நேற்றான நீ

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

சுந்தர் பசுபதி


கடிதங்களை பிரித்து
நாளாயிற்று

நிழற்படத்தை வருடி வருடி
நிஜம் மறக்க நேரமில்லை
இப்போதெல்லாம்

தினவாழ்வு அவசரத்தில்
எதிர்ப்படும்
சிறுசிறு நினைவுக்குமிழ்
வெளிச்சமெலாம்
வைரமென்று நெக்குருகி
நெகிழ்வதில்லை
நான் கூட

கண்முன் வாழ்வும்
அது தரும் சவாலும்
அடி வயிறு வரை தித்திக்கும்
உணர்வுக்கு உந்துதலாய்
ஜனித்த விதை வளர்வதையும்
அதை பாலூற்றி நீரூற்றி
என்னில் படர்ந்த கொடி
சீராட்டுவதையும் கண்டதில்

பொருக்குத் தட்டிய
வெளித்தோலுக்குள்
ரணம் மூடி வளர்ந்த
உள்தோலினுள் கிளரும்
நமைச்சலை மீறிய
சந்தோஷம்
நிஜம்….

திணிக்கப்பட்டதே
இத்தனை இதம் தந்தால்
நழுவிய கனவு
நனவாயின் எத்தனை
சுகித்திருக்கும்… ? ?

வாழ்வு…..
இன்பக்கேணிதான்
முகரத்தான் மனக்குவளை
மலர வேண்டும்

-sundar pasupathy
sundar23@yahoo.com

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி