நெஞ்சு பொறுக்குதில்லையே…

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

‘ரிஷி’


தாயுமானவன், தந்தையானவன் நான்.
தீர நேசிக்கிறேன் என் சேய்களை.
அதனால் தான், ஆயகலைகள் கற்கவும்
அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன்.
திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால்
அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது.
நாய்களைப் போல் நடத்துகிறேனா?
வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.
உங்களைத் தான் உள்ளே வரவே விடவில்லையே நான்.
என்ன? படமனுப்பியிருக்கிறார்களா இங்கிருப்பவர்கள்?
அடங்காப்பிடாரிகள்.
ஏய், யாரங்கே-
அடித்து நொறுக்குங்கள் அவர்களை.
அப்படியாவது அவர்கள் நல்ல வழிக்கு வரட்டும்.
கழியைப் பிரயோகிக்காமல் விட்டு விடுவது சரியல்லவே.
உரிமை பேசும் தறுதலைகளாக வளர்ந்துவிட்டால்
பின், ஐயோ, பழி வந்து சேருமே.
அருமையாக வளர்க்க வேண்டும் என் பிள்ளைகளை.
எத்தனைக்கெத்தனை அதிகம் அடிக்கிறேனோ
அத்தனைக்கத்தனை உன்னதப் பெற்றோராவேன்!
பிரிவாற்றாமை என்னை உருக்கிக் குலைத்து விடுமே
என்ற அச்சம் வருத்த
குறும்புக் கண்ணனை யவன் வளர்ப்புத்தாய்
உரலில் கட்டி வைத்ததைப் போலவே
நான் மின்கம்பிவேலியிட்டு
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
தத்துப் பிள்ளைகளா அவர்கள்
அல்லவேயல்ல
என் வித்துகள்;
புத்திரச் செல்வங்கள்.
ரத்தம் பெருகும்படியாக
எத்தித் தள்ளுவேன்.
படித்ததில்லை நீங்கள்?
அடிக்கிற கை தான் அணைக்கும்.
எனவே தான், நான் இன்னும் அடித்து முடிக்கவில்லை.
அத்தனை உறுதி வாய்ந்தது என் அன்பு-
புரிந்து கொள்ளுங்கள்.
எத்தனை வேண்டுமானாலும்
துண்டாடித் தோரணம் போடுவேன்.
பொத்திக் கொண்டு போய்விட்டால்
உங்களுக்கு நல்லது.
குளோபல் வில்லேஜ், ஹியூமன் ரைட்ஸ் என்றெல்லாம்
தத்துபித்தென்று கத்த முற்பட்டீர்களோ
வெட்டி விடுவேன் வெட்டி.
கைப்பற்றிய ஆயுதங்களும் இப்போது என்னிடம் குவிந்திருக்கிறது
கவனமிருக்கட்டும்.
ஏற்கனவே அறுத்தெறிந்தாகி விட்டது
என் பிள்ளைகளின் கைகளை
நாவை
கண்களை
சிறகுகளை
நாட்களை
நம்பிக்கைகளை
நல்லுயிரை…
“பல்லாண்டு வாழ வேண்டிய” என்பதையும்
சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது ஒரு பொருட்டில்லை.
இரண்டாம் நூற்றாண்டாகட்டும்,
இருபத்தியோராம் நூற்றாண்டாகட்டும்,
மக்கள் நலன் காக்கவென்றே
வரம் வாங்கிக் கொண்டு வருவோர்
பெரும்பாலும்
சாமானியர்களின் தொண்டைக்குழியை அறுத்தவண்ணமே தான்
அவர்களுக்காகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடம் மட்டும் ஏன் தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்?
அகண்ட உலகமே அக்கடா என்று பார்த்துக் கொண்டிருக்க
உங்களுக்கு மட்டும் ஏன் இந்த துக்கிரித்தனம்?
யாம்
எம் மக்களைக் குட்டுவதும்
வெட்டுவதும்
நசுக்குவதும்
பொசுக்குவதும்
மதிப்பழிப்பதும்
மிதித்தழிப்பதும்
யாவும்
அதியன்பினால் மட்டுமே.
திரும்பத்திரும்ப நான் திட்டவட்டமாய்ச் சொல்லியும்
நம்பாமல் உள்ளே எட்டிப்பார்க்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்,
நடப்புண்மை அறிய முயலும் கயவர்கள்
காவுகொள்ளப்பட்டு விடுவர்.
அச்சுறுத்துவதாக எண்ண வேண்டாம்.
அக்கறையோடு எச்சரிக்கிறேன்_
அன்பின் பெயரால்…

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி

நெஞ்சு பொறுக்குதில்லையே..

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

ஆ. மணவழகன்


நானும் என் நண்பர்கள் சிலரும் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குச்சமீபத்தில் சென்று வந்தோம். நாங்கள் சென்றது மண்டபத்தைச் சுற்றிப் பார்கவோ, அங்குள்ள வரலாற்று உண்மைகளைஅறியதற்கோ அல்லை என்றாலும், அங்கு நடந்த சில சம்பவங்கள் என்னைச் சிந்திக்கச் செய்வனவாய் அமைந்து விட்டன.

நாங்கள் அங்கு சென்றதன் பின்னணி என்னவென்றால், எங்கள் அலுவலகத்தில் ‘ அலுவலக நாள் ‘ என்று ஒன்றை நாங்களே ஏற்பத்திக்கொண்டு( விடுதி மாணவர்கள் Room day யும், பயணியர் Bus day யும் கொண்டாடுவார்களே அதைப்போல) வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அதைக் கொண்டாடி வருகிறோம். இதை ஒரு சிறந்த பழக்கமாகவே நான் கருதுகிறேன். இதைக் கொண்டாடத்தான் நாங்கள் காந்தி மண்டபம் சென்றோம்.

காந்தி மண்டபத்தின் அருகில் உள்ள ‘மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தின் ‘ உள்ளே நண்பர்கள் நுழைந்தனர். சிலர் மொழிப்போர் தியாகம் என்றால் என்ன ? என்று கேட்டது என்னுள் ஏதோ செய்தது. எல்லோரும், பெரிய படிப்பு என்று இன்று நாம் நினைக்கிறோமே அதைப் படித்தவர்கள். படித்திருந்தால் இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன! ஆதலால், அதை விட்டு விடுவோம்.

அடுத்து சிலர் செய்த செயல்கள் தான் இன்னும் என்னை வேதனையடையச் செய்தது. அந்த மண்டபத்தில் மாவட்ட வாரியாக மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப் பட்டுள்ளன. அதையெல்லாம் பார்த்த நண்பர்கள், யாரடா இவர்கள்… என்று சொல்லி ஒவ்வொரு புகைப்படத்தையும் கிண்டல் செய்தது கேட்கவே காது கூசுவதாய் இருந்தது. நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற பாரதியின் பாடல்தான் நினைவிற்கு வந்தது. இருந்தும் என்ன, அவர்களிடம் சண்டைபோட ஏனோ எனக்கு மனது இல்லை (நாங்கள் வந்தது மகிழ்சியாக இருக்க என்பதால்)

இதே கிண்டலும், கேலியும் அடுத்துள்ள ‘தியாகிகள் மணிமண்டபத்தினைக் ‘ காணச்சென்ற பொழுதும் தொடர்ந்தது. ஆனால், என் சிந்தனையோ, எங்கள் மாவட்டத்தில் இருந்து எத்தனை தியாகிகளின் புகைப்படம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று தேடுவதிலேயும், எங்கள் ஊரில் இருந்து எவரின் புகைப்படமாவது வைக்கப்பட்டுள்ளதா ? என்றும் பார்பதிலேயே இருந்தது. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. என்னுடைய தாத்தாவும் ஒரு தியாகிதான். சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர். திருமணம் ஆன மறுநாளே ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியினைச் சிறு வயதிலிருந்தேக் கேட்டுக் கேட்டு எனக்குள் தியாகிகள் மீது ஒரு பற்று ஏற்பட்டிருக்கலாம்.

என் தாத்தாவைப் போல் ஒவ்வொரு தியாக செம்மல்களின் பின்னாலும் ஒரு தியாக வரலாறு இருக்குமே! அது என்னவாக இருக்கும் என்று தேட தானே நம் மனம் ஆசை பட்டிருக்க வேண்டும். அந்த தியாக தீபங்களின் முகங்களைப் பார்த்து கிண்டல் செய்ய எப்படித் தோன்றும். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் யார் ? எதற்காக வெளிளையனை எதிர்த்துப் போராட வேண்டும் ? வல்லரசோடு இன்று நாம்போட்டி போடுகிறோமே யாரால் ? அனுகுண்டை வெடிக்கச்செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தோமே யாரார் ? ராமேஸ்வரம் தீவில் பிறந்த ஒருவர் இன்று இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக்கியிருகிறோமே எப்படி ?

வெளிளையனை எதிர்த்துப் போராடி, நம் முன்னோர்கள் சிந்திய குருதி விதையில் இருந்து முளைத்த விருச்சத்தின் பலனல்லவா இவைகளெல்லாம். அடிமை இந்தியாவில் இவைகள் சாத்தியா ? சிந்தித்தோமா ஒரு நொடி ?

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தேசிய உணர்வு அதிகம் உள்ளது என்று சமீபத்தில் ஏதோ ஒரு நாளிதழ் புள்ளிவிவரத்தினை வெளுயிட்டிருந்தது. படித்து மகிழ்தேன். அது சரியான புள்ளிவிவரமா என்று இப்போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுகிறது. நம் இளைஞர்களிடம் சாதி வெறி, மத வெறி, இருக்கும் அளவிற்கு சமுதாய வெறி இல்லையே ஏன் ? இன ஒற்றுமை இல்லையே ஏன் ? இளைஞர்களிடம் தேசிய உணர்வு குறைந்து போவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. சரியான வழிகாட்டிகள் இல்லை என்று நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா ?

வழிகாட்டுதல்கள் என்பது இப்போதைய நிலையில் என்ன ? புத்தகங்களும், ஆசிரியர்களும் தானே. புத்தகங்களும் தான் என்று நாம் ஒப்புக்கொண்டால் நம் நாட்டின் பாடதிட்டம் சரியாக இருக்க வேண்டாமா ? வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் மட்டுமே நம் நாட்டின் வரலாற்றையும், பழமையையுயும், பெருமையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிலையும். தமிழை பாடமாக எடுத்துப் படித்தால் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையும், இது போலவே என்ன விருப்பப்பாடம் எடுத்து படிக்கின்றனரோ அதைப்பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையும் இருக்கும் பொழுது நாம் யாரைக குற்றம் சொல்வது.

இதற்கு ஒரே தீர்வு நம் நாட்டின் பாடதிட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும். நம் இளைஞர்களுக்கு, இளம் வயதில் இருந்தே நம் நாட்டின் வரலாறு, பண்பாடு, பழக்க வழங்கள், சுதந்திர வரலாறு, தியாகிகளின் வரலாறு போன்றவற்றை மனதில் பதியச் செய்யவேண்டும். என்ன விருப்பப்பாடம் எடுத்துப் படித்தாலும் அதோடு கூட சமுதாயக்கல்வியையும் கற்பிக்கப்படவேண்டும். இதை யார் முன்மொழிவது ? யார் வழிமொழிவது ?

இன்டர் நெட்டால் இமயத்தைத் தொட்டோம்!

குளோனிங்கால் கோபுரத்தை அடைந்தோம்!

அனுகுண்டால் அகிலத்தை அடக்கினோம்!

கட்சி விட்டு கட்சி மாறினோம்!

கண்டம் விட்டு கண்டம் தாவினோம்!

மதம் விட்டு மதம் மாறினோம்!

மனிதனாக மாற மட்டும் ஏன் மறுக்கிறோம்!!! ?

****

a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்