குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

தினேசுவரி, மலேசியா


தண்ணீர் வராது
திணறி
கொண்டிருந்த
ஏதோ ஒரு
தருணத்தில்தான்
குழாய் வழியாய்
என் ஆசைகள்
எல்லாம்
காட்டாறு போல்
ஓடுவதைக் கண்டேன்…..

தேவைகளுக்காகத்
தண்ணீர்
நிறைத்துக் கொண்ட
நாட்களை விட
இல்லாது போன
இந்த நாளில்
களவு போன
ஆசைகள் மிதப்பதில்
ஓர் ஆனந்தம்….

அதோ அப்பாவோடு
நான் வாழ
நினைத்த
ஆசைகள்
கடந்து செல்கின்றன…

இதோ
குறைந்த பட்சம்
அம்மாவோடு
வாழலாம் என்ற
ஆசைகளும்
கடந்து போகின்றன…

பின்னால்
சிறுமியாகவே
மழை பொழுதுகளில்
காகிதக் கப்பல்
விட நினைத்த
ஆசைகளும்
தொடர்ந்து கொண்டே…

திடீரென்று
வந்த
குழாய் நீரில்
ஆசைகள்
எல்லாம்
நின்று போக
மிஞ்சியது
கானல் நீர்…..

இன்றும்
எதிர்ப்பார்க்கிறேன்
இன்னொரு
தண்ணீர்
வராத நாளை…..

salthana82@yahoo.com.my

Series Navigation

தினேசுவரி,மலேசியா

தினேசுவரி,மலேசியா