எனக்கு வரம் வேண்டும்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

அனந்த்


<>0<> <>0<> <>0<> <>0<> <>0<>

இறைவன்:

பொன்னைக் கேட்பார் பொருள்கேட்பார்
… புவியை ஆளும் வகைகேட்பார்
இன்னும் வாழ்நாள் மிகக்கேட்பார்
… இல்லம் சுற்றம் நலம்கேட்பார்
பன்னிப் பன்னிப் பலகேட்பார்
…பாரில் உள்ளோர் பெறுவதற்கு
என்னைத் தரநான் இருக்கின்றேன்
…ஏனோ கேட்க எவருமில்லை!

நான்:

பொன்னைப் புகழைப் புவியிலுள்ள
… பொருளைக் கேட்கக் காரணம்நீ
தன்னை எனக்குக் காட்டாமல்
… தடுக்கில் ஒளிந்து கொள்வதன்றோ ?
உன்னை உலகில் தேடியபின்
… உணர்ந்தேன் எனக்கு வேண்டியதைச்
சின்னஞ் சிறிய பொருள்களிடைத்
… தேடின் பெறலாம் என்பதைநான்!

அதனால்:

புல்லின் நுனியில் பளபளக்கும்
…புத்தம் புதிய பனிமுத்தே!
பொல்லாக் கதிரோன் உனதெழிலை
…புவியோர் காணப் பருகியபின்
செல்லும் உன்வாழ்(வு) எனநன்கு
… தெரிந்தும் மகிழ்ந்து சிரிக்கும்உன்றன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் -அதை
… நான்பெற எனக்கு வரம்வேண்டும்

மெல்லிய காற்றில் அசைந்தாடும்
… வெண்ணிறப் பூவே! புதுமெருகின்
துல்லியம் தோன்றத் திகழ்ந்துபிறர்
…துயரம் தீர்க்கும் உன்னழகு
நில்லா தோடும் நாளையென்று
… நினையா(து) இன்று நகைக்குமுன்றன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் – அதை
…நான்பெற எனக்கு வரம்வேண்டும்

சொல்லில் அடங்காச் சுவைக்கனியே!
… துன்பம் அகற்றும் சிறுகுழந்தாய்!
எல்லாப் பொருளும் உனதென்ற
… இனிய நினைப்போ(டு) உதடுகளில்
பொல்லாச் சிரிப்பைத் தவழவிடும்
… புதிரே! நாளை நினையாஉன்
நல்லுளம் எனக்கு வரவேண்டும் – அதை
…நான்பெற எனக்கு வரம்வேண்டும்

இறைவா!

எல்லாம் இருந்தும் இல்லையெனும்
…ஏக்கம் தாங்கும் என்மனத்தில்
இல்லாப் பெரிய நிறைவொன்றை
… எளிய வகையில் காட்டிநிற்கும்
புல்லும் பூவும் குழந்தைகளும்
…போல நானும் இருந்திடஉன்
நல்ஆ சியைநீ நல்கிவிடின்
…நாடேன் உலகில் வேறெதையும்!

<>0<> <>0<> <>0<> <>0<> <>0<>
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்