This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue
இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)
வெள்ளிவீதியின் குரல் கேட்டார்களோ ?
(எயினர் குரம்பை. ஈந்தின் கீற்றுகளாலே ஆன குடிசை. அதில் ஒரு பெண், மான் தோலில் படுத்துக் கிடக்கிறாள். வெளியே விளாமரத்தில் ஒரு மான் கட்டப்பட்டுள்ளது. அருகில் பாறையால் ஆகிய உரல். குழந்தை அழும் சத்தம் அவ்வப்போது)
(அதைக் கடந்து சென்ற பாணர்கள் அங்குள்ள வேம்பு மர நிழலிலும் விளா மர நிழலிலும் தங்கியிருக்கின்றனர். எயினியர் தேக்கிலையில் சோறு வைத்து, சுட்ட மான்கறியை உணவாக வைத்துப் பாணர்களுக்குப் பரிமாறுகின்றனர்.)
எயினி-1 :எங்கள் உணவு இதுதான் ஒளவை. எங்கள் விளைநிலத்தில் இதுதான் விளைகிறது.
ஒளவை :இது என்ன ஈந்தின் விதைபோலச் சிவந்த அரிசிச் சோறு… (ஒரு வாய் சுவைத்து) நன்றாக இருக்கிறது.
எயினி-2 :பசித்த வாய் சுவையறியாது.
ஒளவை :பசி எங்களுக்குப் பழகியதுதான். இந்த அரிசி பெரிதாக இருந்தாலும் மலையடிவாரத்தின் மணம் இருக்கிறது.
எயினி-1 :நாம் கடந்து வரும்போது சில எயினர் குடிகளைப் பார்த்தோமே. இல்லையா ?
ஒளவை :ஆம்.
எயினி-1 :அவர்களுக்கு இதுகூடக் கிடையாது. அவர்களுக்கு விளைநிலமே கிடையாது.
ஒளவை :பிறகு…
எயினி :காலையில் கடப்பாரையுடன் காட்டுக்குப் போவார்கள். எறும்புப் புற்றை இடிப்பார்கள். அங்கு எறும்புகள் சேர்த்த புல்லரிசி… உவர்மண் ஊற்றில் ஒட்டிக்கிடக்கும் நீரை அள்ளி அதில் சமைப்பார்கள். சமையல் பானை கூட உடைந்த வாயுடையது. ஓவாய்ப்பானையாய் ஒழுகும்.
ஒளவை :அங்கு மான் தோலில் ஒரு பெண் படுத்திருந்தாளே…
எயினி-1 :ஆமாம். அவள் குழந்தை பெற்றிருக்கிறாள். அதனால் அவள் புல்லரிசி தோண்டப் போகவில்லை.
ஒளவை :அவர்கள் உங்கள் குடியினர் இல்லையா ?
எயினி-2 :எங்கள் குடிதான். ஆனால் நிலம் பிரித்துவிட்டது. இந்தப் புன்புலத்தை நாங்கள் கைப்பற்றிக்கொண்டோம். ஏதோ விளைகிறது. உண்கிறோம். இதுதான் எங்கள் அரண்மனை. இதுதான் எங்கள் விருந்து.
ஒளவை :பாணர்கள் எங்களுக்கு இன்னதுதான் உண்ணவேண்டும் என்றில்லை. கிடைப்பது அமிழ்து. நீங்கள் அன்போடு தருவது இன்னும் இனிது.
(பாணர்கள் உணவுண்டு எழுகிறார்கள். எயினர் ஒளவையின் அருகில் வந்து….)
எயினி :உன்னைப்போல் ஒருத்தி – பாடினி ஒரு நாள் தனியாக இங்கு வந்தாள்.
ஒளவை :எதற்கு ?
எயினி-1 :தன் காதலனைத் தேடி.
பாடினி-1 :காதலனைத் தேடி அதுவும் தனியாகவா ?
பாணர்-1 :ஒரு பெண் தன் காதலனைத் தேடி அலைவது முறையன்று.
ஒளவை :காதலிக்குக் காதல் மட்டுந்தான் முறை. அவளை இற்செறிப்பது இப்பொழுது வந்தது. அந்தக்காலம் காதலுக்குத் தடையில்லை… காதலன் காதலியைத் தேடி வருவான். காதலியும் காதலனைத் தேடி வருவாள். அன்பு செலுத்துவதற்கு என்னமுறை வேண்டிக்கிடக்கிறது ? நல்லது. அந்தப் பெண் யார் ?
எயினி-2 :வெள்ளிவீதி. அவள் பாடிய பாடலை நான் பாடிக்காட்டட்டுமா ?
பாடினி-1 :உனக்குப் பாட வருமா ?
ஒளவை :என்ன கேள்வி இது…யாருக்குத்தான் பாட வராது. குழந்தையின் அழுகுரல் கேட்கிறது ‘ பார் அந்த மகவு இசைக்கும் பாட்டுக்கு நிகராக நீ, நான்… யாராவது பாட முடியுமா ? நீ பாடு பெண்ணே.
This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue
இன்குலாப்
பழையப் பாலைப் பண்ணும் பறையும்….
இளைஞன் : அதோ…. மரநிழல்……
பாணர் : ஆமாம் மராமரம்…. அதிலும் இலைகள் இல்லை….
ஒளவை : வெயில் நிழல் வலை பின்னியது போல…. கட்டம் கட்டமாய் நிழல்கோடுகள்.
பாடினி-1 : ஆமாம் ஒளவை…. கொளுத்தும் இந்த கோடையில் மண்ணிலும் ஈரமில்லை… மரத்திலும் பசுமை இல்லை….
பாணர் : அந்த காட்டாற்றில் நடந்து வந்தோமே…. கொஞ்சம் கூட நீர் இல்லை….
இளைஞன் : நீர் இருந்ததற்கான சுவடு கூட இல்லை…
பாடினி-1 : கரை நெடுக வெறும் மரம்…. ஒரு பிடி நிழல் கூட இல்லை. பிறகு முள்ளை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் உடை மரங்கள்.
இளைஞன் : பிறகு கூர்மையான பரல்கள்.
பாடினி-2 : (நடுவயதினள்) இதோ பார்… என் கால்களைப் பரல்கள் குத்திக் கொப்புளங்கள்…. சிறு நெல்லிக் காய்களைப் போல். கால்களோ வெயிலில் ஓடிக் களைத்த நாயின் நாக்குப் போல சிவந்து விட்டது.
பாடினி-2 : பேசியது போதும்…. இந்த மராமரத்து நிழலிலாவது உட்காருவோம்….
(பாணர் கூட்டம் நிழலில் போய் உட்கார்கிறது. நடுவயதினள் மரத்தின் அடியில் சாய்கிறாள். முழங்காலை நீட்டிக் கொள்கிறாள். ஒளவை அருகில் உட்கார்ந்து கால்களை நீட்டியபடி மரத்தில் சாய்கிறாள்.)
(நண்பகல் பாணர் கூட்டம் தள்ளாடியபடி நடந்து வருகிறது. நடுவில் ஒளவையும் பாணர் கூட்டத்தில் இளைஞன் ஒருவன் தனது முழவுக் கருவியைத் தட்டியபடி)*
இளைஞன் : ஏன் கடைசிப்பறையைப் பற்றிப் பேசுகிறாய்…. திருமணத்துக்குப் பறை கொட்டமாட்டார்களா ?
பாடினி-2 : ஒளவை, என் கால்கள் நோகின்றன. அந்த வாயாடியை (இளைஞனைச் சுட்டி) இப்படி வந்து உட்காரவிடு. என் கால்களை பிடித்து விடப்பா… (ஒளவை சிறிது நகர இருவருக்கும் நடுவில் இளைஞன் வந்து உட்காருகிறான்)
ஒளவை : நடந்து நடந்து கால்கள் சோர்ந்தன….
பாடினி-2 : நடந்து சோர்ந்தது கொஞ்சம். நடமாடிச் சோர்ந்தது கொஞ்சம்.
இளைஞன் : (கால்களைப் பிடித்து விட்டபடி) வயிறு பசிக்கிறது.
பாணர்-1 : உண்பதற்கு ஏதாவது மிஞ்சியிருக்கிறதா ?
பாடினி-2 : என்ன மிச்சம்….. உலர்ந்த ஒரு சில மீன்கள்…. இந்தத் துணியில்.
பாணர்-1 : அவரை, துவரை, அரிசி என்று எதுவும் இல்லையா ?
பாடினி-2 : அவரையும் இல்லை. துவரையும் இல்லை…. கடைசியாக நாம் ஆடி முடித்தபோதே எல்லாம் தீர்ந்து போய்விட்டன.
இளைஞன் : அப்பா…. இப்படி ஒரு அழகான நிழலைக் காட்டிய கொற்றவை…. கொஞ்சம் உணவையும் காட்ட மாட்டாளா ?
பாணர்-1 : கொற்றவையைப் பழிக்காதே…. சினந்து விடுவாள்… தேடிப்பார்ப்போம், ஏதாவது காட்டுக் கீரைகள் கிடைத்தாலும் கிடைக்கும்.
பாடினி-1 : உமக்குக் கூரு கெட்டுப் போய்விட்டதா ? கண்ணுக்கெட்டிய தொலைவில் ஏதாவது ஒரு பசுமை தலை நீட்டியிருக்கிறதா ?
இளைஞன் :(எழுந்து வந்து பார்த்துவிட்டு) அதோ அந்தக் குன்றுக்குப் பக்கத்தில் சில குடிசைகள் தெரிகின்றன. நாம் அங்கே போவோமா ?
ஒளவை : கொஞ்சம் பொறு. பசிக்குப் பழகாதவன் போல…
இளைஞன் :இருந்தாலும் ஒளவையே, இவ்வளவு தொலைவு நடந்தபிறகு குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல்…
ஒளவை : இந்தக் சுரைக் குடுவையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. குடி.
ஒளவை : பேசாதே… வறட்சியில் நாக்கு உள்ளே போய் விடப் போகிறது. குடி.
(சுரைக்குடுவையில் தண்ணீர் வாங்கி இளைஞன் குடிக்கிறான்.)
இளைஞன் : அப்பா.. கொஞ்சம் வேட்கை குறைந்தது… இனிப் பசிக்கு என்ன செய்வது ?
ஒளவை :வா. காற்றைச் சாப்பிடுவோம்.
இளைஞன் : என்ன ஒளவை… காற்றைச் சாப்பிடச் சொல்கிறாய்.
ஒளவை : அது ஒன்று தான் வேலிகளுக்குள் அடைபடாமல் வெளியே திரிகிறது. நல்லது, உனக்குக் காற்றை வேட்டையாடத் தெரியுமா ?
இளைஞன் : காற்றை வேட்டையாடுவதா ? சுரைக்குடுவையில் தண்ணீர்தானே கொண்டு வந்தாய் ? ஆமாம் காற்றை எப்படி வேட்டையாடுவது ?
ஒளவை : அதோ, உன் யாழை எடு.. (பாணனைக் காட்டி) நீ உன் முழவின் வார்களை இறுகக்கட்டு, (மற்றொரு பாணனைக் காட்டி) நீ பறையை பொருத்தமாகத் தட்டு. எல்லாம் சீராக அமையட்டும். இப்பொழுது இந்த வலைகளுக்குள் காற்று வந்து விழுகிறதா இல்லையா என்று பார்… உன் யாழில் பாலைப் பண் வந்து நடமாடட்டும். இந்த இசை அதோ அந்த எயினர் குடியிருப்பை எட்டும்….
ஒளவை : செவிக்கு விருந்து படை. வயிற்றுக்கு விருந்து தானாக வரும். வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும்.
(பாணர்கள் மெல்லமெல்ல இசை கூட்டிப் பாலைப்பண் இசைக்கின்றனர்.. சிறிது நேரம் இசை தொடர்கிறது. தொலைவிலிருந்து சில எயினர்கள் வில்லும் அம்புமாய் வருகின்றனர்.) அவர்கள் அருகில் வர இசை நிற்கிறது.**
எயினர்-1 : ஏன் இசைப்பதை நிறுத்தினீர்கள் ?
பாணர்-1 : நீங்கள் யார் ?
எயினர்-2 : நாங்கள் எயினர்கள்.
பாணர் : இங்கு எப்படி வந்தீர்கள்… ?
எயினர்-1 : உங்கள் இசை எங்களைக் கூட்டி வந்தது.
பாடினி-1 : இசைகேட்க வந்த உங்களுக்கு அம்பும் வில்லும் எதற்கு ?
எயினர்-3 : நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டோம். வழியில் உங்கள் இசை கேட்டது வந்தோம்.
பாடினி-1 : கண்ணுக்கெட்டிய தொலைவில் கானல் பறக்கிறது. நீங்கள் வேட்டையாட ஒரு பறவை உண்டோ ?
பாடினி-2 : வழியெல்லாம் வறண்டு கிடக்கிறது. எந்த விலங்கு இந்த வெயிலில் வெளியே வரும் ?
எயினர்-1 : விலங்குகள் வராவிட்டாலும் வணிகர்கள் வருவார்கள்… வண்டிகளிலும் கழுதைகளிலும் சாத்து சாத்தாக வருவார்கள். பொதி பொதியாகப் பொருள் கொண்டு வருவார்கள்.
பாடினி-1 : சரி… அவர்கள் பொருள்களை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
எயினர்-1 : (சிரித்தபடி) நாங்கள் அவர்களை வேட்டை ஆடுகிறோம்.
பாடினி-2 :அவர்களையா ?
எயினர்-2 :அவர்கள் பொருள்களை ? எதிர்த்தால் அவர் களையுந்தான்.
பாடினி-1 :அதாவது…
எயினர்-1 :ஆமாம் நாங்கள் கொள்ளையடிக்கிறோம்.
பாடினி-2 :கொள்ளையடிப்பது குற்றமில்லையா ?
எயினர்-2 :இந்த வணிகர்களைக் கொள்ளையடிப்பதா ? குற்றமா ? (சிரிக்கிறான்) இதோ பாருங்கள் நாங்கள் இந்தப் பாலை மண்ணில் மட்டுந்தான் கொள்ளையடிக்கிறோம். இவர்களோ எல்லா மண்ணிலும் கொள்ளையடிக்கிறார்கள்.
பாடினி-1 :அது அவர்கள் தொழில்
எயினர்-1 :இது எங்கள் தொழில்
பாணர்-1 :அவர்கள் யாரையும் போய் வழிப்பறி செய்வதில்லை. வில்லையும் அம்பையும் காட்டி எதையும் விற்பதில்லை.
எயினர்-2 :அவர்கள் சொல்லைக் காட்டி நம்மைச் சூறையாடுகிறார்கள்.
எயினர்-1 :இதோ பாருங்கள். இந்தப் பாலை வெளியை என் பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மண் முழுவதும் மரங்கள் அடர்ந்த காடுகளாய் இருந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா ?
பாடினி-2 :என்ன ?
எயினர்-1 :ஆமாம். அந்தக் காலத்தில் எங்கள் வில்லும் அம்பும் எங்கள் வழியில் குறுக்கிடாத மட்டுக்கும் மனிதர்களைக் குறிவைத்ததில்லை. வேட்டைக்கு ஏராளமான விலங்குகள். மாமரக் கிளைகள் எல்லாம் கனிகளின் சுமையால் மண்ணைத் தொட்டன.
எயினர்-2 :இங்கே ஓர் ஆறு கூட இருந்ததாம். அதுவும் மண்ணுக்கடியில் புதைந்து போய்விட்டது.
பாடினி :இந்தக் காடுகளுக்கு என்ன நேர்ந்தது ?
எயினர்-2 :போங்கள். உங்கள் அரசர்களைப் போய்க் கேளுங்கள்.. அவர்கள் அரண்மனைகளின் கதவுகளைப் போய்க் கேளுங்கள். உத்தரங்களைப் போய்க் கேளுங்கள். பஞ்சணை தாங்கியிருக்கும் கட்டில்களைப் போய்க் கேளுங்கள். இந்த வணிகர்களின் வானுயர்ந்த வீடுகளைப் போய்க் கேளுங்கள். எங்கள் காடுகள் கொல்லப்பட்டு நாடுகள் உருவானக் கதையைச் சொல்லும்.
எயினர்-1 :எங்களை இந்த வெட்ட வெளியில் நிறுத்தியவர்களை நாங்களும் நிறுத்துகிறோம்.
எயினர்-2 :கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிக்கிறோம்.
எயினர்-1 :உங்கள் மன்னர்கள் தலைக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள். (தாடியைத் தடவியபடி) நாங்கள் முகத்துக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள்.
(அச்சமயம் எயினர் குலப்பெண்கள் அங்கு வருகிறார்கள்)
எயினி-1 :இங்கென்ன செய்கிறீர்கள் ?
எயினர்-1 :இவர்கள் பாணர்கள்.. இவர்கள் பாட்டுக் கேட்டு வந்தோம்.
எயினி-2 :நாங்களுந்தான்… (பாணர்களை உற்றுநோக்கி விட்டு…) ஐயோ… இன்னும் பசி ஆறவில்லையா ? முகமெல்லாம் வாடி… வாருங்கள். நமது குடிலுக்குச் செல்லுவோம்.
எயினர்-2 :அடடா, இவர்கள் உணவுண்டார்களா என்று எங்களுக்குக் கேட்கவே தோன்றவில்லை ‘
எயினி-1 :கொள்ளையடித்துக் கொள்ளையடித்து உங்கள் உணர்வுகளே மரத்துப் போய் விட்டன.
இளைஞன் :யார் கொள்ளையடிக்கவில்லை.. வணிகர்கள் கொள்ளையடிக்கவில்லையா ? அரசர்கள் கொள்ளையடிக்கவில்லை ? உழவர்கள் நெல்லைக் கொள்ளையடிக்கிறார்கள். பாணர்கள் மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள். பறவைகள் பழங்களைக் கொள்ளையடிக்கின்றன. (எயினர் குலப் பெண்கள் அவனை உற்று நோக்க) நான் சொல்லவில்லை. இதோ இவர்கள் தான் சொன்னார்கள். எனக்குப் பசிக்கிறது. ஒளவை உனக்குப் பசிக்கிறதா ?
எயினர்-1 :ஒளவையா.. யார் அவள் ?
இளைஞன் :இதோ இவள்தான் ?
எயினர்-2 :இவ்வளவு இளம் பெண்ணா ? இவளுடைய பாடல் ஒன்றை அன்று குறிஞ்சித் திட்டில் பாணர்கள் பாடக்கேட்டேன். ஒரு முப்பது அகவையாவது இருக்கும் என்று நினைத்தேன். இவளோ ஆலமரத்துக் கிளிக்குஞ்சு போல…
எயினர்-1 :பாருங்கள் (தனது செருப்பைக் காட்டி) அடிபுதை அரணம் கூட இல்லாமல்.. வெறுங்காலுடன்…
எயினி :சரி…ஒளவையைப் பேசியே கொல்லாதே. அவர்களை அழைத்து வா.
This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue
இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)
பாடினி வந்தாள்
மூடிய பழமைத் தூசியை விலக்கி
முகத்தில் ஒரு நிலவைத் துலக்கி
ஏடு இனிக் காணாத எழுத்தில் இருந்து
எழுந்து வருகிறாள் இன்னிசை விருந்து.
