இசை ஒவியம்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


வனாந்திரத்தில்
வார்த்தையில்லா சத்தம்.

ஓடும் நீரின் சலசலப்போடு
ஓரொலி.

உதிரும் சருகின் ஓட்டத்தோடு
ஓரிசை.

சிறகசை வெளிகளில்
சிந்தும் சிந்து.

குயிலின் திசையில்
கூடும் ஒரு குரல்.

பாட்டுக்கு
எதிர்ப்பாட்டு.

உள்ளத்தைத் தேடவைக்கும்
கற்றைக் கத்தல்…

அந்தச்
சத்தத்தின் சங்கதி என்ன ?

அது
பார்க்காத பறவையின்
பாடும் குரலா ?

பறக்காது சிக்கிய
பாவத்தின் பாடலா ?

ஒரு நேரம் கூடும்
உணர்ச்சியின் உச்ச சுதியா ?

அது
பாடும் பறவையினாலா ?
இல்லை
ஆடும் மரங்களினாலா ?

உதடிலைகள்
உரசும் மரங்களின் ஒத்திசைப்பா ?

இடியின் வடிவமாய்
ஒடியும் மரங்கள்….
அதில்
கொடியாய்ப் படர்ந்த மின்னல்
கலையும் நிலையில்
விளையும் ஒளியா
ஒளியின் ஒலியா ?

இரகசியத்தின் இராகமா
கூப்பிடும் மனசின் குரலா
அசைவின் அசையா
இசைவின் இசையா ?

எம்மொழிக்குமில்லா சொற்களில்
எதுகை மோனையோடு
இயம்பும் கவியா ?

அந்தச்
சத்தத்தின் சங்கதி என்ன ?

ஆதியில் மனிதனுக்கு
அத்தனை சந்தேகம்.

திரும்பியிருந்தபோது
தெரியாது கிள்ளிய பூவுக்கு
பக்கத்து இலை பதறியதுண்டா ?

துளிர்ப்பதில்
துளைத்திருப்பதைப் பார்த்து
கட்டில்
காற்று ஏன் கத்தியது ?

காட்டுக்குள் திரிந்த மனிதன்
கண்டு பிடித்துவிட்டான்….

கேட்டுக் கேட்டுத் தேடிய….
அந்த
ஓவிய ஓசை பார்த்துவிட்டான்.

அதோ
அவன் கையில்….

மூச்சுக்காற்றை மூடித்திறக்க
வெட்டிய கழிக்கு வேர்கள் கிளைக்கும்
மனசின் மண்ணில் இசையாய் இறுகும்.

வண்டு மூங்கிலில்
வடிவமைத்த புல்லாங்குழல்.
—-
thamilmathi@yahoo.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி