ரா.கிரிதரன்
The reward of sin is death. That’s hard.
If we say that we have no sin,
We deceive ourselves, and there’s no truth in us.
Why then belike we must sin,
And so consequently die.
Ay, we must die an everlasting death.
What doctrine call you this? Che sera,sera,
What will be , shall be? Divinity,adieu!
கிரிஸ்டோஃபர் மார்லோவை மற்ற புத்தகங்களைப் போல படித்து மூடிவிட முடியாது. சனி பகவானின் கருணைக் கொண்டவனாயிற்றே? தன் தந்தையைப் போல, சாகும் போதும் சனியுடன் விளையாடியே இறந்தவன்.
லூசிக்கு அவள் அப்பா கொடுத்த புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருவதைப் பற்றிய கவலைப் போய்விட்டது. ஒரு சித்திரை மாதத்தின் அதிசய மழை நாளில் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த பிறகு அவள் அப்பா படித்த முதல் புத்தகம். பாரீஸ் சென் நதிக்கரையின் இடது புறத்தில் அழகான இடுப்புப் பகுதியாய் வளைந்திருந்தது அந்த கத்தீட்ரல். ஐல் டெலா சைட்டின் புனித நிலப் பகுதியாய் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பாதுகாக்கப்பட்ட மடோன்னாவின் ஆலயம்.
லூசியின் தந்தை ஆல்டர் சிறுவனாக வேலை பார்த்து, செல்வச் செழிப்பு தேய்ந்து மறைந்த ஒரு காலகட்டத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர். அதற்குப் பிறகு ஆலயத்திற்கு வெளியே நின்று மணியடிக்கும் வேலைதான்.
சுற்றுலாத் தளமாக இருந்த மடோனாவின் உறைவிடம், 1889களில் ஈஃபில் டவ்ர் தொடங்கப்பட்ட எக்ஸிபிஷனோடு முடிவுக்கு வந்தது.
அதற்குப் பிறகு மட அதிபர்களின் கண்ணுக்கு மறைந்து, மத அரசியலால் தகர்ந்த அந்த கத்தீட்ரலை பின்னர் மூடியே விட்டார்கள். லூசியின் தந்தைக்கு உயிரை உறிஞ்சியது போல் மனக் கலக்கமேற்பட, பல மாத பிதற்றல்களைத் தணிக்க,அவருடன் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தாள். அப்போது லூசி பதினெட்டு வயது ஏஞ்சல்.
தேவையில்லாத எண்ணங்களைப் போல் மடமடவென வெளியெ மழை பெய்து கொண்டிருந்தது. லூசியின் வீடு – கடற்கரை அருகே ரியூ பால் வீதியில் இரண்டு மாடிகள் மட்டும் கொண்டே ஒரே உலகம்.
பொதுவாகவே ஃபிரெஞ்சு மக்களும் ஆங்கிலேயர்களும் கீறி-பாம்பு வகைகளே. மிதமிஞ்சிய கஞ்சி போட்டதால் இறுக்கமாய் போனவர்கள் என ஆங்கிலேயர்களைப் பற்றியும், ஒழுங்கீனமற்றவர்கள் என ஃபிரெஞ்சுக்காரர்கள் பற்றியும் அபிப்ராயமுண்டு.
பாண்டிச்சேரிக்கு வந்த புதிதில் வேறொரு ஊருக்கு வந்த உணர்வே அவர்களுக்கு ஏற்படவில்லை. நாற்பதுகளின் இறுதிகள் – சரியாக 1948 . லூசியின் கணவன் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற `சொல்தா`. பாண்டிச்சேரியில் பல வருடமிருந்ததால் அதை விட்டுப் போக முடியவில்லை என சாக்கு சொன்னாலும், சொல்தாக்களின் வருமானத்தில் உலகத்தில் இந்த நிலப்பகுதியில் மட்டுமே வசிக்க முடியுமென்பதே உண்மை.
மடோனாவின் உருவச் சிலையைச் சுமந்தபடி கடைசி காலத்தைக் கழித்தாலும், அவள் தந்தை சாடனிடமும் பேசுகிறார் என ஜீன் சொல்லி வந்திருக்கிறான். அழுக்கு மூட்டையென அவரைக் கூப்பிடுவான்.லூசி இதை நம்பவில்லை, மார்லோவைப் படிக்கும் வரை.
ஹா, சனிப்பீடை – என தமிழில் சொல்லும்போது அதன் அர்த்தம் பிடிபடாமலே அவளுக்கு அந்த வார்த்தை பிடித்துவிட்டது. சாடன் என்பதைவிட கீழ்த்தரமாக இருப்பதாய் தன் தந்தையிடம் சொல்லியிருக்கிறாள்.
டாமில்ல நல்ல வேர்ஸ் கொஞ்ச கத்துக்கோ என ஜீன் அவளை தமிழ் படிக்க அனுப்பினான். சேதுகணபதி – எல்லா டாமில் மக்களைப் போல் நீண்ட பெயரை உடைய குள்ளமான `சேடு`.
பால் வீதியில் பல வருடங்கள் தங்கிவிட்டு, புதிதாய் வீடு கட்டி குடிபுகுந்த அன்று அழுக்கு மூட்டை இறந்துபோனார்.
தூங்கும்போது கழுத்து தொங்குவது, நடக்கும்போது இடறி விழுவது, வண்டியில் இடிபட்டு ஒப்பித்தாலுக்கு போகுமுன் மூச்சு நின்றுபோவது என்ற எந்த எளிய வழியிலும் அவர் இறக்கவில்லை.
வழக்கமாக மாலை வேளைகளில் பிஸியாக இருக்கும் டாவர்ன் பார்.
லூசியின் தந்தையை யாருக்குமே தெரியாது. பல ஃபிரெஞ்சு மக்கள் புழங்கும் டாவர்ன். பாண்டிச்சேரி டாமில் மக்களைப் பார்க்காமெலேயே பல வருடங்கள் உள்ளே இருக்கலாம். அவர்களுக்கு நின்று கொண்டு குடிப்பது அவ்வளவாக பிடிப்பதில்லை போலும். டாவர்னுக்கு தினமும் வந்துபோனாலும் அவர் பெயர் யாருக்குமே தெரியாது.
எழுபது வயது முதியவர், சந்தடியில்லாமல் ஒரு பீர் பாட்டிலையோ, போர்ட் ஒயினையோ குடித்தபடி ஓரமாக உட்கார்ந்து செல்லும் உருவம். பணத்தை கொடுத்து பாட்டிலை வாங்கும் பழக்கமுள்ளவர். மற்றவர்கள் அப்படிக் கிடையாது. டாவர்னில் தினமும் அடிதடிகளில் முடியாத நாட்கள் குறைவு. அப்படியாக மாலையில் தொடங்கி எல்லொரையும் போல் நடுநிசி வரை அங்கிருக்க லூசி அனுமதிப்பதில்லை.
அங்கு வரும்போதெல்லாம் சில வயதான ஃபிரெஞ்சு மக்கள் லூசியின் தந்தையைச் சீண்டிப் பார்ப்பார்கள். அவர் உருவத்தைப் பற்றியும், கையிலிருக்கும் மூட்டையைப் பற்றியும் ஹாஸ்யத்திற்கு குறையிருக்காது.
ஒரே ஒரு முறை லூசி டாவர்னில் நுழைந்துள்ளாள். ஃபிரெஞ்சு மாலுமிகள் மட்டுமிருந்ததால் தலைகள் திரும்பவில்லை, புருவங்கள் உயரவில்லை. முதல் முறை கடற்கரைச் சாலை வழி காரை ஓட்டியபோது, கேட்ட ஹாக்களும், எழுந்து நின்று, விலகி வழிவிட்ட டாமில் கூட்டங்கள் போலில்லை இவர்கள்.
டாவர்னில் வருபவர்களுக்கு அவரின் மூட்டை மேல் எப்போதும் ஒரு கண் உண்டு. அப்படி என்னதான் வைத்திருப்பான் `கிராண்ட்பேர்`? அவருடைய அழுக்கு மூட்டையென்ற பேர் பிரபலமாகாத சிநேக நாட்கள் அவை.
உண்மையில், அப்படி ஒன்றும் பெரிய கப்பல்கள் அந்த மூட்டையிலிருக்காது. ஒரு சில மடோனா படங்கள், சிலுவைகள், பழுப்பேரிப்போன மார்லோவின் நாடக காகிதங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பூதக்கண்ணாடி, காந்தியின் இடுப்பிலிருப்பதுபோன்ற கடிகாரம்.
அன்றும் டாவர்ன் எப்போதையும் விட பிஸியாக இருந்தது.
சினாயிலிருந்து ஆறு மாத பயணத்தை முடித்து அதற்கு முந்தினம் `லே மாக்னிஃபிக்` எனும் கப்பல் வந்து சேர்ந்தது காரணம்.
சில பருப்பு, தானியங்கள், பீரங்கி வகைகளுடன் போரில் சாவதற்குத் தயாராக பல ஆயிர உயிர்களையும் நிரப்பி சில வாரங்களில் திரும்ப கிளம்பிவிடும்.
பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து ஒரு `நாட்டிஹ்ல்` தூரத்தில் அந்த கப்பலின் நங்கூரம் இறங்கியதும், ஒரு கொலைக்கான சாத்தியங்கள் உருவாகத்தொடங்கியது.
அந்த சாவு சனியன் எந்த ரூபத்தில் வந்தாலும் உபயோகமான மனித உயிர்களுக்கு வலை வீசாமல் விடமாட்டான். தண்டத்திற்கு இருக்கும் உயிர்கள் அவன் கண்ணுக்குத் தெரியாது.
`என்ன தாத்தா, எங்கிருந்து வர்ரீங்க` – பீரை மட்டும் குடிப்பதில் போதை தராததுபோல் பேச்சு அவலுக்கு அலைந்த பக்கத்து இருக்கைக்காரனின் கேள்வியால் மார்லோவிலிருந்து நிமிர்ந்துப் பார்த்தார்.
`இங்க, அங்க`
`அதிகமாக குடித்திட்டீரோ. மாண்டிகார்லோ பக்கத்து டாக்லாண்டுக்காரரோ?`
`இன்னும் சில வாரத்துல கிளம்பிடுவோம். உங்க சீக்ரெட்ட வித்துடமாட்டோம். சும்மா சொல்லுங்க` – கூட வந்தவனின் ஒத்து எரிச்சலைக் கிளப்பியது.
`நான் சில பறவைகளோட தெற்கு பிரான்சுலேர்ந்து பறந்து வர்ரேன்பா..`
`சரிதான்..கொஞ்சம் எண்ணெய் போட்டு நீவி விட்டா சரியாயிடும்..` – மேஜையிலிருந்த சிலுவையை தடவியபடி, கிண்டலுடன் முன்னகர்ந்து உட்கார்ந்தான்.
அந்த கணத்தில் கரிய உருவம் போன்ற சாவு சோம்பல் முறித்து, ரீங்காரத்துடன் தன் ஆசனத்திலிருந்து கிளம்பியது.
எழுபது சித்திரைகளைப் பார்த்த கிழவரின் போதையும் , ஒரு சில வாரங்களில் போருக்கு சென்று தூரத்தில் வரும் எதிரி கப்பலை குறுக்கியபடி பார்க்கும் வீரனின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன –
ஒரு கொலைக்கான சாத்தியக்கூறுகள் அங்கு அதிகரித்ததில் சாவுப்பீடைக்கு பரம திருப்தி.
If thou repent, devils shall tear thee in pieces.
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- குப்பைப் பூக்கள்..!
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)