கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

புதிய மாதவி, மும்பை


19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியிலும் கால்டுவெல்லின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு, தமிழ்த் தேசிய அடையாளம் வளர, உருபெற காரணமாக இருந்தன என்பதை நாம் அறிவோம். இதே காலத்தில் வாழ்ந்த அயோத்திதாசர் தமிழ் அடையாளத்தை வேறு நிலையிலிருந்து புரிந்து கொண்டார்.

ஆரிய-இந்து மதத்துக்குக் கட்டுப்பட்டு, ஆரியர்களால் வெல்லப்பட்டு, பௌத்தத்தைத் தொலைத்தவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும், அவ்வாறு ஆரியத்துக்கு இணங்க மறுத்ததால் ‘தீண்டத்தகாத வர்களாக’ ஆக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் தான் பறையர்கள் என்றும், அவர்கள்தான் ‘பூர்வ தமிழர்கள்’ என்றும் அவர் கொண்டார். இந்தப் பூர்வ தமிழர்களும் பிறரும், அதாவது, ‘சூத்திரர்’களும் இணைந்த ‘சாதிகளற்ற திராவிடக் கூட்டமைப்பை’ உருவாக்க வேண்டிய தேவையை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.அயோத்திதாசர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ‘தமிழன்’ இதழில் ஒரு வாசகம் தொடர்ந்து இடம்பெற்று வருவதைக் காணலாம். கட்டங்கட்டி அது வெளியிடப்பட்டிருக்கும். ‘The Non Caste Dravidian Federation’ என்பதுதான் அந்த வாசகம். ‘சாதிகளற்ற திராவிடர்களின் கூட்டமைப்பு’ என்பதே அதன் பொருள். திராவிடம் என்ற பொதுவான இன அடையாளத்தை முன்நிறுத்தினாலும், அவ்வின அடையாளமானது சமூகத் தளத்தில் வென்றெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தாசர் வலியுறுத்துகிறார்.

சாதிக்கும் இனத்துக்கும் இடையிலான உறவை அவர் புரிந்துகொண்ட விதத்தைக் கால்டுவெல்லின் சிந்தனையின் ஒரு வித நீட்சியாகக் கொள்ளலாம்.

கால்டுவெல்லின் ஆய்வும் கருத்தும் அரசியல் தளத்தில் பேசு பொருளாகி அவரவர் சுயலாபங்களுக்கு
ஏற்ற வகையில் வெட்டியும் ஒட்டியும் கையாளப்பட்டது என்பது தான் உண்மை.

மரபினங்கள்
—————

உடல் வெளியமைப்பு மற்றும் மொழியியல் ஒப்புமைகளின் ஆதாரமாக, “திராவிடர்கள்” மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கக் கூடும் என்ற வாதம். கால்டுவெல் “ஸ்கைத்தியர்” மூலமாகத்தான் “திராவிடர்” பிறந்திருக்க / தோன்றியிருக்க வேண்டும் என பிடிவாதமாக வாதித்தார்.ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கான சான்றுகள் எதுவுமில்லை.
சங்க-இலக்கியங்களில் கடல்கோள்களினால் நிலம் மூழ்கிய குறிப்புகள் உள்ளன. வடக்கு-இமயம், தெற்கு-குமரி, குண-குடகடலால் – என்ற எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்ததாக எந்த குறிப்பும் இல்லை.

தொன்மைக் காலம் தொட்டு மனித இனம் தோன்றியது முதல் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த மனிதத் தொகுப்புகளை அந்தந்த பகுதியின் இயற்கையமைப்பு, தட்பவெப்ப நிலை ஆகியவையே வடிவமைத்தன. தொடக்க நிலையில் அந்தந்த நிலப் பகுதியில் இனக் கலப்பில்லாமல் குருதித் தூய்மை உடையனவாக இந்த இனங்கள் இயற்கையால் வடிவமைக்கப்பட்டன. இந்த இனங்களை நாம் ’மானிட மரபினங்கள்’ ( Anthropological Race) என்று வழங்கலாம்.

குருதித் துய்மையுள்ள மானிட மரபினங்களை இப்போது காணவியலாது. ‘மரபினம்’ என்பதே இனக் கலப்பினால் இல்லாதொழிந்தது.

இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (), அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.

13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்… இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே’ என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.

இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர். இக்கருத்து கால்டுவெல்லின் திராவிடமொழிகள் வடமொழியிலிருந்து
வேற்பட்டது என்பதையும் திராவிட மொழி பேசும் மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் வேறுபட்டது என்பதையும்
உறுதி செய்கிறது எனலாம்.

அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர்.

ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி… 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது

இறுதியாக:
————–

’இனம்’ (Race) குறித்து பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் கூறும் கருத்து மட்டுமே சரியாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.

‘தற்போது நிலவி வரும் சமூகங்கள் யாவுமே மரபணு ரீதியாக (ஜீன் ரீதியாக) கலப்புச் சமூகங்களே ஆகும். இவற்றுக்குள் ஏதேனும் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை அந்த இனத்தைத் தனிமைப்படுத்திக் காட்டக்கூடிய அளவுக்குப் பெரியவையும் இல்லை. ‘இனம்’ என்பது இன்றைய நிலையில் ஒரு சமுதாயக் குறியீடு மட்டுமே ஆகும்’

(பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், தொகுதி-1, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை, 2007, பக்;345)

————–

தகவல்கள்:

http://ta.wikipedia.org/wiki

கே. வி. ராமகிருஷ்ண ராவ்
திராவிடச் சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க ஆய்வு

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை