நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

கே.பாலமுருகன்


பக்கத்து ஊரிலிருந்து
தப்பித்து வந்த
மழைக்குருவியின் கால்களிலிருந்து
தவறுதலாகச் சொட்டிவிட்டது
சில மழைத்துளிகள்

வெகுநேரமாக தனது சிறகை
சிலுப்பிக் கொண்டிருந்த
சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும்
தேங்கிக் கிடந்தது மழைக்காலம்

உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது
கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீரில்
எப்பொழுதோ அனுபவித்த ஒரு மழைக்காலத்தின்
துயரங்கள் ஒட்டிக் கிடந்தன.

நீ சிரிக்கும்போதெல்லாம்
அதன் ஒலியிலிருந்து பிரிந்து வருகிறது
இருவரும் ஒன்றாக பார்த்து இரசித்து நனைந்து
சாலையின் ஓரங்களில் கைகளை நீட்டி
விளையாட்டாக எக்கிப் பிடிக்க நினைத்த
ஒரு மழைப்பொழுது.

சாரலுக்குப் பிறகு
முழுக்க நனைந்துவிடுகிறது
மனமும் பொழுதுகளும்.

2
எங்கோ பிடித்த மழை
இங்கு வந்து
பழி தீர்க்கிறது.
ஒவ்வொரு சொட்டிலும் துரோகமும் அவமானங்களும்
நிரம்பி ஒழுகுகின்றன.
இனி யார் சொல்லியும்
திரும்பப் பெறாத மழை.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்