முதல்மழை

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

ப.மதியழகன்



மேகம் சூழ்ந்த வானம்
குளிர் காற்றினூடே
தூறல் தொடங்கியிருந்தது
இடியோசை கிழக்கு
திசையில் கேட்டது
எல்லோருடைய கைகளும்
குடைகளைத் துழாவ
ஆரம்பித்தன
கொடியில் காய்ந்த
துணிமணிகளை அவசரகதியில்
எடுத்து அடுக்கினார்கள்
பெண்மணிகள்
பள்ளி விடுமுறையா இல்லையா
என்றறிய
மழையில் நனைந்து கொண்டே
பள்ளியை நோக்கி
சைக்கிளை மிதித்தார்கள்
மாணவர்கள்
குடையை கையிலேந்தி சென்றவரின்
உடைகளை நனைத்தது
சாலையோரம் தேங்கிய தண்ணீரில்
ஏறி இறங்கிய பேருந்து
மழையில் நனைந்து கொண்டே
வீதியில் நடந்து சென்ற
முதியவர்
மிதந்து வந்த காகிதக் கப்பலை
மிதிக்காமல் சென்றார்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்