நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

தமிழநம்பி


நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
எடுப்பாய்க் கூறி
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை
தகவி ளக்கும்!

பாட்டு நலம்

பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
திகட்டா இன்பம்!

சிறப்புரைக்கும் ‘மருவினிய கோலநெடு நல்வாடை’
செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
வெற்றிப் பாட்டாம்!

——————————————————————-

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

தமிழநம்பி


(நான்குகாய் – மா – தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்)

கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும்

சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின்
சிறப்பைச் சொல்லும்
ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக
இலக்கி யங்கள்!
கூரார்ந்த தொன்மையுறு கொழுஞ்செழுமை நாகரிகம்
கூறா நிற்கும்!
வேரார்ந்த சொன்மலியும் வியன்றமிழின் நுட்பமெலாம்
விளக்கிச் சொல்லும்!

பத்துப்பாட் டுடனெட்டுத் தொகைக்கழக இலக்கியமாம்
பத்துப் பாட்டில்
முத்தேழாம் பாட்டாகும் முழுத்திறத்தில் நக்கீரர்
மொழிந்த திந்த
எத்துணையும் சுவைகுன்றா தேந்துநெடு நல்வாடை
ஏற்ற பேரும்
ஒத்தவகை கருத்தறியின் உணர்ந்துசுவைத் தேத்திடலாம்
ஓர்ந்து நோக்கி!

பெயர்ப் பொருத்தம்

தலைவன்றன் பிரிவாற்றாத் தலைவிக்கோ நெடுந்துயரைத்
தந்த வாடை!
உலைவறியாத் தலைவனுக்கோ உறுவெற்றி ஞாட்பளிக்கும்
ஒருநல் வாடை!
கலைவறியா நிகழ்நடக்கும் காலமதும் வாடையெனக்
கருத்தாய்த் தேர்ந்தே
நிலைபொருந்த பெயரிட்டார் ‘நெடுநல்வா டை’யெனவே
நேர்த்தி சேர்த்தார்!

பாட்டும் உரையும்

சுவையான நிகழ்வுகளைச் சொல்லழகில் கலைநுட்பில்
சொல்வ தோடே
சவையேற்றும் நச்சருரை தந்தகருத் தெழுப்பியதோர்
தக்கத் தாலே
சுவைகூடும் இப்பாடல் சொலலகமா புறப்பொருளா?
சொற்போ ராலே!
இவையிருக்க, சுருக்கமுற இப்பாடல் இயம்புவதை
இனிகாண் போமே!

பாட்டு கூறும் நிகழ்வுகள்

கூதிர்கா லத்தரசன் கொண்டமனை யாள்பிரிந்தான்
கொடும்போர் செய்ய!
கோதில்தூய் தலைவியுறும் கொடுந்துயரை செவிலித்தாய்
குறைக்க எண்ணி
ஊதிகைநெல் தூவிதொழு துருகிமனம் கொற்றவையை
உதவக் கேட்பாள்!
மாதிவளின் துயர்தீரே! மன்னன்வா கைசூடி
வரச்செய் என்றே!

கூதிர்காலமும் ஊரும் உயிர்களும்

ஒருநூற்று எண்பதுடன் ஓரெட்டு அடிப்பாட்டில்
உரைக்கும் செய்தி
பருகிடவே ஒவ்வொன்றாய் பார்த்திடுவோம் சுருக்கமுற
பாரில் மாரி
பெருவெள்ளம்! கோவலரும் பிறவுயிரும் நடுங்குகுளிர்
பீழை கூறி
இருங்களியும் ஊர்செழிப்பும் ஈரநீர்ப்பூ விரிசிரிப்பும்
எழில்வி ளக்கும்!

ஓங்கியவீ டமைந்ததெரு ஓராற்றைப் போல்கிடக்கும்
ஊர்வ ளத்தில்!
வீங்குதிணி தோள்வலியர் விலங்கன்னார் முறுக்குடலர்
வீழ்ம ழைக்கே
ஆங்கஞ்சா தலைந்திடுவர் அளிமூசு கட்குடியில்
அறுவை தொங்க!
பாங்காக விளக்கேற்றிப் பனிமுல்லை நெல்தூவிப்
பணிவர் பெண்டிர்!

கூதிர்கால நிலைப்பால் விளைவுகள்

மனையுறையும் ஆண்புறவு மகிழ்பெடையோ டுணாத்தேட
மறந்து மாழ்கி
வினையின்றி நின்றவலி மிகவாகக் கால்மாற்றும்
விந்தைக் காட்சி!
புனைமாலை தவிர்பெண்டிர் பூச்செருக நறுங்கூந்தற்
புகைவ ளர்ப்பார்!
முனைகொக்கி விசிறிதொங்கும் மூண்டிருக்கும் சிலந்திவலை
மொழிதல் நுட்பம்!

தென்றலடி சாளரத்தின் திண்கதவங் குளிர்க்கஞ்சித்
திறவாத் தாழில்!
கன்னலுள தண்ணீரைக் கருதியுணார் குளிர்காய
கடுகிச் செல்வார்!
குன்றியுள யாழிற்பண் கூட்டுதற்கே நரம்பைமுலைக்
கொம்மை வைப்பார்!
புன்கூர்ந்த காதலர்கள் புலம்பிடுவர் பிரிதுன்பில்
போகாக் கூதிர்!

அரசியின் மனை வகுத்த முறை

கதிரவனின் வெப்பொளியில் காலிரண்டு குடகுணக்கில்
கணக்கில் நட்டே
அதிலிரண்டு கோல்குறுக்காய் அளவிட்டு வைத்துப்பின்
அவற்றின் நீழல்
பொதிந்தொன்றன் மேலொன்றாய்ப் பொருந்தியொரு கோடாகும்
போதில் கண்டே
மதிபுலவர் நூலறிந்தார் மயக்கின்றிக் கயிறிட்டே
மனைவ குப்பார்!

வாயிலும் முன்றிலும் வழங்கொலிகளும்

புகுவாயில் யானையமர் மறவன்கைக் கொடியுயர்த்திப்
போகும் வண்ணம்
மிகுமலையில் திறந்தன்ன மேலுயர நெடுவாயில்
வினைவல் லாரால்
தகுவுயரத் திருக்கதவம் தாழமைத்துப் பிடிபொருத்தித்
தக்க வாறு
தெகுளுறவெண் கடுகொடுநெய் தேர்ந்தப்பி நெடுநிலையும்
திகழா நிற்கும்!

மணல்ஞெமிரும் முன்றிலிலே மானன்னம் துள்ளிமிக
மகிழ்வி லாடும்!
உணவாம்புல் தெவிட்டபரி ஒலிகனைப்பும் நீர்வீழும்
ஒலியும் மஞ்ஞை
முணங்கின்றி அகவொலியும் மூண்டுமலை எதிரொலியாய்
முழக்கம் கேட்கும்!
இணங்கலுறப் பலவொலியும் இவ்வாறே அரண்மனையில்
எழுச்சி கொள்ளும்!

அரசியின் நல்லில்லம்

பாவையகல் நெய்யூற்றிப் பருத்திரியும் நேரெரியப்
பார்த்துத் தூண்டி
தேவையுறு பள்ளிதொறும் தேங்கிருளை நீக்கியொளி
சேர்த்தும் காவல்
கோவையலால் பிறஆண்கள் குறுகியலா வரையிருக்கும்
குன்றென் இல்லில்!
பூவைமிகக் கொள்கொடிகள் பொலிவான்வில் குன்றின்மேல்
போல்வி ளங்கும்!

வெள்ளியெனச் சுதைசாந்து வீசவொளி பூசிமிக
விளங்க, தூண்கள்
வள்ளுரக்காழ் கருநிறத்தில் வாய்த்திருக்க நெடுஞ்சுவரோ
வார்ப்புச் செம்பில்
உள்ளியவே லைப்பாட்டில் உயர்வாகச் செய்ததைப்போல்
ஒங்கி நிற்கும்!
கொள்ளையழ கோவியப்பூக் கொடிகளுடன் கருப்பெயர்தாங்
கும்நல் லில்லம்!

கட்டிலும் படுக்கையும்

நாற்பத்து அகவையுடை நால்வாய்ப்போர்க் களம்பட்டு
நல்குங் கொம்பை
ஆற்றலுற கைவல்லான் அழகாகக் காற்குடமாய்
ஆக்கிக் கட்டில்
ஏற்றவகை இலையுருவை இடையமைத்து நாற்புறமும்
இனிய முத்து
நூற்சரமாய் தொங்குமதன் மேல்நோக்கின் தகட்டிலுரு
நுட்பம் தோன்றும்!

கான்முல்லை சேர்ந்தமலர் கவினுறவே வேறறிய
கட்டில் இட்டார்!
கோன்கோதை தாம்படுக்கக் குழையிணைவில் படுக்கைகளைக்
கூட்டி வைத்தார்!
மேன்மென்மை புணரன்னம் மெலவிடுத்தத் தூவியணை
மேலே இட்டார்!
தேன்றவசக் கஞ்சியுடன் திகழ்சலவை மடியாடை
தேர்ந்து வைத்தார்!

அரசியின் நிலை

ஆரமில்லாத் தனித்தாலி அழுத்துமுலை உலர்கூந்தல்
ஐயன் நீங்க
சீரழகி நுதல்உலற செறிகுழையும் அகற்றியதால்
சிறிதே தொங்கும்
ஆரழகு வடுச்செவியே! அவள்முன்கை பொன்வளையும்
நீங்கி ஆங்கே
நேரல்லாத் தொடிசங்கில் நெளிமெலிதாய் துய்யுடையும்
நீக்கா மாசில்!

தீட்டாத ஓவியமாய்த் திகழ்வளவள் தோழியர்க்கோ
தேமல் மேனி
ஊட்டத்தோள் வேயொப்ப உறுத்துமுலை மரையொக்க
ஒடுங்கி டையாம்!
நாட்டமுடன் தோழியரும் நல்லடியை வருடிடுவர்
நன்மை சொல்வர்!
கூட்டமுறு செவிலியரும் குறைதேற்றத் துணைவனின்னே
குறுகும் என்பார்!

ஆற்றாதாள் இன்சொலினும் அதையேற்கா தகங்கலங்கி
அமைதி அற்றாள்!
மேற்கட்டின் ஓவியத்தில் விண்ணிலவும் மீன்சகடும்
மேவி நீங்கா
வீற்றமெண்ணி நெட்டுயிர்த்தாள் விழிவடிநீர் செவ்விரலால்
மெலத்து டைத்தாள்!
மாற்றியவள் படர்தீர மன்னற்கு விறல்தந்தே
மறல்மு டிக்க!

பாசறையில் அரசன்

ஒளிப்பட்டப் போர்யானை ஒற்றைக்கை நிலம்புரள
ஒறுத்த வீரர்
ஒளிறுபகை போழ்ந்திடவே உற்றபுண்கண் டவர்வீரம்
உயர்த்திப் போற்ற
நளிர்வாடை அகற்சுடரை நனியசைக்க வேம்பார்த்த
நல்வேல் தாங்கி
மிளிர்பொருநன் முன்சென்றே விழுப்புண்ணர் குறித்திறைக்கு
விளக்கிச் சொல்வான்!

மணியணிந்த கடிவாளம் மாட்டுகிற சேணம்வேய்
மாத்தாள் பாய்மா
துணிவோடே பாசறையின் தொய்யலதை எங்கெங்கும்
துளித்துச் செல்ல
அணிவெண்கொற் றக்குடைக்ககீழ் அந்துகிலை இடப்பக்கம்
அணைத்துக் கொண்டே
பிணித்தவாள் தோள்தொங்கும் பெருமறவன் சுவலில்கை
பெய்து செல்வான்!

நள்ளிரவும் பள்ளிகொளா நல்வேந்தன் சிலரோடே
நண்ணி யாங்கே
வள்வலியர் விழுப்புண்ணார் மனம்மகிழக் கண்டவரை
வாழ்த்தி ஊக்கி
நள்ளார்தம் மோடுபொரும் நசைகொள்பா சறைத்தொழிலாம்
நவில்கின றாரே!
தெள்ளலுற நக்கீரர் தேர்ந்துரைத்த பாட்டிலிவை
தெரிவித் தாரே!

அகமா புறமா?

அகப்பொருளி லக்கணத்தில் அன்றேதொல் காப்பியனார்
அறியத் தந்தார்
மிகத்தெளிவாய் மக்களியற் பெயர்சுட்டி எவ்விடத்தும்
விளியா ரென்றே!
அகமறிந்த நக்கீரர் அதைமீறா தெழுதிடினும்
அறிவர் நச்சர்
தகவாய்ந்தே தருமுரையில் தலைவனியற் பெயரறிந்து
தருகின் றாரே!

வீரர்படைத் தலைவனின்வேல் ‘வேம்புதலை யாத்த”தென
விளம்ப லாலே
கீரருரைப் படிவேலில் வேப்பம்பூத் தாருளதால்
வேந்தன் மாறன்!
வீரமிகப் “பலரோடு முரணிய”னென் றுரைத்ததாலே
விளங்கும் மன்னன்
கூரறிவு நெடுஞ்செழியன் கொடுந்தாக்கில் எண்மரென
கொண்ட செய்தி

இன்னவகை ஆய்வுரையால் இயற்பெயரைக் கண்டுரைத்தே
இந்தப் பாட்டு
சொன்னவகை புறப்பாட்டே சுட்டியந்த வேப்பந்தார்
சொன்ன தென்றார்!
இன்னுமதன் திணைவாகை என்றுரைத்தே வெற்றிதனை
இயம்பி யுள்ளார்!
பின்னுமதன் துறைவாடைப் பாசறையா மதுபாலைப்
புறமென் றாரே!

புலவர்தம் உச்சிகொளும் நச்சருரை இவ்வாறு
புகன்ற போது
பலராய்வு வேம்பெனவே பகன்றததன் தழையைத்தான்
படலை அன்றென்
றிலகலுற சான்றுடனே எடுத்துரைத்தே இதுஅகமே
என்று சொல்லும்!
நிலவுமிரு ஆய்வுகளும் நெடுநல்வா டைச்சிறப்பை
நிலைக்கச் செய்யும்!

அகப்புற ஒப்பீடு

நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
எடுப்பாய்க் கூறி
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை
தகவி ளக்கும்!

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி