வாலி வதம் – சில கேள்விகள்.

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

செந்தில்



வாலி வதம் – சில கேள்விகள்.

இராமன் செய்த வாலி வதம் என்பது ஆதிகாலத்திலிருந்து ஒரு விவாத பொருளாக இருந்து வந்துள்ளது. இராமன் தான் வாலியை கொன்றான் என்பதை தவிர அதை சுற்றி நடந்த விஷயங்களில் பலவிதமான
சர்ச்சைகள் இருந்து வந்துள்ளது. இவை கம்பன் காலத்திலேயே இருந்ததனால்
தன்னுடை முதல் நூலான வால்மீகீ இராமாயணத்தில் இருந்த சில காட்சிகளை கம்பன் மாற்றி அமைக்கின்றான்.

தற்போது வாலிவத காட்சிகளை சற்று ஆழ்ந்து நோக்குவோம்.

வாலியை இராமபிரான் கொன்றதற்கு காரணமாக எல்லோராலும் கூறப்படுவது சுக்ரீவனின் மனைவியை அவன் அபஹரித்து கொண்டான் என்பதே. அதாவது தன் மகளாக கருதவேண்டிய தம்பியின் மனைவியான ருமையை தன்னுடைய துணைவியாக ஆக்கி கொண்டான் என்பதே.

இங்கு சில கேள்விகள் எழுகிறது.

தான் வாலியினால் துணையாக கொள்ளப்பட்டதாக ருமை எங்கும் கூறவில்லையே. ஏன்?
அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்பதனால் தானா?

வாலி இறந்தபின் தாரை புலம்புவதாக வரும் இடத்தில், தன்னை தவிர வேறு பெண்ணையும் ஏறெடுத்தும் பாராதவன் வாலி என்று சான்றிதழ் கொடுக்கிறாள் (கிஷ்கிந்தா காண்டம் ஸர்கம் 24, ஸ்லோகம் 34). ருமை இங்கு நிறுத்தப்பட்டதாலும், சுக்ரீவன் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாலும் தான் இந்நிலை ஏற்பட்டது என்றே கூறுகிறாள். ருமையை வாலி துணைவியாக கொண்டதால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று கூறவில்லை என்பதை கூர்ந்து நோக்கவேண்டும். (கிஷ்கிந்தா காண்டம் ஸர்கம் 20, ஸ்லோகம் 11). ருமை விஷயம் மட்டுமல்ல. தன்னுடைய வாதம் வலுப்படவேண்டும் என்பதற்காக மாயாவிக்கும் வாலிக்கும் உள்ள பகையே ஒரு பெண்ணால் ஏற்பட்டது தான் என்கிறான் சுக்ரீவன். ஆனால் மாயாவி வாலியை எதிர்த்த காரணம் மாயாவியின் தந்தையான துந்துபி வாலியினால் கொல்லப்பட்டதனால் தான் என்பதை பின்னர் கூறப்படும் கதையினால் அறிகிறோம். தன்னுடன் போர் புரிய சரியான வீரனுக்காக அலைந்து கொண்டிருந்த மாயாவியின் தந்தையான துந்துபி, வாலி தான் சிறந்த வீரன் என்று ஹிமவான் கூறியதால் வாலியுடன் போரிட்டு அழிகிறான் என்ற கதையையும் அறிகிறோம். ஆக மாயாவி வாலியுடன் போர் செய்த காரணம் தன் தந்தையை அழித்தவன் என்றது தானேயன்றி ஒரு பெண்ணால் பகை ஏதும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
ஆக ருமையை துணையாக வாலி சேர்த்துக் கொண்டான் என்பது சுக்ரீவனால் சுயபச்சாதாபத்திற்காக புனையப்பட்ட கதையா? அந்த வாதம் வலுப்படவேண்டும் என்பதற்காக மாயாவிக்கும் வாலிக்கும் ஒரு பெண்ணால் பகையிருந்தது என்று மேலும் ஒரு பொய்யை சேர்த்துக் கொண்டானா?

வாலியின் மறைவிற்கு பிறகு சுக்ரீவன் வாலியின் மனைவியான தாரையை துணையாக கொண்டானே (வால்மீகீ இராமாயணத்தின் படி). அதாவது தன்னுடைய தாயாக கருதவேண்டிய அண்ணனின் மனைவியான தாரையை துணையாக கொண்ட போது அதற்காக சுக்ரீவனை இராமபிரான் தண்டிக்கவில்லையே! ஏன்?
வாலிக்கு ஒரு நீதி, சுக்ரீவனுக்கு ஒரு நீதி என்று இராமன் பாரபட்சமாக நடந்து கொண்டானா? இல்லை வாலியை கொன்றதற்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா?

வாலி சுக்ரீவனின் மனைவியை துணையாக கொண்டான் என்று ஹனுமனே இராமனிடம் கூறுவதால் அது உண்மையாக தான் இருக்கும் என்று கூறுவோரும் உளர். ஆனால் ஹனுமன் வாலியின் மந்திரியாகவோ, சுக்ரீவனின் மந்திரியாகவோ முன்னமேயே இருந்ததற்கான வலுவான சான்றுகள் வால்மீகீயில் காணப்பெறவில்லை. வால்மீகீ இராமாயணத்தில் வாலி ஹனுமனைப் பற்றி அறிந்ததாக காட்டப்பெறவில்லை. கம்பனில், வீழ்த்தப்பட்ட நிலையில் வாலி இராமனிடம்“அனுமனை நின் கை தனுவென நினைதி” என்று கூறுகிறான். வாலியினால் பெருமைப் படுத்தப்படும் ஹனுமன் சுக்ரீவன் அரசுக் கட்டில் ஏறக் காரணமாக இருந்திருக்க முடியாது, அல்லது ஹனுமனும் சுக்ரீவனை அரசாள அறிவுரை கொடுத்திருப்பானால் வாலியால் புகழப் பெற்றிருக்க மாட்டான். மேலும் இராவணவதத்திற்கு பின் சுக்ரீவனோடு மீண்டும் ஹனுமன் சேரவில்லை என்பதையும் கூர்ந்து நோக்கவேண்டும்.
காட்டிலே இருந்த ஹனுமன், காட்டிடை ஓடிவந்த சுக்ரீவனை முதன்முதலாக சந்தித்தானா?. அப்போது சுக்ரீவன் தன்னுடைய புனைந்த கதையினை ஹனுமனிடமும் கூறியதனால் அதையே ஹனுமன் இராமனிடம் கூறினானா?

தன் மனைவியை கடத்தி சிறை வைத்திருந்த இராவணனுக்கே இரண்டுமுறை தூது அனுப்பிய இராமன், ஏன் வாலிக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை அளிக்கவில்லை?

இந்திரனின் அம்ஸமான வாலி, தன்னுடைய பாத்திரத்தை மறந்து பரமாத்மாவான இராமனின் எதிரியான இராவணனோடு நட்பு கொண்ட குற்றத்தினால் அழிக்கப்பட்டான் என்று கூறுவர். வாலியாவது இராமனைப் பற்றியும், அவனின் பெருமைகளைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறான். சூரியனின் அம்ஸமான சுக்ரீவன் எதையுமே அறியாமல் இராமனின் வில்லாற்றலை சோதிக்கக் கூட துணிந்தானே? மறதி என்பது மனிதனாக உள்ள எல்லோருக்கும் பொது தானே? இராமனே கூட “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்கிறான். அதாவது நான் மனிதனாக தான் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறான். ஆக இந்த காரணமும் எடுபடவில்லையெனில் வாலியை இராமன் அழிக்க வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும்?

ஒரே அடியில் தாடகையை, சுபாகுவை கொன்றாற் போல் இல்லாமல் இராமனின் அம்பு வாலியை உடனே வீழ்த்தவில்லையே? இதை கம்பன்

“கார் உண் சுவை கதலியின் கனியினைக் கழிய
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப
நீரும் நீர்தரு நெருப்பும் வன்காற்றும் கீழ்நிவந்த
பாரும் சார்வலி படைத்தவன் உரத்தை அப்பகழி” என்கிறான்.

பழுத்த வாழைபழத்தின் ஊடே செல்லும் ஊசியை போன்று வலிமையானவனான வாலியின் மார்பில் இலகுவாக சென்ற இராமனின் அம்பு நின்றது எதனால் என வினவுகிறான்.

