‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

கரு. திருவரசு


தென்றலாய் வருவான் ஒருவன் – நான்
தெரிந்துகொண்டேன் அவன் முருகன்!
நன்றெல்லாம் எனக்கென ஒருவன் – அவன்
நானல்லன் முருகா மனிதன்! – தென்றலாய்

அழகுக்குத் தலைவன் ஒருவன் – அவன்
அணிசிந்தும் இனியன் முருகன்!
தொழுதுன்றன் புகழ்பாடி வருவான் – அவன்
இவனல்லன் முருகா கவிஞன்! – தென்றலாய்

இளமையின் வளமாய் ஒருவன் – அவன்
என்றென்றும் இளைஞன் முருகன்!
வளமையும் செழுமையும் விழைவான் – அவன்
நானல்லன் முருகா மனிதன்! – தென்றலாய்

அருவியின் இதமாய் ஒருவன் – அவன்
அருளென்னும் அருவி முருகன்!
கருவென்றும் திருவென்றும் வருவான் – அவன்
கதையென்ன என்றால் கவிஞன்! – தென்றலாய்

தேனாக இனிப்பான் ஒருவன் – தமிழ்த்
தெய்வமாம் அவனே முருகன்!
நானாஉன் இசைபாடும் கவிஞன் – அதை
நடத்திச் சுவைப்போனே முருகன்! – தென்றலாய்

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு