வேலிகள் உயரும்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ஈழநாதன்


பெண்ணின்
பூப்படைதலுடன்
வீட்டு வேலியை
ஒரு வரி உயர்த்திக் கட்டும்
அப்பாக்கள்.

வெளியே போய்
வீடுவரும் போதெல்லாம்
வேலியை ஒருதரம்
சரிபார்க்கும்
அம்மாக்கள்.

முப்பது வயதெட்டியும்
முதிர்கன்னியாய்,
தான் விடும் மூச்சுக்களை
தணிக்கை செய்யும்
வேலிகளை
திட்டும்
பெண்கள்.

பொட்டுக்குள்ளால்
கால் தெரிய
எட்டிப் பார்த்தும்
எதுவும் தெரியாமல்
வேலியைச் சபிக்கும்
இளசுகள்.

எவரைப் பற்றியும்
கவலைப்படாமல்
ஏறிக்கொண்டிருக்கும்,

சீதனச் சந்தையும்
கிடுகு விலையும்!

ஈழநாதன்

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்