தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சின்னக் கருப்பன்


செஞ்சிலுவைச் சங்கம் ஹென்றி டுனாண்ட் (Henry Dunant) என்பவரால் 1863இல் தோற்றுவிக்கப்பட்டது. இது உலகளாவிய நாடுகள் இணைந்த ஒரு மாநாட்டால் ஒப்புக்கொள்ளப்பட்டு போரில் காயமுறும் போர்வீரர்களுக்கு மருத்துவ உதவியை எந்த நாட்டினர் என கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கொடுக்க இந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சின்னமாக வெள்ளைக் கொடியில் சிவப்பு சிலுவை ஒப்புக்கொள்ளப்பட்டது. இது 1864இல் ஜெனிவா கன்வென்ஷனில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

1876இல் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நடந்த போரின் போது ஒட்டோமான் பேரரசு சிவப்பு சிலுவைக்குப் பதிலாக சிவப்பு பிறையை உபயோகிக்க முனைந்தது. எகிப்து நாடும் சிவப்பு பிறையை தன்னுடைய அமைப்புக்கு சின்னமாக ஏற்றுக்கொண்டது. பெர்ஷியா (ஈரான்) நாடு சிவப்பு சிங்கமும் சூரியனும் இருக்கும் ஒரு சின்னத்தை தன் சின்னமாக ஏற்றுக்கொண்டது. இந்த சின்னங்கள் 1929 ஆம் ஆண்டு நடந்த மாநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால், 1980க்குப் பின்னால், ஈரான் இஸ்லாமிய குடியரசு பழைய சிங்கம் சூரியன் சின்னத்தை விட்டுவிட்டு சிவப்பு பிறையை தன் சேவை நிறுவன அமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொண்டது.

கலாச்சார மற்றும் மத ரீதியான சின்னங்களுக்கு மாற்றாக உலக செஞ்சிலுவைச் சங்கம் கலாச்சார சார்பற்ற ஒரு சின்னத்தை முன் வைக்க வந்தது. அது சிவப்பு வைர சின்னம். அதுவும் வேண்டாம் என்று இன்று சிவப்பு செவ்ரான் சின்னத்தை முன் வைக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறது.

இதன் நடுவே Magen David Adom (Red Shield of David) என்ற ஒரு சின்னத்தை இஸ்ரேல் தன்னுடைய செஞ்சிலுவைச் சங்க சின்னமாக 1949 முதல் உபயோகப்படுத்தி வருகிறது. இது இஸ்ரேல் கொடி வெள்ளையாகவும், சிவப்பு டேவிட் நட்சத்திரம் கொண்டும் இருக்கும். ஆயினும், இந்த சின்னம் இதுவரை செஞ்சிலுவைச் சங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அரபு நாட்டு அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த சின்னம் செஞ்சிலுவைச் சங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தின் பணம் எந்த சேவைக்காகவும் இந்த அமைப்புக்குத் தர இயலாது. அரபு லீக் மாநாட்டில் சமீபத்தில் இந்த அமைப்பு எந்த காரணம் கொண்டு செஞ்சிலுவைச் சங்க அமைப்பாக அறிவிக்கப்படுவதற்கு அரபு நாடுகள் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

சமீபத்தில் அமெரிக்க உள்துறை மந்திரி காலின் பவல் இந்த அமைப்பை அங்கீகரிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

***

ஆசிய நாடுகள், முக்கியமாக இந்தியா சீனா போன்ற பெரும் நாடுகள் கிரிஸ்துவ நாடாகவோ அல்லது இஸ்லாமிய நாடாகவோ இல்லாமல் இருந்தாலும், அவை செஞ்சிலுவைச் சங்கத்தை தன்னுடைய நாட்டின் கலாச்சார மத ரீதியில் மறு பார்வை பார்ப்பதை முக்கியமாகக் கருதவில்லை.

தமிழ்நாட்டில் குக்கிராமத்திலும், மருத்துவமனை என்பதைக் குறிக்க, கிரிஸ்தவர்கள் அல்லாத மருத்துவர்கள் கூட தன்னுடைய மருத்துவமனை முன்னர் சிவப்பு சிலுவையை வரைந்து வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு நூற்றாண்டாக இந்தியாவில் கிரிஸ்தவ தொண்டு நிறுவனங்களும் மிஷனரிகளும் மருத்துவ மனை மூலம் சேவை செய்ததினால் மருத்துவ மனை என்றாலே அது கிரிஸ்துவ மருத்துவமனை என்ற அளவுக்கு வந்துவிட்டது. ஆனால் சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் நிறைய மருத்துவ உதவியை பணத்துக்கு தர முன்வந்திருக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனை ஆரம்பித்து, இன்று இந்தியாவெங்கும் மருத்துவமனைகள் தனியாரால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்துவருகின்றன.

மருத்துவதுறை மதம் சார்ந்த துறை அல்ல. போரின் போது இறக்கும் மனிதர்களுக்கு மத சார்பு இன்றி, நாட்டுச் சார்பு இன்றி மருத்துவ உதவி தரவேண்டும் என்ற நோக்கம் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இருந்தாலும், அது இன்று இஸ்லாமிய நாடுகளின் செம்பிறை, யூத நாட்டின் சிவப்பு நட்சத்திரம் போன்றவைகளால் மத போர்வை போர்த்திக்கொண்டு விட்டன என்றுதான் கூறவேண்டும்.

ஐசிஆர்சி என்னும் உலக செஞ்சிலுவைச் சங்கத்தில் செஞ்சிலுவை செம்பிறை செந்நட்சத்திரம் போன்ற அமைப்புகள் அங்கீகரிக்கப்படும் வரை, இந்தியா, சீனா, வியத்நாம், லாவோஸ், இலங்கை, தாய்லாந்து, திபெத், நேபால், பர்மா போன்ற நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற உணர்வுதான் வருகிறது. இவைகள் ஏன் செஞ்சிலுவையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கேள்வியும் வருகிறது. இன்றைய செஞ்சிலுவைச் சங்கம் தன்னுடைய பெயரை சிவப்பு சேவை நிறுவனம் என்று மாற்றிக்கொண்டு தன்னுடைய சின்னமாக எல்லா நாட்டு அமைப்புக்களும் ஏற்கும்படி சிவப்பு செவ்ரான் சின்னத்தை ஏற்றுக்கொள்ளும்போது அது அனைத்து மக்களுக்குமான உலகளாவிய சேவை நிறுவனமாக இருக்கும். ஆனால் அது உடனே வரும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய செஞ்சிலுவை தன்னுடைய கலாச்சாரத்திலிருந்து பாரம்பரியத்திலிருந்து ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.

நம் தேசக்கொடியில் இருக்கும் அசோகச் சக்கரத்தைவிட சிறந்த சின்னம் எது இருக்க முடியும் ?

உலகத்திலேயே முதன்முதலில் போரை நிறுத்திவிட்டு அமைதிவழியை தேர்ந்தெடுத்த அசோகரின் சின்னமான அசோகச்சக்கரம், பெளத்த அடையாளம். அசோகர் காலத்திலேயே முதன் முதலாக மருத்துவ சேவை மக்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் என்று இலவச மருத்துவமனை கட்டப்பட்டதாக அறிகிறோம். இந்தியாவின் பாரம்பரியத்தில் அமைதி வழியை தேர்ந்தெடுத்த அசோகரையும், அவர் கொண்ட புத்தரின் வழியையும் பிரதிநிதித்துவம் செய்யும் அசோகச்சக்கரம், போர் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சின்னமாக இருக்கும் என்பதன் ஆழமான அடையாளம்.

அசோகச்சக்கரம் இந்தியாவின் சின்னமாக மட்டுமல்லாமல் புத்தர் வழியை பின்பற்றும் அனைத்து ஆசிய நாடுகளின் சின்னமாகவும் ஆகலாம்.

நான் பெளத்தவழியை ஒப்புக்கொள்ளாதவன் என்பது உண்மைதான். பெளத்தவழியைப் பின்பற்றியவர்கள் பெரும் பதவியில் இருந்ததால்தான் நம் நாட்டு மக்கள் அடிமைப்பட்டார்கள் என்பதிலும் எனக்கு வேறு கருத்து கிடையாது. மீண்டும் பெளத்த மதம் இந்தியாவில் தலை தூக்கினால் அது இன்னொரு அழிவுக்குத்தான் இன்னொரு அடிமைத்தனத்துக்குத்தான் இந்தியாவை இட்டுச் செல்லும் என்றே கருதுகிறேன். ஆனால், போர் சமயத்தில், உதவி நாடும் போர்வீரர்கள் அணுக ஒரு பெளத்த சின்னமான அசோகச்சக்கரம் போன்று ஆழமான ஒரு பொருளுள்ள, மதச்சார்பற்ற, இனச்சார்பற்ற, நாடு சார்பற்ற, கலாச்சார சார்பற்ற ஒரு சின்னம் இந்தியாவில் வேறெதும் கிடையாது.

இந்தியாவும் ஏனைய பெளத்த இந்து நாடுகளும் ஒன்று கூடி சிவப்பு அசோகச்சக்கரத்தை தன் சின்னமாக தேர்ந்தெடுப்பதே சரியான வழி என்றே கருதுகிறேன். இதற்கான முதல் படியாக மதச்சார்பற்ற சேவை நிறுவனங்கள் மற்றும் இந்து சேவை நிறுவனங்கள் இந்தியாவில் செஞ்சக்கரத்தை தம்முடைய சின்னமாகப் பின்பற்ற வேண்டும். அதற்கான முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்