நெல்லைக் கொள்ளையடிக்கிறார்கள். பாணர்கள் மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள். பறவைகள் பழங்களைக் கொள்ளையடிக்கின்றன. (எயினர் குலப் பெண்கள் அவனை உற்று நோக்க) நான் சொல்லவில்லை. இதோ இவர்கள் தான் சொன்னார்கள். எனக்குப் பசிக்கிறது. ஒளவை உனக்குப் பசிக்கிறதா ?

எயினர்-1 :ஒளவையா.. யார் அவள் ?

இளைஞன் :இதோ இவள்தான் ?

எயினர்-2 :இவ்வளவு இளம் பெண்ணா ? இவளுடைய பாடல் ஒன்றை அன்று குறிஞ்சித் திட்டில் பாணர்கள் பாடக்கேட்டேன். ஒரு முப்பது அகவையாவது இருக்கும் என்று நினைத்தேன். இவளோ ஆலமரத்துக் கிளிக்குஞ்சு போல…

எயினர்-1 :பாருங்கள் (தனது செருப்பைக் காட்டி) அடிபுதை அரணம் கூட இல்லாமல்.. வெறுங்காலுடன்…

எயினி :சரி…ஒளவையைப் பேசியே கொல்லாதே. அவர்களை அழைத்து வா.

_______________________________________________________________

* நாடகத்தின் மேடையேற்றத் தேவைக்காக இப்பகுதி பாடலாக வருகிறது. இதை இரண்டாவது பாடமாகக் கொள்ளலாம்.

நாளான மண்சுவர்

நைந்து விழும் கூரை

காளான்கள் பூக்கும்

கரையான் மண்கோடிழுக்கும்….

வேளைக்கீரை

உப்பின்றி வெந்ததை

வாசற்படல் அடைத்து

வயிற்றுத்தீதான் தணித்து….

வேர்வையில் நனைந்து

மூலநூல் இழை அறுந்து,

வேறுவேறு நூல் ஒட்டில்

ஈரும் பேனும் குடியிருக்கும்

ஆடைகளைப் போர்த்தி

வருகின்றோம் வருகின்றோம்

பாடல் துணையாகப்

பாடினியர், பாணர்கள்

வெக்கை பறக்கும் கானல் வெளிகளில்

நிற்கும் மரங்கள் இலையின்றி

வீழும் நிழற் கருங்கோட்டில்

உட்கார்ந்து இளைப்பாற

இளைஞர்கள் கால்நீவ

தக்கதிம் பறை முழக்கி

எழுகின்றோம் தமிழ் இசைக்க

** நடகத்தின் மேடையேற்றத் தேவைக்காக இந்தப் பாடலும் எழுதிச் சேர்க்கப்பட்டது.

பழைய பாலைப் பண்ணும் பறையும்

காதில் மோதுதே ‘

பாட்டன் சொன்ன நேற்றைய வாழ்வை

நினைவுறுத்துதே ‘

நிழல் குவிந்த நிலங்களில்

யார் நெருப்பு வைத்தது ?

நெளிந்து வந்த ஆறுகளை

யார் புதைத்தது ?

வழிப்பறியும் கொலை வெறியும்

யார் விதித்தது ?

வன்புலத்தில் எயினர் வாழ்வை

யார் விதைத்தது ?

Series Navigation

இன்குலாப்

இன்குலாப்

அத்தனை ஒளவையும் பாட்டிதான் -2

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


பாடினி வந்தாள்

மூடிய பழமைத் தூசியை விலக்கி

முகத்தில் ஒரு நிலவைத் துலக்கி

ஏடு இனிக் காணாத எழுத்தில் இருந்து

எழுந்து வருகிறாள் இன்னிசை விருந்து.

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

காடு இனி மறந்த பசுமையை நினைக்கும்

கானக் குயில்களைக் கிளைகள் அழைக்கும்

நீடிய வழிகளில் யாழிசை மீண்டும்

நினைவில் கனலைக் குழலிசை தூண்டும்.

பழகிய வாழ்க்கையைப் பாடலில் வார்த்து

பசப்புதல் இல்லாத சொற்களில் கோத்து

அழகிய ஒளவைப் பாடினி வந்தாள்

அறம் போதியாமல் பாடினி வந்தாள்.

கள்ளில் ஒரு சொல் காதலில் மறுசொல்

களத்தில் நிற்கும் வீரர்கள் எல்லாம்

வாளால் வரைந்த குருதி வரிகளை

யாழின் நரம்பில் திரும்ப எழுதிய

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

அடர்குரல் முழவுகள் கடும் குரல் வங்கியம்

அடிதொடும் சிலம்பிசை தொடுவளை ஆர்த்திடும்.

தடிஇலை நரைஇலை தரையினில் விழிஇலை

விடுதலை நடையுடன் நெடுவழி தொடர்கிறாள்.

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

பாணர்கள் பாடியபடி:

குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்

முகில்களோடு நாங்களும் நடந்தோம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை எங்கும் பாடித் திரிந்தோம்.

இன்னும் பாடுக பாட்டே

(பாணர்களின் குடியிருப்பு..சில குடிசைகள். ஒன்றில் மீன்வலை காய்கிறது. சிறிது தள்ளி ஒரு மர நிழலில் முழவு, யாழ், குழல் போன்ற இசைக் கருவிகளுடன்-பாடினியர்-ஒரு கூத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்கள். முதுகைக் காட்டியபடி ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.)

பாடினி-1 :சரி….தலைவி தலைவனைக் காண முடியாமல் இல்லத்தில் இருக்கிறாள்….

பாடினி-2 :தன்னுடைய காதலை நற்றாயிடமும் சொல்ல முடியவில்லை… செவிலித்தாயும் செவி கொடுக்கவில்லை.

பாடினி-1 :ஏனடி… காதலைச் சொல்வதற்கும் தடையா ?

பாடினி-2 :ஆமாம். காதலை வெளிப்படையாக ஒரு பெண்ணால் பேச முடியுமா ?

பாடினி-1 :ஆமாம்…அது ஒரு காலம். மலையேறிவிட்டது. தலைவனும் தலைவியும் தாமே கண்டு தாமே மணந்து மகிழ்ந்த காலம் அது…

பாடினி-2 :மணமுடித்து வைக்கப் பெரியோர் இல்லை… சேர்ந்த நாளே திருநாள்.. திருமணநாள்…

பாடினி-1 :ஆடவன் பெண்ணை ஏமாற்றியதில்லை….

பாடினி-2 :காதலில் ஏமாற்றுவது பற்றிக் கனவு கூடக் காண்பதில்லை…

பாடினி-1 :போதும் கனவுகள் காண்பது. கூத்துக் கதையைச் சொல்.

பாடினி-2 : ஒரு புறம் அச்சம்…. மறுபுறம் நாணம்…. பேதை அவள் எப்படி தன் காதலைச் சொல்வாள் ? நினைத்தால் உயிர் வேகிறது. நினைக்காதிருந்தாலோ உயிரே போகிறது…. உடல் கூட்டுக்குள் மனப் பறவை சிறகடிக்கும்…. உற்றார் செவிகளோ இரும்பால் ஆனவை… பேதை அவள் எப்படித் தன் காதலைச் சொல்வாள் ? தினை மாவை நற்றாய் தேன் ஊற்றிப் பிசைவாள், தேனினும் இனியவன் மனதைப் பிசைவான்…. மலைச்சாரல், வண்ணப் வண்ணப் பூக்கள்….. மணக்கும் பூக்களால் மாலை கிறங்கும்… மேற்கில் வானம் பொன்னாய் இளகும்…. தலைவியின் நெஞ்சும் தானாய் மயங்கும்… திரும்பும் திசையெல்லாம் தேனாய் உருகும்….

பேதை அவள் காதலை எப்படிச் சொல்வாள், இருந்த இடத்தில் சிலைபோல் இருந்தாள்….. உணவு மறந்தாள்…. உறக்கம் துறந்தாள்…. இமை மூடாமல் கனவுகள் கண்டாள்…. குன்றக் குறவனின் அன்பு மகள். இவள்…. வேண்டித் தவமிருந்து வரமாய் வந்தவள்…. பேதை மனத்தில் காதல் கொழுந்துகள் எரிவதால் அவளும் வெண்ணெய் போல் உருகுவதைத் தந்தையும் அறியான்…. தாயும் அறியாள்… முருகவேளுக்கு ஏதோ குறை இழைத்தோம்… எனப் பெற்றோர் கருதினர்…. கட்டுவிச்சியை அழைத்துக் குறியும் கேட்டனர்…. குன்றப் பெயரைச் சொன்னவுடன்…. தலைவியின் நெற்றியில் சுடரொன்று படர்ந்தது… இதுதான் இன்றைய கூத்தின் செய்தி….

இப்படி முடியும் இந்தக் கூத்துக்குக் கடைசி வரிகளாய் ஒரு காதற் பாட்டு….

யாரிடம் கேட்கலாம்…. கூறடி பாடினி.

பாடினி-1 : பேச்சாலே கதை சொல்வாய் என்று நினைத்தேன். பாட்டாலே பாடி முடிச்சிட்டியே….

பாடினி-2 : பாணர்களுக்குக் கதை சொல்ல வராது… பாடத்தான் வரும்…. நாம் பெற்ற பயிற்சி அப்படி…. கடைசி வரிகளாய் என்னடி சொல்லலாம்… ? யாரைக் கேட்கலாம் ?

பாடினி-1 : என்னிடம் என்ன கேட்பது…. ? அதோ பார்…. அந்தப் புன்னை மர நிழலில் யார்…. ?

பாடினி-2 : ஒளவை. மீன் வலை பின்னுகிறாளா ?

பாடினி-3 : ஏதாவது பாடலுக்குச் சொல்வலை பின்னியபடி இருப்பாள். யாழ் மீட்டும் கைகள் மீன் பிடிக்குமா ?

பாடினி-1 : ஏன் மீன் பிடிக்கும் கைகளுக்கு யாழ் மீட்ட வராதா ?

பாடினி-3 : ஏன் வராது ? மீன்கள் வலையில் மாட்டுவது யாழ் நரம்பில் இசை வந்து பொருந்துவது போலத்தான்… பாட்டுக்குச் சொல்வந்து பொருந்துவது போலத்தான். எல்லாம் முயற்சி தான்…. ஏய் ஒளவை… நீ வலை பின்னுகிறாயா ? கலை பண்ணுகிறாயா ?

(ஒளவை திரும்புகிறாள். கையில் கலயம்)

ஒளவை :இப்பொழுது கலயம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.(கலயத்திலிருந்து குடிக்கிறாள்)

பாடினி-1 :என்ன ஏதாவது மீதம் இருக்கிறதா ?

ஒளவை :இல்லை.. கொஞ்சம் கள்தான் இருந்தது. அதனுடைய கடைசித்துளியும் உணர்வூட்டுகிறது….

பாடினி-1 :கலயத்தையாவது மிச்சம் வை, ஒளவை ‘

ஒளவை :கள்ளிருந்த இந்தக் கலயத்துக்கும் வெறிவந்து விட்டது. பார்…அதுதான் ஆடுகிறது.

பாடினி-1 :வெறி கலயத்துக்கு இல்லை…… உன்விழிகளுக்கு வந்திருக்கிறது. கைகளுக்கு வந்திருக்கிறது.

ஒளவை :கலயம் உன் கைக்கு வராத மட்டுக்கும் ஏய் பாடினியே… உனக்குக் கலயத்தின் உண்மை தெரியாது… இதோ என் கையில் உள்ள இந்தக் கலயத்தின் நரம்புகள் துடிக்கின்றன… இதனுடைய வாயில் ஒரு சொல் இருக்கிறது. இதை முகத்தருகே வைத்துப்பார்…. அந்தச் சொல் ஒரு பாடலாய் நீளும்.. (என்று கலயத்தைப் பாடினி முகத்தருகே கொண்டு செல்கிறாள்.)

பாடினி :(மூக்கைப் பிடித்தபடி) ஒளவை.. கலயத்தின் சொல் மணக்கிறது. ரொம்ப முற்றிவிட்டது…எங்களுக்கு ஒரு பாடலாவது இசைப்பாயா ? கூத்தின் கடைசி வரிகளாய் ஒரு பாட்டு… கூத்தின் செய்தி….

ஒளவை :தெரியும் பெண்ணே…. காதலுற்ற தலைவி.. யாரிடமும் சொல்லாமல் தன் உணர்வுகளை அடக்கி வைத்ததால் பேதுற்றவள் போல்… பித்துற்றவள் போல்… இந்த மனநோயைப் புரிந்து கொள்ளாத தாயும் தந்தையும் முருகன் வந்து ஆட்கொண்டிருப்பதாய்…… கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கின்றனர். குறி சொல்லும் அக்குறமகள் குன்றங்களைப் பாடுகிறாள்.. தலைவனின் குன்றம் பாடும்பொழுது தலைவியின் முகத்தில் ஒளி…. இதுதானே செய்தி….

பாடினி-2 :சரியாகச் சொன்னாய்..கலயத்தோடிருந்த நீ கதையோடு எப்படி ஒன்றினாய் ?

ஒளவை :அடி பேதாய்…. மீன் வலை விரித்தவன் அலைகளின் வளைவுகளில் மயங்கினாலும் மீன் சிக்கியதை அவன் விரல் உணரும்… பாடினி எனக்குக் கலயம் கையில்… கவனம் கதையில்.

பாடினி :பிறகென்ன ஒளவை ? பாடு….

ஒளவை :குன்றம் பாடிய கட்டுவிச்சியைத் தலைவியின் தோழி பார்க்கிறாள்… பிறகு பாடுகிறாள்….

அகவன் மகளே ‘ அகவன் மகளே…

மனவுக் கோப்பன்ன நல்லெடுங்கூந்தல்

அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

இன்னும் பாடுக பாட்டே ‘ அவர்

நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே….

இதுதான் பாட்டு… தோழி பாடிய இந்தப் பாடலை நற்றாய் கேட்டாள்.. செவிலி கேட்டாள்..வேலிக்கு வெளியே ஒளிந்து நின்ற தலைவனும் கேட்டான்….

பாடினி-2 :தலைவன் கேட்டானா ?

ஒளவை :தலைவன் கேட்கவேண்டும் என்பதற்குத்தான் தோழியும் பாடினாள்.

பாடினி-1 :அவன் ஏன் கேட்க வேண்டும் ?

ஒளவை :பேசாத தலைவியின் காதல் வேட்கையை ஆடவன் நெஞ்சம் அறிய மட்டுமன்று.. செயலற்று நிற்கும் அவனுக்குத் திருமணக் கடமையை நினைவு படுத்தவும் பாடினாள்.

அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

இன்னும் பாடுக பாட்டே ‘

அவர் நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே ‘

(பாடலும் நாட்டியமும் தொடர்கின்றன…)

நெல்லுமணி தூவி நிறைஞ்ச குறி சொல்லுவேன்…

மல்லிகை மலர் வீசி மணந்த குறி சொல்லுவேன்…

(நெல்லுமணி)

நாள்தோறும் பூப் பூக்கும் நல்ல மலை நாட்டில்

நாளில் ஒரு பூவாக நீ மலரவில்லை ‘

திங்கள் ஒரு பூவாக குன்றில் ஒளிவீசும்

திங்கள் ஒரு பூவாக நீ பூத்ததில்லை ‘

பன்னிரண்டு ஆண்டில் ஒரு குறிஞ்சி பூத்ததுபோல்

பலவாண்டு தவமிருந்து பெற்ற ஒரு பூவே ‘

(நெல்லுமணி)

வானில் உள்ள மீனில் ஒரு மீன் வேண்டும் என்றால்

வில் வளைப்பான் உன் தந்தை

வீணில் அழவேண்டாம்

உச்சிமலைத் தேனில் ஒரு துளி வேண்டும் என்றால்

உடும்புபோல் அவன் ஊர்வான்

குடம் குடமாய்த் தேன் வார்ப்பான் ‘

(நெல்லுமணி)

பிறைபோன்ற நெற்றியிலும் பசலை படர்ந்திடுமோ ?

பேசுங்கிளி வாய்மூடி ஊமையாகிவிடுமோ ?

இந்த மலை உன் தந்தை சொந்தமலை அன்றோ ?

எதிர்த்த மலை உன் அன்னை உதித்தமலை அன்றோ ?

எந்த மலைப் பூமணத்தில் நீ மயங்கிப் போனாய் ?

எந்த வில்லின் நாணதிர்ந்து நீ விழுந்தாய் மானாய் ?

மாலவன்போல் முகிழ் தவழும் கோலமலையா சொல் ?

வண்டுகள் யாழ் மீட்டுகிற நீலமலையா சொல் ?

கொற்றவை கண்விழித்ததுபோல் நெருப்பு மலர் பூக்கும்

கொடிவள்ளி படர ஒரு முருகவேள் தோள் நோக்கும்,

அந்த மலையா ? இல்லை அடுத்தமலையா சொல்… ‘

பாடினி-2 :அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

மணி கோத்ததுபோல் கரு நெடுங்கூந்தல்

அகவன் மகளே ‘அதையே பாடுக…

அந்தக் குன்றின் அழகைப் பாடுக ‘

இன்னும் பாடுக பாட்டே அந்த

நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே ‘

பாணர்கள்:குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்

முகில்களோடு நாங்களும் நடந்தோம்…

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை எங்கும் பாடித் தெரிந்தோம்.

Series Navigation

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)

அத்தனை ஒளவையும் பாட்டிதான்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


(மேடையின் மையப்பகுதியில் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து கொன்றை வேந்தனை ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி ஒருத்தி நடுவில் நின்று கொன்றை வேந்தனின் வரிகளைச் சொல்ல ஏனையோர் திருப்பிச் சொல்கின்றனர்.)

1-சிறுமி : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஏனையோர் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

1-சிறுமி : ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

ஏனையோர் : ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

1-சிறுமி : இல்லறம் அல்லது நல்லறம் அன்று

ஏனையோர் : இல்லறம் அல்லது நல்லறம் அன்று

1-சிறுமி : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஏனையோர் : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

1-சிறுமி : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு

ஏனையோர் : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு

2-சிறுமி : உண்டி மிகுதல் ஆண்களுக்கு அழகோ ?