வாலியை புலம்ப வைத்து, கேள்விகள் பல கேட்க வைத்து பின் அவன் தன் குற்றத்தை உணர்ந்தாற்போல் காண்பிக்கப் படுவது ஏன்?

மேலும் இராமன் ஒரு புல்லை எடுத்து காகாசுரன்பால் விடுக்க அது அவனை மூவலகமும் துறத்திய கதையை காண்கிறோம். அது போன்று வாலியின்பால் ஒரு அம்பையோ, புல்லையோ விடுத்திருக்கலாமே? இதை செய்யாமல் முதல் தடவை சுக்ரீவனை அடிவாங்க விட்டு வாலிக்கும், சுக்ரீவனுக்கும் வித்தியாஸம் தெரியவில்லை என்கிறானே? ஏன்? சுக்ரீவனை கொடிப்பூ அணிந்து செல்ல வைத்து இரண்டாம் தடவை நிகழ்ந்த போரில் வாலியை அழிக்கிறானே? முதற்தடவையிலேயே வாலியின் மார்பிலிருக்கும் தங்கமாலையை வைத்து அவனை அடையாளம் கண்டு அழித்திருக்கலாமே? இரண்டு தடவை நடந்த சண்டைகளின் இடையே நடந்த சம்பவம் தான் என்ன?

வாலியைப் போருக்கு அழைக்கும்படி சுக்ரீவனுக்கு அறிவுரை கூறிய இராமன் தன்னிடம் அனேக சக்தி வாய்ந்த அம்புகள் இருப்பதாகக் முதல் நாள் கூறுகிறான், ஆனால் மீண்டும் சுக்ரீவனை மறு நாள் வாலியைப் போருக்கு அழைக்க அறிவுறுத்திய போது வாலியை ஒரே அம்பினால் கொன்று விடுவதாகக் கூறுகிறான், முதல் நாள் யுத்தம் செய்ய எண்ணிய இராமன் மறு நாள் கொன்றுவிடத் தீர்மானித்ததேன்? பல சக்தி வாய்ந்த அம்புகள் இருப்பதாகக் கூறுவது நடக்க விருக்கும் கடும்போரைக் குறிப்பதாகக் கொண்டால்; மறுநாள் கூறுகையில் ஒரே அம்பினால் கொன்றுவிடத் தீர்மானம் செய்ததினால் வாலியைக் கொல்வதே குறி என்று இராமன் கொண்டதேன்? இராமனின் இந்த மனமாற்றம் எதன் அடிப்படையில் ஏற்பட்டது?

வாலியின் மார்பிலிருக்கும் தங்கமாலையானது எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிவிடும் என்பதால் இராமன் மறைந்திருந்து அடித்தான் என்றும் கூறுவர். இக்கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில், வாலி மாயாவியோடு 28 மாதங்கள் சண்டை புரிய காரணமென்ன? ஒரே பொழுதில் அவனுடைய பலத்தை உறிஞ்சி கொன்றிருக்கலாமே? இந்த காரணமும் இல்லையெனில் இராமன் மறைவாக இருந்தது ஏன்?

இராமன் வாலிக்கு எதிரில் வந்திருந்து, வாலியும் இராமனின் காலில் சரணாகதி அடைந்திருந்தால் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கு பொய்யாகிவிடும் என்பதால் தான் மறைந்து நின்று அடித்தான் என்ற காரணமும் சொல்லப்படுகிறது.(கம்பனின் படி) அன்னதானம் அளிப்பதாக அறிவித்துவிட்டு வீட்டு வாசல்கதவை தாளிட்டு கொள்ளுமாபோலே அல்லவா இச்செயல் இருக்கிறது. மேலும் விபீஷணனை சேர்த்துக் கொள்ளலாமா என்று கடற்கரையில் நடந்த விவாதத்தில் இராமன் “விபீஷணன் என்ன? அந்த இராவணனே வந்தாலும் சரணாகதி கொடுப்பேன்” என்கிறானே? அப்படிப்பட்ட இராமன், வாலி வந்து தன் காலில் விழுந்துவிடுவான் என்றஞ்சி மறைந்திருப்பானா? இது பொருந்தவில்லையே? உண்மை காரணம் என்னவாகயிருக்கும்?

Series Navigation

செந்தில்

செந்தில்