பாடினி வந்தாள் பாடினி வந்தாள்
பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.
காடு இனி மறந்த பசுமையை நினைக்கும்
கானக் குயில்களைக் கிளைகள் அழைக்கும்
நீடிய வழிகளில் யாழிசை மீண்டும்
நினைவில் கனலைக் குழலிசை தூண்டும்.
பழகிய வாழ்க்கையைப் பாடலில் வார்த்து
பசப்புதல் இல்லாத சொற்களில் கோத்து
அழகிய ஒளவைப் பாடினி வந்தாள்
அறம் போதியாமல் பாடினி வந்தாள்.
கள்ளில் ஒரு சொல் காதலில் மறுசொல்
களத்தில் நிற்கும் வீரர்கள் எல்லாம்
வாளால் வரைந்த குருதி வரிகளை
யாழின் நரம்பில் திரும்ப எழுதிய
பாடினி வந்தாள் பாடினி வந்தாள்
பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.
அடர்குரல் முழவுகள் கடும் குரல் வங்கியம்
அடிதொடும் சிலம்பிசை தொடுவளை ஆர்த்திடும்.
தடிஇலை நரைஇலை தரையினில் விழிஇலை
விடுதலை நடையுடன் நெடுவழி தொடர்கிறாள்.
பாடினி வந்தாள் பாடினி வந்தாள்
பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.
பாணர்கள் பாடியபடி:
குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்
முகில்களோடு நாங்களும் நடந்தோம்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
பாலை எங்கும் பாடித் திரிந்தோம்.
இன்னும் பாடுக பாட்டே
(பாணர்களின் குடியிருப்பு..சில குடிசைகள். ஒன்றில் மீன்வலை காய்கிறது. சிறிது தள்ளி ஒரு மர நிழலில் முழவு, யாழ், குழல் போன்ற இசைக் கருவிகளுடன்-பாடினியர்-ஒரு கூத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்கள். முதுகைக் காட்டியபடி ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.)
பாடினி-1 :சரி….தலைவி தலைவனைக் காண முடியாமல் இல்லத்தில் இருக்கிறாள்….
பாடினி-2 :தன்னுடைய காதலை நற்றாயிடமும் சொல்ல முடியவில்லை… செவிலித்தாயும் செவி கொடுக்கவில்லை.
பாடினி-1 :ஏனடி… காதலைச் சொல்வதற்கும் தடையா ?
பாடினி-2 :ஆமாம். காதலை வெளிப்படையாக ஒரு பெண்ணால் பேச முடியுமா ?
பாடினி-1 :ஆமாம்…அது ஒரு காலம். மலையேறிவிட்டது. தலைவனும் தலைவியும் தாமே கண்டு தாமே மணந்து மகிழ்ந்த காலம் அது…
பாடினி-2 :மணமுடித்து வைக்கப் பெரியோர் இல்லை… சேர்ந்த நாளே திருநாள்.. திருமணநாள்…
பாடினி-1 :ஆடவன் பெண்ணை ஏமாற்றியதில்லை….
பாடினி-2 :காதலில் ஏமாற்றுவது பற்றிக் கனவு கூடக் காண்பதில்லை…
பாடினி-2 : ஒரு புறம் அச்சம்…. மறுபுறம் நாணம்…. பேதை அவள் எப்படி தன் காதலைச் சொல்வாள் ? நினைத்தால் உயிர் வேகிறது. நினைக்காதிருந்தாலோ உயிரே போகிறது…. உடல் கூட்டுக்குள் மனப் பறவை சிறகடிக்கும்…. உற்றார் செவிகளோ இரும்பால் ஆனவை… பேதை அவள் எப்படித் தன் காதலைச் சொல்வாள் ? தினை மாவை நற்றாய் தேன் ஊற்றிப் பிசைவாள், தேனினும் இனியவன் மனதைப் பிசைவான்…. மலைச்சாரல், வண்ணப் வண்ணப் பூக்கள்….. மணக்கும் பூக்களால் மாலை கிறங்கும்… மேற்கில் வானம் பொன்னாய் இளகும்…. தலைவியின் நெஞ்சும் தானாய் மயங்கும்… திரும்பும் திசையெல்லாம் தேனாய் உருகும்….
பேதை அவள் காதலை எப்படிச் சொல்வாள், இருந்த இடத்தில் சிலைபோல் இருந்தாள்….. உணவு மறந்தாள்…. உறக்கம் துறந்தாள்…. இமை மூடாமல் கனவுகள் கண்டாள்…. குன்றக் குறவனின் அன்பு மகள். இவள்…. வேண்டித் தவமிருந்து வரமாய் வந்தவள்…. பேதை மனத்தில் காதல் கொழுந்துகள் எரிவதால் அவளும் வெண்ணெய் போல் உருகுவதைத் தந்தையும் அறியான்…. தாயும் அறியாள்… முருகவேளுக்கு ஏதோ குறை இழைத்தோம்… எனப் பெற்றோர் கருதினர்…. கட்டுவிச்சியை அழைத்துக் குறியும் கேட்டனர்…. குன்றப் பெயரைச் சொன்னவுடன்…. தலைவியின் நெற்றியில் சுடரொன்று படர்ந்தது… இதுதான் இன்றைய கூத்தின் செய்தி….
இப்படி முடியும் இந்தக் கூத்துக்குக் கடைசி வரிகளாய் ஒரு காதற் பாட்டு….
யாரிடம் கேட்கலாம்…. கூறடி பாடினி.
பாடினி-1 : பேச்சாலே கதை சொல்வாய் என்று நினைத்தேன். பாட்டாலே பாடி முடிச்சிட்டியே….
பாடினி-2 : பாணர்களுக்குக் கதை சொல்ல வராது… பாடத்தான் வரும்…. நாம் பெற்ற பயிற்சி அப்படி…. கடைசி வரிகளாய் என்னடி சொல்லலாம்… ? யாரைக் கேட்கலாம் ?
பாடினி-1 : என்னிடம் என்ன கேட்பது…. ? அதோ பார்…. அந்தப் புன்னை மர நிழலில் யார்…. ?
பாடினி-2 : ஒளவை. மீன் வலை பின்னுகிறாளா ?
பாடினி-3 : ஏதாவது பாடலுக்குச் சொல்வலை பின்னியபடி இருப்பாள். யாழ் மீட்டும் கைகள் மீன் பிடிக்குமா ?
பாடினி-1 : ஏன் மீன் பிடிக்கும் கைகளுக்கு யாழ் மீட்ட வராதா ?
பாடினி-3 : ஏன் வராது ? மீன்கள் வலையில் மாட்டுவது யாழ் நரம்பில் இசை வந்து பொருந்துவது போலத்தான்… பாட்டுக்குச் சொல்வந்து பொருந்துவது போலத்தான். எல்லாம் முயற்சி தான்…. ஏய் ஒளவை… நீ வலை பின்னுகிறாயா ? கலை பண்ணுகிறாயா ?
ஒளவை :கலயம் உன் கைக்கு வராத மட்டுக்கும் ஏய் பாடினியே… உனக்குக் கலயத்தின் உண்மை தெரியாது… இதோ என் கையில் உள்ள இந்தக் கலயத்தின் நரம்புகள் துடிக்கின்றன… இதனுடைய வாயில் ஒரு சொல் இருக்கிறது. இதை முகத்தருகே வைத்துப்பார்…. அந்தச் சொல் ஒரு பாடலாய் நீளும்.. (என்று கலயத்தைப் பாடினி முகத்தருகே கொண்டு செல்கிறாள்.)
பாடினி :(மூக்கைப் பிடித்தபடி) ஒளவை.. கலயத்தின் சொல் மணக்கிறது. ரொம்ப முற்றிவிட்டது…எங்களுக்கு ஒரு பாடலாவது இசைப்பாயா ? கூத்தின் கடைசி வரிகளாய் ஒரு பாட்டு… கூத்தின் செய்தி….
ஒளவை :தெரியும் பெண்ணே…. காதலுற்ற தலைவி.. யாரிடமும் சொல்லாமல் தன் உணர்வுகளை அடக்கி வைத்ததால் பேதுற்றவள் போல்… பித்துற்றவள் போல்… இந்த மனநோயைப் புரிந்து கொள்ளாத தாயும் தந்தையும் முருகன் வந்து ஆட்கொண்டிருப்பதாய்…… கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கின்றனர். குறி சொல்லும் அக்குறமகள் குன்றங்களைப் பாடுகிறாள்.. தலைவனின் குன்றம் பாடும்பொழுது தலைவியின் முகத்தில் ஒளி…. இதுதானே செய்தி….
பாடினி-2 :சரியாகச் சொன்னாய்..கலயத்தோடிருந்த நீ கதையோடு எப்படி ஒன்றினாய் ?
ஒளவை :அடி பேதாய்…. மீன் வலை விரித்தவன் அலைகளின் வளைவுகளில் மயங்கினாலும் மீன் சிக்கியதை அவன் விரல் உணரும்… பாடினி எனக்குக் கலயம் கையில்… கவனம் கதையில்.
பாடினி :பிறகென்ன ஒளவை ? பாடு….
ஒளவை :குன்றம் பாடிய கட்டுவிச்சியைத் தலைவியின் தோழி பார்க்கிறாள்… பிறகு பாடுகிறாள்….
அகவன் மகளே ‘ அகவன் மகளே…
மனவுக் கோப்பன்ன நல்லெடுங்கூந்தல்
அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘
இன்னும் பாடுக பாட்டே ‘ அவர்
நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே….
இதுதான் பாட்டு… தோழி பாடிய இந்தப் பாடலை நற்றாய் கேட்டாள்.. செவிலி கேட்டாள்..வேலிக்கு வெளியே ஒளிந்து நின்ற தலைவனும் கேட்டான்….
சட்டாம்பிள்ளை : காலம் கெட்டுப் போச்சி…. பொம்பளைப் புள்ளைகள் ரொம்பக் கேள்வி கேட்குதுகள்…. ஏய் (முதல் சிறுமியை நோக்கி ) நீ ஒளவையார் பொம்புளைகளுக்குச் சொன்னதை மட்டும் சொல்லிக்கொடு.
சிறுமி : நான் வரிசையாய்ச் சொல்கிறேனே…..
சட்டாம்பிள்ளை : நான் எப்படிச் சொல்றேனோ அப்படித்தான் சொல்லணும்.
சிறுவன் : பாட்டி… நல்லவேளை நீ வந்துட்டே…. உன்னுடைய கொன்றைவேந்தனை தான் நாங்க படிக்கிறோம். பாட்டி.. இந்தப் பொண்ணுக, நீ சொன்னதையே எதிர்த்துக் கேக்குறாங்க.
சிறுமி-4 : நாங்க எதையும் படிக்காம பேதையா இருக்கணுமா ?
ஒளவை : அடடா ? இந்தக் காலத்து பெண்கள் எவ்வளவு பேசுகிறார்கள்.. நல்லது. பெண்ணுக்கு உலகம் வீடுதான்.
அவள் தந்தைக்கும் கணவனுக்கு மட்டுமல்ல. வயசான காலத்துலே மகனுக்குக் கூடக் கட்டுப்பட்டு கெடக்கணும். அப்பத்தான் ஆண்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.
சிறுமி-2 : அப்போ இந்த வயசில உன் மகனுக்கு அடங்கித் தான் கெடக்குறியா ? அப்படான்னா இப்படி ஊர் ஊராப் போறியே. உன் மகன் கண்டிக்க மாட்டானா ?
ஒளவை : எனக்கு மகனே இல்லை.
குழந்தைகளே.. பெரியவர்களுக்குச் சிறியவர் அடங்கி நடக்க வேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால், … பெரியவர்கள் உன்னைக் கண்டிக்கமாட்டார்கள். பாராட்டுவார்கள்.
பெரிய சாதிக்காரனுக்குச் சின்ன சாதிக்காரன் அடங்கி நடக்கவேண்டும் என்று சின்ன சாதிக்காரன் சொன்னால்… பெரிய சாதிக்காரன் அப்படிச் சொல்ற சின்ன சாதிக்காரனைப் பாராட்டத்தான் செய்வான்… அது போலத்தான், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கி நடக்கவேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால் கூட ஆண்கள் அப்படி சொல்லும் சிறுமிகளைக் கண்டிக்க மாட்டார்கள்…. பாராட்டத்தான் செய்வார்கள். இதுதான் உலகம்…உலகத்தோடு ஒட்டவாழ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்…. புரிந்ததா ?
ஒளவை : அப்படியே இருந்துவிட்டுப் போயேன்… அதனால் ஆபத்து இல்லை. பூம் பூம் மாட்டுக்காரன் யாராவது சாட்டையோடு வருகிறானா ? பார்…. தோளில் ஒரு மேளம்… ஒரு குச்சி… உன்னை அடிப்பதற்கு இல்லை. மேளத்தை உருவ… உனக்கு முதுகில் ஒரு பட்டுத்துணி…. கழுத்தில் ஒரு பூமாலை…. உனக்குக் கொம்பிருப்பதை அவன் இந்த அலங்காரங்களிலேயே மறக்கடித்து விட்டான்…. உன்னை இவ்வாறு நீ மறந்திருப்பது அவனுக்கும் நல்லது. உனக்கும் நல்லது. பெண்ணே ‘ பூம்பூம் மாடுகளை குறித்துக் கேவலமாகப் பேசாதே.
ஒளவை : அடிக்கக்கூடாதுன்னு சொல்லலை…. அடிக்கத்தேவை இல்லைன்னு சொல்றேன்…. மத்த மாடுகளை அலங்காரம் பண்ணுறதில்லே… அது நமக்கு வேலை பார்த்தாகணும்… அதனால அதை அடிச்சித்தான் வேலை வாங்கணும்.
சட்டாம்பிள்ளை : நான்…. இந்தப் பொண்ணு…. அந்தப் பையன் எல்லோரும் சின்னப் பசங்கள் தானே…. எல்லோருக்கும் பொதுவா எப்படி விளையாடணும்… எப்படி பாடம் படிக்கணும் என்று சொன்னா என்னா ? ஏன் பெண்களுக்கு மட்டும் தனியா நீ புத்தி சொல்றே ?
ஒளவை : இல்லை. இப்பவே உங்களை வளைக்கணும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் உங்களுக்காகத்தான் இளமையில் கல். இப்போ இருந்தே இதை எல்லாம் நீங்க கற்றுக் கொள்ளனும். அப்பதான் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாய், கணவனுக்கு ஏற்ற மனைவியாய் இருக்க முடியும்.
சிறுவன் : அதைவிடு பாட்டி…. உன்னை இப்பத்தான் பார்க்கறேன்…. ஒரு கதை சொல்றாங்களே… நீ அந்த மாடு மேய்க்கிற பையனிடம் ஏமாந்துட்டியாமே….
ஒளவை : சுட்டபழம் சுடாதபழம் கதைதானே… அது நான் இல்லே… எனக்கு முன்னாலே ஒருத்தி…. என் மாதிரி ஊர் ஊராய்ப் பாடிக்கிட்டு இருந்தாளாம்… அவள் பேரும் ஒளவைதானாம். அதுவும் ஏமாத்துனவன் மாடு மேய்க்கிற பையன் இல்லை… எம்பெருமான் முருகனே அந்தக் கோலத்தில் வந்து அந்தப்பாட்டியை ஏமாத்துனானாம்…. மாடு மேய்க்கிற பையன் எல்லாம் எங்களை மாதிரி ஆள்களை ஏமாத்த முடியுமா ?
சிறுவன் : கடவுள் தான் ஏமாத்துவாரு.
சிறுமி : அதை உடு பாட்டி. இளமையாய் இருந்த நீ புள்ளையாரைப் பாடித்தான் கிழவியானியாமே ?
ஒளவை : ஓ… (சிரிப்பு)
சிறுவன் : அப்போ நீ ஒண்ணு செய். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன் அப்படான்னு எதையாவது ஒண்ணைப் பாடேன்.
ஒளவை : சரி பாடுறேன். பாடி என்ன செய்ய ?
சிறுமி : குமரியா இருந்த உன் பாட்டைக் கேட்டுட்டு, பிள்ளையாராலே உன்னைக் கிழவியாக்க முடியும்னா, கிழவியா இருக்கிற உன்னை, மறுபடியும் ஏன் குமரியா மாத்த முடியாது….
ஒளவை : (சிரிக்கிறாள்)
சிறுவன் : அதை உடுபாட்டி. அதியமான் சாகாம உயிர் வாழ்ற கனி ஒண்ணை உனக்குத் தந்தானாமே.. அவன் கூட அதைச் சாப்பிடலியாமே…
ஒளவை : அந்த ஒளவையும் நானில்லை. அவள் ரொம்பக் காலத்துக்கு முந்திப் பொறந்தவ.
சிறுமி : ஜெமினி வாசன் அப்படிச் சொன்னாரு. இப்படி ஒரு கலவை ஒளவையாரைத்தான் மெரினாவிலே சிலையாவும் செஞ்சி வச்சிருக்காங்க.
ஒளவை : அவ்வளவு ஏன்… அந்த அதியமான் மரபில் வந்தவன் என்று இன்றும் ஒரு குறுநில மன்னன் கூறிக் கொள்கிறானாம்.
சிறுவன் : அப்படியா….
ஒளவை : அதுமட்டுமில்லை….அந்த அதியமான் மரபினன் தன்னை நாடி வருகிறவர்களுக்கு ஒரு தட்டில் பரிசை வைத்துக் கொடுக்கிறானாம்….
சிறுவன் : என்ன பரிசு அது ?
ஒளவை : நெல்லிக்கனி… நெல்லிக்கனி மட்டுமே…
சிறுவன் : வெறும் நெல்லிக்கனியையா ? நீ போய் அதை வாங்க மாட்டியா ?
ஒளவை : வெறும் நெல்லிக்கனியை மட்டும் யார் வாங்குவார் ? அதற்கு ஒரு நடை நடந்து யார் போவார் ? அந்த ஒளவையே அதியமான் தந்த நெல்லிக்கனியை அவன் போரில் மடிந்த சமயத்திலே சொல்லிப் பாடலை… அவளே அதை மறந்து விட்டாள்.
ஒளவை : அந்த ஒளவை என்னைப் போல் இருந்திருக்க மாட்டாள்.. இப்படி அவள் கூந்தல் நரைத்திருக்கமாட்டாள்… இப்படி நெற்றியில் நீறு இருந்திருக்காது.. இப்படி வெள்ளுடை அணிந்திருக்கமாட்டாள்… இப்படி முதுகும் கூன் விழுந்திருக்காது. எல்லாத்துக்கும் மேலே இப்படி போதனை செய்யுறவளாகவும் இருந்திருக்க மாட்டாள்.
சிறுமிகள் : அப்போ அந்த ஒளவை எப்படி இருந்தாள்…. ?
குரல்-1 : ஒளவையின் தொன்மை வடிவம்…..எது ?
குரல்-2 : அவள் கைத்தடியைத் தூர எறி..
குரல்-3 :அவள் கூன் முதுகை நிமிர்த்து…
குரல்-1 : காலத்தின் திரைகளுக்குப் பின்னால் புதைந்து கிடந்த ஒளவையே…எங்கே உன் முகம் ?