இரவின் தியானம்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

குமரி எஸ். நீலகண்டன்



உறங்கிக் கொண்டிருக்கும்
இரவிற்கு உலகம்
தெரியவில்லை.

அழகான நட்சத்திரங்களையும்
பால் நிலாவையும்
பகல் கபளீகரம்
செய்யுமென்ற
பயமில்லை இரவிற்கு.

காற்றோடு
கடலின் அலைகள்
அளவளாவும் ஆர்ப்பரிப்பு
இரவின் உறக்கத்தை
கலைக்கவில்லை.

நிலாவைக் காட்டி
நிறைகிற வயிறுகள்
இரவுக்கு தெரிவதில்லை.

குடித்து விட்டு
குரலுயர்த்தி சப்தமிடும்
குடிகாரர்களின் சப்தங்களும்
கும்மாளங்களும்
இரவின் தியான
உறக்கத்தில்
மயானமாகி விடுகின்றன.

எல்லோருக்குமே
இரவு இரவாக
இருக்க விரும்பி
எதையும் அறியாது
கருப்புப் போர்வையைப்
போர்த்திக் கொண்டு
உறங்குகிறது இரவு.

நேற்று பகல்
தந்தவற்றையெல்லாம்
பத்திரமாய் பகலோடு
கொடுத்துவிட்டு
பறந்து செல்கிறது
இரவு இன்றிரவு
வருகிறேன் என்று.

Series Navigation

குமரி எஸ்.நீலகண்டன்..

குமரி எஸ்.நீலகண்டன்..