வைரமுத்துக்களின் வானம்-3

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ருத்ரா


**
(குமுதம் 22-09-03 இதழ்)

**
ஆயுள் வேதம் பற்றி

அருமையாய் ஒரு கவிதை.

கவிச்சக்கரவர்த்தியே!

உங்கள் சாம்ராஜ்யம்

கவலைகளின்

கவிதைத்தொகுப்பா என்ன ?

இரத்தநாளங்களுக்குள்

ஆயிரம் மின்னல் வெட்டிய

களைப்பா இது ?

ஆர்மோனியக்கட்டைகளுக்குள்

படுத்துக்கிடக்கும்

ஆதாம்-ஏவாக்களை

நிமிண்டி எழுப்பி

சுருதி சேர்த்த சொற்கள் அல்லவா

உன்னுடையவை!

செத்துப்போய்

அந்த மண்புழுக்களோடு

மக்கிக்கிடந்தாலும்

உன் கவியரங்கக் குரல்

கேட்கும்

பாதாளசொர்க்கம்

தினம் தினம்

அங்கே அரங்கேறும்.

நம்மிடமிருந்து

ஐம்பது ரூபாயை பிடுங்க

ஆயிரம் ரூபாய் செலவழிக்கும்

விளம்பர யுகம் இது.

இதன்

சக்களத்தியான

சினிமாவோடு

குடும்பம் நடத்திய பின்

இந்த ‘குமுத ‘ நிழலில்

சற்று கண்ணயர வந்த

கவி முகிலே!

விடலைகளை

விண்டு பிளந்து

அந்த இதயங்களை

பிடுங்கி வைத்துக்கொண்டு

அதில்

பிக்காசோ ஓவியங்கள்

எத்தனை காட்டினாய் ?

வாழ்க்கையை

மூளி ஆக்கிய

அந்த கோட்டுச்சித்திரங்களுக்குள்

காமத்துப்பால் ஊட்டி

காதல் எனும்

மயிற்பீலிகொண்டு

மாயாஜாலம் காட்டிய

மந்திரவாதியே!

கவிதைகளின்

விட்டலாச்சாரியாவாய் நீ

மலிவாகிப்போனதை

நினைத்து

மனம் வலித்ததுண்டா ?

மார்கழி மாதத்து

தெரு ‘நாய்ஸ் ‘ எல்லாம்

‘பாய்ஸ் ‘ முகமூடிகளில்

நகர்வலம்

வந்து கொண்டிருப்பதில்

உனக்கு பங்கில்லை என்று

அவ்வளவு சுலபமாக

துண்டை உதறித்

தோளில் போட்டுக்கொண்டு

சென்று விடமுடியாது.

உன் இதய அழுத்தத்தின்

பாத ரசக்குறியீடுகளை

இன்று கணக்கெடுக்க

கிளம்பியிருக்கும் நீ

சினிமா ஆற்றில்

கொட்டிய

உன் கம்பரசத்தைப்பற்றி

என்றேனும் கவலைப்பட்டதுண்டா ?

இளைய பாரதம் காண

ஒளிபடைத்து

வந்தவர்களிடையே

ஒளிந்திருந்து வந்த நீ

அவர்களுடைய

‘சுக்கிலச் செலவில் ‘

ஒரு வக்கிர பாரதம்

வடிவமைக்க அல்லவா

அந்த சினிமா இருட்டை

இவர்கள்

கோப்பை நிறைய நிறைய

நீ ஊற்றினாய்.

இந்த இளைஞனின்

நுரையீரல்கள்

வெறும் ஈரல்கள் அல்ல

பிராணவாயுவை சுவாசிப்பதற்கு.

அவள்

வீசியெறிந்த

பூங்கொத்துகள் அவை.

அதனால்

சுவாசிப்பதற்கு

காதலைத்தவிர

வேறொன்றும் இல்லை

அவனுக்கு

என்று

ஒரு ஆறாம் பூதத்தை

அவன் ஆவிக்குள்

வைத்து

தைத்த பாவியல்லவா நீ!

அந்த காம சுவாசத்தை

இராட்சத

நிரோத் பாலூனாக்கி

அதைக் கவ்விக்கொண்டு

பறந்து பவனி வரும்

இந்த ‘பாய்ஸ் ‘ எங்கே ?

ஒரு இராட்சத பலூனிலிருந்து

விடு பட்டு ‘பாராச்சூட் ‘ மூலம்

ஜிப்ரால்டர் கடல் பரப்பை

கடந்த அந்த ‘பாய்ஸ் ‘ எங்கே ?

ஒரு அறிவியல் உண்மையைக்

கண்ட மகிழ்ச்சியில்

ஆடை கட்ட மறந்து

யுரேகா யுரேகா என்று

வீதியில் ஓடிய ஆர்க்கிமெடாஸ் எங்கே ?

காதலி

நிர்வாணமாய் ஓடச்சொன்னாள்

என்பதற்காக

அண்ணா சாலையை

ஆபாச சாலையாக்கிய

இந்த அரைவேக்காடுகள் எங்கே ?

விஞ்ஞானம் நிர்வாணமான போது

அங்கே அறியாமை வெட்கப்பட்டு

ஆடையுடுத்திக்கொண்டது.

இங்கே

இந்த கம்பியூட்டர் மனிதர்கள்

நிர்வாணமான போது

காட்டுமிருகங்கள்

ஆடை அணிந்து கொண்டன !

‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் ‘

என்று

ஒரு ஆழமான புத்தகத்தை

தந்தவன் அல்லவா நீ !

நீ கல்லெறிந்து விளையாடிய

சினிமா எனும்

இந்த கூவத்தைப்பார்த்தாயா ?

கூசவில்லயா சீத்தலைச்சாத்தனே!

உன் தலையை கொஞ்சம்

குத்திக்கொள்.

ஒப்புக்காக

இளைஞர்கள்

ஒரு சாதனையைப்

படைக்க கிளம்பியதாய்

காட்ட

அதற்கு முன் அவர்கள்

ஒரு சாக்கடையில்

கலர் கலராய்

ஜலக்கிரீடை செய்கிறார்கள்

மறந்து விடுங்கள் என்று

ஷங்கர் காட்டுவதும்

ஒரு பாசாங்கு தான்.

காதல் எனும்

ரோஜா நாற்றுகளுக்கு

நான் கவிதையில்

தண்ணீர் வார்த்தது

ஒரு வரலாற்றுக் கட்டாயம் தான்.

ஆனால்

இந்த கள்ளிப்பூக்கள்

செழித்து வளர்ந்ததற்கு

நான் என்ன செய்வேன்.

என்பது உனது பாசாங்கு.

கவிப்பேரரசே!

இதற்கு நான்

எப்படி பொறுப்பு

என்று நீ கேட்பது

புரிகிறது.

சினிமா எனும்

அந்த இருட்டுக்கல்லறையிலிருந்து

அடிக்கடி

காதல் ‘டிராக்குலாக்களை ‘

உன் கவிதைகளால்

உச்சாடனம் செய்து

எழுப்பியவன் அல்லவா நீ.

வசூல் கோட்டைகள்

கட்டுவதற்கு

உள்ளத்தின் உள்ளுக்குள்

இருக்கும்

காக்கா வலிப்புகளை

‘கிராஃபிக்ஸ் ‘ ஆக்கி

நிர்மாணிக்கப்பட்ட

அந்த சினிமாவின்

கோட்டை கொத்தளங்களிலிருந்து

கிறீச்சிட்டுக்கொண்டு வந்த

அழகிய ராட்சசிகளுக்கும்

காதல் பிசாசுகளுக்கும்

அடிச்சுவடுகள்

அமைத்தவன் நீ தானே!

டாக்டர்கள்

மருந்து சீட்டில்

கவிதையெழுத

அதற்கு

உன் ‘பரிமேலழகர் உரைகள் ‘

பக்குமாய்த்தான்

பிரசுரம் ஆகியிருக்கின்றன.

இந்த

பிரபஞ்சத்தை

அல்குல் ஆகவும்

அக்குள் ஆகவும்

பிலிம் காட்டும்

பத்துப்பாட்டும்

எட்டுத்தொகையும்

எப்போதும் கிடக்கின்றன

உன் ஜிப்பாப் பாக்கெட்டில்

தீப்பெட்டியும் பீடிக்கட்டும் போல.

புளுக்கைப் பென்சிலை

எச்சில் தொட்டுக்கொண்டு

எழுதும்

பள்ளிக்கூடச் சிறுவனைப்போல்

‘மலை படு கடாமையும் ‘

‘நெடுநல் வாடையையும் ‘ கூட

தொட்டுக்கொண்டு

நீ எழுதிய

‘பால் ‘ மரக்காட்டுக் கவிதைகள்

‘பாய்ஸ் ‘ பெருங்காடாய்

பற்றிக்கொண்டு எரிவதை

உனது

இந்த ஈசிச்சேர் கவிதைகளா

வந்து அணைக்கப்போகின்றன ?

மரணத்துக்கு

மரணம் நடத்த வந்த

சாகா வரம்பெற்ற

கவிஞனே!

லொக் லொக் என்று

இருமுவது போல்

ஏன் இந்த

கபம் தள்ளூம்

கவிதை ?

இதயத்தின்

‘லப் டப்புக்குள் ‘

பூச்சி பிடிக்க

புறப்பட்ட புதுக்கவிதை ஏன் ?

நீ

கவிதைகளின் வைரம்.

இந்த தூசுகளுக்கு

உன்னை

பாராட்டும் தகுதியில்லை.

அந்த வைரத்தின்

சுடர் என்னும்

நீண்ட ஆயுள் விரும்பும்

நண்பனும் நானே!

அந்த சுடரை

மறைக்கும்

சினிமா இருட்டின்

நூலாம்படைகளுக்கு

அற்ப ஆயுள் ஏற்படட்டும்

என விரும்பும்

எதிரியும் நானே!

மனிதனின் பயணத்துக்கு

வரிசையாய்

நட்டுவைத்திருந்த

மைல்கற்களில்

மாவுச்சத்தும்

கொழுப்புச்சத்தும்

அடைத்துகிடப்பதைக்கண்டு

அவலச்சுவையில்

அகவல் பாடிய

அருமைக்கவிஞனே

அகவைகள் நூறு போதாது

உன் அருந்தொண்டுக்கு.

நூறு என்ன

ஆயிரம் என்ன

கோடி லட்சம்

ஆண்டுகளுக்கு

முன்னும் பின்னும்

நீண்டு இருப்பது அல்லவா

உன் கவிதை.

தொடங்கும்போதே

முற்றுப்புள்ளி

விழுந்துவிடும்

மற்றவர்களின்

வாக்கியங்களிடையே

முற்றுப்புள்ளியைத்தேடி

முன்னூறு ஒளியாண்டுகள்

கடந்தும்

களைத்துப்போகாத

கவிதை வாக்கியம்

அல்லவா நீ!

ஆதலால் தான் சொல்லுகிறேன்

இனியும்

இந்த இனிய

இலக்கியவானத்தை நோக்கி

நச்சுப்புகையால்

நக்கிப்பார்க்கும்

வியாபாரிகளோடு சேர்ந்து

‘ஓஸோன் ஓட்டைகள் ‘

போடுவதற்க்கு

உன் பேனாவை கூர் தீட்டாதே.
***
epsi_van@hotmail.com
kasthurisivan@eth.net

Series Navigation

ருத்ரா

ருத்ரா