‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

செங்காளி


‘கத்தேரிக்கா, வெண்டக்கா, தாக்கோளி, வாங்கலயா…. அம்மா காய்கறி வேணுங்களா ?… ‘

வாசலில் காய்கறிக்காரியின் கூவல் கேட்டது. சமையலறையிலிருந்த அம்மா, ‘இதா வர்றேன் ‘ என்று சொல்லிக்கொண்டே காய்களைப் போடுவதற்கு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் வந்தார்.

எங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் கிராமத்திலுள்ள எங்கள் தோட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வந்துவிடும். எதிர்பாராத விருந்தினர்கள் யாரும் வந்துவிட்டால் அவைகள் சீக்கிரம் தீர்ந்துபோய்விடுவதும் உண்டு. அந்த மாதிரி சமயங்களில் இப்படி வீதியில் விற்போரிடம் அம்மா காய்கள் வாங்குவது வழக்கம். இன்றைக்கு அப்படி நேர்ந்துவிட்டது.

திண்ணைக்குப் பக்கத்தில் கூடையைச் சுமந்துகொண்டு நின்றுகொண்டிருந்த காய்க்காரி அம்மாவைப்

பார்த்தவுடன், ‘ஒரு கை கொடுங்கம்மா, கூடைய எறக்கிவைக்க ‘ என்றாள். அம்மா பிடித்துக்கொள்ள மெதுவாகக் கூடையை இறக்கித் திண்ணைமேல் வைத்தாள். ‘அப்பாடா, என்ன வெயில் ‘ என்று சொன்னவள், அம்மாவிடம் என்ன காய்கள் வெண்டுமென்று கேட்டாள். ‘தக்காளி ஒரு கிலோ, வெண்டைக்காய் அரை கிலோ, கத்தரி பிஞ்சா இருந்தா ஒரு கால் கிலோ, பச்சை மிளகாய் ஒரு ரூபாய்க்கு எடுத்துவை ‘ என்றார். காய்களைப் பொறுக்கப்போனவள் அம்மாவைப் பார்த்து, ‘கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொடுங்கம்மா ‘ என்றாள். ‘சரி, எல்லாம் நல்லதாப்பாத்து எடுத்துவை ‘ என்று சொல்லிவிட்டு உள்ளே போகத்திரும்பிய அம்மா, ‘காலையில போட்ட காப்பி கொஞ்சம் இருக்குது, குடிக்கிறயா ? ‘ என்று அவளைக் கேட்டார். சிறிது ஆச்சரியப்பட்ட அவள், ‘கொடுங்கம்மா ‘ என்றாள். ‘இந்த வெய்யில்ல காப்பி பரவாயில்லையா ‘ என்று கேட்ட அம்மாவிற்கு, ‘இந்த சூட்டுக்கு ‘அதாங்கம்மா வேணும். பச்சத்தண்ணி குடிச்சா தாகம் எடுத்துக்கிட்டேதான் இருக்கும். ஆனா நா காப்பித்தண்ணி வாங்கமுடியுங்களா ‘ என்றாள்.

வீட்டினுள்ளே சென்ற அம்மா, சிறிது நேரத்தில் ஒரு கையில் செம்பு நிறைய தண்ணீரும், மறுகையில் காப்பி தம்ளருடனும் வந்தார். செம்பை வாங்கிய அவள் முதலில் தண்ணீர் விட்டு தன் முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டு சிறிது தண்ணீரையும் குடித்தாள். பிறகு தம்ளரிலிருந்த காப்பியை எச்சில் படாமல் தூக்கிக்குடிக்க ஆரம்பித்தாள். சூடான காப்பி அவள் வாயைச் சுட்டுவிடுமோ என்று பயந்த அம்மா ‘பரவாயில்லை, நல்லா வாயில வச்சுக்குடி, கழுவத்தானே போறம் ‘ என்று சொல்லியும், தம்ளர் வாயில் படாமல் காப்பி முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். பின்னர் செம்பில் மிச்சமிருந்த தண்ணீரினால் தம்ளரை நன்றாகக் கழுவிவிட்டு, செம்பு, தம்ளர் இரண்டையும் திண்ணையில் வைத்தாள். ‘காப்பி ரொம்ப நல்லா இருந்ததுங்க ‘ என்றாள்.

பிறகு அம்மா கேட்டபடி எல்லாவற்றையும் எடுத்து எடைபோட்டு வைத்தாள். ‘மொத்தம் எவ்வளவு ஆச்சு ‘ என்று அம்மா கேட்க, வாய்விட்டுக் கணக்கிட்டு, ‘பத்தெ¢ான்பது ரூவாங்கம்மா ‘ என்றாள். அம்மா இடுப்பிலிருந்த தன்னுடைய சுறுக்குப்பையை அவிழ்த்து இருபது ரூபாய்த் தாளொன்றை எடுத்துக் கொடுத்துக்கொண்டே, ‘ஒரு ரூபாய்க்கு கொஞ்சம் கொத்துமல்லிக்கீரையும் கறிவேப்பிலையும் கொடுத்திரு, இருபது ரூபாய்க்குச் சரியாப்போயிடும் ‘ என்றார். அம்மா சொன்னபடியே ரூபாய்த்தாளை வாங்கிக்கொண்டு, கீரையையும் கறிவேப்பிலையையும் எடுத்துத் தட்டில் வைத்தாள். அம்மா ‘கூடையைத் தூக்கிவிடவா ‘ என்று கேட்டதற்கு, கொஞ்சம் தயங்கி நின்றாள்.

பின்னர் மெதுவாக அம்மாவிடம் ‘உங்ககிட்ட நா ஒண்ணு கேட்டா கோவிச்சுக்கமாட்டாங்களே ‘ என்றாள். அம்மா சிரித்துக்கொண்டே ‘அப்படி என்ன கேக்கப்போறே..ம்.. கேளு ‘ என்றார். அதற்கு அவள் ‘நா காய் விக்கறவ, நீங்க வாங்கறவங்க.. உங்ககிட நா இதக்கேக்கப்படாது, கேக்காம இருக்கறது எனக்குத்தான் நல்லது, இருந்தாலும் கேக்கறேன் ‘ என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். ‘நீங்க எப்பவாச்சுந்தான் காய் வாங்குவீங்க. ஆனா எப்ப வாங்கினாலும் எங்கிட்ட பேரம் பேசறதே இல்லை, நா சொல்ற வெலக்கி அப்படியே வாங்கிக்கிறீங்க..அது எப்படாங்க, எனக்கு ஆச்சரியமா இருக்குதுங்க ‘ என்றாள்.

அம்மா அவளைப் பார்த்துக்கொண்டே மெதுவாகச் சொன்னார், ‘ உங்கிட்ட பேரம் பேசினா, உன்னாலெ என்ன ஒரு ருபா கொறைக்கமுடியுமா..நாம ஜவுளிக்கடைக்கோ இல்ல நகைக்கடைக்கோ போனா அவிங்க சொன்ன விலைய, அது நூறு இருநூறு அதிகம்னாலும் அப்படியே கொடுத்துட்டு வர்றோம். பாவம் இந்த வெயில்லே அலையிறே..நாள் முழுக்க சுத்தினீன்னா இருபதோ முப்பதோ சம்பாரிப்ப…இப்படிக் கஷ்டப்படற உங்கிட்ட போயி எதுக்கு பேரம் பேசுவானேன்னுதான் சொன்ன விலைய கொடுத்திடறது… ‘

அம்மாவின் பேச்சில் இருந்த பரிவு அவளின் கண்களில் நீரைச் சுரக்க வைத்தது. மனம் நெகிழ்ந்து போன அவள் கரகரத்த குரலில் சொன்னாள், ‘நீங்க சொல்றது சரிதாங்க. காலையிலெ எரநூறு ரூவா தினக்கந்தா வாங்குவேன். அதுவும் வட்டியை மொதல்லியே பிடிச்சுக்கிட்டுத்தான் கொடுப்பாங்க. சாயங்காலம் எரநூறு ரூவாயா திருப்பிக்கொடுத்திடணும். எரநூரு ரூவாய்க்கு மொத்த வியாபாரிக்கிட்ட காய் வாங்குவேன். பொறுக்கவிடமாட்டாங்க, நல்லதும் சொத்தையுமா சேத்துத்தான் போடுவாங்க. நல்லா வித்திச்சின்னா நீங்க சொன்ன மாதிரி ஒரு இருபதோ முப்பதோ கெடைக்கும். ஒவ்வொரு நாளக்கி வாங்கிய வெலக்கிக்கூட விக்கமுடியாது. அன்னெக்கி வீட்டிலெ எல்லாரும் பட்டினிதான். ‘ இப்படிச்சொல்லிவிட்டு சிறிது நேரம் ஓன்றும் பேசாமல் நின்றாள். அவளுடைய முகத்திலே வேலையின் கடுமை, ஆனால் இதைவிட்டால் பிழைப்பதற்கு வேறு வழியில்லை என்ற கையாலாகாத நிலமை எல்லாம் தெரிந்தன.

அவளைப் பார்க்க அம்மாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘சரிசரி பேசிக்கிட்டே நிக்காதே, இன்னும் நாலுவீடு போயி மத்த காயையும் விக்கற வேலையப்பாரு ‘ என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கிவிட்டார். அவள் போவதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே காய்கறித்தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனார்.

—————

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி