லதாமகன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

லதாமகன்


குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o

டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o

நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o

பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o

எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo
மழைபொழியும் நாளை
ஐஸ்கிரீம் வழிய
நீ பார்த்துக் கொண்டிருந்த
போதுதான்
என்
முதல் கவிதையை எழுதினேன்
நான்
o

அழும் குழந்தையை
அணைத்து சமாதனப்படுத்துவாய்
எப்பொழுதும்
மழை பொழியும் போதெல்லாம்
அழும் குழந்தாய் மாறிவிட
ஆசை எனக்கு
o

உன் கூந்தல்
வழிந்த மழையைத்தான்
தேனென சேகரித்துப்
போகிறது
தேனீக்களெல்லாம்.
o

நட்சத்திரங்களின்
எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய்
மழை நாளில்
மழை பொழிந்த வானாகிறேன்
முத்த நாளில்.
o

ஒற்றைக்குடைக்குள்
நீயும் நானும்
ஒண்டிக்கொண்டிருக்க
நிலமெல்லாம்
பூக்கள் தூவும்
காதலின் மழை

oOo

மரணம் உதிரும் மரமென
அழிந்து கொண்டிருக்கிறது
இந்நாள்கள்

ஒற்றைக் கல்லெறிதெலில்
கலைத்துப்போனாய்
தென்றல்கள் தொட்டிருக்காத
மரக்கிளையொன்றை

சலசலக்கும் இலைகளின்
பேரிரைச்சலில் இடையறாது
உதிர்ந்துகொண்டிருக்கும்
உயிர் மரம்.

o

பின் மழைப்பொழுதின் தார்ச்சாலையில்
எதிரொலிக்கும் பொன்மஞ்சளென
படிந்து விட்டிருக்கிறது
உன் முகம்

தீராத பாதையெங்கும்
அலைந்து திரிகிறேன்
நினைவுச் சுமைகளை
சுமந்து கொண்டு

ரகசியப்பிழையின் தீங்கங்குள்
எரிந்து தீர்கிறது
நிகோடின் வெண்புறாவுடன்

o

விலகிப்போதலின்
எல்லா சாத்தியக்கூறுகளும்
ராணிகளுக்கு இருக்கிறது

எட்டுச் சதுரங்களுக்குள்
இடையறாது
சுற்றித்தீரவேண்டியிருக்கிறது
எனக்கு

புன்னகைத்துச் சொல்கிறாய்
செக் மேட் என

எப்போதாவது
எதிரில் வருகையில்
நகர்தலுக்கான கண்ணியற்ற
ராஜாவைப்போல் உணர்கிறேன்
இப்பொழுதெல்லாம்

o

துருவேறிற்று

இவர்கள்
கொஞ்சம் தட்டிப்பார்க்கிறார்கள்

பெருஞ்சத்ததுடன் வீழ்கிறது
காலங்களின் துரு

துருவேறிய காலங்கள்
குறித்த கேள்விகள் இவர்களுக்கு
நிறைய இருக்கிறது

பேச்சற்று பெருமூச்செறியும்
மூப்பெய்திய இரும்பு

ஆயாசத்தில் கீழ் வீழுந்த
ஆயுதங்கள்
காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது
சுழற்சியின் நினைவுகளை.
oOo

-லதாமகன்

Paramanantham

Series Navigation

லதாமகன்

லதாமகன்