செம்புலப் பெயல் நீர்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

இராம.கி.


இந்தச் செம்புலப் பெயல் நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர்கள் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்த நீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்று சொல்லும் போது,

‘அது என்ன செம்மண்ணிற்கு மட்டும் சிறப்பு ? (அய்யா! இத்தனைக்கும் நான் செங்காட்டு மண்ணில் வந்தவன். பிறந்த மண்ணை விரும்பாதவன் என்று நினைத்துவிடாதீர்கள்.) கருமண்ணில், சுண்ணாம்பில் இன்னும் வேறுபட்ட மண்களில், ஏன் களியில் பெய்த நீர் கலவாதோ ? இங்கே கலப்பது செந்நிறமும், மழை நீருமா ? செம்புலம் என்பது செம்மண் தானா அல்லது வேறு ஒரு பொருள் உண்டா ? செம் என்ற முன்னொட்டுக்கு செம்மை மட்டும் பொருளல்லவே ? ஏன் இப்படிச் செம்மையைச் சிவந்த நிறத்தோடு ஒப்பிட்டுக் கொண்டு நின்று போகிறோம் ? இந்த உவமை என்னதான் சொல்லுகிறது ? நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே போல உருவகங்கள் சொல்லப் பட்ட போது (யாய், ஞாய், எந்தை, நுந்தை , யானும் நீயும்) சொல்ல வந்த உவமை மட்டும் மழை நீரையும் மண்ணையும் போல ஒப்பாத, சமலாத (dis-similar) ஒன்றை எடுத்துரைக்குமா ? பாணர் ஏன் இந்த உவமையைச் சொன்னார் ‘

என்ற கேள்விகள் என் மனத்தில் எழுகின்றன. குறிப்பிட குறுந்தொகைப் பாடல் குறிஞ்சித் திணையில் வருகிறது. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் கொண்ட திணை. எல்லா மேட்டு நிலங்களும் செம்மண்ணாக இருப்பது இல்லை. தமிழ் நாட்டில் செம்பாறாங்கல் நிறைந்த ஒரு மலை/குன்று பச்சை போர்த்திய குறிஞ்சித் திணையில் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. செம்மண் காடுகள் எங்களூரைப் போல சிவகங்கைப் பக்கமோ, பண்ணுருட்டி, நெய்வேலிப் பக்கமோ (இந்தக் காலத்தில் முந்திரிக் காடுகள் இருக்கும் இடமெல்லாம்) இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. செம்மண்ணைக் காட்டி, குறிஞ்சித் திணையின் விவரிப்பு சங்க இலக்கியத்தில் வேறு எங்கணும் வந்ததாகத் தெரியவில்லை.

செம்புலம் என்பதற்கு வேறு பொருள்கள் அகரமுதலியில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. செழிப்பான நிலம், போர்க்களம், பாலைநிலம், சுடுகாடு என அந்தப் பொருள்களைக் காணலாம்.

செழிப்பான நிலம் = செம்மண் நிலமாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். செழிப்பு என்பது நிறைவை, வளத்தைக் குறிக்கும் சொல்.

போர்க்களம், அங்கு சிதறிக் கிடக்கும் அரத்தத்தை மண்ணுக்குப் பொருத்திச் சொல்வது.

பாலைநிலம் இயற்கை நிலையை அப்படியே குறிப்பது. மேலே சிவகங்கையைக் குறித்தேனே ? எங்கள் ஊர்கள் பாலையிற் சேர்ந்தவைதான்.

சுடுகாடு என்ற பொருள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

அதே பொழுது செம்பொருள், செம்போக்கு, செம்மல், செம்பொன், செந்தமிழ் போன்ற சொற்களில் சிவப்பு என்ற பொருளே கிடையாது.

செம்பொருள் = எந்தத் தாழ் நிலையும் இல்லாது, மிக உயர்ந்த நிலையும் இல்லாது உயர்ந்த பொருள்;

செம்போக்கு = எங்கும் வளையாத நேரான சீரான போக்கு,

செம்மல் = நேரானவன், சீரானவன்,

செம்பொன் = கலப்படம் இல்லாத தனிப் பொன்.

செந்தமிழ் = சீராக்கப் பட்ட தமிழ்

செங்கதம் = சீராக்கப் பட்ட பேச்சு (வட மொழி; இதைக் கலவை மொழி என்ற பொருளில் சம்+கதம்= சங்கதம் என்று சொல்லுவாரும் உண்டு. ஞான சம்பந்தர் சங்கதம் என்றே மொழிவார்; சங்கதம் என்பது வடமொழிப் பலுக்கில் சம்ஸ்கிருதம் என்று ஆகும்.)

இங்கு எல்லாமே ஏற்ற இறக்கம் இல்லாத நிரவல் தன்மையைத் தான் செம் என்னும் முன்னொட்டுத் தெரிவிக்கிறது. அதே போல செம்முதல் என்ற வினையும் பள்ளத்தைத் தூர்த்து நிரவலாக்குவதையும், முழுதும் கொள்ளாது கிடந்த பையை நிறைத்து வாயைத் தைப்பதையும், மூடுவதையும், மொத்தத்தில் சீராக்குவதையே குறிக்கிறது.

செம்மையாதல் என்பதும் நேராதல், சீராதல் என்பவற்றைத்தான் குறிக்கிறது. நன்செய், புன்செய் என்பதில் உள்ள செய் என்பது மட்டப் படுத்தப் பட்ட, ஏற்ற இறக்கம் இல்லாத சம தளத்தையே (வயலையே) குறிக்கிறது. செய்>செய்ம்>செம் என்றுதான் சொல்லாய்வின் படி வளரமுடியும்

இந்தச் சிந்தனையோடு குறிஞ்சியை அணுகுவோம். மலை, குன்றுப் பகுதிகளில் ஆங்காங்கே சம தளங்கள், சம புலங்கள் இருப்பது உண்டு. அது இயற்கையாகவோ, செயற்கையாகவோ (செய்யப் பட்டது) அமையலாம்.

மழை துளிதுளியாகச் சாரல் சாரலாகப் பெய்கிறது. கீழே விழும் நீர் தான் விழும் புலத்தின் சாய்விற்கு ஏற்ப பல்வேறு ஓடைகளாகப் பிரிந்து ஓடுகிறது. நம் கண்ணுக்குத் தெரிந்த திடலில் தாரையாகப் பெய்யும் மழை அந்தத் திடல் மேலும் கீழுமாக இருப்பின் ஓடைகள் எல்லாம் ஒன்று சேருவதில்லை. அவைத் தனித் தனியாகப் போகின்றன. மாறாக அந்தத் திடல் சம நிலமாக (செம்புலமாக) இருப்பின் மழைநீர் தாரைகள் ஒன்று கலந்து போகின்றன. எப்படி ஒரு ஏனத்தில் இருக்கும் நீர் ஒரே மட்டத்தை அடைகிறதோ, எப்படி ஓர் ஆறு ஒரே மட்டத்தை அடைகிறதோ, எப்படி ஓர் ஏரி ஒரே மட்டத்தை அடைகிறதோ, அதுபோல எங்கிருந்தோ வந்த மழைநீர், இங்கு பெய்யும் தாரையும் அங்கு பெய்யும் தாரையும், ஒரே சமநிலத்தில் விழுந்தால் கலந்து ஒரே ஓடையாகப் போகும் அல்லவா ? அதைத்தான் இங்கு பாணர் குறிப்பிடுகிறார் என்று நான் எண்ணுகிறேன்.

இது செம்புல நீருக்கு மட்டுமே உள்ள சிறப்பு. சாய்புல நீரில் அந்த சாய்வு ஒரு பக்கமாக இருக்குமானால் நிகழும் தான். ஆனால் இயற்கையில் சாய்புலம் என்பது பல்வேறு சாய்வுகளைக் கொண்டல்லவா இருக்கிறது ? சம நிலத்தில் தானே மழைநீர் கலந்து நிறைந்து சமநிலத்தின் வரம்பைப் பொறுத்து அதற்குரிய மட்டம் வரும் போது மகுந்து வழிகிறது. ஒரு செய்யை எண்ணிப் பாருங்கள்; வரம்பு வரும் வரை அதில் பெய்யும் நீர் கலந்து நிறையத்தானே செய்யும் ? அது போலக் குறிஞ்சியில் உள்ள சமநிலத்திலும் ஏற்படலாம் அல்லவா ?

இப்படி எண்ணினால் சமலி (similie) சரியாக இருக்கிறது. யாய்-ஞாய், எந்தை-நுந்தை, யான்-நீ,

இதைப் போல சம நிலத்தில் அருகருகே பெய்த மழை நீர்த் தாரைகள் (தலைவன் ஒரு மழைநீர்த் தாரை, தலைவி இன்னொரு தாரை;) எங்கிருந்தோ வானத்தில் இருந்து வருகின்றன. இங்கே ஓடைகளாய்ச் செம்புலத்தில் வந்து கலக்கின்றன

‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ‘

ஆதலால், என்னருமைக் காதலியே! களவொழுக்கம் கொண்டோம் என்று கலங்காதே!

—-

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.