ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

This entry is part 31 of 31 in the series 20100613_Issue

ஏ.தேவராஜன்


ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

1
ஆராதித்த முகத்தை
என்ன செய்யலாம் ?

சுவரில் தேய்க்கலாம்
சுடுநீரில் துவைக்கலாம்

கீறலாம் கிழிக்கலாம்
தோலுரித்துக் கத்தரிக்கலாம்

முகப் பிண்டத்தை
மண்ணில் புதைக்கலாம்

குளித்தெழுந்து
பெருமூச்செறிந்து நீ
உறங்கலாம்

உறக்கத்தைக் கலைத்து
உனை ஆராதிக்கும்
உள் முகத்தை
வேறென்ன செய்யலாம் ?
2

வனப் பகுதியின்
வழி தவறிய
இருண்ட பயணத்தைப் போன்று
எல்லாத் துக்கங்களிலும்
நான் மறுதலித்த
சிறு வயதுக் கடவுள்தான்
கைத்தாங்கலாகக்
கூட்டிச் செல்கிறார்
இருட்டின் நிறத்தில்…

வனம் மீண்ட போழ்தில்
மீண்டும் காணாமல் போகிறார்
கடவுள்

Series Navigation

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்