ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

தமிழ்ச்செல்வன்


கோயமுத்தூரில் தி.மு.க வின் பெருங்கூத்து நடந்துகொண்டிருந்தபோது, சரஸ்வதி-சிந்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள், ரீடிஃப் டாட் காம் தளத்திற்கு, சரியான மற்றும் சுவாரஸ்யமான பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர், “அஸ்கோ பர்போலா அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் ‘சிந்துக் குறியீடுகளுக்கு கண்டுபிடித்து அளித்துள்ள விளக்கங்களுக்கு அடிப்படையாகத் தமிழ்மொழி இருக்கிறது’ என்கிற ஆதாரமற்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பர்போலாவினுடையது ஒரு நம்பிக்கை முறை தானே தவிர, 4000 ஆண்டுகால நகரீகத்தின் கலாசார அடித்தளங்களையும், அந்நாகரீகத்தின் குறியீடுகளின் தொகுப்பையும் அடிப்படையாக, முதனிலைக் காரணமாகக் கொண்டதல்ல. ஆனால் அவர் சிந்து சமவெளிக் குறியீடுகளை நியாயமான ஒழுங்கான இணைப்புகளாகத் தொகுத்துள்ளது சிறந்த பங்களிப்பாகும்” என்று கூறியுள்ளார்.
மேற்கூறப்பட்ட பேட்டியில் டாக்டர் கல்யாணராமன் அவர்களின் கூற்றுகளைப் பற்றித் தன்னுடைய கருத்தைத் தெரிவித்த அஸ்கோ பர்போலா அவர்கள், சற்றே அகம்பாவம் தொனிக்கும் விதமாக, “டாக்டர் கல்யாணராமனுக்கு மொழிக்கல்வியில் பயிற்சி போதாது. ஒரு நல்ல பல்கலைக் கழகத்தில் மொழிக்கல்வி பெறுமாறு நான் சொன்ன அறிவுரையை அவர் ஏற்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் அவர் ஹிந்துத்துவக் கொள்கைகளைச் சார்ந்திருப்பவர். ஆகையினால் அவரின் எழுத்துக்களையும் கூற்றுக்களையும் நான் நிராகரித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியில் புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், மொழிகள் பற்றிய ஆராய்ச்சியிலும் பெயர் பெற்றவர் டாக்டர் கல்யாணராமன். இன்று குஜராத் கடலோரங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் பகவான் கிருஷ்ணர் ஆண்ட துவாரகை நகரத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ரிக் வேதத்தில் பலமுறைச் சொல்லப்பட்டிருக்கும் மிகப்பெரிய சரஸ்வதி நதி ஆற்றுப் படுகையின் அடையாளங்கள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஓரிடத்தில் சரஸ்வதியின் ஊற்று மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஓர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு மேலும் சரஸ்வதி நதி தொடர்பான வேலைகள் நடக்க ஹரியானா அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
சற்றும் ஆதாரமில்லாத வெள்ளையர்களின் புளுகுமூட்டையான ஆரிய-திராவிட கோட்பாடுகள் தூக்கியெறியப்பட்டு, நம் ஹிந்துஸ்தானத்தின் இதிஹாஸங்களில் கூறப்பட்டுள்ள உண்மையான வரலாற்றையும், சிந்து-சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரீகத்தையும் மெய்ப்பிக்குமாறு தற்போதைய அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அனைத்துவிதமான ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அஸ்கோ பர்போலாவின் கருத்துக்களைக் கல்யாணராமன் மட்டும் மறுக்கவில்லை. நம் நாட்டின் மிகச் சிறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்று ஆசிரியருமான பி.பி.லால் அவர்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மறுத்து, சில கேள்விகளும் எழுப்பியுள்ளார். அவற்றிற்கு இன்றுவரை அஸ்கோ பர்போலா அவர்கள் பதிலளிக்கவில்லை. (http://www.docstoc.com/docs/45231738/bblalindusscript2 )
இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் ஆசிய நாகரீகங்களை ஆராய்ச்சி செய்த கிரெகரி போஸ்ஸெல் என்கிற அமெரிக்க அறிஞரும் பர்போலாவின் கருத்துக்களை ஏற்கவில்லை. இக்கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ள மைக்கேல் விட்ஸல் அவர்கள் கூட பர்போலாவின் கருத்தான ‘திராவிட மொழிகளின் சில வார்த்தைகள் ரிக் வேதத்தில் கணப்படுகின்றன’ என்பதை மறுக்கிறார்.
உலகத்திலேயே மிகப்பழமையும் பெருமையும் வாய்ந்த நாகரீகம் கொண்ட ஹிந்து தேசத்தில் ஆராய்ச்சிகள் செய்தால் வேத நாகரீகமும் ஹிந்து வரலாறும் தான் மெய்ப்பிக்கப்படும். அதற்காக அவ்வாராய்ச்சியாளர்களை ஹிந்துத்துவவாதிகள் என்று தூற்றுவதில் வெள்ளையர்களுக்கே உரிய இனவெறியும், கிறுத்துவ அடிப்படைவாதமும் தான் தெரிகிறதே ஒழிய ஒரு திறமையான ஆராய்ச்சியாளரின் கருத்து தெரியவில்லை. ஹிந்து பூமியின் மைந்தர்கள் அனைவருமே ஹிந்துத்துவவாதிகள் தான். இதில் உண்மையும் பெருமையும் தான் இருக்கிறதே தவிற வேறில்லை.
ரோஜா முத்தையா நூலகத்தில் உரையாற்றிய அன்றே, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழுக்கு (TNIE dated 29 June 2010) ஒரு சிறிய பேட்டி அளித்திருந்தார் அஸ்கோ பர்போலா அவர்கள். அப்பேட்டியில், “குஜராத்திலுள்ள சிந்து சமவெளியின் ஆரம்பகாலக் குடிமக்கள் திராவிடர்கள் தான். அவர்கள் ஆரியர்களால் தெற்கே விரட்டியடிக்கப்படவில்லை. பதிலாக, அவர்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்களையும், பயிறிடுவதற்கான செழிப்பான நிலங்களையும் தேடித்தான் தெற்கு திசை நோக்கிக் குடிபெயர்ந்தனர். இது நடந்தது ஆரியப்படையெடுப்புக்கு முன்னால். கூட்டம் கூட்டமாக ஆரியர் வருவதற்கு முன்னால் இது நடந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதற்குப் பின்னால் பல வருடங்கள் கழித்துத்தான் சிந்து நதி தீரத்திலேயே தங்கிவிட்டிருந்த திராவிடர்களை ஆரியர் வெற்றி கொண்டனர்” என்று கூறியுள்ளார்.
பர்போலா மேலும் அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் வெளியிட்டார். “ஆங்கிலேயர் நம் நாட்டை முழுவதும் ஆக்கிரமிப்பதற்கு முன்பாக எப்படி பிராம்மணர்களைத் தங்கள் மொழியைக் கற்கவைத்துத் தங்கள் கீழ் வேலைக்கு அமர்த்தி ஆட்சி செய்தார்களோ, அதே போல், ஆரியர்களும் திராவிட கிராமத் தலைவர்களுக்கு இந்திய-ஆரிய (Indo-Aryan) மொழியைக் கற்க வைத்தனர். திராவிடர்களுள் மேல்மட்டத்தில் இருந்த பிரிவினர் (Elite Dravidians) முதலில் இந்திய-ஆரிய மொழியைக் கற்றிறுப்பர். நாளடைவில் வடக்கே இருந்த திராவிடர்கள் முழுவதுமாக இந்திய-ஆரிய மொழியைக் கற்று, மிச்சமிருந்த மிகக்குறைவான பூர்வீகத் திராவிட மொழியின் (Original Proto-Dravidian) சாயல்களை மட்டும் சேர்த்துப் பேசத்துவங்கிவிட்டனர்” என்று கூறியுள்ளார். (Proto-Dravidian என்றால் என்ன என்பது இதுவரை விளக்கப்படவில்லை)
“ஆரியர்கள் தென்னகத்தைக் கைப்பற்ற முடியாத காரணத்தால் தென்னகத்தில் திராவிட மொழிகள் நன்றாக வளர்ந்தன. வடப்பகுதியைக் கூட ஆரியர்கள் வெல்வதற்குப் பல நூற்றாண்டுகள் ஆயின” என்றும் கூறியுள்ளார்.
அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்துக்கள் “புரிந்துகொள்ளக்” கூடியதாக இருப்பதால் அவற்றைப் பற்றிய முடிவுகளை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால், ஆரிய-திராவிட கோட்பாடுகளை ஆதரிப்பவர் என்கிற காரணத்தால், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதன்மை உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பரிந்துரையை ஏற்று தி.மு.க அரசு கலைஞர் கருணாநிதி தமிழ்ச் செம்மொழி விருதிற்கு இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிற உண்மை மட்டும் உறுதியாகிறது.
நாநூறு கோடி ரூபாய் அளவிலான மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து தமிழ்ச் செம்மொழி பெயரில் நடத்தப்பட்ட தி.மு.க பெருங்கூத்தின் மூலம் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பின்வருவனவற்றைச் சாதிக்க முயன்றுள்ளார்:
• உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரே தலைவராகவும், தமிழ் மொழியின் ஒரே பாதுகாவலனாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார். இனி எதிர்காலத்தில் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தக்கூடிய உரிமையையும் தானே பெற்றுக் கொண்டிருக்கிறார்.
• உலகில் சமஸ்கிருத்த்தை விடவும் மிகவும் பழமையான, உயர்வான, பெருமை மிகுந்த மொழி தமிழ் தான் என்று நிறுவ முயன்றுள்ளார்.
• காலாவதியாகிப்போன ஆரிய-திராவிட கோட்பாடுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்.
• தமிழ் ஹிந்துக்களுக்குத் தமிழ் அடையாளத்தை மட்டும் கொடுத்து, ஹிந்து என்கிற கூட்டமைப்பிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் அவர்களை விலக்க, தீவிர முயற்ச்சி மேற்கொண்டுள்ளார்.
• தமிழ் பிரிவினைவாதத்திற்கு மீண்டும் ஒரு புதிய உத்வேகம் அளிக்க முயன்றுள்ளார்.
பகட்டான மாநாட்டின் பிரமாதமான நிறைவு விழாவில் அவர் வெளியிட்ட பல அறிவுப்புகளில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்:
• மதுரையில், “தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்” அமைக்கப்பட்டு, அதன் மூலமாகக் குறிப்பிட்ட இடைவெளிகளில் தமிழ்ச் செம்மொழி மாநாடுகள் தடையின்றி நடத்தப்படும்.
• தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்.
• சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்த தாமதமின்றி அனுமதி வழங்கவேண்டும்.
• தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
கனடா நாட்டில் பல்கலைப்பேராசிரியராக பணிபுரிந்த டாக்டர் விஜய ராஜீவா என்கிற அரசியல் விஞ்ஞானி கோவை மாநாட்டிற்குப் பிறகு எழுதிய ஒரு கட்டுரையில், “பாரதத்தின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு இல்லாத வகையில் தமிழ் மொழியை முன்நிறுத்த முனையும் கருணாநிதியின் செயல் தமிழர்களுக்கும் பொதுவாக இந்தியர்களுக்கும் கவலை தருவதாக உள்ளது. தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்கூட இந்தியாவின் எதிரிகளாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். இவ்விஷயங்கள், ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற பிரபலமான ஆராய்ச்சியாளர்கள் பாரதம் சம்பந்தமான அடையாளங்களைத் தமிழ்த் தடி கொண்டு அடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, கல்வியாளர் உலகில் தாமாகவே துரதிர்ஷ்டவசமாகத் தெரிவிக்கின்றன. ஐராவதம் மகாதேவன் ‘நான் ஒரு ஹிந்து அல்ல’ என்று சொன்னதாகத் தெரிகிறது. ஃபின்லாந்துக்காரர் என்பதால் பர்போலாவுக்கு எப்படியும் ஹிந்து அடையாளம் கிடையாது. ஏற்கனவே பாரத தேசத்தில் உள்ள வனவாசிகளை, அவர்கள் இயற்கையை வணங்குகிறவர்கள், ஹிந்துக்கள் அல்ல என்கிற பொய்ப்பிரசாரத்தைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கின்றன கிறுத்துவ நிறுவனங்கள்…” என்று எழுதியிருக்கிற அவர், “இமயம் முதல் குமரி வரை அனைத்து பாரத மொழிகளையும் பேசும் மக்கள் பண்பாட்டினால் ஒன்றிணைந்து இருப்பதால், கலைஞர் கருணாநிதியின் திட்டத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் நிராகரித்து தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பர் என்று நம்புகிறேன். அவ்வாறு காக்கப்படுவது அவசியம்” என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். (Ref: – http://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=11445&SKIN=B ).
‘முதலாவது’ உலகத் தமிழ்ச் ‘செம்மொழி’ மாநாடு நடத்தவேண்டும் என்கிற எண்ணம் ஆரம்பத்தில் கலைஞருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தான் அதிகாரத்தில் இருக்கும்போதே, தேர்தல் வருவதற்கு முன்னால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திட வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முதல்வர் கருணாநிதியின் அவசரத்தையும் துடிப்பையும் புரிந்துகொள்ளமல் ‘தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்’ மாநாடு நட்த்த இயலாது என்று மறுத்த பிறகுதான், கருணாநிதி அதை நிராகரித்து புத்திசாலித்தனமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்திருக்கிறார்.
தற்போது அவர் ’தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவிவிட்டதால், தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் தலையெழுத்து என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கலைஞர் அடுத்த தேர்தலில் ஆட்சியை இழக்கும் பட்சத்தில், தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகத் தற்சமயம், உலகத்துத் தமிழறிஞர்கள் இவ்விரண்டு அமைப்புகளிலுமாகப் பிரிந்து இருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழறிஞர்களில் ஒரு பிரிவினர், “2011 தேர்தலில் கலைஞர் வெற்றி பெறும் பட்சத்தில், தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தை நான்காவது தமிழ்ச் சங்கமாக மாற்றிக் காட்டிவிடுவார்” என்றும் கூறுகிறார்கள்.
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக அறிவித்தால், பின்னர் மற்ற மாநிலங்களும் தங்கள் மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்து மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதைப் போலவே, சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக அறிவித்தால், மற்ற மாநிலத்தவரும் தங்கள் உயர்நீதி மன்றங்களிலும் தத்தம் மொழிகளைப் பயன்பாட்டு மொழிகளாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும்படி கோரிக்கை வைப்பார்கள். குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த அம்மாநில மொழி தெரிந்த சட்ட வல்லுனர் தான் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கமுடியும் என்கிற நிலைமைக்குத்தான் இது இட்டுச்செல்லும்.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவது மிகவும் ஆபத்து விளைவிப்பதாகும். மற்ற மாநிலங்களும் கண்டிப்பாக அம்மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றும். ஏற்கனவே தண்ணீருக்கும், மின்சக்திக்கும், குடியுரிமைகளுக்கும் அடித்துக்கொள்ளுகின்ற மாநிலங்களுக்கிடையே வேலைவாய்ப்புகளுக்கான சண்டைகளும் சேர்ந்துகொள்ளும்போது, தேசிய ஒருமைப்பாடு என்பது கானல்நீராகிப்போகும். அதோடு மட்டுமல்லாமல் தேசியப் பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்விக்குறியதாகிவிடும். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு ஒத்துக்கொண்டு ஜவஹர்லால் நேரு செய்த மாபெரும் தவறின் விளைவுகளை கடுமையாக அனுபவிப்போம். தேசம் பிரிவினையில் பிளந்து போவதற்கான மார்க்கத்தின் துவக்கம் தான் இம்மாதிரியான சட்டங்கள்.
நம் தேசம் பிளந்துபோவதைத்தான் அன்னிய சக்திகள், குறிப்பாகக் கிறுத்துவ நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன. ஆன்மீகப் பாரம்பரியத்தினாலும், கலாசாரப் பழக்கவழக்கங்களினாலும் பின்னிப் பிணைந்து ஒன்றாக இருக்கிற இந்தியாவை விட, மொழிவாரியாகத் துண்டு துண்டாகிப்போன இந்தியாவை அன்னிய மதத்தவர், குறிப்பாகக் கிறுத்துவர் ஆக்கிரமிப்பது வெகு சுலபம். தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் படி ‘திராவிடமயமாக்குதல்’. ‘திராவிடம்’ என்றால் ‘பிரிவினை’ என்று கொள்க. திராவிடமயமாவது என்பது தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்துபோவது தான். இரண்டாவது மற்றும் கடைசிப்படி ‘கிறுத்துவமயமாக்குதல்’.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட அறிவிப்புகள் எல்லாமே தமிழகத்தைத் தமிழின் பெயரில் திராவிடமயமாக்கத்தான். நினைவில் கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றிய போதே கருணாநிதி திராவிடமயமாக்குதலை ஆரம்பித்து விட்டார் என்பது தான். தொடரப்போகும் செயல்களைத்தான் கோவை மாநாட்டில் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
ராபர்ட் டி நொமிலி, மாக்ஸ் முல்லர், ராபர்ட் கால்டுவெல், ஸீகன் பால்கு, ஜி.யு.போப் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கல்லறையிலிருந்து வெளிவந்து பயங்கரமாகச் சிரிக்கப் போகிறார்கள்.
(முற்றும்)

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

தமிழ்ச்செல்வன்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கோவையில் நடந்து முடிந்த தி.மு.க பெருங்கூத்தில், பின்லாந்து நாட்டு சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியாளரும் மொழிவல்லுனருமான பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாடீல் “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கினார். விருதுடன் (பாராட்டுப் பத்திரம்), ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும் ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டன.
சமீப காலங்களில் பல ஆராய்ச்சியாளர்களாலும், வல்லுனர்களாலும் “ஆரியர் படையெடுப்பு / ஆரியர் குடியேற்றம்” கோட்பாடுகள் ஆதாரமற்றவை, நிராகரிக்கத் தக்கவை என்று அகழ்வாராய்ச்சி / தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அறிவியல் பூர்வமான மரபணு ஆராய்ச்சி மூலமும் நிரூபித்துள்ளனர். இருப்பினும், இன்று வரை அந்தக் கோட்பாடுகளை ஆதரித்து வருகிறவர் அஸ்கோ பர்போலா. ஒரு காலத்தில் ஆங்கிலேயரால் புனையப்பட்ட ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளைப் பெரிதும் ஆதரித்து வந்த மார்க்ஸீய வரலாற்று ஆசிரியர்கள் கூட அதனால் பிரயோசனமில்லை என்றுணர்ந்து, அவற்றை நிராகரித்து வருகின்ற தற்போதைய காலக்கட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திராவிட இனவெறியாளர்கள் மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி ஹிந்துக்கள் என்கிற கூட்டமைப்பிலிருந்து அவர்களை விலக்கி, ‘ஹிந்து’ என்கிற அடையாளத்தைத் துறக்கச் செய்து, ‘தமிழ்’ என்கிற அடையாளத்தை ஏற்படுத்தித் தனியாக பிரிக்கும் நோக்கத்துடன், காலாவதியான ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளைத் திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியிலும் மற்றும் கல்வெட்டுக்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் மிகச் சிறந்து விளங்கும் வல்லுனர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான். கடுமையான ஆராய்ச்சிகள் மேற்கொண்டதனால் விளைந்த அவரின் சிறப்புமிகு கண்டுபிடிப்புகள், அவற்றை நம்பகத்தன்மையில்லாத திராவிட நாகரீகத்துடன் அவர் இணைப்பதால், பொலிவிழந்து நீங்கா கறை பெற்று விடுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ அவர் திராவிட நாகரீகம் பற்றிய தன்னுடைய கருத்துக்கள் மூலம் தமிழகத்துத் திராவிட இனவெறியாளர்களுக்கு உதவி வருகின்றார். அவருடைய பலவருடகால ஆராய்ச்சியையும் உழைப்பையும் அங்கீகரித்துப் பாராட்டும் வண்ணம் தி.மு.க அரசு இவ்வாண்டு அவருக்கு “திருவள்ளுவர் விருது” அளித்து கௌரவித்துள்ளது.
ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் அஸ்கோ பர்போலா அவர்களுக்கும் நீண்ட நாள் தொடர்பும் நட்பும் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதன்மையான உயர்மட்டக் குழுவில் உப தலைவராக அவர் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி விருதிற்கு அஸ்கோ பர்போலா பெயரை அவர் தான் பரிந்துரை செய்திருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அஸ்கோ பர்போலா அவர்களும் தன் கண்டுபிடிப்புகளை ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளுடன் இணைப்பதால், தி.மு.க அரசாங்கமும் அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பர்போலாவுக்கு விருது அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. தற்செயலாகத் தோன்றினாலும், முக்கியமானதாக, விருது ஏற்பு உரையில் பர்போலா அவர்கள், “சிந்து பற்றிய புரியாத புதிர்களுக்குத் திராவிடத் தீர்வுகள்” என்கிற என்னுடைய கண்டுபிடிப்புகளுக்குத் தமிழக முதல்வரின் விருது அளிக்கபடுவது, அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விருது என்கிற அர்தத்தில் கருதப்படலாம்” என்று கூறியுள்ளார்.
ஆரிய-திராவிட கோட்பாடுகள் நம்பகத்தன்மையில்லாதவை, ஆதாரமற்றவை, என்று தூக்கியெறியப்பட்ட பின்னும் அவற்றை ஆதரிக்கின்ற ஒரு வல்லுனருக்கு, அவற்றினால் பயன்பெறக்கூடிய ஒரு திராவிட இனவெறி அரசாங்கம் விருது கொடுத்து கௌரவிக்கிறது என்றால், அது கண்டிப்பாக அரசியல் காரணங்களுக்காகத் தான் இருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களால் அர்த்தம் கொள்ளப்படும் என்பது தெளிவு. அதையே தான் பர்போலா அவர்களின் விருது ஏற்புப் பேச்சும் உறுதி செய்கின்றது.
கிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.
ஒரு பூமியை ஆக்கிரமிக்க கிறுத்துவ நிறுவனங்கள் மூன்று நிலைகள் கொண்ட வழியைப் பின்பற்றுகின்றன. முதலாவதாக அப்பூமியின் மக்கள் பேசும் மொழியைக் கற்றல், கைப்பற்றல்; இரண்டாவதாக அப்பூமிக்கே உறிய கலாசாரத்தை அழித்தல்; மூன்றாவதாக அரசியல் சக்தியைப் பெறுதல். கிறுத்துவம் ஒரு மதமன்று; அது ஒரு அரசியல் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சொல்லப்போனால், அதை ஒரு மதம் என்று கருதுவதே பெரிய தவறு. கிறுத்துவ தேசங்களிலிருந்து கிறுத்தும் இல்லாத தேசங்களுக்குச் செல்லும் பாதிரிமார்களின் முக்கிய வேலையே, பூர்வீக மொழிகளைக் கற்று, அம்மக்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் தெரிந்துகொண்டு அழிப்பதற்காக அம்மொழியில் இயற்றப்பட்டுள்ள இலக்கியங்களையும் நூல்களையும் கற்று, பின்னர் அரசியல் சக்தி பெறுவதற்கான சூழ்நிலையைத் தங்களின் அரசியல் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வைப்பது, ஆகியவை தான்.
தமிழகத்திற்கு வந்திறங்கிய ராபர்டு கால்டுவெல் உள்ளிட்ட அனைத்து கிறுத்துவ மிஷனரிகளும் தங்களை “தமிழ் மொழிப் பற்றாளர்கள்” என்று காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பொய்யான தோற்றத்தை அப்பாவித் தமிழ் இந்துக்களும் அடக்கமும் எளிமையும் கொண்ட தமிழ் இந்து அறிஞர்களும் முழுமையாக நம்பினர். ஸ்காட்லாந்து பாதிரியார் கால்டுவெல் சென்னையில் 1838-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கால் வைப்பதற்கு முன்பே, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஆண்டர்ஸன் என்கிற மிஷனரி “பொதுச் சபை பள்ளி” (General Assembly School) என்கிற பள்ளிக்கூட்த்தை 1837-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்துவிட்டார். வெள்ளைக் கிறுத்துவர்களால் ‘கருப்பு’ நகரம் என்று அழைக்கப்பட்ட மதராஸில், ஆர்மீனியன் தெருவில் 59 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அப்பள்ளியின் கிளைகளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லூர் மற்றும் மதராஸின் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் துவக்கிய ஜான் ஆண்டர்ஸன், தன் கூட்டாளிகளான ராபர்ட் ஜான்ஸ்டன், ஜான் பிரெய்ட்வுட் மற்றும் அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பி.ராஜகோபால் ஆகியவர்களுடன் சேர்ந்து அப்பள்ளிகளைப் பராமரித்து வந்ததோடு மட்டுமல்லாமல், சில படித்த உள்ளூர்வாசிகளையும் மதமாற்றம் செய்து ஆசிரியர்களாக நியமித்தனர். இந்தப் பள்ளி தான் நாளடைவில் வளர்ந்து “மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி” ஆனது என்பது முக்கியமாக்க் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். (Ref: – http://www.mcc.edu.in/index.php?option=com_content&task=view&id=30&Itemid=56).
ஆங்கிலேய அரசின் ஆதரவால் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி தலைசிறந்த கல்வி நிறுவனமாக வளர்ந்தது. உள்ளூர்வாசிகளில் மேல்மட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களெல்லாம் அக்கல்லூரியில் படிப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். ஸ்காட்டிஷ் பாதிரி கால்டுவெல் மதமாற்ற வேலைகளில் உச்சத்தில் இருக்கும்போது, சூரிய நாராயண சாஸ்திரி, சுவாமி வேதாசலம் போன்ற தமிழறிஞர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் தமிழ் துறையில், ஒருவர் பின் ஒருவராக, ஆசிரியர்களாகச் சேர்ந்தார்கள். கல்லூரியில் உள்ள கிறுத்துவ சூழ்நிலை காரணமாகவும், கால்டுவெல் போன்ற பாதிரிகளின் பொய்ப்பிரசாரங்களின் காரணமாகவும், பிராம்மணரான சூரிய நாராயண சாஸ்திரி சமஸ்கிருதத்தின் மீது வெறுப்படைந்து தன் பெயரைப் “பரிதிமாற் கலைஞர்” என்று மாற்றி வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், “தனித் தமிழ் இயக்கம்” என்கிற ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழ் மொழியில் உள்ள சமஸ்கிருதக் கலவையை நீக்கி, சமஸ்கிருத வார்த்தைகளையும் அப்புறப்படுத்தி, வேறு மொழிகளின் கலப்படமற்ற சுத்த மொழியாக தமிழ்மொழி விளங்கவேண்டும் என்பதே அவ்வியக்கத்தின் நோக்கம். அவரைப் பின்பற்றிய சைவ சமயப் பற்றாளரான சுவாமி வேதாசலமும் “மறைமலை அடிகள்” என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு தனித் தமிழ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகவும் ஒருவர் பின் ஒருவராகப் பணியாற்றினர்.
பரிதிமாற் கலைஞர் தன்னுடைய 33 வயதில் காசநோய் காரணமாக மரணமடைந்த பின்பு, மறைமலை அடிகள் ஈ.வெ.ரா. தொடங்கிய “சுயமரியாதை இயக்கம்” என்கிற ”பகுத்தறிவாளர்” இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். தான் தீவிர சைவ சமயத்தவராக இருந்தாலும், சுய மரியாதை இயக்கத்தவர்களின் நாத்திகக் கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவராக இருந்தாலும், ‘சம்ஸ்கிருத எதிர்ப்பு’ மற்றும் ‘பிராம்மண எதிர்ப்பு’ ஆகிய நிலைகளில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார் மறைமலை அடிகள். கிறுத்துவ மிஷனரிகள் எப்பொழுதும் இனவெறிக் கோட்பாடுகளின்படி நடப்பவர்கள். இனவெறிக்கும் கிறுத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதன்படி அவர்கள், “பிராம்மணர்கள் ஆரியர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள். திராவிடர்களான தமிழர்கள் தான் இம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்” என்று தமிழகத்தில் இனவெறியைப் பரப்பியவர்கள் கிறுத்துவ மிஷனரிகளே.
சுயமரியாதை இயக்கம் பின்னர் திராவிட இயக்கமாகியதும், ஈ.வெ.ரா நீதிக் கட்சியிலிருந்து வெளிவந்து திராவிடர் கழகம் ஆரம்பித்ததும் வரலாறு. அவர் இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தை வரவேற்கவில்லை என்பதும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் மட்டுமாவது தொடரவேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினார் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட இனவெறியாளர்களுக்கு கால்டுவெல் பாதிரி கடவுள் போல. மேலும் அவரின் கருத்துக்கள் இவர்களுக்கு வேதவாக்கு. ஆகவே, அவருடைய திராவிட இனவெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் தனித் திராவிட நாடு (தனித் தமிழ் நாடு) வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். இவிடத்தில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை “தமிழ்ப் பிரிவினைவாதம்” என்பதே கிறுத்துவரால் கிளப்பிவிடப்பட்டு, நாத்திகம் பேசிய திராவிட இனவெறியாளர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது, என்பதாகும். சொல்லப்போனால், தமிழகத்தையும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக “தமிழ் கிறுத்துவ தேசம்” அமைக்க வேண்டும் என்பது கிறுத்துவ நிறுவனத்தின் நெடுநாள் குறிக்கோள் ஆகும். இந்த நோக்கத்திற்காகத் தான் ”தமிழ் ஈழம்” கோரிக்கையையும் அந்த கோரிக்கையை வைத்த விடுதலைப் புலிகளையும் கிறுத்துவ நிறுவன்ங்கள் பூரணமாக ஆதரித்து வந்தன. இன்னும் ஆதரித்து வருகின்றன.
தமிழர் திரவிட இனத்தவர் என்னும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, ”ஆரிய” பிராம்மணர்களை எதிர்த்து இன வெறியும் மொழி வெறியுமாக திராவிட இனவெறியாளர்கள் மேற்கொண்ட பிரசாரம், கிறுத்துவர்களால் முழுவதுமாக ஆதரிக்கப்பட்டு, 1967-ல் காங்கிரஸ் கட்சித் தோற்கடிக்கப்பட்டு திராவிட இனவெறியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறினர். இன்று வரை அவர்களை தேசியக் கட்சிகளால் கீழிறக்க முடியவில்லை. ஆனால் இன்றோ, இவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு இத்தாலியப் பெண்மணியின் அதிகாரத்தில் கட்டுப்பட்டு இருக்கிறது. அந்தப் பெண்மணி திராவிட இனவெறியாளரான கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால், மத்தியிலும் மாநிலத்திலுமாக கிறுத்துவ நிறுவனங்கள் சக்தி பெற்று விளங்குகின்றன. எனவே, காலாவதியாகிப்போன ஆரிய-திராவிட இனவெறிக் கோட்பாடுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க எண்ணும் ஒரு கிறுத்துவ ஆராய்ச்சியாளருக்கு விருது வழங்கியதில் வியப்படைய என்ன இருக்கிறது?
ஐராவதம் மகாதேவன் அவர்கள் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியது இது முதல் முறையன்று. அவர், சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ஹார்வார்டு பல்கலையிலிருந்து சமஸ்கிருத “அறிஞர்” மைக்கேல் விட்ஸல் என்கிற ஜெர்மானியரை சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும், ரிக் வேதம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றுவதற்காக அழைத்து வந்திருந்தார். ஹிந்து எதிர்ப்புக் கொள்கைகளுக்குப் பெயர்போன மைக்கேல் விட்ஸல் சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் சமஸ்கிருதக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ்ஹிந்து.காம் இணைய தளம் மைகேல் விட்ஸலுக்கு ஐந்து கேள்விகளை அனுப்பியது. கேள்விகளைப் பெற்றுக்கொண்டு உறுதியும் செய்து அவற்றிற்குப் பதிலளிப்பதாகவும் வாக்களித்த அவர், பலமுறை நினைவூட்டியபோதும் தனக்கு அதிகமாக வேலைகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இன்று வரை இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அவர், மற்ற மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. மீண்டும் பலமுறை தொடர்பு கொண்ட பிறகும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரால் பதிலளிக்க முடியவில்லையோ என்று தான் தோன்றுகிறது. (Ref: – http://www.tamilhindu.com/2009/07/questions-to-michael-witzel/ ).

அவர் எதற்காக அழைத்து வரப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்பட்வில்லை. பாரத நாட்டில் இல்லாத சமஸ்கிருத அறிஞர்களா? ஏன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் இல்லாத வேத விற்பன்னர்களா? அவர்களை விட மைக்கேல் விட்ஸல் ரிக் வேதத்தைப் பற்றி என்ன சொல்லிவிட முடியும்? சரி போகட்டும். ஐராவதம் மகாதேவன் அவர்கள் மைக்கேல் விட்ஸலை சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும் அழைத்துச் சென்றார். அது ஒரு கிறுத்துவ நிறுவனம். ( http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html )
செட்டிநாட்டைச் சேர்ந்த கொட்டையூர் என்ற ஊரில் ரோஜா முத்தையா என்பவர் பல ஆண்டுகள் பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் சேகரித்து வைத்திருந்தவர். நாளடைவில் அவற்றைச் சரியாகப் பராமரிக்க இயலாத காரணத்தாலும், நிதி நிலைமை சரியாக இல்லாத காரணத்தாலும், அனைத்து நூல்களையும் அமெரிக்காவின் சிகாகோ பல்கலை நூலகத்திடம் விற்றுவிட்டார். பின்னர் சிகாகோ பல்கலை நூலகம் அவர் பெயரிலேயே ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைத் துவங்கியது. அனைத்துத் துறைகளுக்கான தமிழ் நூல்களைச் சேகரித்து தமிழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ரோஜா முத்தையா நூலகம். (http://www.visvacomplex.com/RojaMuthiah1.html)
கோவையில் தமிழ் பெயரில் நடத்தப்பட்ட தி.மு.க மாநாடு முடிந்த கையோடு அஸ்கோ பர்போலாவைச் சென்னைக்கு அழைத்து வந்த ஐராவதம் மகாதேவன் அவர்கள், 28 ஜூன் திங்கட்கிழமை அன்று அதே ரோஜா முத்தையா நூலகத்தில் பர்போலாவின் ”சிந்து சமவெளி குறியீடும் காட்டுக் கழுதையும்” என்கிற தலைப்பிலான உரையை ஏற்பாடு செய்திருந்தார். மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த காலஞ்சென்ற திரு.கிஃப்ட் சிரோமணி என்கிற கிறுத்துவப் பேராசிரியரின் முதல் நினைவுச்சொற்பொழிவான அவ்வுரை நிகழ்ச்சியை மெட்ராஸ் கிறுத்துவ கல்லூரியே வழங்கியது. திருமதி.ராணி சிரோமணி தலைமை ஏற்க, மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் முதல்வர் அணிந்துரை ஆற்ற, பர்போலா தன்னுடைய ஆராய்ச்சி உரையை நிகழ்த்தி முடித்தார். மைக்கேல் விட்ஸல் வருகையின் போது ஏற்பட்ட அனுபவங்களால், கேள்வி நேரத்தை மிகவும் குறைத்து கேள்வி எண்ணிக்கைகளையும் கட்டுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பிற்கிணங்க, ஐராவதம் மகாதேவன் அவர்கள் செயல்பட்டார். ஆகவே, கேள்விகள் தயார் செய்து வந்திருந்த அறிஞர்கள் சிலர் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
(தொடரும்)

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்