‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ருத்ரா


( ‘ ode on the broken things ‘ poem by Pablo Neruda.)

இந்த
வீட்டைப்பாருங்கள்.
உள்ளே நுழைந்து
அடித்து நொறுக்கிய
அசுரர்கள் யார் ?
கண்ணுக்குத்தெரியாத
அந்த பிணம் தின்னிகளின்
கைகள்
இன்னும் இங்கு
துழாவிக்கொண்டேயிருக்கின்றன.
அந்த நரம்புகளை
ஊடுருவிப்பாருங்கள்.
மனிதநேயம்
பாய்ந்தோடும்
நாளங்கள்
அதில் தெரிகின்றனவா ?

இல்லை.
அது
என் கைகள் அல்ல.
உங்களுடையதும் அல்ல.
ஏன்…
அழகிய மென்காந்தள்
விரல்களுடைய
அந்த பெண்களின்
மின்னல் கீற்றுகள்
தெறிக்கும்
நீள் நெடும் நகங்களும் அல்ல.

ஏதோ
இந்த பூமிக்கு
காக்காய் வலிப்பு
வந்து விட்டதா என்றால்
அதுவும் இல்லை.
மரண ஓலங்களின்
இந்த சில்லுகளில்
இரத்த விளாறுகள்
கனமாய்
மெளனம் கசியும்.
அதுவா ?
அவனா ?
அவர்களா ?
அதன் கனபரிமாணம் என்ன ?
உறைந்து போன
காலத்திரவம்
எங்கிருந்தோ வந்து பாய்ந்து
இங்கு
கண்ணாடித்துளெ¢களாய்..
சூரியன் கூட
அதில்
ஏழுவர்ண ரத்தச்சேறாய்..
கண்கள்
குதறப்பட்டு கிடக்கின்றன.
அந்த
மூச்சுக்காற்று
சடலத்தைச்சுற்றி மூடும்
சல்லாத்துணியாய்..
ஊழிக்காற்றின்
ஊசல் வாடை !
இருப்பினும்
அது
மெல்லிய பூக்களில்
கீதம் பாடும்
அந்தக் காற்று இல்லை.

இடிந்து
தூளாகிப்போவற்கும் கூட
முகூர்த்த நேரம்
குறித்தார்களா என்ன ?
மப்பும் மந்தாரமுமாய் ஆன
ஒரு பட்டப்பகலில்
வெற்றிலை குதப்பிய எச்சிலாய்
மஞ்சள் பூசிய சிவப்பு நிறம்
அங்கு படரவில்லையே.

சவ்வு மூடியது போல்
கவ்விப்பிடித்திருக்கும்
இரவுப்பொழுதும்
அல்ல அது.
வீட்டுக்குள் வந்து
நெட்டித்தள்ளிய
அது
என்னவாய்த்தான் இருக்கும். ?

உடம்புக்குள்ளிருந்தே
எதோ ஒன்று
வீங்கிப்புடைத்து வந்து
வீதியில் துகெ¢கி
எறிந்தாற்போல்
என்ன அது ?

மூக்கு நீட்டிநுழைத்து
முழங்கையால்
முட்டித்தள்ளி
கொழுத்த இடுப்பினால்
இடித்துக்கொண்டு
கணுவேறிய
முரட்டுக்காலால் இடறி
சூறாவளிபோல்
இப்படி
சூரைத்தேங்காய்
உடைத்த
அந்த ராட்சசன் யார் ?

தட்டுகள் உடைந்தன.
விளக்குகள் வீழ்ந்தன.
பூக்குவளைகள்
ஒன்றன்பின் ஒன்றாய்
விழுந்தன.
வெட்டுண்ட தலைகள் போல
என்ன பயங்கரம் அது !

உருண்டு உருண்டு
கிடக்கும்
அந்த குவளகளைப்பாருங்கள்.
அதில் ஒன்று
அக்டோபர் மாதத்து
செஞ்சிவப்புக்கனவுகள்
நிறைந்து
பிதுங்கி வழிய வழிய
நின்றது
இப்போது
பிணம்போல்
விறைத்துக்கிடக்கிறது.

ஒன்றை யொன்று
வெட்டிச்சாய்க்கும்
வியாபாரத்தின்
வெறிவண்ணச்சாயம்
பூத்து பூத்து அலுத்த
அந்த ஊதாப்பூக்கள்
சோப்புக்குமிழிகளை
ஊதி ஊதிப் பரப்புவதுபோல்
அந்த இன்னொரு
குவளையும்
தட தடவென்று உருள்கிறது.
ஆனால்
வீடு எங்கும்
துவெிக்கிடப்பதோ
மாயமாய் கேட்கும்
துப்பாக்கியின் குமிழிகள்.

மண்குவளைகள் உடைந்து நொறுங்கி
துளொயின.
எலும்புக்குள்ளும்
பொடி பொடியாக்கும்
ஒரு குளிர்காலத்து
கோர தாண்டவம் அது.
அந்த துசெிப்படலத்திலும்
நம் ஜிகினாக் கனவுகள்.
உடல்கள்
இன்னும் பிணமாகவில்லை .

அதோ
காலம் காட்டும் கடிகாரம்.
இது வரை
‘டிக் டிக் டிக்… ‘ களின்
அந்த ஓசை
நம் உயிரோடு
ஊன் பிசைந்து
உருட்டி உருட்டித் தந்ததுெெ
உருத்தெரியாமல் கிடக்கிறது.

வினாடிகளை வீங்கச்செய்து
நாட்களாக்கி
நாட்களை நீட்டி நீட்டி
நாக்குப்பூச்சிளாக்கி
நம்மைத்தின்று செரித்து
வாரங்களாய் மாதங்களாய்
அந்த சுவர் ஓரம்
எச்சமிட்டு வீசியெறிந்தது கூட
இப்போது
நொறுங்கிய
நினைவுப்படிகங்களாய்
சுக்கு நுறொய்
மக்கிக்கிடக்கிரது.

தனித்தனியாய்
கழன்று போன
அந்தகடிகாரமுள்
இதுவரை
முத்தமிட்டு முத்தமிட்டு
மண்மூடிப்போன
அந்த எண்கூட்டங்களின்
இடையே கிடக்கும்
ஊடு நுலெில்
அறுந்துபோனதுபோல்
ஆனால்
அறுந்துபோகாத
ரகசியம் ஒன்று
நெஞ்சைத் திருகி
ரணம் ஆக்குகிரது.
கோழித்தலை திருகப்பட்டது போல்.

எத்தனை இனிமையான தருணங்கள்!
மோனப்பிழம்பின் தேன் இனிப்பில்
முறுக்கிப்பிழிந்த ஜாங்கிரிகளாய்
திகட்டிக்கிடந்த
சிந்தனை முகடுகள்.
எல்லாமே பாழ்! பாழ்1

உயிர்பூசிய
மாமிசப்பிண்டமாய்
மண்ணில் வந்து நான் விழுந்த போது
அது தானே
மணியடித்து
என்னை எதிரொலித்தது.
ஒசைகளையே
பூச்செண்டுகளாக்கி
புல்லரிக்க வைத்து
என் மீது நீட்டியது.

எனது வேலைகளுக்குள்
எல்லாம் அது
செங்கோல் ஓச்சியது.
இப்போது
கருநீல ரத்தம் கசியும்
அதன் இரும்பு நரம்புகள்
எட்டுக்கால் பூச்சியாய்
கீறல் விழுந்து நொறுங்கிய
அதன் கன்ணாடி முகத்தின்
வழியே
என்னை ஊடுருவிப்பார்க்கிறது.

அந்த சுருள்கம்பியின்
அதிர்வுகளில்
அழுகின்ற வீணையின்
முனகல்கள்
பண்கூட்டுகின்றன.
ஆவி போன ஒரு உடலின்
கட்டு தளர்ந்தது போல் இருந்தாலும்
அறை எங்கும் இறுக்கம்.
என் மூகத்தின் மீதே
என் சவப்பெட்டியின்
கூரிய ஆணி அடிக்கப்பட்டது போல்
அதிர்ச்சியில் உறைந்து
நான் காத்துக்கிடக்கிறேன்.
காத்துக்கிடப்பது புழுக்களும் தான்
என்னைத்தின்ன!

தினம் தினம்
அரவை எந்திரங்களிடையே
வாழ்க்கை.
கண்ணாடித்துகள்கள் தோறும்
‘கலைடோஸ்கோப் ‘ தேடல்கள்.
நம் மரபுகள்
இற்றுப்போன கந்தல்களாய்
நம்மை
உடுத்தியிருக்கின்றன.

இந்த
சின்னாபின்னங்களே
நம்மை
சாட்சிசொல்லும்
சின்னங்கள்.
‘வண்டு உருட்டாம்பழங்கள் ‘
எனும்
அசிங்கங்களின்
உருண்டைகளாய்
இந்த காலம்
எங்கே
நம்மை இப்படி
உருட்டிக்கொண்டு போகிறது ?

காலக்கடலில்
கரை தெரியவில்லை.
தீவுகளுக்காக ஏங்கும்
கப்பல்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைகின்றதோ ?

இது
காகிதக்கப்பல் கூட இல்லை.
நுரைகளைவைத்து
கட்டிய கப்பல் இது.
உடைந்த பிணங்களையெல்லாம்
அள்ளிக்கொண்டு போகும்
இந்த
அதிசய ‘நோவா ‘க்கப்பல்
எலும்புச்சிலுவைகளையும்
உயிரற்ற ‘ஜீவ அப்பங்களையும் ‘
வகைக்கு ஒன்றாய்
எடுத்துக்கொண்டு
எங்கே விரைகின்றது ?

புயல் அரக்கன்
‘ப்பூ ‘ வென
ஊதிடுமுன்பாகவே
காணாமல் போய்விடும்
அபாயம்
இங்கே இமைபோல
கவிந்து கிடக்கிறது
இந்த கப்பலின் மேல்.

தகர்த்துவிடும் வெறியில்
கடலின் அந்த
முரட்டு அலைகளின் முழுநீள
நாக்குகள்
உயர்ந்து எழுந்து
ம்ரணச்சுவைக்காக
வீசி வீசி நக்கியதில்
நீலவானமே
கருண்டு இருண்டு போனது.

அது கடல் அல்ல.
நம் உடல் அது.
மீண்டும் அதிலிருந்து புதிதாய்
உயிர் தரிப்போம் வாருங்கள்.
நம் கருவூலங்களையெல்லாம்
ஒன்று குவிப்போம்..
இந்த கடிகாரம்
அந்த தட்டுகள்
குளிரில் விறைத்து
வெடவெடத்து உடையப்போகும்
அந்த கோப்பைகள்
இன்னும்
அதிலிருந்து நொதிக்கும்
உமர்கய்யாம் உன்மத்தங்கள்
மனிதநேயம் எனும்
பட்டாம்பூச்சிகளை
கூழாக்கிக்கொண்டு உருளும்
மதம் பூசிய
ஆளுகை வெறியின்
பாறாங்கற்கள்….
இன்னும் இன்னும்
எல்லாவற்றையும் மூட்டைகட்டி
அந்த கடலில் வீசுவோம்.

இந்தக்கடலோடும்
மோதுவதற்கு
பேரிரைச்சலோடு
பெருகி வரும் அந்த காட்டாற்றில்
வெறும் ரத்தம் சொட்டும்
அந்த உடைமை வாசனைகளையெல்லாம்
மூழ்கடித்துவிடுவோம் வாருங்கள்.
கடலையே பிளந்து கொண்டு
கைகள் முளைக்கட்டும்.
கடலுக்குள் ஆறா ?
இல்லை
இந்த ஆற்றுக்குள் கடலா ?
எது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
நொறுங்கிப்போகட்டும்
கவலையில்லை.
மீண்டும் இந்தக்கடலை
உற்றுப்பாருங்கள்.
அது உங்கள் உடல்.
உங்கள் வேர்வை ஊறும் உடல்.
இந்த
உப்புக்கரித்த
மூச்சுஅலைகளின் அடியில்
உப்பரிகைகள் எல்லாம்
இனி துளெ¢! துளெ¢!

அந்த
உபயோகமற்றதுகளைப்பற்றி
இன்னும் என்ன கவலை ?
சூனிய வானத்தைப்போல
வெளிறிப்போய்
சோகைபிடித்து
மூளியாய்….
பிய்த்து தின்ன
அது என்ன ‘பீட்ஸாவா ‘ ?

பிக்காசோ கூட
துரெிகையை
ஒடித்துப்போட்டுவிட்டு
துரெப்போய்விடுவான்.
ஆவேசம் ,சினம்
கூட வர்ணம் தான்.
வரைவதற்கு
கோபத்தின் கிளர்வு எனும்
திரைச்சீலை இல்லாமல்
வறட்டு நிர்வாணத்தில்
ஏது
உணர்ச்சியின் பிஞ்சுகள் ?

உடைந்து போன பாத்திரங்களே!
இதற்கு மேலும்
உடைந்து போக
உங்களிடம் ஒன்றும் இல்லை.
சிதிலங்களின்
சித்திர கவிகளே!
ஆனாலும்
இன்னமும் நீங்கள்
நொறுங்கத்தான் போகிறீர்கள்.
உடைந்து போன
கையை மறந்து விட்டு
வண்ண வண்ணமாய் மினுக்கி
உடைந்து கிடக்கும்
வளையல் துண்டுகளுக்கு அல்லவா
ஒப்பாரி
வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

====

இது ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல.
இது ஒரு கவிதையின் கவிதை.
கவிதைக்கு
கவிதையைக்கொண்டு
பொழிப்பு உரை எழுதிய
கவிதை இது.

====ருத்ரா.

Series Navigation

ருத்ரா

ருத்ரா