This entry is in the series 20110213_Issue

எம்.ரிஷான் ஷெரீப்



வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும்
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

Series Navigation