பேசாத பேச்சு

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

இராம.கி.


முரணின் இருகூறு

முதுபிறப்பே! முரணென்றால் என்ன வென்றேன்;
முடங்காத போராட்டப் பார்வை என்றார்;
எதிரோடி இடம்பிறழ இயல்பும் கோடி,
எக்களித்து முகிழ்ப்பதுவே முரணென் றாகும்;
குதிர்கின்ற முரணெல்லாம் குலைப்ப தில்லை;
கொள்ளுவதும் தள்ளுவதும் நம்மு கப்பே!
விதவிதமாய் கோ(ண்)டித்து விடைத்து நின்று
விள்ளுகிற முரணுக்குள் இருகூ றுண்டு!

முரணின் தோற்றம்

முரண்பட்ட இருகூறும் ஒன்றை ஒன்று,
முழுநேர இயக்கத்தில் முடுகி நின்று,
ஒருமித்தும் அதுபொழுதே பொருதிக் கொண்டும்,
ஊடலைத்துக் காட்டுவதே முரணின் தோற்றம்;
ஒருமித்த காதலர்கள் தங்கட் குள்ளே
ஊடுவதும், கூடுவதும், முரணின் பாற்றே!
பருமித்த முரணுக்குள் பரவிப் பார்த்தால்,
படுகின்ற அயற்பார்வை பொய்மைத் தோற்றம்;

முரணின்றி வாழ்க்கை இல்லை

முரணுவதால் ஆகும்விளை பெரிதே நிற்க,
‘மூழ்சரவல் நமக்கெதற்கு ? வேண்டாம் ‘ என்றே,
முரணொதுக்கித் தள்ளிவிடப் போமோ ? என்றும்
முரண்பாட்டை வாராமல் செய்யப் போமோ ?
முரணின்றி வாழ்க்கையிலே பிடிப்பு உண்டோ ?
முரணின்றேல் முன்னேற்றம் பெறுவ துண்டோ ?
முரணிப்பில் பகுதியென்ன ? முழுதும் என்ன ?
மூழுவது விகசிப்பால் புரியும் தானே!

முரண்தீர்க்கப் பேச்சு

கோளத்திற் குடியிருக்கும் மாந்தர் கூட்டம்;
கொள்ளுவதோ விரிதட்டை பரப்பு வட்டம்;
கோளமையே தெரியாவோர் கோணப் பார்வை;
குவலயத்தில் ஈதுணர, ஊழிக் காலம்!
நாளடைவில் முரணொழிக்கப் பேச்சு ஒன்றே
நல்லதொரு வழியென்று சொல்லி வைத்தார்;
ஆளுவதும், அடங்குவதும் முரளால் என்றால்,
அவிழ்ப்பதுவும், சேர்ப்பதுவும் முரலால் கூடும்;

மற்ற புலன்களால் பேசுவது

பேச்சென்றால் வாயெழுகும் ஒலியின் மாட்டோ ?
பேசாமல் கருத்தொழுக முடியா தொன்றோ ?
மூச்சாலும், கண்ணசைவு, தொடுகை யாலும்
மூழ்கின்ற சைகையிலும் நெஞ்சில் தோன்றும்
வீச்சான அலையாலும் பேச லாமே!
விளங்காதோ, நிறையாதோ, இருவர்க் குள்ளே ?
பேச்சைப்போல் ‘செய்யாத செய்கை ‘ உண்டோ ?
பிலபிலென்று நீள்வரிசை பெருகி ஓடும்.

சொவ்வாத சுவை
ஒள்ளாத ஒளி
உற்றாத ஊறு
உச்சாத ஓசை
நுல்லாத நாற்றம்

நாடாத நாட்டம்
தேடாத தேட்டம்
ஓடாத ஓட்டம்
ஆடாத ஆட்டம்

பாடாத பாட்டு
கூடாத கூட்டு

மூசாத மூச்சு

செய்யாத செய்கை

மொத்தத்தில் முரண்தொடர்க்கு முடிவே இல்லை.
பொருள்கொள்ள மாந்தர்க்கோ சித்தம் உண்டு!

பேசாத பேச்சின் வகைகள்

இவையெல்லாம் முடியுமெனில், பேச்சும் ஒல்லும்!
எதுவென்ற களத்தில்தான் வேறு கொள்ளும்;
அவைமுன்னே கூடாத பேசப் பார்த்தால்,
அதையும்தான் பேசாத பேச்சென் பார்கள்;
தவறாகச் சொல்லுவதும் பேசாப் பேச்சே!
தப்பாக விள்ளுவதும் பேசாப் பேச்சே!
உவையாக வேண்டும்போழ், பேசா நின்று,
உடன்தாழ்ந்தே உரைப்பதுவும் பேசாப் பேச்சே!

பட்டறிவால் கற்க வேண்டிய உத்தி

பேசாத பேச்சென்ப(து) உத்தி யாகும்;
பேர்பார்த்து இடம்பார்த்து காலம் பார்த்து,
வீசுவது கலையாகும்; என்ற போதும்,
வித்தையெனக் கல்லுதற்கோ பயிலு தற்கோ,
ஆசானென் றாருமிலை; பள்ளி இல்லை;
அஞ்சல்வழிப் படிப்புமிலை; அதனால் நண்பீர்,
தேசமெலாம் தேடிடுக! சுற்றிப் பார்த்தே,
தெவிட்டாத பட்டறிவைச் சேர்த்துக் கொள்க!

—-
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.