தீபச்செல்வன்
தானியங்கள் வீடுகளில்
நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய
கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.
துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.
எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள்
வேரோடு அழிந்து விட்டன.
ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.
எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.
எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை
நான் சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும்
தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.
இந்த பொதிகளை
வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.
செல்கள் முற்றங்களை
மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து
மணக்கின்றன
விமானங்கள் வானங்களை
பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம்
சூறையாடுகிறது.
எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.
சாம்பல் நாகரிகத்திற்கு
கிராமங்களை
பறிகொடுத்து விட்டு
போவதைப் போலிருக்கிறது
நதிகள் வற்றிவிட்டன
நமது பறவைகளின்
முட்டைகள்
கரைந்து விட்டன.
வேர் சிதைந்துகொண்டிருக்கிறது
இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.
உற்றுப்பாருங்கள்….
இங்கு இரவாயிருக்கிறது.
நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
deebachelvan@gmail.com
- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- கடிதம்
- தன் வினை
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- எனது துயரங்களை எழுதவிடு…!
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- கடிதம்
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- தவறாமல் வருபவர்
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- காலத்தின் தழும்புகள்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- தேரோட்டி இல்லாது !
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33