வேத வனம்- விருட்சம் 94

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

எஸ்ஸார்சி



பேருண்மையும் பெருநீதியும்
தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும்
பிரம்மமும் வேள்வியும்
உலகு தாங்குபவை
நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம்
புவி விரிந்து கொடுப்பாளாக
அவள் அன்னை நான் அகில குமாரன்
மின்னல் என் தந்தை
கிராமங்களிலே கானகத்திலே சபைகளிலே
சங்கங்களிலே கூட்டங்களதனிலே
புவிக்கு இனிமைதருவது பேசுவோம்
அழிக்கும் ஆற்றலுடை அக்கினி இவண் அழியட்டும்
உழவின் வெற்றி உழைப்பின் பலன் மனிதனுக்காகவே
இவை அழிக்கும் எவ்வக்கினியும் தூரம் செல்லட்டும்
பொறாமைக்காரன் பேராசைக்காரனோடே
அடிக்கடித்தான் பேசுகிறான்
அழி நெருப்பு அவனைத்தொடர்வதை நிறுத்துவதில்லை
கணவன் இறந்திடப்பின் அழிநெருப்பு இல்லம் புகும்
அது தொலைக்க அறிவுடைப் பிராமணன்
துணைக்கு வரவேண்டும்
அழிக்கா வொரு அக்கினியே அழி அக்கினியைப்புறந்தள்ளுக
எரி சுடரே
தந்தை மகன் போலே எம்மைக்காத்திடுக
தூய காற்று இவண் வீசுக
கருங்காகம் உணவை அலகால் கொத்தினாலும்
வேலைக்காரி உரல் உலக்கையை ஈரங்ஞ்செய்தாலும்
தண்ணீர் புனிதம் செய்யட்டும்
பக்குவம் வந்த பெண் போலே
தண்ணீர் அரிசியொடு ஒன்று சேரட்டும்
பால் விரும்பும் இளங்கன்று நோக்கிக்கதறும் பசுபோலே
தேவர்கள் குரல் கொடுத்துக்காக்க எம்மை
கணவன் மனைவிக்குத்தெரியாமல் செய்ததுவும்
மனைவி கணவனுக்குத்தெரியாமல் செய்ததுவும்
ஏதும் இல்லாதாகி அவர்கள் ஒன்று சேர்க
யான் பக்குவம் செய்கிறேன்
யான் அளிக்கிறேன் இங்கே என் மனைவி என்னோடு
உலகம் கொளரவமாய் ஈன்ற மகனைப்போலே உதித்தது
உயரிய உயர் வாழ்க்கை உறுதியாகட்டும்
சூதாடு களம் அல்லது சபை நடுவே
பொய் புகன்றாலும்
லாபத்திற்காய்ப்பொய் யான் பேசினாலும் அவையொழியட்டும்
அக்கினியே எம்மை மூப்புக்கு இட்டுசெல்
மூப்பாகி மரணம் அடைவோம்
பக்குவம் எமதாகட்டும்
பிராமணர்க்குப் பசுவைத்தானம் செய்கிறேன்
சந்ததி அருள்வது பசு
பசுவைத்தானம் தர இசையாதவன்
தம் மக்களை இழந்து பசுவையும் இழப்பான்
பசுவின் இரு செவி திருகுவோன்
தேவ சினத்துக்கு ஆளாவான்
வால் கொண்டையை வெட்டுவோன்
குழந்தைகள் இழப்பான்
அவைகளை ஒநாய்கள் இழுத்துச்கொல்லும்
பிராமணனை நிந்தித்து அவன் பசு கவருவோன்
ஒழுக்கம் வீரம் செல்வம் இவை இழந்துபோவான் ( அதர்வ வேதம் காண்டம் 12)
வலிமையுள்ளவனே எழு
பேருலகு நிறுவிய உரோகிதன்
உன்னைச்சுமக்கிறான்
அழகம்மையின் மக்களான மருத்துக்களே
இந்திரனொடு தோழமைகொண்டு
பகையை வெல்லுங்கள்
உரோகிதன் நும் சொல் கேட்கத்தயாராகிறான்
சுந்தரக்குதிரைகளால் இழுக்கப்படும் தேர் உடைய
உரோகிதனே நீர்வளம் பெருக்குவோன் நீ
இருப்பதுவும் இருக்கப்போவதுவும் உரோகிதன்
புவிக்குதந்த கொடை அவன்
சூரியனே ஆதித்தனே நீயே பெரியோன்
நின் பெருமை பெரிது
அதிசயன் அறிஞன் நீ
விரைவோன் விளங்குவோன் சுடரோன் வானம் செய்வோன் நீ
நின்னை ஏழு மஞ்சள் குதிரைகள் இழுக்கின்றன
எவனிடமிருந்து கடல் சனிக்கிறது
எவனில் எல்லா ப்புவனங்களும் சுவாசிக்கின்றன
எவன் பதிமூன்றாவது மாதத்தை அளக்கிறான்
எவன் முப்பது பாகமுள்ள இராப்பகலை ச்செய்தான்
எவன் பிரகத்து இரதந்திரம் எனும் இரு சிறகுடை ரோகிதனைப்படைத்தான்
எவன் வருண மித்திர சவிதா இந்திரனாய் மாறிப்போவது அறிபவன்
எவன் அறிவான் ஒரு சக்கரம் மூன்று பற்கள் ஏழு நாமங்களுடைய ஒரு குதிரையின் இழுப்பதனை
எவன் அக்கினி உஷை உலகம் இவை மும்மூன்றென்று தெரிந்தவன்
ஒருகாலுள்ளவன் இரு கால் உள்ளவனைவிட ஆக்கிரமிப்பு செய்திட
இருகாலன் மூன்றுகாலோனைக்கடந்துபோகிறான்
நான்கு காலன் இருகாலன் ஆணைக்குப்படிந்தான்
எவன் இதனை இப்படி என அறிவான்
கருப்பனுக்கு வெள்ளை மகன் இரவுக்கு ப்பகல் பிறந்து வானேறினான்
எவன் இதை இப்படி அறிவானோ
விடை அனைத்துக்கும் தெரிந்த பிராமணனைக்கேவலம் பேசுவோன்
கொல்லப்படுக பாசக்கயிறால் இறுக்கப்படுக
சூரியனே கீர்த்தி புகழ் நீர் மேகம்
அறிவு உணவு உண்கை எல்லாம்
கடவுள் ஒருவர் அவர் எளிமையர்
அறிந்தோனுக்கு மட்டுமே அப்படி
அமிர்தம் மரணம் அரக்கன் அரி அனைத்தும் அவனே
நிலா உடுக்கள் பகல் இரா வான் வாயு விண் திசை புவி அக்கினி
தண்ணீர் இருக்கு வேள்வி இடி மின்னல் கல்லெறிவோன்
பாவி புண்ணியன் புருடன் அசுரன் பொழிப்பு செடிகொடி
இப்படி ஒரு கோடி இருகோடி பல்லாயிரங்கோடி லட்சங்கோடியுமாய்
தோ¡ன்றிடுவான் அவன்
விபூதி பலபதி பிரபு அவன்
வெளி விரிவு விசாலம் வையகம் அவன்
செல்வன் நலம்தருவோன் குணக்குவியல் அவன்
தரிசி அவன் எல்லாரும் வணங்கிடும் அவனை
யாமும் வணங்குகிறோம்
உணவு உண்கை புகழ் ஒளி பிரம்மத்தெளிவொடு யாமாகிட
எம்முன் தோன்றுக அவன் ( அதர்வ வேதம் காண்டம் 13 )

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி