கடிதம் – மார்ச் 4,2004

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

ஹிதாயத்துல்லா


பித்தன் அவர்களுக்கு

தங்கள் வாதத்தின் கடைசிப் பகுதியின் சில கருத்துக்களை முன்வைத்து

பர்தா அணிய முஸ்லிம் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதால், அது இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக குறிப்பிடுகிறீர்கள். சுதந்திரம் என்பதற்கு உலகம் முழுவதிலும் ஒரேவிதமான அளவுகோள் உள்ளதா ?

சுதந்திரம் என்பதற்கு தாங்கள் கூறும் வரைமுறை என்ன ?. தாங்கள் கூறும் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா ?

அப்படி வரைமுறை இருந்தால் அது மேற்குலகு கூறும் சுதந்திரத்திற்கு இணையானதா ? ஏனென்றால் அங்கு Gay, Lesbian திருமணங்கள் செய்யக் கூடாதென்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தயவுசெய்து மீண்டும் ‘வச்சா குடுமி.. ‘ என்ற பழமொழியை கூறாதீர்கள். தாங்கள் சுதந்திரத்திற்கு வைத்திருக்கும் அளவுகோள் பற்றி தெரிந்துகொள்ளவே இதனை குறிப்பிடுகிறேன்.

‘பெண்களை தெய்வமாக வணங்குகிறது ஒரு மதம். பெண்களைக் கோவிலுக்குள் கூட விட மறுக்கிறது இன்னொரு மதம் ‘

பெண்கள் மட்டுமா தெய்வங்கள் ?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இன்றும் சவூதி அரேபியாவில் எல்லா பள்ளிகளிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கென்று தனி இட வசதிதானே ஒழிய, ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து அல்ல. இந்தியாவில் அவ்வாறு இல்லாதது இந்திய முஸ்லிம்களின் தவறு. இதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாகும் ? இன்று இதனை முஸ்லிம் அறிஞர்கள் சிலர் குறிப்பிடத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சில ஊர்களிலும் இது நடைமுறையில் உள்ளது.

பாபரி மஸ்ஜித் இடிப்பும் தாலிபனின் புத்தர் சிலை தகர்ப்பும்

இரண்டும் ஒன்றாக நான் கருதவில்லை.

புத்தர் சிலை இடிப்பினால் 2000-த்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி வாங்கப்படவில்லை.

புத்தர் சிலைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவும் இல்லை.

தாலிபான்கள் எந்த அரசியல் ஆதாயத்தையும் எதிர்ப்பார்த்து புத்தர் சிலையை இடிக்கவில்லை.

மாறாக சிலையை தகர்க்காமல் இருந்திருந்தால் UNESCO-விடமிருந்து நிதியும் பெற்றிருக்க முடியும்.

அது நபிகள் யாரும் பிறந்த இடம் என்றோ, அங்கு முன்பு பள்ளிவாசல் ஒன்று இருந்தது, அதனால் இடிக்கிறோம் என்றோ சப்பை கட்டு கட்டவில்லை.

‘மதத்திற்காக தீவிரவாதிகள் உருவாகியிருப்பது இஸ்லாத்திற்காக மட்டும்தான். இந்துத்வா என்பதும் அதுபோல் மதத்தீவிரவாத்தத்தை நோக்கியே பயனப்படுவதை ‘ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இந்து தீவிரவாதம் என்ற பதத்தை மிக சமயோசிதமாக தவிர்த்திருக்கிறீர்கள், அப்படி சொன்னால் முன் கூறிய கருத்துக்கு முரணாக அமைந்துவிடுமாதலால் ‘இந்துத்வா என்பதும் அதுபோல் ‘ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மேற்குலமும், இந்திய வெகுஜன பத்திரிகைகளும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தில் மயங்கித்தான் இவ்வாறு உங்கள் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்

முஸ்லிம்கள் செய்தால் அது இஸ்லாமிய தீவிரவாதம், அதுவே மற்றவர்கள் செய்தால் அது அந்த மதம் சம்பந்தபட்டதல்ல. அதை செய்தவர்கள் சமூக விரோதிகள் என்று வெகுசன பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றன.

புனிதப் போர்(Crusades) என்ற பெயரில் நடந்தவை என்ன ? அது மதத் தீவிரவாதம் இல்லையா ?

கிரஹாம் ஸ்டெயின்ஸை தீயிட்டு கொழுத்தியது மதத் தீவிரவாதம் இல்லை, ஒரு சமூக விரோதி.

பாபரி மஸ்ஜிதை இடித்த யாரும் தீவிரவாதிகள் கிடையாது, சமூக விரோதிகள்.

அதற்குப் பின் பம்பாயில் ஏற்பட்ட கலவரத்தில் 2000-த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தது தீவிரவாதிகள் அல்ல, சமூக விரோதிகள்தாம், இல்லையா ?

கோயம்புத்தூரில் ஒரு காவலாளியை கொன்றதற்காக, பல முஸ்லிம்களை கொன்று, மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பொருள் சேதத்தை விளைவித்தது தீவிரவாதம் அல்ல, சமூக விரோதிகளே, இல்லையா ?

குஜராத்தில் ஆயிரமாயிரம் முஸ்லிம்களை, கர்ப்பினிப் பெண்கள், குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல் கொன்று, இலட்சக்கணக்கானவர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கியது தீவிரவாதம் அல்ல. அதற்காக ஒருத்தர்கூட தண்டிக்கப்படமாட்டார்கள், அப்படித்தானே ?

இதுபோல் உலகெங்கிலும் முஸ்லிம்கள், தங்களுக்கு எது நேர்ந்தாலும், எப்பொழுதும் சகித்து கொண்டே இருக்க வேண்டும் ?

—-

-ஹிதாயத்துல்லா.

hidha@sify.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

ஹிதாயத்துல்லா

ஹிதாயத்துல்லா

கடிதம் – மார்ச் 4,2004

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

ஆசாரகீனன்


—-

‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ – நாவல் பற்றிய காஞ்சனா தாமோதரனின் வாசக அனுபவம் படித்தேன். அண்மைக்கால நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் படிக்கும்போது, ‘தமிழை எங்கே நிறுத்தலாம் ? ‘ என்ற கவிதையில் ஞானக்கூத்தன் எழுதிய பின்வரும் வரிகளே நினைவுக்கு வந்து தொலைக்கின்றன:

வேற்று நாட்டுச் சரக்குகளோடு

உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்

தலையில் தலையில் அடித்துக் கொண்டால்

தேவலாம் போல இருக்குது.

இத்தகைய அனுபவத்தை ஏற்படுத்தி தலையில் அடித்துக்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தாமலும், வாசகனை அச்சுறுத்தி ஒட்டு மொத்தமாக மேல் நாட்டு இலக்கியத்தின் பக்கமோ அல்லது தற்போதைய மோஸ்தரான தமிழ் மரபின் பக்கமோ விரட்டி விட்டுவிடாமலும் எழுதப்பட்டுள்ள படைப்பு ராஜ் கெளதமனின் சிலுவைராஜ் சரித்திரம் என்பதை காஞ்சனாவின் அறிமுகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள சொற்பமான நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

பலரையும் நையாண்டி செய்வதாலேயே இந்த நாவலுக்கு நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனம் கிடைக்கவில்லையோ என்று கருத வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புத்தகத்தில் தமிழ் விரிவுரையாளர் வேலைக்கான நேர்காணல் ஒன்றை இப்படி நகைச்சுவையுடன் விவரிக்கிறார் ராஜ் கெளதமன்:

‘ஒங்க விருப்பப் பாடம் எது ? ‘

‘தமிழ் நாவல்கள் ‘

‘தமிழ் நாவலாசிரியர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார் ? ‘

சிலுவை தொண்டைக்குழி வரை ஜெயகாந்தன் வந்து விட்டார். அதுக்குள்ளே சிலுவை ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். ஜெயகாந்தனைப் பழமைவாதிகளுக்குப் பிடிக்காது என்பது தெரியும். எதுக்கு வம்பு ? ‘டாக்டர் மு.வ., அகிலன் ‘.

‘இவர்களைப் பிடிக்க என்ன காரணம் ? ‘

‘காதலையும், ஆண்-பெண் உறவுகளையும் தமிழ் மரபுக்கு ஏற்றபடி கண்ணியமாகச் சித்தரித்துள்ளார்கள். ‘

‘டாக்டர் மு.வ.வின் சிறுகதை ஒன்றைக் கூற முடியுமா ? ‘

‘குறட்டை ஒலி. ‘ அந்த நேரம் பார்த்து அந்த மூணுபேருக்கும் டிபன் காபி வந்ததால், சிலுவையைப் போகலாம் என்று அனுப்பி விட்டார்கள். பாவம், இண்டர்வியூ பண்ணிப் பண்ணிக் களச்சுப் போயிருப்பாங்க!

சிலுவைராஜ் சரித்திரத்தை இதுவரை கட்டுடைக்காமல் விட்டு வைத்ததற்கு தமிழக அறிவு ஜீவிகளுக்கும், கலக அனார்க்கியர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

– ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்