புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (189 – 209)

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

புதுவை ஞானம்



189) உன் முதுகை மறைக்கும் பொற்கூந்தலை
சீவி முடித்து சிங்காரிக்க ஆவல் மீறுகிறது சீமாட்டியே !
பிடரியின் பின் பக்கம் விசிறி விடு செம்பொன் அருவியை
கோதி விடுவேன் அதனை மெல்ல மெல்ல-
முத்தமிடுவேன் ஒவ்வொரு மயிரிழைக்கும் !

190 )காந்தள் மலர் போன்ற மென் செவிகள் மீது
ஆடம்பரமாய் விழுகிறது அழகிய உன் கேசம்
கழுத்தின் பின் புறம் சென்று மறைகிறது
நடுவானில் மூடு திரை மறைவது போல !

191) கூந்தலை இணைத்துக் கட்டி அவிழ்க்கும் முடிச்சினைத்
தீண்டதைரியம் வேண்டும் வெகுவாக எந்தனுக்கு
பிடரியில் படர விழ வைத்து விட்டால் –
வெகு நேர்த்தியாக சிக்கெடுத்துக் கோதுவேன்
ஒவ்வொரு மயிர்க்காலாய்ப் பிரித்துப் பிரித்து !

(XLIV )

192 )வரண்டதோர் பழுப்பு நிறக் கானகத்தில்
வசிப்பிடமாய்த் தேர்ந்ததொரு குகையை வேங்கைச் சிறுத்தை
சிறுத்தையின் சின்னக் குகையை விட சிறந்ததோர் வசிப்பிடம்
எந்தன் இனிய நன்பனுக்கு இருக்கிறது !

193 )கட்டிலும் மெத்தையுமாய்ச் சாய்ந்திருக்கும் Geisha
பெண் போலக் காத்திருக்கிறாள் அவள்
நானும் காத்திருக்கிறேன் -சாய்ந்து இளைப்பாற
மெத்தையை விட மேலானவன் நண்பன் !

194 )விடியல் பிச்சைக்காரனுக்குத் தரும் நம்பிக்கை போல
காத்திருக்கிறான் கோமான் பரம்பரைப் பெருமையில்
பறவைகளுக்கென சிறகிருப்பதைப் போல
மெக்சிகோவில் எனக்கொரு நண்பன் !

195 )குடியரசுத் தலைவருக்கு பூங்காக்களோடும் நீர் ஊற்றுக்களோடும்
மாளிகையாம்- தங்கமும் தானியமும் குவியலாய் இருக்கிறதாம் அதற்குள்ளே
பீற்றிக்கொள்கிறார்கள் போகட்டும்!
எந்தனுக்கோ மேலும் அதிக வசதி !
நெருங்கியதோர் நண்பன் இருக்கிறான் அல்லவா ?

( XLV )

196 )சலவைக்கல் மாளிகைச் சொப்பனம் எனக்கு
தவழுகிறது அங்கே ஆசீர்வதிக்கப் பட்டதோர் மவுனம்
இரவு நேரத்தில் ஆன்மாவின் வெளிச்சத்தில்
ஓய்வெடுக்கினறனர் ஆங்கே முன்னணி வீரர்கள் !
இரவில் தான் நான் பேசுவேன் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான்!
முத்தமிடுகிறேன் கல்லாய் உறைந்த அவர் தம் கைகளில் -.
அசைக்கிறார்கள் அவர்தம் இறுகிய உதடுகளை-
உதறுகிறார்கள் தம் பனி படர்ந்த தாடிகளை-
உறைந்த வாளினைப் பற்றிக் கொள்கிறார்கள்-
அழுகிறார்கள் பின்னர் …….உறைக்குள் நுழைகின்றன வாட்கள் !
அமைதி கொள் ! .
முத்தமிடுகிறேன் நான் அவர் தம் கரங்களை !

197) இரவில் பேசுகிறேன் நான் அவர்களுடன்
அணி வரிசையில் அவர்கள்- அணிகளின் ஊடே நான் !
நானும் அழுதுகொண்டே தழுவுகிறேன் ஒரு சிலையை.
ஓ…..சிலையே !
உன் பிள்ளைகள் உதிரம் குடிக்கிறார்கள்
தங்களது சொந்த இரத்த நாளங்களில் இருந்து
ஆனால் எசமானரின் விஷம் தோய்ந்த கோப்பைகளில்.
பேசுகிறார்கள் முரடர்களின் அசிங்கம் பிடித்த நாவினைப் பற்றி –
உண்ணுகிறார்கள் மானக்கேடான ரொட்டித் துண்டுகளை-
இரத்தம் தோய்ந்த மேசையில் இருந்து.
மூழ்கிப் போகிறார்கள் பயனற்ற வார்த்தைகளில்-சொல்லிக் கொள்கிறார்கள்
உன் பரம்பரை அற்றுப் போய் விட்டதாக – ஓ…சிலையே……..
தமது இறுதி மூட்டத்தில்குளிர் காயும் போது !

198 )நான் மதித்துப் போற்றிய வீர நாயகன்
எட்டி உதைத்தான் எந்தன் நெஞ்சில்
இழுத்துச் சென்றான் சட்டையைப் பிடித்து
தரை மீது என் தலை உராயும் வண்ணம்
ஆதவன் போன்ற தன் கைகளை உயர்த்தி
பேசுகின்றது அந்தச் சிலை :
” இடுப்புத் தோல் வாரை எட்டுகின்றன
வெள்ளைக் கரங்கள்- பளிங்குக் கல் மனிதன்
பாய்ந்து வருகிறான் அவர்தம் காலடியில் இருந்து ! ”

(XLVI )

199 )ஒளித்திடல் வேண்டும் உந்தன் துயரங்களை
எந்த மனிதனும் அறியவொண்ணா இடத்தில்-
எனது பெருமையை நிலை நாட்டும் விதத்தில்
மற்றொரு சுமையை ஏற்றி விடாதே அவர் தலையில் !

200) நேசிக்கிறேன் நான்உண்மை நண்பனான கவிதையேஉன்னை
கனக்கிறது இதயம் மிகவும்-
துண்டு துண்டாக சிதறிக் கிடக்கையிலே
நீயோ சுமக்கிறாய் கனத்த எனது அனைத்துத் துயரங்களையும் !

201)எனக்காகத் துயர் படவும் தாங்கவும் செய்கிறாய்
பரந்த உந்தன் மடியில் – அங்கே விட்டுச் செல்கிறேன்
எந்தன் ஒவ்வொரு காயத்தையும் ஒவ்வொரு அடியினையும்
வலி மிகு ஆழ்ந்த அன்பினையும் !

202) அமைதியாய் நான் அனைவரையும் நேசிக்கையில்
இலட்சிய வெறியில் நான் நற்பணி செய்கையில்
மேலும் கீழுமாய் அலைகளை வீசிக் கழுவி விடுகிறாய்
ஆன்மாவை அழுத்தும் அனைத்து அசுத்தங்களையும் !

203 )வெறுப்பற்றும் தூய்மையாகவும் கடப்பேனாக
இந்தப் பள்ளத்தாக்கினை! எனது பக்கலில் உடன் வரும்
அருமை நண்பனே! சிரமத்தில் வெளுத்து- இழுத்து
இழுத்து வருகின்றனையே உந்தன் சரீரத்தை!

204 )இவ்வாறாகத் தொடரும் எந்தன் வாழ்க்கைப் பயணம்
தெய்வீகமானதோர் பொறுமையும் சகிப்புமாய்
சகித்துக் கொள்கிறாய் எந்தன் துயரை அத்தோடு
மேற்பார்வை இட்டு வழி நடத்தவும் செய்கிறாய் !

205 ) எனக்குத் தெரியும் நண்பனே ! என்னை உந்தன் மீது சுமத்தும்
கொடிய இந்தப் பழக்கமானது –
உண்மையில் பாதிக்கும் உனது சமநிலையை என்பதோடுகூட
சோதிக்கும் உந்தன் மென்மைமிகு ஆன்மாவை என்பதுவும்!

206 )எந்தனது துயரங்களையும் வேதனைகளையும்
உந்தன் நெஞ்சில் நான் சுமத்தியதினால்
இங்கே வெண்மையும் அங்கே செம்மையுமான
அமைதி தவழும் உனது இயல்பை உலுக்கி விட்டேனே !

207 )முழங்கியும் தாக்கியும் மரணம் வருகையில்
வெளுத்து விதிர்விதிர்த்துப் போகிறோம்
தாங்கவொண்ணாச் சுமையாய் வலியாய்த்
தலை மீது விழுந்து நொறுக்கி விடுகிறது !

208 ) மிகவும் நொந்து நொடித்துப்போன இதயத்தின் புத்திமதியை
ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன நான் ?
என்னை எப்போதுமே கைவிடாத உன்னை
மறக்க முடியுமா என்ன ?

209 )மரண வாயிலில் இருப்பவர்கள் மன்றாடும்
அந்த ஒரு படைப்பாளி பற்றிச் சொல்லுவாய்க் கவிதையே !
நமது விதிகள் பிணைக்கப் பட்டிப்பதனால் நாம்
சபிக்கப்படுவது இரட்சிக்கப் படுவதும் ஒரு சேர நிகழ்கிறது !
————————————————————————————-

மூலம்: ஹொசே மார்த்தி -கியூப விடுதலைப் போராளி

தமிழாக்கம் :புதுவை ஞானம்.

END OF SIMPLE VERSES _JOSE MART I8:46 AM 8/9/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

புதுவை ஞானம்


xxxi

154 )கடவுள் போல் காட்சி தருவதற்காய்
தேடினான் ஒருவனை அந்த ஓவியன்
எனக்குப் பிறந்தான் என்பதால் அல்ல
என்னுடன் இணையாய்ப் போருக்குச் செல்ல !

155) அங்கே குவிப்பான் ஆதாயங்களை
வென்று வருவாய் என வாழ்த்துவேன் விழைவேன்
குன்றின் உச்சியில் இங்கேயே இப்பொதே
நேருக்கு நேராக மோதட்டும் எதிரியுடன் !

156 )பொன் நிறத்தலையன் வலியவன் வளர்ந்தவன்
பெருங்குடிப் பிறப்பு அவன் இயற்கையிலேயே
எனக்குப் பிறந்தவன் என்பதால் அல்ல
தாய் நாட்டுகாகவே பிறந்தவன் என்பதால் !

157 )வீர மகனே புறப்படு போருக்கு
முன்னம் மரணம் என்னைத்தழுவிடின்
முத்தமிடு எந்தனுக்கு -உன்னைத்தழுவிடின்
இழிமகன் அல்ல சான்றோன் எனக்கேட்ட தாயினும் மகிழ்வேன் !

xxxii –

158 )கருக்கிருட்டு ஒழுங்கையில் நான் உலாப்போகும்
நிசிப் போதில் நிழல் வீழும் நீளமாய்
அண்ணார்ந்து பாக்கையில் ஆங்கோர் மூலையில்
விண் முட்டும் மாதாக் கோயில் மணிகூண்டு !

159 ) அற்புதமானதாய் இருக்குமோ அது ?
சக்தியாய் புனித வெளிப்பாடாய்………
அல்லது ஒரு சடங்குக் கடமையாய்…..
அது என்னை மண்டியிட வைக்கிறதே !

160 )சல சலக்கிறது இரவு திராட்சைக் கொடி மீது
வயிறு நிறையப் புடைக்கிறது புழு
கருத்த சுவர்க்கோழி ரீங்கரிக்கும்
இலையுதிர் காலத்தின் முதல் வரவுக்காய் !

161)ஊமைக்குயில் எழுப்பும் கூதிர் காலை
தலையை உயர்த்தி நான் பார்க்கும் வேளை
சந்தின் முனையில் மணிக்கோபுர ஆலயம்
தோற்றமளிக்கும் ஒரு ஆந்தையைப் போல !

xxxiii –

162 ) தாங்கொணாத் துயரில் தவிக்கிறேன் தாரகைகாள்
செத்துப் போய்விடுவேன் எனவே தோன்றுகிறது
வாழ விரும்புகிறேன் நான் – மங்கை ஒருத்தி என்
வாழ்வில் ஊடுறுவ விரும்புகிறேன் !

163 )தலைக்கவசம் போன்று அவளது தலை அணி
வனப்பாய் வைக்கிறது அழகிய வதனத்தை
ஒளியை எதிரொளிக்கும் அவளது கருங்கூந்தல்
டமாஸ்கஸ் கத்தி போல் தொங்குகிறது தலையின் மேல் !

164 )என்ன நினைக்கிறாய் அவளைப் பற்றி ?
எரிச்சல் படுவார்கள்- பின்னர் வலை வீசுவார்கள்
தசை மூடியிருக்கும் உந்தன் ஆன்மாவோ
நொடித்தே போனது பித்துப் பிடித்து !

165 )என்ன நினைக்கிறாய் இவளைப் பற்றி
சே… அது ஒரு ஈன ஜன்மம் ! அணிவதைப் பார் சிவப்புக் காலணி
உதடு முழுக்க சிவப்புச் சாயம்- முகமோ
வெளுத்துப் பாரித்த வைக்கோல் போல !

166 ) பின்னர் கதறியது துயறுற்ற இதயம்
நாசமாய்ப் போனவளே நாசமாய்ப்- போனவளே!
அதிகம் சபிக்கப்பட்டது இவருள் யாரெனத்
தெரியாதையா எந்தனுக்கு !

xxiv –

167 ) யாருக்குத் துணிச்சல் உண்டு ? நான்
துயரத்தில் உழல்வதாய் வாய் விட்டுச் சொல்ல
இடியும் மின்னலும் முடியும் போது
துயரம் காக்க நேரம் வருமெனக்கு !

168 )எனக்குத் தெரிந்த எல்லாத் துயர்களிலும்
மிகவும் உயர்ந்தது பேசப்படவில்லை
மனிதர்களைப் பிடித்து அடிமையாய் வைப்பதே
படு கேவலமான உலகத்துயரம் !

169 )இன்னும் ஏற வேண்டிய குன்றுகள் எத்தனையோ உள்ளன
உயரமான சிகரங்களில் நான் ஏறியாக வேண்டும்
பின்னர் யோசிப்போம் எனது ஆன்மாவே !
இளமையிலேயே நீ சாக வேண்டும் எனத் திட்டமிட்டது யார் என ?

xxxv –

170 )உனது வாள் எனது இதயத்தில் ஆழமாய்ப் பாய்ந்தால்
என்னவாகிவிடும்?
போனால் போகட்டும்- உனது வாளினைவிட
வலிமையான எனது கவிதைகள் என்னிடம் உண்டு !

171 )வானத்தையே மூடி விடும் எனது சோகம்
கடலையே வற்ற வைக்கும் எனது சோகம்
இருந்த போதிலுமென்ன ? வேதனையென்னும்
சிறகுடன் பிறந்த என் கவிதைகளாறுதல் அளிக்கும் !

172 )சதையின் பயன்கள் மேலோட்டமானவை
சதையைக் கொண்டு ஒருவர் மலரை உருவாக்கலாம்
சதையும் காதலியின் நேசமும் இளமையுமாயின்
சுவர்க்கமும் கிட்டும் ஓர் மதலையும் பிறக்கும் !

173 ) சதையின் பயன்கள் அசிங்கமானவை
சதை கொண்டுதான் உருவாகிறது தேள்
ரோசாவை உதிர வைக்கும் புழுவும்
பயம் காட்டி மிரட்டும் ஆந்தையும் கூட ! ( தேள் :காமத்தின் குறியீடு )

– xxxvii –

174 )இங்கே பார் பெண்ணே எனது இதயத்தை
விசையூட்டு அதனை – உன்னால் முடியுமது
எவ்வளவு விசாலமாய் இருக்கிறதோ இதயம்
அவ்வளவு அதிகமாய் விசையூட்ட வேண்டும் !

175 )நொந்து போன ஆன்மாவுக்கு…….எந்தன்
விந்தை இதயத்தில் , நான் கண்டு கொண்டேன்
காயத்தின் ஆழம் கூடக் கூட
கலையின் வெளிப்பாடும் கூடும் !

xxxviii –
176 ) கொடுங்கோலர்கள் பற்றி ? நல்லது
நிறையவே சொல்வோம் கொடுங்கோலர் பற்றி
அடிமையின் சினமுற்ற கரங்களைக் கொண்டு
சூடு போடு அந்த அவமானத்தின் மீது !

177 ) தவறுகள் பற்றி ? நல்லது
தவறுகள் பற்றி சொல்வோம் நிறையவே
மலைக்குகைகளிலும் இருண்ட முட்டுகளிலும்
என்ன இருக்கிறது ? எல்லாப் பயமும்
கொடுங்கோலர் பற்றியும் தவறுகள் பற்றியும் தான் !

178 )பெண்கள் பற்றி ? பெண்கள் பற்றியா ?
அவர்கள் கடியால் நீ…சாவாயாயினும்- உன்
வாழ்நாள் முழுவதும் பாழானாலும்
அவதூறு பேசாதே பெண்கள் பற்றி !

– xxxix –

179 )இருக்கிறது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வெள்ளை ரோஜா
ஜூலையாயினும் சரி , ஜனவரி ஆயினும் சரி
உண்மையான கரத்தை எனக்கு நீட்டும்
நல்ல நண்பனுக்குத் தர வேண்டும் நான் அந்த ரோஜாவை

180 )தாக்கும் அந்தக் கொடியவனுக்கு – நான்
வாழும் இதயத்தை உடைப்பவனுக்கு
இலையையோ முட்களையோ நான் தர மாட்டேன்
அவனுக்கும் கூட வைத்திருக்கிறேன் ஒரு வெள்ளை ரோஜா !

181 ) எனது நண்பனை வரைகிறான் அந்தக் கலைஞன்
பொன் நிறத்திலும் திடமாகவும் அவனது தேவதைகள்
சுட்டெரிக்கும் சூரியன் ஜொலிக்கிறது சுற்றிலும்
மேகங்களில் சாய்ந்து அவர்கள் தொழும் போது !

182 ) என்னைத் தீட்டு உனது உன்னதப் படைப்பாற்றல் கொண்டு
தேவதைகளின் மென்மையும் அச்சமும் கொண்டு
பரிசளிப்ப உனக்கு இரட்டை அடுக்குச்
சிவப்பு மலர்ச் செண்டு !

183 )அப்போது நான் நினைத்தேன் கிழட்டு சிப்பாய் பற்றி
தன்னை படைத்தவனுடன் நிசப்தமாய் உறங்கும் அவனைப் பற்றி
எனது பரிதாபத்துக்குரிய தந்தையாம் உழைப்பாளி பற்றி
எனது ஏழைத் தந்தையாம் அந்த சிப்பாயின் பெருமை பற்றி !

184 )எனக்கு அந்த படாடோபமான கடிதம் கிடைத்தபோது
பெருமை மிகு கனவானின் கையெழுத்தைக் கண்ட போது
தனிமையான எனக்குரிய நிலவறையை நினைத்தேன்
வெளுப்பையோ ரோசாவையோ அல்ல !

– XLII –

185 )கடலோரமாக அண்மையில் இருந்த
காதலின் விசித்திரக் கடைவீதியில் அலைந்தபோது
தாரகை போல்ஜொலிக்கும் துயர முத்து ஒன்று
அதிர்ஷ்ட வசமாய் அகப்பட்டது ‘அகாருக்கு’ !

186 )நீண்ட நேரம் அணைத்துக் கொண்டாள் மார்புடன் அதனை
தடவிக் கொடுத்தன கண்கள் முத்தினை நீண்ட நேரம்
விரைவிலேயே அதனை வெறுத்தும் விட்டாள்
கடல் எழும்பும் போது அதை எறிந்தும் விட்டாள் !

187 )விஷமத்தனமான ‘அகார் ‘ அழுது கொண்டிருந்தாள்
கோபத்தில் அவள் பறந்து கொண்டிருந்தாள்
கடலில் இருந்த முத்து இடை மறிக்க முயன்றது
குமுறும் கடல் பதில் அளிக்க வந்தது !

188 )உலகிலேயே மிக அழகான முத்தினை என்ன செய்தாய்
முட்டாளே- மரியாதை இல்லாமல் ?
எனது ஆழத்தில் தூக்கி எறிந்தாயே சோகமான அந்த முத்தினை
எப்போதுமே நான் காத்திடுவேன் கண் போல !

8:09 AM 8/3/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

புதுவை ஞானம்


(XVIII)

113)பேதை சூடிய பின்தலைச் சுட்டி
செதுக்கப் பட்டது கருத்த பொற் கனிமத்தில்
களங்கம் இல்லா மனிதன் ஒரு காலத்தில்
கல்லின் இதயத்துள் இருந்து தோண்டியது !

114) பறந்து சென்ற தோற் பறவை கடந்த இரவில்
கொத்திவந்தோர் சுட்டி மங்கைக்கெனத் தன் அலகில்
பளபளப்பான அந்தச் சுட்டி – அவள் அறிவாளா
பசையும் படிகமும் ஒட்டிச் செய்ததென ?

115) குறுகிய இடுப்பில் குமரி தரித்திருப்பதுவோ
பொய்யாய் மதிப்பிடப்பட்ட போலி வைரம்
அலச்சியமாய் அவள் தூக்கி எறிந்ததோ
சொக்க தங்கத்தின் கனிமத்தால் ஆனது !

(XIX)

116) தீப்பிழம்பென உன் விழிகள் சிவந்தால்
கொண்டை ஊசிகள் கலைந்திருந்தால்
இரவு முழுவதும் ஆடினாய் ஆடாத
ஆட்டங்களை ஆடினாய் என்பதாக !

117) எரிந்து விழுந்தாலும் மழுப்பி மறைந்தாலும்
தாங்கொணா வெறுப்பில் சலித்துப் போனேன்
அருவருப்பாக வந்தது உன்னைப் பார்க்கவே
அழகுதான் எனினும் பாதகம் செய்பவள் நீ !

118) சங்கேதம் ஒன்று அம்பலம் ஆனதினால்
எங்கே போனாய் இரவில் என்பதும்
இழைத்த பிழை என்னவாய் இருக்கும்? அட
அழுது கொண்டிருந்திருக்கிறாய் அடியேனை நினைத்து !

(X)

ஹொசே மார்த்தி பகுதி -3
_____________________________________________________________________

119) கலக்குகிறது காற்று எந்தன் காதலை
கன்னி பொன் நிறத்தாள் ஆனாலும்
மாலை மயக்கமோ உண்மையாய் இல்லை
காதற்கிழத்தியின் குலாவலைக் கொஞ்சலை
மேல் வானம் நோக்கி எடுத்துச் சென்றது
மிதக்கும் மேகம் !

120 )கன்னியின் காதலை காற்று இழுப்பது போல்
கவர்ந்து சென்றது மறையும் மேகம்
மாலை என்ன புதிதாய் ஏமாற்ற ? மங்கைதான்
ஆறுதல் அளிக்கிறாள் பொய்யாய் !

121 )கலைக்கண்காட்சியில் மாலையில் நேற்று நான்
கண்டேன் நங்கையைமுதல் முதல்நேற்று தான்
இதயம் பறந்தது என்னிடமிருந்து
மங்கையின் காலடி கண் ஒற்றிக்கொண்டு !

122) ஓய்வெடுக்கின்றாள் உட்கார்ந்து தரையில்
ஓவியச்சீலையில் அவளது கண்ணும் கவனமும்
களைத்த கணவனோ காலடி நிழலில்
அம்மணக் குழவி அவளது மார்பில் !

123 ) துயரக்குவியல் தலைக்கு மேலே
கடைசி கறவையின் தெறிப்புகள் கீழே
மேலாடை நழுவுவதை உணர முடிகிறது
சவத்தின் மேல் போர்த்திய துகிலா அது ?

124) சலிப்படைந்து போனவரின் கனிவற்ற பூமியில்
வயலெட்டும் மலர்வதில்லை முட்களும் வளர்வதில்லை
நேசிக்கும் நெஞ்சத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்கள்
வரண்டும் இருண்டும் கிடக்கிறது வானம் !

125) கவர்ந்து சென்ற கன்னியவள் விடுவிக்க மாட்டாள்
சுதந்திரமாக……………………………… எந்தனது இதயத்தை
பெருமை மிகு வரவேற்புக் கூடத்தின் சுவற்றில்
நேற்றைய ஆசான்களின் நெஞ்சினிக்கும் ஓவியங்கள்.!

( xxii )

126 )மேல் அங்கிகளும் காலுறைகளும் நிறைந்த
விசித்திர நடன அரங்கம் வந்துளேன் யான்
ஆண்டு முழுவதும் வேட்டையாடியவர்களில்
சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்துளது புத்தாண்டு !

127 )சிவந்திருக்கும் மேலாடைக் கையன்றில்
ஊதா நிறச் சாட்டின் உராய்கிறது
சுருதி சேர்க்கிறார் செண்டையில் _அவரோ
பிரபலமான கனவான்களில் ஒருவர் !

128 )சிவப்பு சட்டை காற்றில் சுழல்வது
தீப்போலத் தெரிகிறது – பறக்கும் மென் பட்டு !
உதிர்ந்த சருகுகள் காற்றில் உழல்வது போல்
குருட்டு மனிதனின் கண்களின் முன்னே !

xxiii

129 ) ஏகுவன் யான் இந்த உலகை விட்டு
இயற்கையின் கதவு திறந்திருக்கும் எந்தனுக்கு
எந்த வண்டி மேல் கிடத்த வேண்டுமோ
அந்த வண்டியை மூடும் பசுந்தழைகள் !

130 ) படுக்க வைக்காதீர் – என்னை இருட்டு வெளியினிலே
தீர்த்துக் கட்டுவதற்காய் வருவர் துரோகிகள்
நல்லவர் போலவே என்னுயிர் போகும்-ஆதவன் நோக்கி
நல்லவன் அல்லவா நான் !

xxiv

131 )மகிழ்வாய்ச் சென்று தூரிகை ஏந்தும்
துணிவு மிக்கதோர் ஓவியன் எனது நன்பன்
காற்றுப்ப் பரப்பெனும் ஓவியச் சீலையில்
விதைப்பான் அவன் குழப்பத்தின் குமிழிகளை !

