அம்மம்மா கிழவி

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

கவிதா நோர்வே


சமயலறையில்தான்
உன்னை நான் அதிகம்
ஸ்பரிசித்தது

அரை அங்கியும்
ஒரு லுங்கியுமாய்
ஆரவமின்றி திரியும் உன்னை
அப்பொழுதெல்லாம்
உணரவில்லை நான்

உன் அதிக பட்சப்பயணம்
வேலிதாண்டி பனைவடலிவரைதான்
மிஞ்சி மிஞ்சி
அரசமரத்தடி அம்மன் கோயிலுக்கு…

வீட்ட வரும்
எல்லா பெடியன்களுக்கும்
அம்மாவாக எல்லாராலும்
முடிவதில்லை…

ஏழு பிள்ளை பெத்தும்
எட்டாவதா சிங்களகுட்டியொன்ட
எடுத்து வளத்தியாமே…
பெண்களிட்ட ரகசியமா
என்ற ஆண்மொழியைப்
பொய்பிக்க
நீ ஒருத்தி போதும்

முத்த மகன் இடதுசாரி
இளையவன் ரெலோவிலையும்
மருமகன் புலொட்டென்றும்
பக்கவீட்டு பெடியல் புலிப்யிலையுமாக
அத்தனை ரகசியங்களும்
சொல்வது உனக்குதானாமே

உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது
இவங்களை ஒருசேர
இருத்தி வைத்து
பொங்கிப்போட

நாலு வயதுவரை
நீ தலைகோதிக் கதைசொல்ல
நான் தூங்கியது
உன் பாயில் தானாம்

அதுக்குப்பிறகு
எங்கே போனாய்
கிழவி

கொய்யா மரநிழலில்
கல்லடுப்பு மூட்டி

நீயும் நானும் குந்தியிருந்து
வடை சுட்ட பாட்டி
நீயெல்லாம்
இப்ப கதையிலதான்

இப்ப
பொங்கி போட
நீயுமில்ல
குந்தி இருந்து தின்ன
அங்க யாருமில்ல!

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே