சிறகுகள்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சிவஸ்ரீ


பறப்பதாய் நினைத்து
மிதந்த அம்மா வயிற்றுக்குள்
கட்டி வைத்திருந்தது
ஒட்டிய தொப்பூழ்கொடி

தரையெழும்பி நின்றபோது -வான்
வரையெழும்பப் போவதாய்த்
தாள்நீட்டிக் கைவிரிக்க
தோள்வரை மட்டும் தூக்கி
இறக்கி விட்டார் அப்பா

சறுக்கு மரங்களும்
சங்கிலி ஊஞ்சல்களும் -பறக்கும்
வித்தையை வசப்படுத்துமென
தத்தியேற… இழுத்து இறக்கியது
புவியீர்ப்பு விசையா ?
புத்தகப் பையா ?

காது குடைந்த பிறகும்
காயத்துக்கு மருந்திட்ட பிறகும்
தூக்கி யெறியவில்லை இறகுகளை
அவை சிறகுகளாகும் மலைப்பில்

பின்னொரு நாள்…

வானை அளந்த களைப்பில்
தோளில் வந்தமர்ந்த புறாவைத்
தடவிய போதும்
வேதனை அளந்த கண்களுடன்
தோளில் தலைசாய்ந்த நண்பனைத்
தட்டித் தந்த போதும்

பறத்தலை விட -சக உயிர்களைப்
புரத்தல் பெரிதென் றுணர்த்திய
தோள்களை விடவா
சிறந்தவை சிறகுகள் ?

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