தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

லதா ராமகிருஷ்ணன்



தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் உருவாகி பதிவு பெற்ற அமைப்பாக இன்று இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேராசிரியரும்- மொழிபெயர்ப்பாளருமான திரு. கோச்சடை இந்த வருடம் பேராசிரியர்.ஆர்.சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்-தமிழ் சிறுபத்திரிகையுலகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருபவர்- தலைவராகவும், திரு.மயிலை பாலு, தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர், சிற்றிதழாசிரியராக இயங்கி வருபவர்.). தமிழின் குறிப்பிடத்தக்கமொழிபெயர்ப்பாளர் களில் ஒருவரான அமரந்த்தா. காரல் மார்க்ஸின் காலத்திற்குமான அரிய படைப்பை தமிழில் மூலதனமாக மொழிபெயர்த்திருக்கும் தியாகு முதலிய பலர் இந்தச் சங்கம் தோன்றியதிலிருந்து இதில் முனைப்பாக அங்கம் வகித்து வருகிறார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ”மொழிபெயர்ப்புக் கலை – இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியது. பாவை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு உதவியது. தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவிப்பதையும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.


கோவை ஞானி , ஆர் சிவகுமார்

கோவை ஞானி , ஆர் சிவகுமார், குளச்சல் எம் யூசுஃப்

ஆர் சிவகுமார் உரையாற்றுகிறார்

இந்த வருடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது மூன்றாவது ஆண்டு விழாக் கூட்டத்தையும், பொதுக்குழுக் கூட்டத்தையும் ஜீன் 1ம் தேதியன்று சென்னை எழும்பூரிலுள்ள இக்ஸா மையத்தில்ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திரு கோவை ஞானி வருகை தந்திருந்தார். கடந்த வருடம் இந்தச் சங்கத்தால் சிறப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல் மொழிபெயர்ப்ப்பியல் – தற்காலப் பார்வைகள் என்ற தலைப்பில் இந்தச் சங்கம் உருவாக முக்கியக் காரணமாகத் திகழும் , தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அமரந்த்தாவின் பெருமுயற்சியால். என்.சி.பி.ஹெச். நிறுவன வெளியீடாக விழாவில் வெளியிடப்பட்டது.

கூட்டத்தின் முதல் அமர்வாக நடந்தேறிய பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டறிக்கை, செயல்பாடுகள், வரவு-செலவு கணக்கு முதலியவை உறுப்பினர்களின் பார்விஅக்கு சமர்ப்பிகப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடந்தேறின. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் என்னென்ன வழிகளில் மேம்படுத்தலாம் என்று வந்திருந்த பலரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினார்கள்.சங்கத்தின் இருப்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும், தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் கிளைகள் உருவாக்கினால் நல்லது, ஒரு வருடத்தில் வெளியாகும் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களின் பெயர்களையும், அவை குறித்த முக்கிய விவரங்களையும் உறுப்பினர்களும், மற்றவர்களும் சங்கத்திற்கு தொடர்ந்த ரீதியில் தெரிவித்தால் உதவியாக இருக்கும், மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவை குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பதிப்பாளர்கள் தான் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரக் காரணமாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திரு. கோவை ஞானி தெரிவித்தார். மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித் தனி ஆளுமை கொண்டவர்கள், மொழிபெயர்ப்பு குறித்த வெவ்வேறு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள், எனவே, தொழிற்சங்கம் போன்றதொரு அமைப்பாக இந்தச் சங்கம் திகழாது என்று குறிப்பிட்ட திரு தியாகு, மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பாளருக்கும் இடையே நிலவும் நல்லிணக்கம் மொழிபெயர்ப்புப் பணி வளர முக்கியப் பங்காற்றுகிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், பல வருடங்களாக தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவருமான திரு. ஆர்.சிவகுமார் தலைவராகவும், பல வருடங்களாக சீரிய மொழிபெயர்ப்புப் பணியில் முனைப்புடன் இயங்கிவரும் திரு. மயிலை பாலு துணைத்தலைவராகவும் லதா ரமகிருஷ்ணன் செயலராகவும், அமரந்த்தா பொருளாளராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழாவின் நிறைவு அமர்வில் மொழிபெயர்ப்பாளர்கள் திரு. பாமயன்( இயற்கை-வேளாண்மை குறித்த பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருப்பவர்), திரு, குளச்சல் மு.யூசு·ப், திரு. இரா.முருகவேள், திரு.மயிலை பாலு, திரு.ஆர்.சிவகுமார் ஆகிய ஐந்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி மரியாதை செய்யும் விதமாக தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்க நினைவுக் கேடயங்களும், சந்தியா பதிப்பகம், என்.சி.பி.ஹெச் நிறுவனம், புதுமலர்பதிப்பகம் ஆகியோர் மனமுவந்து அளித்திருந்த நூல்களும் வழங்கப்பட்டன.அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் நூல்களைப் பற்றியும் செறிவான தகவல்களும், விவரக் குறிப்புகளும் அவையோருக்கு சிறு கட்டுரைகளின் வடிவில் படித்துக் காண்பிக்கப்பட்டன. தமிழின் தரமான மொழிபெயர்ப்பாளர்கள் நிறைந்த அவையில் தமக்குக் கிடைக்கும் இந்த மரியாதை தங்களை பெரிதும் ஊக்கப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ¡ந்த விருதுக்குரிய மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய ஏற்புரையில் தங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

திரு.பாமயன் தனது ஏற்புரையில் “தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் உழவர் களோடு பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் எடுத்துரைக்க எளிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறேன். பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி 130 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட தோழர் நெடுஞ்செழியன் தான் என்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தியது “என்று நெகிழ்வோடு நினைவுகூர்ந்தார்.”திரு. குளச்சல் மு. யூசு· தோலுரித்துக் காட்டும் வாக்குமூலங்கள் வகை நூல்களை மொழிபெயர்த்தவர்” என்று அறிமுகப்படுத்தினார் அமரந்த்தா.விளிம்பு மனிதர்களைப் பற்றிய படைப்புகளையே தான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருப்பதாக திரு. யூசு· தெரிவித்தார். திரு. மயிலை பாலு தனது ஏற்புரையில் முதலில் தான் கட்டுரைகளை மட்டுமே மொழிபெயர்த்து வந்ததாகவும், அலைகள் சிவம் தான் தன்னை புத்தக மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்ததாகவும் நன்றியோடு நினைவுகூர்ந்தார். திரு. சிவகுமார் தனது ஏற்புரையில் திரு.கோவை ஞானி கீழை மார்க்கசியத்திற்கு ப்ரும் பங்களிப்பு நல்கியவர் என்று ஞானி நடத்தி வந்த சிறுபத்திரிகைகள் பற்றியும், அவை எழுப்பிய விவாதங்களையும், சச்சரவுகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். திரு.இரா.முருகவேள் “ரெட் டீ” என்ற புதினத்தைப் படித்த போது அதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று தனது மனதில் உத்வேகம் தோன்றியதால் மொழிபெயர்ப்பாளராக தான் உருவெடுத்ததாகவும் , நல்ல புத்தகங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் விழைவும் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக உருவெடுக்கச் செய்ய வல்லது என்றும் கூறினார்.

திரு. கோவை ஞானி தனது சிறப்புரையில் சம்பந்தப்பட்ட இரண்டு மொழிகளிலும் தேர்ச்சியில்லாமல் ஒரு பிரதியை மொழிபெயர்க்கப் புகுவது சரியல்ல என்றார்.
தி ஸ்டோரி ஆ· ·பிலாஸ·பி’ போன்ற நூல்கள் தமிழில் இன்று வரை வெளிவராதது குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். காலை முதல் மாலை வரை கூட்டத்தில் பங்கேற்ற தோழியர் ஒருவர் ‘திண்ணையில் வெளிவந்திருந்த தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விழா அழைப்பிதழைப் பார்த்த பிறகு தான் தனக்கு அப்படியொரு அமைப்பு இருப்பதே தெரியும் என்று கூறி, தான் தெலுங்கு மொழியிலிருந்து 36 புதினங்களை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறினார். தெலுன்கிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வரும் கதைகளில் உயிர்ப்பு குறைவாக இருப்பதாக உணர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்த தான் மொழிபெயர்ப்பில் இறங்கியதாகத் தெரிவித்த அவர் நல்ல விஷயங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் விழைவே தான் மொழிபெயர்ப்பாளரானதற்கு அடிப்படைக் காரணம் என்றார்.

பொதுவாக, இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்களே கவனம் பெறுவதும், விருது வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் வருடக்கணக்காக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை எளிய முறையிலாவது மரியாதை செய்ய வேண்டும் என்ற விழைவிலும், தமிழின் மொழிபெயர்ப்பாளர்களை ஒரு குடையின் கீழ் திரட்ட வேண்டும் என்ற விழைவிலுமாய் உருவானது தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம். மொழிபெயர்ப்பின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்மொழிபெயர்ப்பாளர்களின் வாழ்வு நல மேம்பாட்டிற்காகவும் தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாகியுள்ள அமைப்பு. இதன் முயற்சிகள் வெற்றி பெற தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. இந்த சங்கத்தில் சேர விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள் எங்களை இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். அவரவர் படித்த, அந்தந்த ஆண்டுகளில் வெளியாகும் தரமான மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மொழிபெயர்ப்பாளர்களும் தங்களுடைய மொழிபெயர்ப்புநூல்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

லதா ராமகிருஷ்ணன்


எந்த ஒரு மொழியின் அளவிலும் சரி, ஒரு மொழியின் மொழியியல்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் அதன் , இலக்கிய, சமூக அளவிலான வளர்ச்சி- மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு காலங்காலமாக் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது; பங்காற்றி வருகிறது. இலக்கியம் சார்ந்த, சாராத பிரதிகள் நம் மொழியிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்வதன் மூலமும், பிறமொழிகளிலிருந்து நம் மொழிக்கு வருவதன் மூலமும் நமக்கு உலக மக்களைப் பற்றியும், அவர்களுக்கிடையே உள்ள அடிப்படையான ஒற்றுமைகளை பற்றியும், தனித்துவங்களைப் பற்றியும் ஏராளமான விவரங்கள் தெரிய வருகின்றன. இன்று ஒளி-ஒலி ஊடக, கணிப்பொறி முதலியவற்றிலும் மொழிபெயர்ப்பின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் உருவாகி பதிவு பெற்ற அமைப்பாக இன்று இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேராசிரியரும்- மொழிபெயர்ப்பாளருமான திரு. கோச்சடை . செயலர் தமிழின் குறிப்பிடத்தக்கமொழிபெயர்ப்பாளர் களில் ஒருவரான அமரந்த்தா. காரல் மார்க்ஸின் காலத்திற்குமான அரிய படைப்பை தமிழில் மூலதனமாக மொழிபெயர்த்திருக்கும் தியாகு முதலிய பலர் இந்தச் சங்கம் தோன்றியதிலிருந்து இதில் முனைப்பாக அங்கம் வகித்து வருகிறார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ”மொழிபெயர்ப்புக் கலை – இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியது. பாவை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு உதவியது. தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவிப்பதையும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.

இந்த வருடம் 11.2.07 அன்று சென்னையிலுள்ள ‘இக்ஸா’ மையத்தில் முழுநாள் நிகழ்வாக நடந்தேறிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த மொழிபெயர்ப்பாளர்களான திரு.ம.லெ.தங்கப்பா, திரு.தியாகு, திரு. எம்.எஸ். வெங்கடாசலம், திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். காலை அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் சென்னையைச் சேர்ந்த எத்திராஜ் மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, மாநிலக் கல்லூரி, இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து மாணாக்கர்களும், ஆர்வமுள்ள வேறு சி¢லருமாக ஏறத்தாழ 30 பேர் பதிவுக் கட்டண்ம் ரூ.100 கட்டி கலந்து கொண்டனர். அவர்கள் மொழிபெயர்த்தவைகளை வல்லுனர் குழுவாக இயங்கிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்’ சிலர் ஆய்ந்தலசினர். முன்னதாக, திரு.தியாகுவும், திரு. ம.லெ.தங்கப்பாவும் மொழிபெயர்ப்பு குறித்து பயிலரங்கப் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர். பயிலரங்க நிகழ்வுகளை மாநிலக் கல்லூரிப் பேராசிரியரும், கா•ப்காவின் ‘உருமாற்றம்’, ஜோனதான் கெல்லரின் ‘இலக்கியக் கோட்பாடு’ உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவருமான திரு. ஆர்.சிவகுமார், சமூக ஆர்வலரும், சமூக மாற்றத்திற்கான விஷயங்களை மொழிபெயர்ப்பதில் ஆர்வமுள்ளவருமான திரு. த.வெ.நடராஜன் ஆகியோர் முன்னின்று ஒழுங்கமைத்தனர். பயிலரங்கில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி மாணவப் பிரதிநிதிகள் சிலர் அவையோரிடம் பகிர்ந்து கொண்டனர். பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அகராதியும், சான்றிதழும், மற்றும், சந்தியா பதிப்பகமும், என்.சி.பி.ஹெச் பதிப்பகமும் மனமுவந்து அளித்த நூல்களும் வழங்கப்பட்டன. ஞானாலயா என்ற நூலகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இலக்கிய, சமூகப் பணியாற்றி வரும் திருமதி. டோரதி. கிருஷ்ணமூர்த்தி, திரு.அரணமுறுவல், திரு.சிசு.சதாசிவம் முதலியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

காலை அமர்வாக இடம்பெற்ற பொதுக்குழு அரங்கம் சங்கத் தலைவர் திரு.கோச்சடையின் தலைமையில் நடந்தேறியது.சங்கத்தின் ஆண்டறிக்கையை சங்கத்தின் செயலர் அமரந்த்தா சமர்ப்பித்தார்., வரவு-செலவுக் கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.பிறகு சங்கத்தின் எதிகாலச் செயல்பாடுகள் குறித்த விவாதம் சீரிய முறையில் நடந்தேறியது. இலக்கியம் சாராத , சமூகப் பிரக்ஞை கூடிய மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருதுகள் வழங்கப்பட வேண்டும் என் சாகித்திய அகாதெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் மொழிபெயர்ப்பாளரான திரு.தி.சு.சதாசிவம் வலியுறுத்தினார். பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை அவையோர் முன் வைத்தனர். பல புதிய உறுப்பினர்களும் சங்கத்திற்குக் கிடைத்தனர்.

மதிய அமர்வில் ‘தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல் என்ற தலைப்பில் டாக்டர்.கே.எஸ்.சுப்பிரமணியன், இலக்கிய ரசனை மேம்பாட்டில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பு என்ற பொருளில் திரு.ஆர்.சிவகுமார், அரசியல்,சமூக தளங்களில் மொழிபெயர்ப்பின் பங்கு என்ற தலைப்பில் திரு.தியாகு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தவிர, இவ்வாண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது பெற்ற ( வெறும் நினைவுக் கேடயம் மட்டுமே தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பில் மெய்யான ஈடுபாடு கொண்ட புரவலர் யாரேனும் தொடர்ந்தரீதியில் பொருளுதவி செய்ய முன்வரும் பட்சத்தில் தமிழின் தரமான் மொழிபெயர்ப்பாளர்களை ரொக்கப் பரிசும் அளித்து மரியாதை செய்ய முடியும்.) திரு.ம்.லெ.தங்கப்பா, திரு. எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்த ஐந்து உரைகளையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற கருத்தை முன்வைத்த போது என்.சி.பி.எச் நிறுவனம் உடனடியாக அந்த நூலை வெளியிட முன்வந்தது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மொழிபெயர்ப்பின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் வாழ்வு நல மேம்பாட்டிற்காகவும் தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாகியுள்ள அமைப்பு. இதன் முயற்சிகள் வெற்றி பெற தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தனது தாய்மொழியின் மீது மரியாதையும், அபிமானமும், தாய்மொழியில் தேர்ச்சியும் மிகவும்அத்தியாவசியம். அதேசமயம், மற்ற மொழிகளின்பால் வெறுப்போ, எதிர்ப்புணர்வோ, பிறமொழிகளைக் கீழாகப் பார்க்கும், பகுக்கும் மனப்பாங்கோ இல்லாமலிருப்பதும் இன்றியமையாதது.

*புகைப்படங்கள்:- 1/ திரு.தி.சு.சதாசிவம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் திரு.எம்.எஸ்.வெங்கடாசலத்திற்கு நினைவுக் கேடயம் வழங்குகிறார். அருகே உள்ளவர்கள் திருமதி ‘ஞானாலயா’ டோரதி, திரு.தியாகு.
2/ எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் திரு.கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு விருது வழங்குகிறார். அருகே உள்ளவர் திரு.தியாகு.
3/ திரு.தி.சு.சதாசிவம் திரு.ஆர்.சிவகுமாருக்கு நூல் வழங்கி கௌரவித்தல்

4/திரு.தியாகுவிடம் மூத்த மொழிபெயர்ப்பாளரான திரு.பாலகிருஷ்ணன் நினைவுக் கேடயம் வழங்குதல்.
5/ திரு.ம்.லெ.தங்கப்பாவுக்கு திரு.தி.சு.சதாசிவம் சங்கத்தின் சார்பில் நினைவுக் கேடயம் வழங்கி மரியாத செய்தல்

6/ திரு. எம்.எஸ்.வெங்கடாசலம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார். மேடையில் வீற்றிருப்போர்: திரு.தியாகு, திருமதி, டோரதி, சங்கச் செயலர் அமரந்த்தா, பேராசிரியர் ஆர்.சிவகுமார், மதிய அமர்வின் சிறப்பு விருந்தினர் திரு. அரணமுறுவல்

.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

லதா ராமகிருஷ்ணன்


—-

14.08.2005 அன்று சென்னை தியாகராயகர் , தக்கர்பாபா வித்யாலயாவில் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பேரவை நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் ‘ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டமொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்களின் கருத்தினை ஒட்டி உருவாக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முதல் சிறப்புப் பேரவை இது.

30.3.2005 அன்று சங்கம் பதிவு செய்யப்பட்டது.சிறப்புத் தலைவராக மூத்த மொழிபெயர்ப்பாளர் மாஜினியும், தலைவராக பேராசிரியர் கோச்சடையும்,செயலராக அமரந்தாவும், பிற செயற்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.சென்ற ஆஅண்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் யோசனைக்கேற்ப கட்டுரைகள் சேகரிக்கப்பட்டன.

சிறப்புப் பேரவையில் எதிர்காலப் பணிகளைத் திட்டமிடவும், மொழிபெயர்ப்பு நூல்களில் அரசியல்-சமூகம் மற்றும் பிற துறைகள் சார்ந்த இரு பகுதி நூல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விவாதங்கள் நடைபெற்று கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்களுக்கென ஒரு விரிவான கலைச்சொல் அகராதியைத் தொகுக்கவும், தமிழ்மொழிபெயர்ப்பாளர்களின் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கவும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன.

சங்கத்தின் சார்பில் மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரைகள் அடங்கிய ‘ தமிழில் மொழிபெயர்ப்புக் கலை – இன்று ‘ என்ற தொகுப்பும், எண்பது வயதைக் கடந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் ‘திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் மொழிபெயர்த்த பல்வேறு இந்திய மொழிச் சிறுகதைகள் அடங்கிய ‘அனைத்தும் கடந்து ‘ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டன.

பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட முதல் நூலினை முனைவர். கே.எஸ். சுப்பிரமணியம் வெளியிட மொழிபெயர்ப்பாளர் திரு. இளம்பாரதி பெற்றுக் கொண்டார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘அனைத்தும் கடந்து ‘ கதைத் தொகுப்பினை திரு. மாஜினி வெளியிட மொழிபெயர்ப்பாளர் திரு. இரா.நடராசன் பெற்றுக் கொண்டார். மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோல்களை வெளியிட முன்வந்த பதிப்பாளர்கள் இருவரையும் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மூத்த மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் நா.தர்மராஜன், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்கென ‘திசை எட்டும் ‘ என்ற தமிழ்க் காலாண்டிதழை வெளியிடும் திரு. குறிஞ்சிவேலன் ஆகிய மூவரையும் பாராட்டி புதுமைப்பித்தை நூற்றாண்டு நினைவுப் பரிசிகள் வழங்கப்பட்டன. அம்மூவரையும் பாராட்டி முறையே பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், திரு.அழகியபெரியவன், திரு. ஜெயந்தன் ஆகியோர் உரையாற்றினர். விவாதங்களில் வந்த கருத்துக்களைத் தொகுத்து திரு. தியாகு அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.

கருத்தரங்கினைப் பாராட்டியும், தங்கள் கருத்துக்களை வழங்கியும், கவிஞர் தமிழன்பன் அவர்களும், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் திருமதி சாந்தா தத் (ஹைதராபாத்) அவர்களும் நிறைவு செய்தனர்.

முழுநாளும் அனைவரின் பங்கேற்புடன் நடந்த பேரவை, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும், மொழிபெயர்ப்பாளர்-பதிப்பாளர் இடையே னல்லுறவையும் உறுதி செய்தது.

தீர்மானங்கள்

—-

1/மொழிபெயர்ப்பாளர்களுக்கு நூலின் பதிப்புரிமை வழங்கப்பட வேண்டும்.

2/சாகித்திய அகாதெமி விருது பெறும் பிற மொழி நூல்கள் தமிழிலும், தமிழ் நூல்கள் பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட நடவடிக்கை தேவை.

3/ தமிழகப் பல்கலைக் கழகங்களில் மொழிபெயர்ப்புக்கென தனிப்புலம் அமைக்கப்பட வேண்டும்.

4/பல்கலைக் கழக அனைத்துத் துறைகளிலும் மொழிபெயர்ப்புக்கென தனி ‘இருக்கைகள் ‘ நிறுவப்பட வேண்டும்.

5/தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு குறித்த ஆய்வு மற்றும் உயராய்வு செய்திட மாணவர்களைப் பல்கலைக் கழகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

6/ தமிழ் நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்த்திட மொழிபெயர்ப்பாளர்கள் முன்வர வேண்டும்.

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்