ஜன்னலினூடு பார்த்தல்!

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

வ.ந.கிரிதரன்


இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே
ஒருவித வியப்பினை
ஆச்சர்யத்தினைத்
தந்து கொண்டு கொண்டிருக்கிறது.

கண்ணாடி ஜன்னல்களையே
பார்த்துப் பழகிப் போயிருந்த
எனக்கு
காற்றாலுருவாகிய இந்த
ஜன்னல் வியப்பினைத் தந்ததில்
என்ன
ஆச்சர்யமிருக்க முடியும் ?

கண்ணாடி ஜன்னல்களின்
பார்வைப்புலம்
போல்
இந்த ஜன்னலின்
பார்வைப் புலம்
குறுகியதல்ல என்பதுவும்
என்னை இந்த ஜன்னல்
கவர்ந்த காரணங்களில்
ஒன்று தான்..

குருவிகளை, ஆடுகளை
மாடுகளை
மனிதர்களை
என் வீட்டு ஜன்னல்களால்
பார்த்து அலுத்துப் போயிருந்த
எனக்கு
இந்த ஜன்னல் புதியதொரு
பார்வையினைத் தந்து
விட்டதெனலாம்.

என் பார்வையின்
அதிகரித்த புலத்தினால்
இப்பொழுது
என்னால்
இந்தப் பிரபஞ்சத்தை
இதன் தோற்றத்தை
இதன் ஆழத்தை
இதன் மாயத்தை
எல்லாம் பார்த்துக் களிக்க
முடிகிறது.

இப்பொழுது புரிகிறது
இந்த ஜன்னலின் சிறப்பு.
அன்றைய கிரேக்கர்கள்
தொடக்கம்
இன்றைய
நான் வரை
மனிதருக்கு
இந்த ஜன்னல் எவ்வளவு
உதவியாக
இருக்கிறது.

இவ்வளவு உதவிகளை
வழங்கும்
இந்த ஜன்னலைப்
போற்றிப் பாதுகாக்க
வேண்டியது
நம் தலையாய கடமையல்லவா ?

இந்த ஜன்னலை
இவ்வளவு தூரம்
அசுத்தமாக்கியது
அவ்வளவு நல்லதென்று
யார் சொன்னார்கள் ?
ஆனால் தொடர்ந்தும்
இதனை அசுத்தப்படுத்திக்
கொண்டிருக்கிறார்களே
இந்த மட மானிடர்.
பார்வையைக் குருடாக்கும்
செயலைச்
செய்பவரை எவ்விதம் கூறி
அழைக்கலாம் ?
பார்வைக் குருடர்களென்று
அழைக்கலாமோ ?
***

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்