இந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

மஞ்சுளா நவநீதன்


தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப் படவேண்டும் என்று ராம்தாஸ் குரல் கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவர் குரல் கொடுத்திருப்பது வன்னியர்களுக்கு அதிகாரப்பகிர்வு சென்றடையவில்லை என்ற நியாயமான ஆதங்கத்தால் வெளிப்படுவது ஆகும். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறி முதல்வர் பதவிக்கு வருவதும், தமிழ்நாட்டில் வேறு தலைவர்கள் யாருமே இல்லை என்ற பிரமையை ஏற்படுத்துவதும் இது மாதிரி கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று நாம் முன்னமே எச்சரித்ததுண்டு.

ராம்தாஸ் திட்டப்படி தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப் பட்டால் வன்னியர்கள் அதிகமாய் உள்ள மாவட்டங்களைப் பிரித்தது போலாகும். மற்ற மாவட்டங்களில் உள்ள வன்னியர்களுக்கு இது நீதி செய்ததாகாது. அதில்லாமல் இது வெறும் வன்னியர் குறித்த பிரசினை மட்டுமல்ல. சரியான பிரதிநிதித்துவம் கிட்டாத எல்லா வகுப்பாருக்குமான பொதுப் பிரசினை.

தமிழ் நாட்டை மூன்றாகப் பிரிப்பது தான் சரி என்று தோன்றுகிறது.

சென்னையைத் தலைநகராய்க்கொண்டு உள்ள மானிலத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர் , விழுப்புரம், திருவண்ணாமலை இந்த மானிலத்தில் அங்கம் வகிக்க வேண்டும். பல்லவநாடு என்று இந்த மானிலம் அழைக்கப் படலாம். சென்னையைத் தலைநகராய்க் கொண்ட இந்த மானிலம் பரப்பளவில் சிறியதாய் இருந்தாலும், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள், தொழில் வசதி இவற்றில் பல அனுகூலங்களைக் கொண்டது. அதில்லாமல் மக்கள் தொகையிலும் பெரிதானது இந்த மானிலம்.

சோழநாடு திருச்சியைத் தலைநகராய்க் கொண்டு இயங்க வேண்டும். இதன் கீழ் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி , நாமக்கல், பெரம்பலூர் , கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் இணைய வேண்டும்.

தென்னாடு அல்லது பாண்டியநாடு அல்லது குமரிநாட்டில் கீழ்க்கண்ட மாவட்டங்கள் இணைய வேண்டும். குமரி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்கள். மதுரையைத் தலைநகராய் ஆக்காமல் விருதுநகர் அல்லது திருநெல்வேலியைத் தலை நகர் ஆக்கினால் சமச்சீரான வளர்ச்சியும் ஏற்படும்.

இந்த ஏற்பாட்டின் கீழ் கடற்கரைப் பகுதியும், உள் எல்லைப் பகுதியும் சமஅளவில் மூன்று மானிலங்களுக்கும் அளிக்கப் பட்டுள்ளது.

ராமதாஸ் முன்பு தேர்தலில் பா ம க போட்டியிட்ட போது ,ஆட்சிக்கு வந்தால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு சமூகத்திலிருந்து முதல்வர் ஆவார் என்று அறிவித்திருந்தார். முஸ்லிம், தாழ்த்தப் பட்டோரும் முதல்வர் ஆக வழிவகை செய்வோம் என்று அவர் அறிவித்ததுண்டு. அதையும் அவர் தன் செயல் திட்டத்தில் ஒன்றாக அறிவிக்க வேண்டும்.

இந்தப் பகுப்பு அதிகாரப் பகிர்வையும், சிறந்த நிர்வாகத்தையும், சமூக நீதியையும் முன்னிறுத்திச் செய்யப்பட வேண்டும். மீண்டும் சாதி-மதச் சச்சரவிற்குள் இந்தத் திட்டம் புகுந்துவிடலாகாது.

அதில்லாமல் எம் எல் ஏ , எம் பி, முதல்வர் பதவிகளை யாரும் இரு முறைக்கு மேல் வகிக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வழிவகை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் உள்ள சிறிய கட்சிகளான ம தி மு க, பா ம க போன்ற கட்சிகள் தாம் இதை வலியுறுத்திச் சட்டமாக்க வேண்டும். இன்னமும் இதைச் செழுமைப் படுத்தி , முதல்வர் பதவிக்கு எட்டு வருடங்கள் கால வரையறை வைக்கலாம். ஒன்பதாம் வருடத்திலிருந்து முதல்வர் சாதாரண எம் எல் ஏ பதவியை மேற்கொண்டு புதிய தலைமுறைக்கு வழிகாட்ட இந்தத் திட்டம் உதவும். பா ம க வும், ம தி மு கவும் பாரதீய ஜனதா கட்சியுடன் சுமுக உறவு கொண்டவை. இந்தத் திட்டத்தை முன்மொழிந்து சட்டமாக்க வழிவகை செய்ய வேண்டும்.

***

ஏன் இந்த எதிர்ப்பு ?

காங்கிரஸ் தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் வரையில் எல்லோருமே ராம்தாஸின் இந்தகோரிக்கையை விமர்சித்திருக்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. ராம்தாஸின் கோரிக்கையில் சாதிப் பின்னணி உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வன்னியர் வாக்குகளை மட்டுமே நம்பி அரசியல் கட்சியை நடத்த முடியாது என்பது உண்மை. வன்னியர்களும் கூட ஒரே தலைவரின் பின்னால் செல்ல மாட்டார்கள். அந்தந்த பகுதியின் உள்ளூர் அரசியல் நிலவரப் படிதான் அவர்கள் செயல்படுவார்கள்.

மானிலப் பிரிப்பு என்பது நிர்வாகம் தொடர்பான முடிவாக இருக்க வேண்டும். இளங்கோவன் இதை எதிர்ப்பதற்கு முன்பு ‘மேலிடத் ‘தைக் கலந்து கொண்டாரா என்று தெரியவில்லை. ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் என்று சமீபத்தில் உருவான மானிலங்களுக்கு காங்கிரஸ் ஆசி இருந்தது. தெலுங்கானா மானிலம் அமைய வேண்டும் என்பதும் காங்கிரஸின் ஒரு கோரிக்கை.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் பாண்டிச்சேரி தனி மானிலமாகத்தான் இருக்கிறது. தனி நாடாகவா போய்விட்டது ? சொல்லப் போனால், கேரளாவும் மேல் கேரளம் கீழ் கேரளம் எனப்பிரிந்தால் என்ன கெட்டுப்போய்விடப்போகிறது ? இது வெறும் அதிகாரப்பகிர்வுதானே.

பாகிஸ்தான் கேட்டபோது, உரத்த குரலில் ஆதரவு கொடுத்து, பாகிஸ்தான் கேட்பது மக்களின் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசி இந்திய நாட்டிலிருந்து ஒரு சாரார் இந்தியர்களை பிரிக்க உதவிய இடதுசாரிகள் அதிகாரப்பகிர்வுக்காக தனி மானிலம் கேட்கும்போது, பிரிவினை என்று உரத்து பேசுவது அபத்தமானது.

ஆனால், தி மு க , அ தி மு க போன்ற பெருங்கட்சிகள் இதை எதிர்ப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. தமிழினத்தின் ஒரே பிரதிநிதி தாம் தான் என்ற பொய்யை நிறுவ வெகுவாக இவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்