132) தெய்வீக வண்ணம் கொண்டு ஓவியம் தீட்டும்
மகத்தான ஓவியன் ஒருவன் வசிக்கிறான் இங்கு
கட்டுப் பட வேண்டுமா என்ன அவனது உன்னதத் திறமை ?
கப்பலின் பக்கலில் மலர்களை வரைவதற்கு ?

133 )தான் வரைகையில் மோதி இடரும்
கடலை நோக்கி எரிச்சலாய்ப் பார்க்கும்
ஏழை ஓவியனை எனக்குத் தெரியும்
கடல் போல் ஆழம் அவனது அன்பு !

-xxv –
134 )வெகுளிப் பையனின் இளிப்பைப் போல
வியப்பு எனக்கு இன்னமும் இருக்கு
மஞ்சள் பாரித்த வானம்பாடிக்கு
கன்னங்கரிய கண்களா ………! ஏன் ?

135 )நாடற்றவனாக நான் மரிக்க மாட்டேன்
இன்னாரின் அடிமை என நான் சாக மாட்டேன்
எனது கல்லரை மீது ஓர் மலர் வளையமும்
எனது சவத்தின் மீது ஒரு கொடியும் வேண்டும் !

xxvi-

136 )இறந்த பின்னரும் வாழ எனக்குத்தெரியும்
மகத்தானதொரு கண்டு பிடிப்பு ஒன்றினை
கடந்த இரவு சரி பார்த்துக் கொண்டேன்
காதல் ஒன்றேதான் சிறந்த சஞ்சீவி !

137 ) சிலுவையின் சுமை அவனை அழுத்தும் போதும்
உரிமைக்காகவே உயிர் துறப்பேன் என்பவன் மனிதன்
தன்னால் முடிந்த்து அனைத்தும் செய்து ஒளியில்
நனைந்த அவன் மீண்டும் வருகிறான் !

xxvii-
138 )கடந்த இரவில் நாங்கள் அயர்ந்து உறங்குகையில்
கொடிய எதிரிகள் கொளுத்தினர் எம் வீடுகளை
வெப்ப காலத்து வெண் நிலவொளியில்- அவரது
வாள் கொண்டு வாரப்பட்டன எம்மவர் தெருக்கள் !

139 ) இஸ்பானிய வாட்களின் சீற்றத்துக்கு எஞ்சிய
சிற்சில பேர்களே இருந்தனர் உயிருடன்
சூரிய உதயத்தில் யாவரும் கண்டது
குருதியும் சதையும் குவிந்த தெருக்கள் தான் !

140 ) தோட்டாக்கள் பறந்த அவ்விடை வெளியில்
மிரண்டோடிய வண்டிகள் ஒன்றனுள்
செத்துப்போன மாது அவள் சடலம்
இரவின் ஓட்டத்தில் எழுந்த களேபரத்தில்
உரத்துக் கேட்டது ஒரு குரல் -தவிர்க்கப்பட்டது
ஒரு கொலைச் சாவு !

141 )துரித வேகத்தில் பறந்தன தோட்டாக்கள்
துளைக்கப் பட்டன மூடிய கதவுகள்
கூவியழைத்த மாது கொடுத்தாள் உயிர் எனக்கு
என்னை எடுத்தேக அன்னை வந்து விட்டாள் !

142) மரணத்தின் கோரைப் பற்களின் ஊடே
நுழைந்து வந்தனள் அவள்- வீரமிக்க ஹவானாவினர்
வியப்பினால் வாய் பிளக்க- இன்றும் கூட
மனத்திட்பம் நிறைந்த அம் மங்கையைக் கண்டால்
தொப்பியைக் கழற்றித் தாழ்ந்து வணங்குவர் !

143 )உன்மத்தம் பிடித்ததைப் போல் ஒன்றி முத்தமிட்டோம் நாங்கள்
சுற்றிலும் இருந்த மக்கள் நடுநடுங்கி ஓடுகையில்…………..
சீக்கிரம்…..சீக்கிரம் எனத்தவித்தாள்
தனியே விட்டு வந்தேனே குழந்தையை
‘சீக்கிரம் சீக்கிரம்’- சீறியது அவள் கதறல் !

xxviii –

144)பண்ணை வெளியில் பசும்புற்றரையில்
தந்தையின் கல்லறை இருக்கும் இடம் நோக்கி
மான் நடக்கின்றான் -அவனொரு சிப்பாய்- எனினும்
அவன் பணி செய்வதோ ஆக்கிரமிக்கும் அந்நியப் படையில் !

145 )தந்தை பெயர் போனவர் தனது துணிவுக்கு
எந்தக் கொடியினை ஏந்திப் பிடித்தாரோ
அந்தக்கொடி போற்றி அணி செய்யப்பட்டவர்
கல்லறையிலிருந்து கடிது எழுத்த அவர்
விட்டார் ஒரு அறை வீணப்பயலுக்கு
வீழ்ந்தான் அம்மகன் மண்மகள் மார்பில் !

146) விண்ணின் மீது மின்னும் இடி முழக்கம்
பண்ணை வீட்டில் மோதும் சூறாவளி
தோல்வியில் துவண்டு விழுந்த மகனைக்
கிடத்தினார் தந்தை கல்லறை மீது !

xxix-

147 )அச்சடிக்கப் பட்டிருக்கிறது அரசனின் முகம்
சட்டப்படியே எல்லா ஆவணத்திலும்
பையனின் சொந்தத்துவக்கால் விதியை முடித்தனர்-அரசனின்
சொந்த அடியாட்கள் தம்மிச்சையாக !

148)போற்ற்ப்பட வேண்டிய புனித சட்டம் இது
அரசரின் புனிதப் பெயரால் போர்த்திக் கொண்டு
அந்தப் பையனின் சொந்தத் தமக்கை
பாடுகின்றாள் அரசனின் உரு முன்னர் நின்று !

xxx –

149 ) சுவர்க்கத்தில் இருந்து எரிக்கிறது இடி மின்னல்
குருதி பூசிக்கொண்டு இருக்கிறது ஆங்காங்கு மேகம் தன்
நூற்றுப் புழை வழியாய் வெளித்தள்ளும் நாவாய்
பிடிபட்ட கருப்பு அடிமைகளின் தொகுதியை !

150 ) புயற்காற்றும் பேய் மழையும் சுழன்றடிக்கும்
உயர்ந்த மலைக்குன்றின் அடர்ந்த தோட்டத்தில்
அடிமைகளின் அணி வகுப்பு ஆடையேதுமின்றி
தராதரம் பிரிக்கப் பல் பிடித்துப் பார்ப்பதற்காய் !

151)சூறாவளிக் காற்றில் சின்னா பின்னமாய்
அடிமைகள் நிரம்பி வழியும் கீற்றுக்கொட்டகைகள்
மிரண்டதோர் அன்னை அழுது புலம்புகிறாள்
மனிதக் கழிவை யார் பார்ப்பார் என்பதாக!

152 )பாலை வனத்துப் பளிங்குச் சிவப்பென
ஆதவன் எழுந்தான் தொடுவானத் தொலைவில்
தூக்கிலிட்டுத் தொங்க விடப்பட்ட துயர்மிகு அடிமையின்
கருத்த உடல்மீது பட்டுத்தெரித்தன பகலவன் கதிர்கள் !

153 ) பார்த்த ஒரு சிறுவன் பதறினான் நடுங்கி
ஒடுக்கப் பட்டவர்கள் மீதான பாசத்தில்
ஏற்கப் பட்டதோர் சபதமந்த அடிமையின் காலடியில்
“கொடுமைக்கு எதிர்க் கொடுமை
இழைத்திடுவோம் நிச்சயமாய் ! ”


j.p.pandit@gmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

புதுவை ஞானம்


( X )
74 )தனிமையில் நடுங்குதென் நெஞ்சு
இரவு கூடக் கூடத் துயரம் வளரும்
நாடகம் ஒன்று நடக்கிறது செல்வோம்
இஸ்பானிய மங்கையின் இசை நடனமது .

75 )முகப்பினில் இருந்த அந்தக் கொடியினை
அகற்றி விட்டனர் நன்மையாய்ப் போயிற்று
இன்னும் அந்தக் கொடி பறக்குதென்றால்
சென்று காணவே மனமிசையாது .

76 )வெகு தோரணையோடும் வெண்ணிறம் பூண்டும்
இஸ்பானிய நங்கை அரங்கினுள் நுழைகிறாள்
காலீஷியாவிலிருந்தா வருகிறாள் அந்நங்கை ?
இல்லை – விண்ணிலிருந்து தான் இறங்கி வருகிறாள் !

77) காளைச் சண்டையின் சிவப்புத் துணியும்
செந்நிறம் வாய்ந்த கையிலாச் சட்டையும்
கிராம்பு மணக்கும் மயக்கச் சீலையும்
தொப்பியும் அணிந்து தோன்றிணாள் முன்னே !

78)அடர்ந்த அவளின் புருவம் நோக்கின்
முரட்டுக் கலப்பினம் நினைவில் வந்தது
முரின் சாடையே முகத்தில் தெரிந்தது
காதின் அடிகோ வெண்பனி தோற்றது !

79) விளக்கு ஓளி மங்க ஓளி அதிர
சால்வையும் சட்டையும் பகட்டாய் அணிந்து
கன்னி மேரி விண்னுலகம் மேவிய காட்சியாய்
அண்டாலுசியன் அடவில் அரங்கம் ஏறினாள்

80) சவால் விடும் பாணியில் நிமிர்ந்தது அவள் தலை
மேலாடை விசிற எழும்பின தோல்கள்
வளைந்த கரங்கள் தலையினைச் சுற்ற
ஆர்வமிகு காலுதைப்பில் அடவுகள் கொஞ்சும்

81)கத்திபோல் கிழிக்கும் நோய்கண்ட ரசனையை
பக்கமாய்ச் சாய்ந்த அத்தாளம் பிசகாக் காலடிக் கோலம்
ஆடரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
ஆடவர்களின் நொறுங்கிய நெஞ்சினால் !

82)கொண்டாட்ட உணர்வு கொழுந்து விட்டெரிகறது
கனல் கக்கும் அவளது கண்களின் கூர்மையில்
காற்றில் பறக்கிறது திரும்பும் போதெல்லாம்
சிவப்பு புள்ளிகள் தெரிந்திட்ட சால்வை !

83)துள்ளித் தாவுகிறாள் திடீர் திடீர்ரென
திரும்பி குதிக்கிறாள் தலைவணங்குகிறாள்
காஷ்மீரச் சால்வை பரக்க விரிகையில் – தன்
வெள்ளைக் கவுனைப் படைக்கிறாள் விருந்தாய்

84)ஊஞ்சலாடுகிறது அவளின் பொன்னுடல் முழுவதும்
மயக்கி இழுக்கிறது திறந்த அவள் வாய்
பூவாய் மலர் சிவந்த அவளது அதரம்
ஒய்வதே இல்லை அவளின் தொடரும் அடவுகள்

85)காற்றின் போக்கில் மெல்லென திரும்பி
புள்ளிச் சால்வையை நீள விரிக்கிறாள்
எல்லாருக்கும் கண்கள் மயங்க
விட்டுச் செல்கிறாள் ஏக்கப் பெருமூச்சை !

86)சிறப்பாக ஆடினால் இசுலாமிய நடனமாது
சிவப்பும் வெள்ளையும் கலந்தது அவளின் சால்வை
துடித்து நடுங்குகிறது தணிந்த அவளது ஆன்மா
உள்ளிழுத்துக் கொள்கிறது தன் தனிமைச் சிறைக்குள் !

87)நம்பிக்கை மிகுந்ததொரு பணியாள் எனக்குண்டு
எனதெல்லா விழைவுக்கும் இணங்கி ஒத்துழைப்பான்
ஓயாமல் கவனிப்பான் சோர்வுறவே மாட்டான்
எனது கிரீடத்தைத் துலக்கிப் பளக்க வைப்பான் !

88 )வேலையிற் சிறந்த அப்பணியாளன்
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
எத்தனை நேரம் வேலை செய்தாலும்
துவளுவதில்லை முணகித் தேம்புவதில்லை !

89 )வெளியே நான் போனால் ஓடி ஒளிகிறான்
என் பைகளுக்குள்ளேயே புகுந்து கொள்கிறான்
திரும்பி வருகையில் நெருங்கி வருகிறான்
சாம்பல் கிண்ணத்தை அளிக்கிறான் அறிவு கெட்டவன் !

90 )பல்லென விழித்து நான் துயிலெழும் போது
முன்னரே எழுந்து என் அருகிருக்கின்றான்
எழுதும் போதெல்லம் எனது மைக்கூட்டில்
அவன் சிந்திய உதிரமே ஊற்றெடுக்கின்றது !

91 )எப்போதும் நம்பலாம் என் பணியாளனை
நடக்கும் போது அவன் நடுக்குற்ற போதிலும்
குளிரும் கதகதப்பும் தனக்குள்ளே கொண்டவன்
ஒரு எலும்புக்கூடுதான் எந்தன் பணியாளன் !

– Xii –

92 )உல்லாசமாக ஒரு முறை படகு செலுத்தினேன்
உள்ளம் கவர்ந்து இழுக்குமோர் பெரிய ஏரியில்
தங்கம் போலச் சொலித்தனன் கதிரவன்
அதை விட அதிகமாய் மின்னியதென் ஆன்மா !

93 )திடீரெனவோர் குமட்டும் நாற்றம்
காலுக்குக் கீழே குனிந்து பார்க்கையில்
வயிறு முட்டத் தின்று செத்த மீன்
தண்ணீருக்கு மேலே தப்பலடித்தது !

– XIII –

94 )எங்கு முட்புதர் செழித்து வளர்ந்துளதோ
எங்கு நேர்ப்பாதை வளைந்து மறைகிறதோ
அந்தத் திருப்பத்தில் இணைந்து மறைந்தனர்
தேவதை ஒருத்தியும் அந்த வழுக்கைத் தலையனும் !

95 )புன்னை மரத்தோப்பின் அண்மையில்
கண்ணின்று மறைந்தது அந்தச் சோடி
பளபளத்தது வழுக்கைத் தலை மட்டும்
தங்க விளக்கின் கிரீடத்தைப் போல !

96 )மரம் வெட்டும் ஓசை மிதந்தது காற்றில்
கண் முன் தாவியது உயர்ந்தெழும் பறவை
யாருக்குத் தெரியும் அந்த ஜோடிகள்
முதல் முத்தம் இட்டது எப்போது என்று ?

97 )தேன் மணக்கும் அந்தத் தேவதைக் கூந்தல்
இளம் பொன்னிறம் கொஞ்சம் செந்நிறம்
பட்டுத் தெரித்தது வழுக்கை மண்டையில்
பட்ட மரத்தில் படர்ந்ததே பசுங்கொடி !

( “அருகிருப்பது எட்டியே ஆயினும் அரும்பு
முல்லை படர்வது படரும் “- ஒரு பழந்தமிழ்ப் பாடல்.)

– xiv –

98) எப்போதுமே யான் மறக்க மாட்டேன்
எப்போதோ உதிர்ந்த அந்த இலையை
மொட்டையாஇ உதிர்ந்த அந்தக் கிளையில்
மொட்டவிழ் தளிர் ஒன்று முளைத்த அதிசயத்தை !

99 ) ஏதும் அற்றதோர் பஞ்சகாலத்தில்
அணைந்துபோன அந்த அடுப்படியில்
காதல் வயப்பட்ட கன்னி ஒருத்தின்
கைப்பற்றினானே அவ்வழுக்கைத் தலையன் !

– xv –

100 ) இன்னமும் வந்து கொண்டு இருக்கிறார் மஞ்சள் மருத்துவர்
தனது சிகிச்சையை எனக்குத் தொடர
மஞ்சள் பாரித்த ஒரு கரம் என் மேல்
மற்றொரு கரமோ சட்டைப் பையில் !

101)மெல்லெனத்தொடும் அந்த மருத்துவர் ஒரு
மூலையில் வசிக்கிறார் சற்றே தூரத்தில்
வெளிறி மெலிந்த ஒரு கரம் என்மேல்
மற்றொரு கரமோ அவரது நெஞ்சில் !

102 ) ஒரு மிட்டாய்க்காரன் வருகிறான் என்னிடம்
காகிதத் தொப்பியும் கவியும் மணமுமாய்
மலாக்கா அல்லது ஷெர்ரி மிட்டாயைச்
சுவைத்துப் பார்க்க பிசுக்குக் கேட்கவா ?

103 )மிட்டய்க்காரா சொல்லு அவளிடம்
பார்க்க விரும்பியும் தவற விட்டுவிட்டாள்
எனக்கு ஒரு முத்தம் யத்தனிக்கவும்
வசந்த விடியலின் காட்சியைக் காணவும் !

_ XV _

104 )தாழிட்டிருந்த தடுப்பினைத் திறந்து
ஈரம் படிந்த ஜன்னலில் சாய்ந்து
நிலவைப் போல வெளுத்தும் நிலைத்தும்
விதியை நினைத்து வெம்புகிறான் காதலன் !