சட்டாம்பிள்ளை : பாடம் படிக்கும்போது கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

2-சிறுமி : பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கணும் ?

சிறுவன்-1 : அதிகமாகச் சாப்பிட்டா நீ குதிரு மாதிரி ஆயிடுவே ?

2-சிறுமி : சாப்பிடாம நெத்திலிக் கருவாடு மாதிரி காயவா சொல்றே ?

சட்டாம்பிள்ளை : நான் சொல்றேன்….. பொம்பளைப் புள்ளைகள் கேள்வியே கேட்கக் கூடாது.

2-சிறுமி : அப்போ சாப்பிடக்கூடாதுங்கறே. இப்போ கேள்வியே கேட்கக்கூடாதுங்கறே…. நாங்க என்னதான் செய்யுறது ?

சட்டாம்பிள்ளை : எதுவும் பேசாதே….. போடுறதை சாப்பிட்டிட்டு சொல்றதைக் கேட்டுக்கிட்டு அடங்கிக் கெட.

2-சிறுமி : போடுறதைத்தான் சாப்பிடுறோம்.

3-சிறுமி : சொல்றதைத்தான் கேட்கிறோம்.

4-சிறுமி : அடங்கித்தான் கிடக்கிறோம்.

சட்டாம்பிள்ளை : அதுதான் பொண்ணுக்கு இலட்சணம். சரி, மேலே பாடத்தைப் படி.

1-சிறுமி : ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

(சிறுமி-2, 3, 4 – எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கின்றனர்)

சிறுவன்-1 : ஏன் பாடத்தைத் திரும்பச் சொல்லலை ?

2-சிறுமி : நீ தானே அடங்கிக் கெடக்கச் சொன்ன ‘

சட்டாம்பிள்ளை : எங்களை எதுத்துப் பேசக்கூடாது. மத்தபடி நாங்க சொல்றதைத் திரும்பச் சொல்லணும்.

2-சிறுமி : கிளிப்பிள்ளை மாதிரி.

சட்டாம்பிள்ளை : சொல்றதையே திரும்பச் சொல்றதுனாலே தான் பாலும் பழமும் கொடுத்துக் கொஞ்சுறோம்.

3-சிறுமி : அதுவும் கூண்டுலே வச்சி.

சட்டாம்பிள்ளை : கூண்டுதான் கிளிக்குப் பாதுகாப்பு.

2-சிறுமி : கூண்டு இல்லாட்டா ?

சட்டாம்பிள்ளை : பூனை புடிச்சிக்கிட்டுப் போயிடும்.

3-சிறுமி : பூனை புடிக்க வந்தா கிளி பறக்காதா ?

சட்டாம்பிள்ளை : கூண்டுக் கிளிக்கு இறக்கை வளர வளர வெட்டி விட்டுருவோம். ‘

2-சிறுமி : ஏன் வெட்டணும் ?

சட்டாம்பிள்ளை : அப்பத்தான் கூண்டுலே கெடக்கும்.

2-சிறுமி : கூண்டுலே கெடக்குற கிளியைத்தான் கொஞ்சவும் முடியும் இல்லியா ?

3-சிறுமி : இறக்கை வெட்டுன கிளியைத்தான் பூனையும் புடிக்கும்.

சட்டாம்பிள்ளை : காலம் கெட்டுப் போச்சி…. பொம்பளைப் புள்ளைகள் ரொம்பக் கேள்வி கேட்குதுகள்…. ஏய் (முதல் சிறுமியை நோக்கி ) நீ ஒளவையார் பொம்புளைகளுக்குச் சொன்னதை மட்டும் சொல்லிக்கொடு.

சிறுமி : நான் வரிசையாய்ச் சொல்கிறேனே…..

சட்டாம்பிள்ளை : நான் எப்படிச் சொல்றேனோ அப்படித்தான் சொல்லணும்.

சிறுமி : கற்பெனப்படுவது சொல்திறம்பாமை.

அனைவரும் : கற்பெனப்படுவது சொல்திறம்பாமை.

சிறுமி-1 : காவல்தானே பாவையர்க்கழகு

(சிறுமி-2,3,4- எதுவும் சொல்லாதிருக்க )

ஏனையோர் : காவல்தானே பாவையர்க்கழகு.

சட்டாம்பிள்ளை : பொண்ணு கூண்டிலே கிளிமாதிரி இருக்கணுங்கிறதைத்தான் ஒளவையார் சொல்றாங்க. புரியுதா ? ம்… மேற்கொண்டு சொல்லு.

(அப்பொழுது மேடையின் இடதுபுறத்தில் தடி ஊன்றி நடக்கும் சத்தம். டக்… டக்… )

சிறுவர் சிறுமியர் : அதோ ஒளவையார் வந்தாச்சி….

ஒளவையார் வரும் திசைநோக்கி…. வெள்ளுடை…. கையில் தடி…. நெற்றியில் நீறு…. நரைத்த தலை…. டக்…. டக்… ஒலி.

சட்டாம்பிள்ளை : பாட்டி…. ஒளவைப் பாட்டி….. இப்போ நீ எங்கிருந்துவரே ?

குரல்-1 : மெரினா பீச்சிலிருந்து…..

குரல்-1 : இல்லை. ஸ்டுடியோவிலிருந்து

ஒளவை : மெரினா பீச்சா…. ? ஸ்டுடியோவா ? எனக்கு ஒண்ணும் புரியலையே…

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு வேற ஒளவையா ? அப்போ எத்தனை ஒளவையார்….

குரல்-1 : நம்பர் ஒன் : அவ்வை சண்முகி

ஒளவை : அவ்வை சண்முகியா ? அது யார் ?

குரல்-1 : கமல்ஹாசன்

குரல்-2 : நம்பர் டூ. அவங்க தாத்தா. டி.கே.சண்முகம்.

சிறுவன் : டி.கே. சண்முகமா ?

குரல்-3 : நம்பர் த்ரீ.கே.பி. சுந்தராம்பாள்.

சிறுவன் : இந்தக் காலத்திலே இத்தனை ஒளவயாரா ?

குரல் : ஆமாம்..

எத்தனை ஒளவை பிறந்தாலும்..

எந்தக் காலம் ஆனாலும்

அத்தனை ஒளவையும் பாட்டிதான்…

எல்லாருக்கும் பாட்டிதான்…

உனக்கும் பாட்டி. எனக்கும் பாட்டி

பாட்டிக்கும் பாட்டி, பாட்டனுக்கும் பாட்டி

ஒளவையாரு பாட்டி தான்..

ஜெமினி படத்திலும் பாட்டி தான்..

மெரினா பீச்சிலும் பாட்டி தான்…

பிறந்த போதும் பாட்டி தான்…

வளர்ந்த போதும் பாட்டி தான்..

ஒளவையாரு பாட்டி தான்…

புத்தி சொல்லும் எந்தப் பொண்ணும்

எந்த வயசிலும் பாட்டிதான்.

எல்லாருக்கும் பாட்டி தான்.

சிறுவன் : பாட்டி… நல்லவேளை நீ வந்துட்டே…. உன்னுடைய கொன்றைவேந்தனை தான் நாங்க படிக்கிறோம். பாட்டி.. இந்தப் பொண்ணுக, நீ சொன்னதையே எதிர்த்துக் கேக்குறாங்க.

ஒளவை : அப்படியே ? எதை எதிர்த்துக் கேட்கிறார்கள் ?

சிறுமி-2 : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகோ ?

சிறுமி-3 : காவல்தானே பாவையருக்கு அழகோ ?

சிறுமி-4 :பேதைமை என்பது மாதருக்கு அணிகலனோ ?

சிறுமி-2 : நாங்க நல்லா சாப்பிடக் கூடாதா ?

சிறுமி-3 : நாங்க வீட்டுக்குள்ளேதான் அடைஞ்சி கெடக்கணுமா ?

சிறுமி-4 : நாங்க எதையும் படிக்காம பேதையா இருக்கணுமா ?

ஒளவை : அடடா ? இந்தக் காலத்து பெண்கள் எவ்வளவு பேசுகிறார்கள்.. நல்லது. பெண்ணுக்கு உலகம் வீடுதான்.

அவள் தந்தைக்கும் கணவனுக்கு மட்டுமல்ல. வயசான காலத்துலே மகனுக்குக் கூடக் கட்டுப்பட்டு கெடக்கணும். அப்பத்தான் ஆண்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

சிறுமி-2 : அப்போ இந்த வயசில உன் மகனுக்கு அடங்கித் தான் கெடக்குறியா ? அப்படான்னா இப்படி ஊர் ஊராப் போறியே. உன் மகன் கண்டிக்க மாட்டானா ?

ஒளவை : எனக்கு மகனே இல்லை.

குழந்தைகளே.. பெரியவர்களுக்குச் சிறியவர் அடங்கி நடக்க வேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால், … பெரியவர்கள் உன்னைக் கண்டிக்கமாட்டார்கள். பாராட்டுவார்கள்.

பெரிய சாதிக்காரனுக்குச் சின்ன சாதிக்காரன் அடங்கி நடக்கவேண்டும் என்று சின்ன சாதிக்காரன் சொன்னால்… பெரிய சாதிக்காரன் அப்படிச் சொல்ற சின்ன சாதிக்காரனைப் பாராட்டத்தான் செய்வான்… அது போலத்தான், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கி நடக்கவேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால் கூட ஆண்கள் அப்படி சொல்லும் சிறுமிகளைக் கண்டிக்க மாட்டார்கள்…. பாராட்டத்தான் செய்வார்கள். இதுதான் உலகம்…உலகத்தோடு ஒட்டவாழ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்…. புரிந்ததா ?

4-சிறுமி : ஒண்ணுமட்டும் புரியுது பாட்டி….

ஒளவை : என்னது ?

4-சிறுமி : பூம் பூம் மாடா இருந்தா நமக்குப் பூமாலையா விழும் என்பது புரியுது…

ஒளவை : அப்படியே இருந்துவிட்டுப் போயேன்… அதனால் ஆபத்து இல்லை. பூம் பூம் மாட்டுக்காரன் யாராவது சாட்டையோடு வருகிறானா ? பார்…. தோளில் ஒரு மேளம்… ஒரு குச்சி… உன்னை அடிப்பதற்கு இல்லை. மேளத்தை உருவ… உனக்கு முதுகில் ஒரு பட்டுத்துணி…. கழுத்தில் ஒரு பூமாலை…. உனக்குக் கொம்பிருப்பதை அவன் இந்த அலங்காரங்களிலேயே மறக்கடித்து விட்டான்…. உன்னை இவ்வாறு நீ மறந்திருப்பது அவனுக்கும் நல்லது. உனக்கும் நல்லது. பெண்ணே ‘ பூம்பூம் மாடுகளை குறித்துக் கேவலமாகப் பேசாதே.

சட்டாம்பிள்ளை : பாட்டி… பூம்பூம்மாட்டை அடிக்கக்கூடாதுன்னா மத்த மாட்டை அடிக்கலாமா ?

ஒளவை : அடிக்கக்கூடாதுன்னு சொல்லலை…. அடிக்கத்தேவை இல்லைன்னு சொல்றேன்…. மத்த மாடுகளை அலங்காரம் பண்ணுறதில்லே… அது நமக்கு வேலை பார்த்தாகணும்… அதனால அதை அடிச்சித்தான் வேலை வாங்கணும்.

சட்டாம்பிள்ளை : நான்…. இந்தப் பொண்ணு…. அந்தப் பையன் எல்லோரும் சின்னப் பசங்கள் தானே…. எல்லோருக்கும் பொதுவா எப்படி விளையாடணும்… எப்படி பாடம் படிக்கணும் என்று சொன்னா என்னா ? ஏன் பெண்களுக்கு மட்டும் தனியா நீ புத்தி சொல்றே ?

3-சிறுமி : அதுவும் நாங்க பணிஞ்சு போகணும்னு….

சட்டாம்பிள்ளை : நாங்க பெரியவங்களா ஆனப்புறம் சொல்லக்கூடாதா ?

ஒளவை : இல்லை. இப்பவே உங்களை வளைக்கணும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் உங்களுக்காகத்தான் இளமையில் கல். இப்போ இருந்தே இதை எல்லாம் நீங்க கற்றுக் கொள்ளனும். அப்பதான் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாய், கணவனுக்கு ஏற்ற மனைவியாய் இருக்க முடியும்.

சிறுவன் : அதைவிடு பாட்டி…. உன்னை இப்பத்தான் பார்க்கறேன்…. ஒரு கதை சொல்றாங்களே… நீ அந்த மாடு மேய்க்கிற பையனிடம் ஏமாந்துட்டியாமே….

ஒளவை : சுட்டபழம் சுடாதபழம் கதைதானே… அது நான் இல்லே… எனக்கு முன்னாலே ஒருத்தி…. என் மாதிரி ஊர் ஊராய்ப் பாடிக்கிட்டு இருந்தாளாம்… அவள் பேரும் ஒளவைதானாம். அதுவும் ஏமாத்துனவன் மாடு மேய்க்கிற பையன் இல்லை… எம்பெருமான் முருகனே அந்தக் கோலத்தில் வந்து அந்தப்பாட்டியை ஏமாத்துனானாம்…. மாடு மேய்க்கிற பையன் எல்லாம் எங்களை மாதிரி ஆள்களை ஏமாத்த முடியுமா ?

சிறுவன் : கடவுள் தான் ஏமாத்துவாரு.

சிறுமி : அதை உடு பாட்டி. இளமையாய் இருந்த நீ புள்ளையாரைப் பாடித்தான் கிழவியானியாமே ?

ஒளவை : ஓ… (சிரிப்பு)

சிறுவன் : அப்போ நீ ஒண்ணு செய். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன் அப்படான்னு எதையாவது ஒண்ணைப் பாடேன்.

ஒளவை : சரி பாடுறேன். பாடி என்ன செய்ய ?

சிறுமி : குமரியா இருந்த உன் பாட்டைக் கேட்டுட்டு, பிள்ளையாராலே உன்னைக் கிழவியாக்க முடியும்னா, கிழவியா இருக்கிற உன்னை, மறுபடியும் ஏன் குமரியா மாத்த முடியாது….

ஒளவை : (சிரிக்கிறாள்)

சிறுவன் : அதை உடுபாட்டி. அதியமான் சாகாம உயிர் வாழ்ற கனி ஒண்ணை உனக்குத் தந்தானாமே.. அவன் கூட அதைச் சாப்பிடலியாமே…

ஒளவை : அந்த ஒளவையும் நானில்லை. அவள் ரொம்பக் காலத்துக்கு முந்திப் பொறந்தவ.

சிறுவன் : அதியமானிடம் நெல்லிக்கனி சாப்பிட்டது முருகனிடம் நாவல்பழம் சாப்பிட்டது. எல்லாம் நீதானு சொல்றாங்களே ‘

ஒளவை : அப்படி யாரு சொன்னா ?

சிறுமி : ஜெமினி வாசன் அப்படிச் சொன்னாரு. இப்படி ஒரு கலவை ஒளவையாரைத்தான் மெரினாவிலே சிலையாவும் செஞ்சி வச்சிருக்காங்க.

ஒளவை : அவ்வளவு ஏன்… அந்த அதியமான் மரபில் வந்தவன் என்று இன்றும் ஒரு குறுநில மன்னன் கூறிக் கொள்கிறானாம்.

சிறுவன் : அப்படியா….

ஒளவை : அதுமட்டுமில்லை….அந்த அதியமான் மரபினன் தன்னை நாடி வருகிறவர்களுக்கு ஒரு தட்டில் பரிசை வைத்துக் கொடுக்கிறானாம்….

சிறுவன் : என்ன பரிசு அது ?

ஒளவை : நெல்லிக்கனி… நெல்லிக்கனி மட்டுமே…

சிறுவன் : வெறும் நெல்லிக்கனியையா ? நீ போய் அதை வாங்க மாட்டியா ?

ஒளவை : வெறும் நெல்லிக்கனியை மட்டும் யார் வாங்குவார் ? அதற்கு ஒரு நடை நடந்து யார் போவார் ? அந்த ஒளவையே அதியமான் தந்த நெல்லிக்கனியை அவன் போரில் மடிந்த சமயத்திலே சொல்லிப் பாடலை… அவளே அதை மறந்து விட்டாள்.

சிறுவன் : அப்படியா ? அதியமான் செத்தபோது அவள் எதைச் சொல்லித்தான் பாடினாள் ?

ஒளவை : அது ஒப்பாரிப் பாட்டு… ஒளவைக்குப் பிடித்தமானதை எல்லாம் சொல்லிப் பாடுறா.

சிறுவன் : பிடித்தமானதுன்னா என்ன ? மாம்பழமா ? பலாவா ? வாழையா ?

ஒளவை : எதுவுமில்லை….

சிறுவன் : பிறகு என்ன ?

ஒளவை : அது உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா ?

சிறுவன் : கொஞ்சம் சொல்லேன்.

ஒளவை : அந்த ஒளவை என்னைப் போல் இருந்திருக்க மாட்டாள்.. இப்படி அவள் கூந்தல் நரைத்திருக்கமாட்டாள்… இப்படி நெற்றியில் நீறு இருந்திருக்காது.. இப்படி வெள்ளுடை அணிந்திருக்கமாட்டாள்… இப்படி முதுகும் கூன் விழுந்திருக்காது. எல்லாத்துக்கும் மேலே இப்படி போதனை செய்யுறவளாகவும் இருந்திருக்க மாட்டாள்.

சிறுமிகள் : அப்போ அந்த ஒளவை எப்படி இருந்தாள்…. ?

குரல்-1 : ஒளவையின் தொன்மை வடிவம்…..எது ?

குரல்-2 : அவள் கைத்தடியைத் தூர எறி..

குரல்-3 :அவள் கூன் முதுகை நிமிர்த்து…

குரல்-1 : காலத்தின் திரைகளுக்குப் பின்னால் புதைந்து கிடந்த ஒளவையே…எங்கே உன் முகம் ?

Series Navigation

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து)