This entry is in the series 20030317_Issue

மனோ


என்னைக்
கட்டியணைக்க கை வேண்டாம்
உச்சி நுகரும் முத்தம் வேண்டாம்

என்னை
மலர வைக்கும் புன்னகை வேண்டாம்
மயங்க வைக்கும் கவிதைகள் வேண்டாம்

என்
விழி உணரும் புன்சிரிப்பு வேண்டாம்
வழி தொடரும் நிழல் வேண்டாம்

என்
தலைகோதும் விரல் வேண்டாம்
மனம் தேடும் மணம் வேண்டாம்

என்
கோபம் போக்கும்ி பார்வை வேண்டாம்
தாபம் தீர்க்கும் ஸ்பரிசம் வேண்டாம்

என்
தனிமை பசிக்கும் இரவுச்சிறையில்,
உயிரைத் தொட்டுத் தாலாட்ட
உணர்வை எழுப்பி ஸ்ருதி மீட்ட,
அழுத மனசுக்கு ஆறுதலாய்
பழுது செய்ய பவுர்ணமியாய்
படர்ந்து கரைத்து புதைத்துவிட,
குமுறித் தீர்க்க மடி போதும்,
குறைவின்றித் தருவாயா ?

tamilmano@rediffmail.com

Series Navigation