105 )பசுமை படர்ந்த அவள், விதானத்தின் கீழ்
சிவந்த பட்டும் கருத்த புறாவுமாய்.
காதலைப் பற்றி ஏதும் பேசாத அந்தக் கன்னி
மாலையில் பறித்தாள் ஒரு ஊதா நிற மலரை !

_ XVII _

106 ) பொன்னிறக்கூந்தல் அலைகிறது காற்றில்
கபில நிறக் கண்களை உறுத்தியவாறு
கண்டதில் இருந்து எந்தன் இதயமோ
தங்கப் புயலில் சிக்கித் தவிக்கிறது !

107)வசந்த கால வாலிபத் தேனீ – பிளக்கும்
புத்தம் புது மலர் மொக்கினை – புனித முகமென்று
சொல்லுவதில்லை கடந்த காலம் போல்
கன்னி என்பதெல்லாம் மாலை மயக்கம் !

108 )குழப்பத்துக்கிடையில் குறுக்கே புகுந்து
சொட்டு மருந்திடுவேன் புறை விழுந்த கண்ணுக்கு
கருமையினூடே வானவில் ஒளிரும்
வெள்ளி மரங்களின் உச்சிக்கு மேலாக !

109 )முட்புதர் அடர்ந்த மலைகளின்
உச்சியில் பேரொளி கண்டு வியப்பினில் ஆழ்ந்தேன்
நீல வானம் போல் வசியம் செய் ஆன்மாவில்
மஞ்சள் மலரொன்று இளம் சிவப்பாய்ப் பூக்கிறது !

110) காட்டின் ஊடே தடம் தேடுகிறேன்
தூரத்தில் இருக்கும் கடற்குட்டைத் நாடி
கிளைகளின் ஊடே கூர்ந்து நோக்கையில்
நீர் மீது நடக்கும் அவளைக் கண்டேன் !

111) தோட்டத்து அரவம் சீறுகின்றது
வழுக்கிக் கொண்டு வளைக்குள் செல்கிறது நஞ்சினைக் கக்கி
சிறகை விரித்தென்னை வரவேற்க்கும் அந்த வானம்பாடி
ஆன்மா உருக சோக கீதம் சோம்பி இசைக்கிறது !

112) இசைக்கும் யாழாய் இசையமைப்பவனாய்
பிரபஞ்சம் முழுவதும் அதிரும் என்னுள்
சென்றதும் திரும்பியும் வருவேன் பகலவன் போல்
காதலும் நானே பாடலும் நானே !


j.p.pandit@gmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

புதுவை ஞானம்


(V)

44)கடல் நுரை மலையெனக் கண்டது உண்டோ ?
அப்படி ஆயின் அது என் பாடல்!
மலை என உயர்ந்து இருந்த என் பாடல் இறகென மிதந்து பரந்து விரிந்தது.
வாளின் கூர்மை ஒத்ததென் பாடல் -அதன் பிடிதனில் மலரும் மெல்லிதழ்ப் பூக்கள் !
ஊற்றென மலருரும் எந்தன் பாடல் தெள்ளிய நீரில்பவழமாய் மிளிரும்.

45) வாளின் கூர்மை ஒத்ததென் பாடல்- அதன்
பிடிதனில் மலரும் மெல்லிதழ்ப் பூக்கள்
ஊற்றென மலரும் எந்தன் பாடல்
தெள்ளிய நீரில் பவழமாய் ஒளிரும்.

46) இளம் பச்சையானது எந்தன் பாடல்
எனினும் சிவந்து ஒளிரும் தீப்போல்
காயம் பட்ட மான் எந்தன் கவிதை
புதரினைத்தேடும் ஒளிந்து கொள்ளுதற்காய்.

47) சுருங்கச்சொல்லி¢ விளங்க வைக்குமது
துணிந்தவருக்கோ மனதை மயக்கும்!
எ·கின் அனைத்து வலிமையும் கொண்டு
வாளாய் வடித்தது எந்தன் கவிதை. !

(VI)

48) நினைவுச் சின்னமாய் எடுத்துச் செல்ல யான்
விழைவதும் மகிழ்வதும்
நிறை அறிவன் வெள்ளி முடிக்
கற்றை ஒன்று மட்டுமே !

49 )இரக்கத்தின் பேரால் அனுமதிக்கப் பட்டால்
யாசிப்பதற்கென்று ஒரு சலுகை இருக்கின்றது
நேசிக்கும் எந்தன் பாச மிகு தங்கையின்
பூரிக்கும் ஓவியத்தை உடன் கொண்டு செல்ல.

50)விதிக்கப் பட்டதாம் இந்தவொரு வாழ்வில்
கருவூலம் ஒன்றைக் கைப்பற்ற விழையின்
மறைத்துக் கொண்டு வந்த வெள்ளிக் கற்றையை
தங்கப் பெட்டகத்தில் தக்க வைப்பது தான்.

(VII)

51)இதயத்தின் உள்ளே இடம் ஒன்று உண்டு
இஸ்பெயினில் இருக்கும் ஆரகோனுக்கு
வாய்மை வலிமை நன்றி மாசிலாத்தன்மை
இவற்றுள் அனைத்துமே அந்த ஆரோகான் தான்.

52 ) முட்டாள் ஒருவனுக்கு விளங்கவில்லையெனில்
இப்படித்தானடா என விளக்கிச் சொல்வேன்
நல்ல ஒரு நண்பரை நான் அங்கு கண்டேன்
ஒர் அழகியின் காதலும் ஆதாயம் ஆனது அங்கே !

53 )பூத்துக் குலுங்கும் அந்தச்சம வெளியில்
வீரர்கள் கண்டனர் வெஞ்சமர்க் களத்தை
உயிரையே பணயம் வைப்பது ஆயினும்
கைவிட மாட்டார் ஏற்றதோர் கொள்கையை.

54 )நகரத்தந்தை கடிந்து கொண்டாலும்
முரட்டு அரசன் குறுக்கிட்ட போதிலும்
அங்கியை உதரித் தோளில் போட்டு
துவக்கு கொண்டுயிர் துறப்பர் அக்கணம்.

55 )சகதிக் குழம்பாய் ஈப்ரோ தழுவும்
மஞ்சள் நிலக்கரை மனது நேசிக்கும்
பண்டைய தியாகிகள் நினைவாய் நிறுத்திய
நடுகற்கள் யாவும் வலம் வரும் மனதில்.

56)கொடுங்கோலரை வளைத்துப் பிடித்து
ஆவியழிப்பவரைத் தலை வணங்குபவன் யான்
கொடுங்கோல் எதிர்ப்பவர் க்யூபன் ஆயினும்
ஆரகோனின் அரும்புதல்வர் ஆயினும்
வாழ்க அவர் புகழ்- வாழ்க அவர் புகழ் !

57)கவிழ்ந்த நீள்நிழல்த் தாழ்வாரங்கள்
சுழன்று கிறங்கும் மாடிப்படிகள்
மோனம் தவழும் கோயிற்கூடம்
காலத்தை வென்ற கன்னியர் மாடம்
எனக்குப் பிடிக்கும் எனக்குப் பிடிக்கும்.

58)பூத்துக்குலுங்கும் பசிய நிலப்பரப்பை அது
இஸ்பானியர்உடமை ஆயினும் இஸ்லாமியர்உடமை ஆயினும் நேசிப்பவன் யான்!
ஏனெனில் எந்தன் வாழ்வில் இதுவரை நெஞ்சில் ஒற்றை மலர் கூட
மலர்ந்ததே இல்லை.

(VIII)

59)காலம் சென்ற என் நண்பன் ஒருவன்
காலம் கடந்து வரத் தொடங்கி உள்ளான்
வாய் விட்டுப் பாடுகிறான் அருகில் அமர்ந்து
துயரம் தோய்ந்து நடுங்கும் குரலில்.

60)இரட்டைச் சிறகடிக்கும் புள் மீதமர்ந்து
நீல வான் வழி மிதந்து செல்கின்றேன்
புள்ளின் சிறகில் ஒரு புறம் கருமை
ஒளிரும் பொன்னிறம் மறுபுறம் மின்னும் !

61)ஒரு வண்ணம் விரும்பி மறுவண்ணம்
மறுப்பது பித்துக்குளியின் பேதை மனது
கருமையும் பொன்மையும் கலந்த
பொன் வண்டே’காதல்’ எனவாகும்

62) எரிச்சல் கொண்ட இதயம் படைத்த
வெறிச்சி ஒருத்தி இங்கிருக்கின்றாள்
வெ·குளியால் குருதி குடிக்கும் அப்பேய்
சிரிப்பே அற்றதோர் நிலைக்குத் தாழும்.

63 )எப்போதைக்குமாய் நொடித்ததோர் நெஞ்சம்-
நிலைக்க வைக்கும் குடும்பமெனும் நங்கூரம் இழந்து
புயலில் புறப்பட்ட தோணியாய் அலையும்
வரவும் போகவும் வழியறியாமல்.

64 )தாங்கொணாத்துயரம் தாக்கிடும்போது
மரித்த அம்மனிதன் சபித்து அழுவான்.
சரித்து அன்பாய்த் தலையில் தட்டி
பரிவோடு ஆழ்ந்த உறக்கத்தில் கிடத்துவேன் !

(IX)

65) மரமடர்ந்த சோலையின் விரிந்ததொரு சிறகில்
இரவின் நிழலில் மலர்கிறது ஒரு கதை
கவுதமாலா ஈன்ற கன்னியின் கதை அது
காதலுக்காக ஆவி துறந்த அற்புத மங்கை அவள்.

66)அல்லியும் மல்லியும் மருக்கொழுந்தும் விரவி
மலர் வளையங்கள் புனையப் பட்டன
வெண் பட்டுத் துணியால் வேயப்பட்ட
சவப் பெட்டிக்குள்ளே கிடத்தப் பட்டாள் அவள்.

67) தன்னை மறந்து விட்ட காதலனுக்கென
நறுமணம் பூசிய துவாலையை அளித்தாள் _ அவனோ
வேறு ஒருத்தியை மணந்து நாடு திரும்பவே
காதலின் கல்லறையில் வாடினாள் வஞ்சி.

68) தூதுவர்களும் பாதிரியார்களும் புடை சூழ
கல்லறை நோக்கி கடந்தது அவள் பயணம்.
பின் தொடர்ந்தது ஏழைகள் கூட்டம்
அலை அலையாய் மலர்களை ஏந்தி !

69 ) ஜன்னலின் வலைக்கதவை மெல்லெனத் திறந்தாள்
மீண்டும் காதலனைக் காணும் ஏக்கம் பெருமூச்சாய் தகிக்க
கடந்து சென்றானவன் புது மண மகளோடு மீண்டும் அவனைப்
பார்க்கும் வாய்ப்பு வரவே இல்லை அவளுக்கு !

70 ) வெயில் பட்ட செம்பாய்க் கொதித்தது அவள் நெற்றி
விடை பெறக் கடைசியாய் நான் முத்தமிட்ட பொழுதில்.
வாழ்நாள் முழுவதும்வெறித்தனமாக
நான் நேசித்தது – அந்த நெற்றி ஒன்று தானே !

71 ) நதியில் இறங்கிணாள் அவள் ஓர் நாளிரவில்
மருத்துவர் கண்டார் சடலமாய் அவளை –
மரித்து விட்டாளாம் குளிரால் விரைத்து – அவளைக்
கொன்றது காதலே என்பது எனக்குத் தெரியும் !

72 )பனி படர்ந்த கல்லறை மீது கிடத்தி இருந்தனர் அவளை
பலகையின் மீது முத்தமிட்டேன் நான்
மெல்லிய கரத்திலும் மீண்டும்
வெண்ணிறக் காலுறை மீதும்.

73 )நின்றிருந்தேன் அங்கு இருட்டு கவியும் வரை
சென்று விடுங்கள் என்றான் கல்லறைக் காவல் காரன்
மீண்டும் ஒரு முறை பார்க்கவா இயலும் …..
காதலுக்காகவே உயிர் விட்ட அவளை ? 06:32 PM 7/25/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

புதுவை ஞானம்


21)கிளைகளுக்கிடையில் நுழைந்து செல்கையில்
காற்று எழுப்பும் கான ஓசைகள்
பொய் சொல்வதாக என்னைச் சாடாதீர்
இசை என்பது இதை விட வேறொன்றும் இல்லை !

22)நொந்து சலித்து ரெளத்திரம் இழந்து
மறைவாய் இற்று விழும் மனித இதயமும்
பட்டியில் அடை பட்டுச் சாவதற்காய்
மிரண்டோடும் குட்டிகளும் எனக்குத் தெரியும் !

23)பாசாங்கும் ஒழுங்கீனமும் முற்றத்தில் தவழும்
தங்கும் விடுதியை முற்றும் வெறுக்கிறேன் – மாறாக
மெல்லிய சலசலப்பினை ருசிக்க வேண்டி
நாடித் திரும்புகிறேன் பசிய குன்றினை !

24)பாரெங்கும் உள்ள பாட்டாளி மக்களின்
இன்ப துன்பங்களோடு இணைத்துக் கொள்ள
விரும்புகிறேன் என்னை! நிறைவு நிலவுவது
பரந்த கடற்பரப்பில் அல்ல!.சிறுத்த மலைச்சுனை
ஓடைகளில்தான் !

25)விளையப்போவதென்ன ? வெற்றுக்குடுவைக்குத் -தன்னுள்
சுடர்விட்டு ஒளிரும் தங்கக்குழம்பினால் ?
ஆதவனின் தகத்தகாயமான பொன்னொளி தகிக்கும்
அடர்ந்த காட்டினை அளியுங்கள் எந்தனுக்கு !

26)குமிழிகள் கொதிக்கும் சோதனைக் குழாயில்
கசடுகள் மேலேற தங்கம் கீழுறும்
புறாக்கள் பறந்து விண்ணேறிச் சாடினாலும்
மலைப் பள்ளத்தாக்குகளையே மனது யாசிக்கின்றது !
(Range =extent of possible action )

27)கண் பார்வை இழந்த இஸ்பானிய தலைமை குருவிற்குத்
தூண்கள் தேவையாம் தேவாலயம் தாங்க
குன்றின் மேல் உள்ள எனது தேவாலயத்தைத் தாங்குகின்றன
தாமே முன்வந்து- பாப்ளர் மரங்கள் !

28)பிர்ச் மர வரிசை நெருக்கமாய்ச் சுவரெழுப்ப தூய
பெரணிச் செடிகள் தரைக் கம்பளம் விரிக்க
வான் எனும் நீல விதானத்தில் இருந்து
கீழிறங்கி வருகிறது மின்னுமொரு பேரொளி !

29)மனமாறப் புகழாரம் சூட்டுதற்காய்
மதகுரு புறப்பட்டார் இரவு சூழ -மெல்ல
அடியெடுத்து வைக்கிறார் சாரட்டுக்குள்
அது செதுக்கப் பட்டதோ ஓர் பைன் மரத்தில் !

30)மட்டக்குதிரைகள் இழுத்துச் செல்கின்றன
மத குருவின் சாரட்டு வண்டியை-மட்டக்குதிரைகளா
அவை -சிறகு முளைக்காத சின்னப்பறவைகளா?
எதிரொலிக்கிறது பிர்ச் மரச்சாலை- குளம்படித் தாளத்தை !

31)கற்படுக்கையில் கிடத்துகிறேன் என்னுடலை
இனிய பரந்த கணவுகள் வியாபிக்க
தேனீக்கள் இசைக்கும் என் உதட்டருகில்
உலகம் வளரும் என் உடலின் உள்ளே !

32)இளங்காலைச் சூடு பரவுதல் போலே
சுடரொளி தூவும் புதைநிலப்புற்கள்
வாடாமல்லி ஊதா ரோசாவென
வண்ணம் பூசிக்கொண்டன சிறந்ததோர் சுவற்றோவியம் போலே 09:46 PM 6/18/06 (33)

33)தன்னம் தனிய சின்னப் பறவை இசைமீட்டிக் கட்டியம் கூறும்
சிவந்த மேகங்கள் திரண்டு வருவதனை
ஆதவனோ ஒரே அடியில் துரத்தி விடுகிறான் பனிப்படலத்தை
தொடுவானுக்கப்பால் !

34) யாரேனும் சொல்லுங்கள் பார்வை குன்றிய அந்த முதிய பாதிரியாரிடம்
இஸ்ப்¡னிய தேசத்து மடத்தலைவரிடம்…………………………..
குன்றின் மீதுள்ள எனது தேவாலயத்தில் காத்திருக்கிறேன்
அவரது வருகைக்காக என்பதனை !

(IV)

35) ஒருவருமே காணவொண்ணாத் தனிமையில்
ஆரத்தழுவி ,யாம் அலைப்புண்ட கடற்கரைகள்
அனைத்துக்கும் சென்று அசை போட
ஆசைப்படுகிறது அன்புடை நெஞ்சம் !

36) ஆழியும் திரையுமாய் ஆடிய ஆட்டத்தில்
நாணிப் பொந்தில் மறைந்ததோர் ஜோடிப் பறவைகள்
இருவர் மட்டுமே இருக்கின்றோம் என்பது
இல்லை என்றாயிற்று தொல்லை என்றாயிற்று !

37) தென்றலைப் போலத் தீண்டியதவள் நயணம்
நின்றது நிலை குத்தி மறைந்த ஜோடியின் மேல்
பகட்டுச் சிவப்பாய்ப் பறித்த மலர்களை
பரிந்து வழங்கினான் தோட்டக்காரன் !
(நாணிச் சிவந்தது மாதரார் கன்னம்…சிந்திக்க)

38) ஆழ் வயிற்றிலிருந்து அவள் திரட்டியதோர்
இன்தேனமுது சுரந்து மதர்த்தது
தாரகை பூக்கும் மல்லிகைக் கொடியாய்
கன்னிப் பெண்ணின் வசீகரம் படர்ந்தது !

39) துணிச்சல் கார இந்தக் காதலன்
தொடங்கினேன் அவளது மென் திரை அகற்ற
” கேலி செய்வதாக எண்ணாதே ! இன்று நான்
சூரியனைப் பார்த்தாக வேண்டும் என்றாள் ! ”

40)“கண்டதில்லை இவ்வளவு உயர்ந்த மரம்
பின்னி முறுக்கிய ஒக் மரமோ ?
நிச்சயம் இறைவன் இருந்திட வேண்டிமிங்கு
ஏனெனில் கோபுரம் இருக்கிறது அல்லவா ? ”

41)எனது மகளின் இனிய முதற்கூடலுக்கு
நல்ல இடம் இது நான் கண்டு கொண்டேன்
வெள்ளுடை தரித்த தேவதைப் பெண்ணாய்ச்
சிறகு போல் வளைந்த தொப்பியும் தரிப்பாள் !

42)அந்தி மயக்கத்தில் தனித்து விடப்படுவோம்
நாங்கள் நடக்கத்தொடங்கியஅந்தப் பாதையில்
சின்னஞ்சிறு பறவை அதிர்ந்து ஒலித்தாலும்
நெஞ்சணைத்து முத்திடுவோம் நானும் என் காதலியும்!

43)உணர்விழந்து ஒருவர் கிடப்பதைப் போன்று
நிச்சலனமாய் உரைந்திருக்கும் ஏரிக்குச் செல்வோம்
துயறுற்றதோணியை மறைத்தங்கு ஒளித்து வைத்து
சோர்வுற்ற துடுப்புகளைக் கிடத்திடுவோம் சாய்வாக !

————————————————-

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை ஞானம்


1)வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த
தேம்படு பனை வளம் செறிந்ததென் நாடு.
உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசா என்
உள்ளத்தில் ஊறும் எளிய கவிதைகள்
உலகம் அறிய உரைத்திடல் வேண்டும் !

2)யாருக்குமே நான் புதியவன் அல்லன் -என்
கால்படாப் பகுதியே இந்நாட்டினில் இல்லை
.உங்களில் ஒருவன் யான் உங்களோடிருக்கையில் .
மலைகளில் ஒன்றாவேன் மலைகளோடிருக்கையில் !

3)மெல்லிய கொடிகளின் விசித்திரப் பெயர்களும்
துல்லிய மலர்களின் வகை தொகை அனைத்தும்
கொல்வகைப் பொய்களும் உள்ளுறை துயரமும்
தெள்ளியவாறு தெரியும் எந்தனுக்கு !

4)இரவின் ஆழம் தரை தொடுங் காலை
விண்ணிழி தெள்ளிய விசும்பின் ஒளிக்கதிர்
என் தலை மீது மெல்லெனக் கவிவதில்
கரைந்து சிலிர்க்கும் கவி மனம் என்னது !

5)அழகிய மகளிரின் விம்மிய தோள்களில்
சிறகுகள் முளைத்துப் படபடப்பதையும்
அழுகிய குப்பைக் குவியலில் விளைந்த
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிப்பதையும்
கண்டு களித்துக் கிறுகிறுத்தவன் யான் !

6)உயிர்க்கிடர் தவிர்க்க உருவிய வாளுடன்
உயிர்ப்போடு இருந்த ஒருவனை அறிவேன்
பாவை ஒருத்தியின் ஆரத்தழுவலில் அவன்றன்
ஆவி பிரிந்தது கூடு விழுந்தது யாரெனக் கேட்பின்
யான் சொல மாட்டேன் ! மாட்டவே மாட்டேன் !

7)என்றன் ஆன்மாவின் தரிசனத்தை, சொல்லப்போனால்
கண்டேன் இருமுறை தெள்ளத் தெளிவாய்
ஒன்றெந்தன் பரிவிற்குறிய தந்தையின் இறப்பில்
மற்றெந்தன் பிரிய சகி எனைப் பிரிந்த நொடியில்.

8)தடுமாறி இருக்கிறேன் ஒரு முறை
தலை குப்புற விழுந்திருக்கிறேன் மிரண்டோடி
திராட்சைத் தோட்டத்தின் தலை வாயில் நுழைவில்
என்னிளம் தோழியின் பிஞ்சு நெற்றியில் அந்தக்
கோழைக் குளவி கொட்டிய போது.

9)பெரும்பேறு ஒரு முறை கிட்டியதெந்தனுக்கு
யாரும் பொறாமை கொள்ள இயலாத பேறு அது.
எந்தன் பெயர் பொறித்த மரண தண்டணையைக்
கண்ணீர் மல்க சிறைத்தலைவர் வாசித்த வேளையில்.

10)புவிப்பரப்பைக் கடந்ததொரு பெருமூச்சு கேட்கிறது
கடற்பரப்பைப் புரட்டும் ஒரு பெருமூச்சு கேட்கிறது
அடுப்படியில் இருந்து வந்த சீறல் அல்ல அது
அன்பு மகன் துயிலெழுந்து திமிர் முறித்த மூச்சு !

11)அணி வணிகர் கொட்டாரம் புகுந்து நான்
அள்ளி வந்து விட்டதாக யாரேனும் சொல்வர்
அள்ளி வந்ததொரு நல்ல நண்பன் மட்டும்
அதற்கு நான் அளித்த விலை அன்பு -அன்பு – அன்பு !

12)காயம்பட்டுக் குருதி சிந்தி வானத்தில்
வட்டமிடும் வல்லூற்றுக் கழுகே !
நச்சினை முறிக்கும் பச்சிலை வாழும்
மறைவிடம் எங்குளதென்பது எனக்குத் தெரியும் !

13)பலவீனமுற்றிருக்கிறது உலகம் என்பதும்
விரைவில் வீழும் தரையில் என்பதும் -தெரியும் எனக்கு .
பின்னர் முற்றிலும் தழுவியதோர் மோன நிலையில்
மெல்லச் சலசலக்கும் சிற்றோடை மட்டும் !

14)இன்பத்திலும் துன்பத்திலும் மெய் விதிர்த்த போது
பற்றுக்கோடாகக் கைப்பற்றி இருக்கிறேன் தெம்பாய்
முன்னொரு காலத்தில் விண்ணில் ஒளிர்ந்த மீன்
இற்று விழுந்தது என் தோரண வாயிலில் !

15)மிகக் கடுமையான வேதனைகளை ஒளித்து வைத்துள்ளேன்
தைரியம் மிக்க என் பரந்த நெஞ்சகத்துள்
அடிமைப் பட்டதொரு தாயகத்தின் மைந்தன்
வாழ்வதும் சாவதும் அதன் விடுதலைக்காகவே !

16)சரிதான்…..அனைத்துமே, அழகுதான்….அனைத்துமே
அறிவும் இசையும் போல் அதனதன் காலத்தில்.
வைரமாய்ப் பட்டை தீட்டி ஒளிர்வதற்கு முன்
வெறும் கரிதான்…..நிலக்கரி ! அல்லவா ?.

17)கண்ணீரும் போற்றுதலும் கரை கடந்து இருக்கும்
பூமியில் முட்டாள்கள் புதைக்கப்படும் போது.
புனிதமான எல்லாப் பழங்களும் அழுக விடப் படுகின்றன
புதை நிலத்தில் என்பதெனக்குத் தெரியவே தெரியும் !

18)புரிந்து கொண்டேன் எந்தவொரு வார்த்தையும் இன்றி
ஒதுக்கியே வைத்தேன் பகட்டான கவிப் புனைவை.
உதிர்ந்த கிளைகளில் ஒன்றினைத் தேர்ந்தேன்
முனைவர் அங்கியைத் தொங்க விடுவதற்காய் !

19)எகிப்தும் நைஜரும் பெர்ஷியாவும் அயல் மொழிச் சொற்களும்
எனக்குத் தெரியும் என்ற போதிலும்
எம் பசிய மலைகளில் தவழ்ந்து வீசும்
தென்றலின் தழுவலே எனக்குப் பிடிக்கிறது!

20)பண்டைய வரலாறுகளும் பண்டைய மாந்தரும்
ஆதிக்கம் வேண்டி அவர் செய்த போர்களும்
எனக்குத் தெரியும் என்ற போதிலும்
மணிப்பூவைச் சுற்றி ரீங்காரம் இசைக்கின்ற
தேனீக்கள் தாம் எனக்குப் பிடிக்கிறது !


Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்