கானல் வஞ்சம்
ராம்ப்ரசாத்

வாசங்களை விரவி
வண்டுகளை ஈர்க்கும்
பூக்களின் சூத்திரமறிந்த வண்டொன்று
வாசங்களைத் தாண்டிய வெளியில்
பறக்க முனைந்தது…
தவளைக் கிணற்றின் வெளியில்
மட்டுமே பழகும் பூக்கள்
அறியாமைப் பசலை கொள்கின்றன…
பசலையோடு வஞ்சத்தைப் புனைந்துடுத்தி
ஏனைய பூக்களுக்கும் அணிவித்து
நிரைக்கின்றன கிணற்றின் வெளியை…
வாசங்களின் வெளியைத் தாண்டும் வண்டு
இதையும் அறிந்தே இருக்குமென்று
தெரியாமல் நிரைகின்றது கிணற்றின் வெளி
அந்த வண்டைக் குறித்த கானல் வஞ்சத்துடன்….
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)