‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


காந்தி புரிதல்களும்,பிரமைகளும்

சுந்தர ராமசாமியுடன்,ஜெயமோகன் காந்தி குறித்து தொடர்ந்து உரையாடியிருப்பதை தன் இணையதளத்தில் ஜெயமோகன் இட்டிருக்கிறார்.
அந்த உரையாடல் ஜெயமோகனின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படித்தியுள்ளது, வேறுபாடுகள் இருந்தாலும் சிலவற்றில் இருவருக்கும்
காந்தி குறித்து ஒத்த கருத்து இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். சு.ராவின் கருத்துகளில் ஏற்படும் மாற்றங்களின் பிண்ணனியும் நமக்குச் சொல்லப்படுகிறது.காந்தி குறித்த புரிதல் நேருவை அத்தனை எதிர்மறையாகக் காண்பதில் போய் முடிகிறது. சுந்தர ராமசாமி எந்த நூல்களைப்
படித்தார் என்பது இதில் புலப்படவில்லை.ஆனால் காந்தியை முற்றாக எதிர்மறையாகக் காண்பதிலிருந்து இன்னொரு நிலைப்பாட்டினை நோக்கி அவர் நகர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. இதில் காந்தியைப் பற்றி சொல்லப்படும் ஒன்று காந்தியை இந்தியர்கள் எவருமே புரிந்து கொள்ளவில்லை, மேலை நாட்டினரே புரிந்து கொண்டனர் என்பது. இந்த கருத்தினை அவர்(கள்?) எந்த அடிப்படையின் கீழ்
கண்டடைந்தார்கள் என்பது தெளிவாக இல்லை.ஏனெனில் குமரப்பா ஷுமாக்கர், இலிச் போன்றோர் எழுதுவதற்கு முன்னரே எழுதியவர்.காந்தியத்தை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியான கிராமத் தொழில்கள் குறித்து கவனம் செலுத்தியவர்.வேளாண்மை குறித்து அன்றே அழுத்தமான சில கருத்துக்களை முன் வைத்தவர். வினோபா காந்தியின் பிரதான சீடர்களில் ஒருவர்.பூதானம் மூலம்
நிலங்களை பெற்று பகிர்ந்தளிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். ஜெயப்பிரகாஷ் நாரயண் 1974ல் முழுமையான புரட்சிக்கு அழைப்புவிடுத்ததன் மூலம் இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனைக்கு வித்திட்டவர்.அவர் சர்வோதய இயக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தவர். இவர்கள் எதைப் புரிந்து கொள்ளவில்லை, மேலை நாட்டினர் இவர்கள் புரிந்து கொள்ளாத எதைப் புரிந்து கொண்டனர் என்று விளக்கம் எதுவும் தரப்படுவதில்லை.மாறாக சொல்லப்படுவது ’வினோபா ? ” புரிஞ்சுண்டிருந்தா அவர் அப்டி ஆசிரமத்தில ஒக்காந்து கீதைபடிச்சுண்டு வரவாளுக்கு அனுக்ரகம் பண்ணிண்டிருக்கமாட்டார். அவர் என்ன சங்கராச்சாரியா ? ‘. சரி ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய கிருபளானி ?. “என்ன லட்சணமா பேசறாங்க பாருங்க… காந்தி வாயில ஒரு தப்பு வருமா… ? ” மொரார்ஜி தேசாய் ?. “அவர் காலத்திலதான் இந்தியால பியூரோக்ரஸி ஜாஸ்தியாபோச்சு. காந்தியவாதி என்னைக்குமே பியூராக்ராஸிக்கு எதிராத்தான் இருப்பார்…. “.ஜெ.சி.குமரப்பா ?. “அவருக்கு காந்தியை நன்னா தெரியும்.ஆனா அவர் மனசு இந்திய மனசு இல்ல. அவரு அடிப்படையில வெஸ்டனர் “. மேலைநாட்டினரே காந்தியை நன்றாகப் புரிந்துகொண்டார்கள் என்றார் சுந்தர ராமசாமி. நான் அதை உடனே ஏற்றுக் கொண்டேன்.”

வேடிக்கையாக இருக்கிறது.ஆச்சாரிய கிருபளானி யார் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.மொரார்ஜி அன்றைய பம்பாய் மகாணத்தில் முதல்வராக இருந்தவர்.பின் 1977ல் இந்தியப் பிரதமர் ஆன பின் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஜனதா ஆட்சிக்காலத்தில் முன் வைக்கப்பட்டன.காந்தியப் பொருளாதாரக் கொள்கை ஒரளவாவது கவனம் பெற்றது.Production for masses என்பதற்கு பதிலாக production by masses என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.1948க்குப் பின் பல காந்தியவாதிகள்
பதவி அரசியலிலிருந்து ஒதுங்கி காந்திய நிறுவனங்களை அமைத்து, பொதுச் சேவையில் ஈடுப்பட்டனர்.குமரப்பா, தரம்பால் உட்பட பலர் அவற்றில் பணியாற்றினர்.தரம்பாலின் முதல் நூலை இந்த இருவரும் படித்திருப்பார்களா என்று சந்தேகம் எழுகிறது. குமரப்பா போன்றவர்களுக்கு அன்று அரசின் கொள்கைகளை வகுப்பதில் செல்வாக்கு இல்லை. கதர்,கிராமத் தொழில் என்பதற்கு போதுமான ஊக்கம் தரப்படவில்லை.விவசாயத்தில் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது.அன்று அனைத்துக் கட்சிகளும் தொழில்மயமாக்கலை, பெரிய திட்டங்க்ளை, பெரிய நீர்ப்பாசன திட்டங்கள்/அணைகளை ஆதரித்தன. இந்த நிலையில் காந்தியர்கள் விளிம்பில்தான் இருந்தனர். அவர்கள் காந்தியைப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது. அவர்கள் எழுதியதன் அடிப்படையில்,மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில். அப்படிப் பார்த்தால் குமரப்பாவையும், வினோபாவையும் ஒற்றை வாக்கியத்தில் தூக்கி எறிந்து
பேசிவிட முடியாது. மார்டின் லூதர் கிங் செய்தது தெரியும், ஆனால் பூதானம் என்றால் என்னவென்று தெரியாத அமெரிக்கர் இதைத் சொல்லவில்லை.சொல்லியிருப்பது சுந்தர ராமசாமியும்,ஜெயமோகனும். இவர்கள் எதைப் படித்து இந்த முடிபுகளுக்கு வந்தார்கள். இருவரும் குமரப்பாவின் எத்தனை கட்டுரைகளைப் படித்திருப்பார்கள். நீர்வளம்,வேளாண்மை குறித்து அன்றே குமரப்பா எழுதியதை அறிவார்களா ? – தெரியவில்லை. ஆனால் அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும்
‘அறிஞர்கள்’ என்பது தெரிகிறது. அதை விட வேடிக்கை ’ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட் அப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு… ” என்ற அவதானிப்பு. வெஸ்டர்ன் மனசு என்பதற்கு சொல்லப்படும் விளக்கம் இன்னும் வேடிக்கை- காந்தி சயண்டிபிக்கா பார்க்கிராராம். அறிவியலில் உள்ள fact-value பிளவு குறித்து எழுதப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் மனசு என்றால் என்ன, அதற்கும் இந்திய மனசிற்கும் என்ன வேறுபாடு எதுவும் சொல்லப்படுவதில்லை. இந்தியாவில் அழுக்கும்,குப்பையும் இருப்பது ‘வெஸ்டனர்’ கண்ணிற்குத்தான் தெரியுமோ.

உண்மையில் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்த பிற விவாதங்களை, காந்தி குறித்து வெளியான ஆய்வுகளை இவர்கள் ஒரளவே அறிந்திருக்கின்றனர் என்றே நான் கருதுகிறேன்.அதே சமயம் ஒரு பரந்த புரிதல் இல்லாத காரணத்தினால் அவர்களால் எதையும் சரியாக அணுக முடியவில்லை. உதாரணமாக நேரு, அம்பேத்கர் குறித்த கருத்துக்கள், ஜனநாயகம் குறித்த கருத்துக்கள். சுதந்திர இந்தியாவின் அரசியல்-பொருளாதார வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரிந்த எளிய அடிப்படை உண்மைகள் கூட இவர்களுக்கு தெரியவில்லை. சாதியை எப்படி முன்னகர்த்துவது என்று சொல்லப்படுவதில்லை. நேருவும்,அம்பேத்கரும்,ராயும் ஜனநாயகம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். அன்று உலகில் எந்த நாட்டிலும் காந்தியத்தின் அடிப்படையில் அரசோ/நாடோ இல்லை. ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று சோசலிசம் என்று கூறப்பட்ட அடிப்படைகள் இருந்தன. சோவியத் யூனியனின் சாதனைகளும், அமெரிக்காவில் தொழிற்துறை, அறிவியல் பலமும் வியக்கவைத்தன. இன்னொரு புறம் சுதந்திர அரசின் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் இருந்தன. காந்தியின் ஹிந்த் சுவராஜை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசு எப்படி செயல் பட முடியும். 1947ல் இந்தியா ஒரளவேனும் தொழில்வளர்ச்சி பெற்றிருந்தது, உயர்கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் போன்றவை இல்லாமல் இல்லை. அன்றைய நிலையில் ஜனநாயகம், வலிமையான மைய அரசே சரியான தெரிவு. அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை உறுதி செய்திருந்தது. காலனி ஆதிக்க ஆட்சி விட்டு சென்ற நிர்வாக முறை,நீதி முறை இருந்தன. முற்றிலும் புதிதாக புரட்சிக்கும் பின் அனைத்தையும் முதலிலிருந்து அமைக்கும் நிலை அன்றில்லை. காந்தி கிராம சுயராஜ்யம் என்று பேசினாலும் இந்தியாவிலுள்ள தொழிலதிபர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் அம்பேத்கரும், நேருவும் அன்று செயல்பட்டனர்.நேருவின் காலத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் முதல் பத்தாண்டுகளில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையவில்லை. நேருவின் காலத்தில் நுகர்வியம் ஊக்குவிக்கப்படவில்லை.தொழில்மயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டது.

காந்தியம் என்று பேசப்படும் போது நுகர்வியம் குறித்தும் பல சமயங்களில் பேசப்படுகிறது. நுகர்வியம் குறித்து காந்தி கூறியதை கருத்தில் கொள்ள வேண்டும்.ஆனால் எளிய தீர்வுகள் மூலம் அதை தீர்த்துவிட முடியாது. நுகர்தல் என்பது மக்கள் தொகை உட்பட பலவற்றுடன் தொடர்புடையது. தனி நபர் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும் மக்கள் தொகை அதிகரித்தால் ஒட்டு மொத்த நுகர்வும்,
அதற்கான இயற்கைவளங்களின் தேவையும் அதிகரிக்கவே செய்யும். மேலும் நுகர்வு என்பது உளவியல், தனி நபர் தெரிவுகளுடன் தொடர்புடையது.எழுத்தாளர்கள் நூற்கள் அதிகமாக விற்றால் நல்லது என நினைக்கலாம். நூற்களை வாங்குவதும்,படிப்பதும் நுகர்வியத்தின் பகுதிதான். காகிதம் என்பதற்கும் மூலப்பொருள் தேவை,அதை தயாரிக்க பெரிய தொழிற்சாலைகள் தேவை.கைத்தொழிலாக அதை எந்த அளவு செய்ய முடியும். நூல் நூற்க பஞ்சு தேவை. இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளில் குறிப்பிடதகுந்த அளவு பருத்தியை விளைவிப்பதில் பயன்படுகிறது. பருத்தியின் விளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க அதன் தேவையும் கூடும். அமெரிக்காவில் உள்ள குடிமகர் சராசரியாகப் பயன்படுத்தும் காகிதத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அது குறைவு. ஆனால் இந்தியாவில் காகிதத்தின் நுகர்வு அதிகரித்தால் அதற்கான மூலப் பொருட்களுக்கு என்ன செய்வது. ஒரு தேசியப் பொருளாதாரத்தில் இது போல் பல ஆயிரம் கேள்விகள் உள்ளன.
கிராமக் குடியரசுகளால் எந்த அளவு எந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதற்கும் வரையரை இருக்கிறது. பலவற்றை உற்பத்தி செய்வதில் economies of scale முக்கியமான ஒன்று. இல்லாவிட்டால் பொருளின் விலை அதிகமாக இருக்கும். மேலும் இன்று நுகர்வு என்பது உலகமயமாகிவிட்டது. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றால் திருப்பூரிலும், சென்னையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. 1948ல் இந்த அளவு உலகமயமாதல் இல்லை.ஆனால் அப்போதும் இந்தியப் பொருளாதரம் காந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும்
பின்பற்றக் கூடிய நிலையில் இல்லை. இன்றைய நிலையில் நுகர்வியத்திற்கு காந்தியம் என்ன தீர்வு கூறும். ஆசையை குறைத்துக் கொள் என்று சொன்னால் அது ஏதோ ஒருவிதத்தில் எங்கோ பாதிப்பு ஏற்படுத்தும்.மேலும் தனி நபர் தெரிவுகள் எப்படி இருக்கின்றன. நேற்று பேருந்திலும், ரயிலில் போனவர்கள் பொருளாதார வசதி வந்தவுடன் விமானத்தில் செல்ல தயங்குவதில்லை, தேவை ஏற்படின். இன்று பெரும்பாலான மத்தியதரவர்க்க குடும்பங்களில் குளிர்சாதனப் பெட்டி, வண்னத் தொலைக்காசட்சி இருக்கிறது. இது நுகர்வியமா இல்லை
அத்தியவசியத் தேவையா. காந்தி கூறும் எளிமையான வாழ்க்கை இன்று சாத்தியம், இந்தப் பொருளாதர-சமூக அமைப்பிலிருந்து ஒரளவேனும் விலகி இருந்தால். ஆனால் அது சாத்திய்மா? எது தேவை,எது வசதி, எது அடிப்படைத் தேவை என்பது இன்று சர்ச்சைக்குரியது. காந்தி சொன்ன கதரை அணியுங்கள், காதி கைத்தொழில்களை ஆதரியுங்கள் என்று எழுதினால் அதில் காந்தியத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சி தெரியும். ஆனால் காந்தியம் குறித்து பேசும்/எழுதும் பெரும்பாலோருக்குத் தெரியும் நடைமுறையில் தேவைகளை குறைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்று. அது மட்டுமல்ல நுகர்வியம் குறித்து நான் என்னதான் குறை கூறினாலும் நுகர்வியம் நேரடியாக தொடர்புடையது அறிவு உற்பத்தியுடன். ஒரு எழுத்தாளர்/ஆய்வாளர் பயன்படுத்தும் காகிதம், செய்யும் பயணங்கள் இவை நுகர்வியம் அல்ல என்று யார் முடிவு செய்வது. நுகர்வியத்தின் வகைகள் வேறுபட்டாலும் இறுதியில் அனைத்தும் மூலவளங்களைப் பயன்படுத்துவது குறித்த கேள்விகள்தான். எழுத்தாளர்கள் அச்சிட்ட நூற்களை ஊக்குவிக்காமல் மின் நூற்களை ஊக்குவிக்கலாம் என்று சொன்னால் ராயல்டி பாதிக்கும் என்று எதிர்க்குரல்
எழலாம். எல்லோரும் நுகர்வு என்ற வலைப்பின்னலில் அழுத்தமாக சிக்கியிருக்கிறோம். இதுதான் உண்மை. காந்திய நோக்கில்ப் பார்த்தால் இதற்கான தீர்வு நுகர்வைக் கட்டுப்படுத்தல், எளிய வாழ்க்கைக்கு திரும்புதல்,ஆசைகளை கட்டுப்படுத்தல். இது எளிதல்ல என்றாலும் சிறிதளவாவது முயலலாம்.ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அதன் விளைவு யாருக்கோ பாதகமாகக் திரும்பும் சாத்தியம் உள்ளது. அமெரிக்கர்கள் கைவினைப் பொருட்களை வாங்குவதை குறைத்தால் அதன் பாதிப்பு எங்கே ஏற்படுகிறது. சுற்றுலாத்துறையில் சுணக்கம்
ஏற்பட்டால் யாருடைய வயிறிற்கான உணவு கிடைப்பதில்லை. இன்றைய சூழலில் காந்தியத்தை முன் வைத்து நுகர்வை குறை என்பதை ஒற்றைப் பரிமாணமாக முன் வைக்க முடியாது. அப்படி காந்தியத்தை முன் வைப்பவர்கள் செயல்முறை தீர்வுகளையும் விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும்.

காந்திய முறைகள் இன்று பல இயக்கங்ளால் கைக் கொள்ளப்படுகின்றன. ஜெயமோகன் ’Mohandas K. Gandhi: Citizenship and Community for an Industrial Age-Robert W. Hunt’ ஐ மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பெயரில் நூல் வந்திருப்பதாகத் தெரியவில்லை. கட்டுரை வெளியாகியுள்ளது (Bulletin of Science, Technology & Society, Vol. 23, No. 3, June 2003, 192-200). அதில் கட்டுரையாசிரியர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது
“Moreover, even the “grassroots” activists that Sheth and Nandy viewed as possibly reviving the Gandhian social vision tend to focus on his techniques, “disregarding the deep, personal, spiritual and philosophical basis of the practice” (Suhrud,
2002).”
அதாவது காந்தியம் தொழில்னுட்பம்/செய்முறை சார்ந்த ஒன்றாக இயக்கங்களால் பயன்படுத்தப்படுகிறது. காந்தியத்தின் தத்துவ,ஆன்மிக அடிப்படையிலிருந்து அன்னியப்பட்ட ஒன்றாக அவற்றின் செயல்முறை இயங்குகிறது. இது உண்மைதான் எனில் காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு எத்தகையது. அது விழுமியங்கள் சார்ந்த ஒன்றா அல்லது செயல்பாட்டிற்கு உதவும் கருவியின் தன்மை சார்ந்த ஒன்றா. அடுத்த பகுதியில் இதை சற்று விரிவாக அணுகுவோம்.

காந்திய அகிம்சை கோட்பாட்டை பிரபலபடுத்தியதில் பெரும் பங்கு வகித்த ஜீன் ஷார்ப் ஒரு கட்டத்திற்குப் பின் வன்முறையற்ற போராட்டம் என்பதை காந்தியத்தின் அறவியல் கூறுகளிலிருந்து பிரித்து ஒரு போராட்ட யுக்தியாக , அதிகாரம் சார்ந்த ஒன்றாக,அறம் சாரா ஒன்றாக வளர்த்தெடுத்தார். அவர் எழுதினார்
‘Nonviolent action is a technique by which people who reject passivity and submission, and who see struggle as essential, can wage their conflict without violence. Nonviolent action is not an attempt to avoid or ignore conflict. It is one response to the problem, of how to act effectively in politics, especially how to wield power effectively’.

எனவே காந்தியம் என்பது நடைமுறையில் எப்படி கையாளப்படுகிறது என்று பார்த்தால் அது ஜெயமோகன் எழுதியதிலிருந்து வேறாக இருக்கிறது. காந்திய முறையைக் கைக்கொள்ளும் இயக்கங்கள் காந்தியத்தின் விழுமியங்களை ஏற்கின்றன என்று கருத முடியாது. இப்படிப் பார்த்தால் காந்தியம் பரவலாக இயக்கங்களால் பயன்படுத்தப்படும் போது அது காந்தியமாக இறுதி வரை இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

அடுத்த பகுதியுடன் முடியும்

http://ravisrinivas.blogspot.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


I
ஜெயமோகனின் ‘காந்தி’யும், ‘காந்திய’மும்

ஜெயமோகன் தன் இணையதளத்தில் காந்தி/காந்தியம் குறித்து எழுதி வரும் கட்டுரைகள் குறித்த ஒர் விமர்சனம் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரைகளிலிருந்து ’அறிஞர்’ ஜெயமோகனால் அங்கீகரிப்பட்ட ’அறிஞர்களில்’ அ.மார்க்ஸும் ஒருவர் அல்லது குறைந்த பட்சம் காந்தியத்தைப் பொறுத்தவரை அந்த அங்கீகாரம் உண்டு என்று தெரிந்து கொள்ள முடிந்தது. காலச்சுவடு அஷிஸ் நந்தி எழுதிய ஒரு கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டது, ஜனவரி 2008 இதழில் .அத்துடன் வேறு சில தொடர்புடைய கட்டுரைகளும் அதே இதழில் வெளியாகியுள்ளன.(1) ராமானுஜம் காந்தியின் உடலரசியல் என்ற சிறு நூலை எழுதியுள்ளதாக அறிகிறேன். ஜமாலன் அதைக் சுட்டுகிறார்(2).நான் அதைப் படித்ததில்லை. அ.மார்க்ஸ் காந்தி குறித்து எழுதியுள்ளதை ஒரு வாசகர் குறிப்பிட்ட பின் ஜெயமோகன் தானும் அ.மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், அவரும் ஆங்கிலத்தில் படித்திருப்பார் போலிருக்கிறது என்று தன் கடைக்கண் ‘கருணை’ப் பார்வையை அ.மார்க்ஸ் மீது செலுத்துகிறார்.அ.மார்ஸ் இப்படி எழுதியிருக்கிறார். அது எனக்கு வியப்பளித்தது என்று கூறி சாதி,காந்தி குறித்து நான் எழுதியிருப்பதையும், அவர் இவ்வாறு எழுதியிருப்பதையும் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் எழுதவில்லை.

அ.மார்க்ஸ் அந்தக் கட்டுரையை 2006ல் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார் என்பதால் ஜெயமோகன் மூலம்தான் காந்தி ,சாதியம் குறித்து அண்மையில் வெளியான கருத்துக்களை தமிழ் வாசகர் அறிந்து கொள்ளும் நிலை இங்கில்லை என்பதுதான் உண்மை. அ.மார்க்ஸ் ஒரு கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரை கதாநாயகனாகவும்,அம்பேகாரை கதாநாயகனுக்கு உதவுபவனாகவும், காங்கிரஸ்/காந்தியை வில்லனாகவும் சித்தரித்து எழுதுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். (இதை என் நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன், பிழை இருக்க வாய்ப்புண்டு. அந்த கட்டுரை அ.மார்க்ஸ் எழுதிய ஒரு நூலில் இருக்கிறது).ஆக, எஸ்.வி.ராஜதுரையின் காந்தி குறித்த கருத்துக்கள் மீது அ.மார்க்ஸும் விமர்சனம் வைத்திருக்கிறார்.ஜெயமோகன்தான் எஸ்.வி.ராஜதுரையை இதில் விமர்சித்துள்ளார் என்றில்லை. காந்தியைப் பற்றி எழுதும் போது கூட ஜெயமோகனுக்கு தன்னை முன்னிறுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்கிறது.அவரது அவப்பேறு வாசகர்கள் காந்தி/காந்தியம் குறித்து தமிழில் பிறர் எழுதியுள்ளதையும் படித்து வைத்திருக்கிறார்கள் அல்லது அறிந்திருக்கிறார்கள்.போதாக்குறைக்கு இணையத்தில் தொடர்புடைய கட்டுரைகள், விபரங்கள் வேறு கிடைக்கின்றன .இவையெல்லாம் அவர் வாசகர் மத்தியில் காந்தியத்தை முன்வைத்து தன்னைப் பற்றி உருவாக்க முயலும் பிம்பத்தை கலைத்துவிடுகின்றன.காந்தியைப் பற்றி தமிழில் என்னென்ன வெளியாகியிருக்கிறது, யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை விளக்காமல் ஒருவர் காந்தியம் குறித்து எழுதலாம்.அது புரிந்து கொள்ளக்கூடியதே.அல்லது தான் படித்தவற்றினை அறிமுகப்படுத்தி, அவற்றை விமர்சித்து தன் கருத்தினை எழுதி, அத்துடன் தான் சொல்ல விரும்புவதையும் ஒருவர் விரிவாக எழுதலாம். காந்தியைப் பற்றி தமிழில் வந்ததையெல்லாம் படித்து விட்டுத்தான் ஒருவர் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை.

ஆனால், ஜெயமோகனின் கட்டுரைகளில் வெளிப்படும் தொனி காந்தியைப் பற்றி இங்கு தவறான பிரச்சாரமே மிக அதிகமாக முன் வைக்கப்பட்டுள்ளது, அதை என கட்டுரைகளே முறியடித்து உண்மையை சொல்கின்றன என்பதாக இருக்கிறது. அதனால்தான் அவரால் சாதி,காந்தி குறித்து அ.மார்ஸ் எழுதியுள்ளதை பிறர் சுட்டிக்காட்டாதவரை குறிப்பிட முடிவதில்லை.காந்தி,காந்தியத்தைப் பற்றி எழுதுவதன் மூலம் தன்னை முன்னிறுத்தும் ஜெயமோகனின் முயற்சியாகவே நான் இந்தக் கட்டுரைகளை கருதுகிறேன். எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் காந்திய நிறுவனங்கள் உள்ளன,வெளியீடுகள் வெளிவந்தன, சர்வோதயம் என்ற இதழ் காந்திய இதழ், அதில் சமகாலத்தில் காந்தியத்தின் பொருத்தப்பாடு குறித்த கட்டுரைகள் வெளியானதைப் படித்திருக்கிறேன்.அது இன்று வெளிவருகிறதா என்று தெரியாது. பெரியாரியவாதிகள்,தலித் இயக்கங்கள், ம.க.இ.க போன்ற அமைப்புகள் காந்தி/காந்தியம் குறித்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்துள்ளன. Indian National Congress: How Indian How National போன்ற நூல்கள் தமிழில் சுட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக காந்தி குறித்து இன்று நேர்மறையான கருத்து மட்டுமே நிலவுகிறது என்று சொல்ல முடியாது. காந்தி பகத்சிங் விவகாரத்தில் துரோகமிழைத்தார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. இதை மறுத்து ஏ.ஜி. நூரனி ஆங்கிலத்தில் எழுதினார். அ.மார்க்ஸ் தமிழில் இந்த விவாதத்தில் காந்திக்கு ஆதரவான தரப்பினை முன்னிறுத்தியிருப்பதை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார். தமிழில் நூரனியின் எழுத்துகள் மொழிபெயர்ப்பாய் கிடைப்பதில்லை.வலைப்பதிவுகளில்/இணைய விவாதங்களில் நான் நூரனின் எழுத்தினை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இருப்பினும் காந்திதுரோகமிழைத்தார் என்ற கருத்து இன்னும் பரவலாக எழுதப்படுகிறது. அதற்குக் காரணம் பகத்சிங்கை உயர்த்திப் பிடிக்க காந்தியை துரோகியாக சித்தரிக்கும் உத்தியை இயக்கங்கள்/அமைப்புகள் கைக்கொள்வதே.நூரனி எழுதியதைப் படித்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரம் எவ்வளவு பொய்யானது என்று தெரியும். எனவே தமிழில் இன்று காந்தி குறித்த ஒரு புதிய புரிதல்தேவை.

இதற்கு கடந்த 20/25 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூற்கள்/கட்டுரைகள் பயன்படும். அதற்கு அதாவது காந்தி,காந்தியம் குறித்த புதிய புரிதலுக்கு,ஜெயமோகனின் கட்டுரைகள் பெருமளவிற்கு உதவியிருக்கலாம்,அவர் ஒரு பிரச்சாரத்திற்கு மறுப்பும், எதிர்வினையும் இன்னொரு பிரச்சாரம்தான் என்ற அணுகுமுறையுடன் எழுதாமல் இருந்திருந்தால், அவர் ஏராளமாகப் படித்து உட்கிரகித்திருந்தால், ஏற்கனவே எழுதியதையே மறுசுழற்சி செய்து எழுதாமல் இருந்தால்.

“நாம் இன்னமும் காந்தியை சரிவர புரிந்துகொள்ளவில்லை. ஏன் என்றால் நாம் கவனிக்கவில்லை. வழக்கம்போல அக்கப்பொரொகளாஇ மட்டுமே சிந்தனைகளாக நம்பிக்கொண்டிருக்கிறோம். வெற்றிகொண்டான் தரத்துக்குமேல் எழுதபப்ட்ட கட்டுரைகளே தமிழில் குறைவு. [எஸ்.வி.ராஜதுரை என்ற மகாவெற்றிகொன்டான்!]” என்று ஜெயமோகன் எழுதுகிறார் http://jeyamohan.in/?p=4234

ராஜதுரையின் பெரியாரிய சார்புகள்/சாய்தல்களை அவரது நூற்களை வாசிப்பவர்களால் எளிதில் உணர முடியும்.அதே போல் ஜெயமோகன் எழுதியிருப்பதில் காந்தி/காந்திய சார்புகள்/சாய்தல்களை வாசகரால் அறிய முடியும்.இவர்களது வாதங்கள் ஒருதலைப் பட்சமாகவும்,இன்னொரு தரப்பின் கருத்துகளை திரித்து கூறுபவையாகவும், முக்கியமான தகவல்களை/சான்றுகளை வேண்டுமென்றே மறைப்பவையாகவும் உள்ளனவா என்று கேள்வி எழுப்பலாம். சில கேள்விகள் ஆய்வு நெறி நோக்கில் எழுப்பபடலாம்.சில முடிவுகளை அவை முன்வைக்கும் தரவுகள்,வாதங்களின் அடிப்படையில் சர்ச்சிக்கலாம். இந்த இரண்டும் (அதாவது சில கேள்விகள் ஆய்வு நெறி நோக்கில் எழுப்பபடலாம், சில முடிவுகளை அவை முன்வைக்கும் தரவுகள்,வாதங்களின் அடிப்படையில் சர்ச்சிக்கலாம்) காந்தி குறித்து ஜெயமோகன் எழுதியதற்கும் பொருந்தும், ராஜதுரை எழுதியதற்கும் பொருந்தும். பெரியாரை விதந்தோதி காந்தியை நிராகரிப்பது அல்லது காந்தியை விதந்தோதி, பெரியார்/அம்பேத்கர்/நேருவை நிராகரிப்பது – இரண்டையுமே முன் வைக்கப்படும் வாதங்கள், காரணங்கள், அவற்றின் பலங்கள்/பலவீனங்களின் அடிப்படையில்தான் மதிப்பிட முடியுமே ஒழிய, காந்தி அல்லது பெரியார் அல்லது அம்பேதகர் அல்லது நேரு ஆகிய ஆளுமைகளின் பிம்பங்களின் அடிப்படையில் அல்ல.

பொதுவாகச் சொல்வதென்றால் ராஜதுரையின் நூற்களில் தரவுகள்,சான்றுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது தரப்பட்டிருக்கும். ஜெயமோகனின் காந்தி குறித்த கட்டுரைகளில் அவ்வாறு இல்லை. அவர் குறிப்பிடும் பலவற்றிற்கு அவர் நூற்களைச் சுட்டுவதில்லை அல்லது சான்றுகளை தரவில்லை. எனவே எது அவர் கருத்து,எது யூகம்,எதிலெல்லாம் அவர் பிறர் கருத்துக்களை/ சான்றுகளை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக இல்லை.

ஜெயமோகன் அம்பேதக்ர் குறித்த விவாதத்திற்கு தயாரில்லை என்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தான் இலக்கிய வாசகன் என்கிறார்.இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் வரலாற்றாசிரியர்/வரலாற்றாய்வாளர் அல்ல என்கிறார். ஆனால் எழுத்தில் அவர் பல கருத்துகளை இதுதான் சரி என்று வலியுறுத்திக் கூறுகிறார், தான் காந்தியத்தில் நிபுணர் போல். அவர் எவற்றின், எந்த நூல்கள்/தரவுகளின் அடிப்படையில் தன் கருத்துக்கள்(தான்) சரி என்று வாதாடுகிறார் என்பது தெரியவில்லை.அவர் ஒரு வாசகராக அவற்றை எழுதினால் அவற்றில் உள்ள நிபுணத்துவ தொனி சரியன்று. ஒரு வரலாற்றாய்வாளன் அல்ல என்றால் அவர் முன் வைத்த பல கருத்துக்களை அவர் கருதுகோள்கள் என்று முன்னிறித்திருக்க வேண்டும்.கேள்விகள், விவாதம் என்று வரும் போது ஒரு மாதிரி எழுதுவது, கட்டுரை(கள்) என்று வரும் போது வெறொரு மாதிரி எழுதுவது என்ற யுக்தியை அவர் கையாள்கிறார். இது வாசகர்களுக்கு புரியாதா என்ன. மேலும் அவர் காந்தி/காந்தியம் மீதான அம்பேத்காரிய, பெரியாரிய விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவற்றையும் விவாதித்து தன் தரப்பினை வாதிட்டிருக்க வேண்டும்.கட்டுரைகளில் அப்படி இல்லை. உதாரணமாகச் சொல்வதென்றால் அவர் பெரியாரிய விமர்சனங்களை விரிவாக ஆய்ந்து, அவற்றின் குறைகளைக் குறிப்பிட்டு காந்தியத்திற்கு ஆதரவாக எழுதவில்லை. ராஜதுரையை வெற்றிக் கொண்டானுடன் ஒப்பிடுபவர் ராஜதுரை,வ.கீதா எழுதியுள்ளவற்றில் காந்தியம் குறித்த பெரியாரிய விமர்சனங்களை முன் வைத்து விவாதித்து தன் தரப்பினை முன்னிறுத்தவில்லை. உதாரணமாக காந்தி/காந்தியம் குறித்த பெரியாரிய விமர்சனத்தை வ.கீதா எழுதியுள்ள A Dangerous Play with Time: Brahminism and the Anxieties of History என்ற கட்டுரையில் காணலாம். ஜெயமோகன் இத்தகைய கட்டுரைகளை படித்து தன் தரப்பிலிருந்து விரிவான விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும்.

ராஜதுரை எழுதியுள்ள பெரியார்: ஆகஸ்ட் 15 (விடியல் பதிப்பகம், கோவை, இரண்டாம் பதிப்பு 2006) என்ற நூலில் பெரியார் எடுத்த நிலைப்பாட்டினை ஆதரித்து, அதற்கு சானறாக விரிவாக நிகழ்ச்சிகளை விளக்கி,பல்வேறு தரப்பினசெய்தவை,எடுத்த நிலைப்பாடுகள், இவற்றை பெரியார் எதிர்கொண்டது என பலவற்றையும் நம் முன் வைக்கிறார். சான்றாதாரங்களாக நூற்கள் உட்பட பலவற்றை குறிப்பிடுகிறார். நூற்களிலிருந்து பகுதிகளை சுட்டும் போது தொடர்புடைய பக்கங்களையும் தருகிறார். ராஜதுரை முன் வைக்கும் தர்க்கத்தினை அறிய இவை உதவுகின்றன. ராஜதுரை அதில் பெரியாரித்தின் வழக்கறிஞராக வாதாடுகிறார். அந்நியமாதல், எக்ஸிஸ்டென்ஷியலிசம் எழுதிய ராஜதுரையை அதில் பார்க்க முடிவதில்லை :). மாறாக பெரியாரிய பிரச்சார பீரங்கியாக அவர் குரல் ஒங்கி ஒலிக்கிறது. அவர் வாதத்தில்இன்னொரு தரப்பிற்கும் சில நியாயங்கள் இருக்கும் என்ற பார்வை இல்லை.அது அந்நூலின் பலவீனம்.அதைச் சுட்டிக்காட்டும் போது ஜெயமோகன் கட்டுரைகளிலும் இன்னொரு தரப்பிற்கும் சில நியாயங்கள் இருக்கலாம் என்ற பார்வை பல இடங்களில் இல்லை. பிரச்சாரமே இருக்கிறது. ராஜதுரை வழக்கறிஞர் போல் வாதிட்டால் ஜெயமோகன் பிரசங்கி எழுதுகிறார்.ஒன்று கடுமையான வாதம், இன்னொன்று மோசமான பிரசங்கம் என்று சொல்லலாம். ராஜதுரை காங்கிரஸ் இயக்கம்,தலைவர்களை விமர்சித்து எழுதி பெரியாரியத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் என்றால் ஜெயமோகன் எழுதியுள்ளதில் காந்தியை ஹீரோவாக காண்பித்து, எவரெஸ்ட்டாக காந்தி காட்டப்பட்டு பிற ஆளுமைகள் சிறு குன்றுகளாக காட்டப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றைக் குறித்து எழுதும் போது இதே கண்ணோட்டம்தான் வெளிப்படுகிறது. எனவே ராஜதுரையை வெற்றிக்கொண்டான் என்று ஜெயமோகன் சொல்வது வேடிக்கைதான்.ராஜதுரையின் கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும் நூல்கள்,சான்றுகள் குறித்து அறிய முடிகிறது. ஜெயமோகன் எழுத்தைப் படித்தால் பிரசங்கி திரும்ப திரும்ப ஒன்றையே சொல்லி நாம் கேட்டால் ஏற்படும் சலிப்புதான் மிஞ்சுகிறது.ராஜதுரை வெற்றிகொண்டான் அல்ல, வாதிடும் வழக்கறிஞர்/ஆய்வாளர் என்றால் ஜெயமோகன் அலுப்புதரும் வகையில் பிரசங்கிக்கும் மூன்றாம்தர் பிரசங்கு.

காந்தி/காந்தியத்திற்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு ஜெயமோகன் முன் வைத்துள்ள சித்தரிப்புகள் எவ்வளவு போலியானவை என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட சிகாகோ பல்கலைப் பேராசிரியர் எழுதிய நூலிலிருந்து சானறாக சிலவற்றை என்னால் காட்ட முடியும். இதை அந்நூலின் உதவி இல்லாமலும் செய்யலாம்.இருப்பினும் காந்தி/காந்தியம் குறித்த அனைத்தையும் அறிந்தவராக,எழுதப்பட்டவற்றை மதிப்பிட தனக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் அவருக்கும் அத்தகைய சான்றினை காட்டினாலாவது அவர் எழுதியுள்ளதன் அபத்தம் உறைக்க சிறு வாய்ப்பாவது இருக்கிறது அதைச் சுட்டிக்காட்டுவது நான் என்பதை விட ஒரு அமெரிக்கப் பேராசிரியரின் கருத்துக்கள் என்பதால் அவர் அதை ஏற்கக்கூடும்.

சுருக்கமாகச் சொன்னால் ஜெயமோகன் ‘புது வரலாறு’ ‘படைக்க’முயல்கிறார். [அவர் எத்தனை ‘புது வரலாறுகளை’ படைப்பார்? . தன் இணையதளத்தில் யூத் இனப்படுகொலை குறித்து ’புது வரலாறு’,தமிழ் நாட்டில் ஸ்டாலினியத்திற்கு எதிராக எழுதியவர்களின் பெயர்களையும், பங்களிப்பையும் இருட்டடிப்பபு செய்துவிட்டு தன்னை முன்னிறுத்தி ’புது வரலாறு’ , 1979ல் ஈரானில் நடந்த புரட்சியை ஐரோப்பாவில் உள்ள அனைத்து முற்போக்குவாதிகளும் ஆதரித்தார்கள், அதை மக்கள் புரட்சி என்று கிட்டதட்ட 15 வருடங்கள் கொண்டாடினார்கள் என்று ’புது வரலாறு’ (தென்றலில் வெளினான பேட்டி ) .] இந்த ‘புது வரலாறு’ காந்திக்கும் நியாயமாக இல்லை, காங்கிரஸ் இயக்கத்திற்கும் நியாயமாக இல்லை. ஒருவர் காந்தி, காந்தியத்தை பற்றி எழுத முடியும், பிறரை மட்டம் தட்டாமல். காந்தியம் குறித்து கருத்து ரீதியாக எழுதலாம். ஜெயமோகன் எழுதியிருப்பது பிரச்சாரமாக, மூன்றாம் தர பிரச்சாரமாக, பொய்களையும், அரை உண்மைகளையும் கலந்து எழுதப்பட்டுள்ளது.

காந்தி/காந்தியம் என்று வரும் போது கூட ஜெயமோகனால் இத்தகைய கீழ்த்தரமான உத்திகளை தவிர்க்க முடிவதில்லை. இவை காந்தி/காந்தியத்திற்கு தேவையில்லை, காந்தி/காந்தியம் குறித்து எழுதுவதன் மூலம் தன்னை முன்னிறுத்த ஜெயமோகனுக்குத் தேவை. இவை இல்லாமலும் காந்தி/காந்தியத்தை முன்னிறுத்தி, ஆதரவாக வாதிடலாம். அதைச் செய்வதென்றால் முதலில் செய்ய வேண்டியது, காந்தி தன்னை விமர்சித்தவர்களை எப்படி நேர்மையாக எதிர்கொண்டாரோ அது போல் காந்தி/காந்தியம் குறித்த விமர்சனங்க்ளையும் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.அதற்கான உழைப்பு சாத்தியமில்லையென்றால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

காந்தி தன்னை சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என்று நினைக்கவில்லை. தன்னுடன் கடுமையாக கருத்து முரண்பாடு கொண்டவர்களையும் அவர் அணுகிய விதமும், காந்தியை விமர்சித்தவர்களை ஜெயமோகன் அணுகும் விதமும் முற்றிலும் மாறுப்பட்டவை.கோகலேயைக் குறித்த காந்தியின் கருத்துக்களும், அணுகுமுறையும், கோகலே குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டால் காந்தியை உயர்த்திச் சொல்வதற்காக ஜெயமோகன் பொய் எழுதியிருப்பதைப் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். கோகலேக்கும், காந்திக்கும் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போதே தொடர்பு இருந்தது. Servants of India Society என்ற அமைப்பின் மூலம் கோகலே பல பணிகளை ஆற்றினார். அதன் விதிகளின் படி அரசு விருதை மறுத்தார்.அவரது எளிமையும், நேர்மையும் குறித்து எவரும் குறை கூறியதில்லை.கோகலை காந்தி பெரிதும் மதித்தார்.காந்தி பல பகுதிகளுக்கும் சென்று இந்தியாவில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று ஆலோசனை சொன்னவர் கோகலே.
ஜெயமோகன் எழுதுகிறார்

”கோகலேயிடமும், திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை முன்னுதாரணமான எளிமை”

கோகலே என்ன ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவரா இல்லை பணத்தினை சம்பாதிக்க அறங்களை விட்டுவிடலாம் என்று இருந்தவரா. திலகருக்கும் அவரும் கருத்து வேறு பாடு உண்டு. கோகலே, திலகர் இருவரும் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக உழைத்தவர்கள். அப்போதைய பம்பாய் மாகாணத்தில் காங்கிரசை வலுப்படுத்த தங்கள் ஆற்றலை பயன்படுத்தியவர்கள். இருவரும் பெரும் வணிகர்களோ அல்லது தொழில் அதிபர்களோ அல்ல. அப்போதைய காங்கிரசில் மத்தியதர வகுப்பினைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் உழைப்பின்றி அன்று காங்கிரஸ் வளர்ந்திருக்க முடியாது. அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்ல. அரசின் அடக்குமுறையை சந்தித்தவர்கள், சொத்திழந்தவர்கள் என பலர் உண்டு. காந்தி காங்கிரசை வளர்க்க
அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அவர்கள்.ஏற்கனவே இருந்த அமைப்பினை காந்தி வளர்த்தெடுத்தார். கோகலே, திலகர் பற்றி எழுதியது தகவல் பிழை என்று சொல்லி ஜெயமோகன் சமாளிக்க முடியாது.ஏனெனில் காந்திக்கும் கோகலேக்கும் இருந்த உறவு பல ஆண்டு நீடித்த ஒன்று.கோகலே மறையும் வரை அது நீடித்தது.மிதவாதியான கோகலே கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.காந்தியின் எளிமையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் எதற்கு பிறர் குறித்து இல்லாததையும், பொல்லாதைதையும் எழுத வேண்டும்.

காந்தியைப் பற்றி எழுதும் ஜெயமோகன் உதிர்த்துள்ள இன்னொரு மாபெரும் ’உண்மை’
“இன்று வரை நம்மைச் சூழ உள்ள நாடுகளில் ஜனநாயகம் இல்லை ஏன்? சாமன்யர்களை ஆட்சியாலார்களாக ஏற்க அங்குள்ள அங்குள்ள மக்களின் மனம் ஒப்பவில்லை” (sic).

ராமச்சந்திர குகா காந்தியின் சமகாலத்தவர்களை சித்தரிக்கும் விதம், அவர்களுக்கும் காந்திக்கும் இருந்த முரண்பாடுகளை அணுகி விவாதிக்கும் விதத்திற்கும், ஜெயமோகன் எழுதுவதற்கும் உள்ளவேறுபாடு(கள்) முக்கியமானவை. உதாரணமாக குகாவின் எழுத்தில் தாகூர் காந்தியை விமர்சித்தத்ற்கான காரணம் குறிப்பிடப்படுகிறது, காந்தி அதை அணுகியவிதமும் சொல்லப்படுகிறது. குகா இரு தரப்பு வாதத்தினையும் நமக்கு சொல்கிறார். ஜெயமோகன் எழுத்தில் அப்படி இல்லை,உதாரணமாக வளர்ச்சி குறித்த சர்ச்சையில் நேரு தரப்பு வாதங்கள் விவரிக்கப்படுவதில்லை. ஒரு தரப்பு பகத்சிங்கை உயர்த்திப் பிடிக்க காந்தியை கேவலமாக சித்தரிக்கிறது. அதை விமர்சிக்கும் ஜெயமோகன் காந்தியை உயர்த்திப் பிடிக்க சிலரை மோசமாக சித்தரிக்கிறார்.

அவர் எழுதுகிறார்
’நேருவுக்கு எதிராக எழுந்த வைசியர்-சூத்திரர் தலைவரான சுபாஷ் சந்திர போஸ¤க்கு எதிராக காந்தியுடன் நின்றவர் முக்கியமான வைசிய -சூத்திரதலைவரான வல்லபாய் படேல்’

காந்திய தேசியம் – 6

இதற்கு என்ன சான்று. அன்று காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் பிறந்த சாதி ரீதியாகத்தான் தங்களுக்கான ஆதரவை திரட்டியிருந்தார்களா அல்லது காங்கிரஸ் நிலவிய பிரிவுகளுக்கிடையேயான அரசியல் சாதி ரீதியாகத்தான் இருந்ததா?. போஸ் தன்னை தான் இந்த சாதி/சாதிகளின் தலைவர் என்று அறிவித்தாரா இல்லை அப்படித்தான் அரசியல் நடத்தினாரா?. மேலும் காந்தி தன் உண்ணாவிரதம் கட்சியில் இருந்த இந்த சாதியினருக்கு எதிராக என்று அறிவித்து நடத்தினாரா?. படேலையும் இந்த சாதிய அரசியல் குத்தி எழுதும் ஜெயமோகன் தான் எழுதியதற்கு சான்றுகளை ஜெயமோகன் தருவாரா இல்லை அவை தன் ஊகம் என்று நழுவுவாரா. வாய்ப்புக் கிடைத்தால் காங்கிரஸின் வரலாற்றையே ஜெயமோகன மாற்றி எழுதிவிடுவார். நேருவையும், சுபாஷ் சந்திர போஸ் குறித்தே இப்படி எழுதும் இவர் பெரியாரின் கருத்தினை திரித்து எழுதுவதில் வியக்க ஒன்றுமில்லை. அன்று நடந்த தேர்தலில் போசுக்கு அதிக ஒட்டுக்கள் கிடைத்தனவே, அதன் பொருள் அன்று வாக்களித்தவர்கள் சாதிரீதியாக பிரிந்து வாக்க்களித்தார்களா?.

காந்தி/காந்தியம் குறித்து இப்படி அவர் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக கொண்டு வந்தாலும் அதை அனைவரும் ஏற்பார்கள் என்றில்லை. ஏனென்றால் அவர் தரப்பிற்கு மறுப்பினை வைப்பவர்கள் தரப்பிலும் வலுவான ஆதாரங்களை தர முடியும். இன்று காந்தி,காந்தியம், காந்தி-அம்பேத்கர் குறித்து ஏராளமான நூல்கள்,கட்டுரைகள் உள்ளன. காந்தி-அம்பேத்கர் குறித்து ஜெயமோகன் குஹா,டி.ஆர்.நாகராஜ் எழுதியதை முன்னிறுத்தினால் அதற்கு மறுப்பாக எழுத அம்பேத்கரின் எழுத்துக்கள் உட்பட பல உள்ளன. காந்தியை நேர்மறையாகப் கருதுபவர்கள் கூட அவரின் கருத்துகள்/அணுகுமுறைகள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அகிம்சை என்பதை அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக பயன்படுத்த முடியுமா, காந்தி யூதர்களுக்கு சொன்ன அறிவுரைகள் பொருத்தமானவையா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே காந்தியத்தை நேர்மறையாகப் பார்பவர்களும் அதன் போதாமைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெயமோகனிடம் இந்த அணுகுமுறை இல்லை.

காந்தி/காந்தியத்தைப் பற்றி எழுதி ஜெயமோகன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியாகவே இந்தக் கட்டுரைகளை நான் கருதுகிறேன்.
(அடுத்த பக்கத்தில் தொடர்கிறது)

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


II
மீள்வாசிப்புகள், மீள் கண்டுபிடிப்புகள்

காந்தி உயிருடன் இருந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், பலரால் வெகுவாக பாராட்டப்பட்டார்.மறைவிற்குப் பின் அவரது கருத்துகள் தொடர்ந்து ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டுவருகின்றன. மீள் வாசிப்புகள்/மீள் கண்டுபிடிப்புகள் என்று கூறப்படுபவதற்றை இதன் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.அதாவது காந்தி சில பத்தாண்டுகள் மறக்கப்பட்டு, யாராலும் பேசப்பாடாமல், பின் சிலரால, குறிப்பாக சில வெள்ளைக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டார் என்ற நிலை இல்லை. 1948க்குப் பின் காந்தி/காந்தியம் பற்றி தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளது.

இன்னும் சொல்வதென்றால் இந்த வாசிப்புகளை எப்படி புரிந்து கொள்வது என்பதையும் ஆராய வேண்டும்.காந்தியை ஒருவர் பின் நவீனத்துவ நோக்கில் இன்று அணுகினால் நாளை வேறொருவர் வேறொரு கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது தத்துவ பிண்ணயில் அணுகலாம்.காந்தி ஒரு பின் நவீனத்துவர் இன்று எழுதப்பட்டால் நாளை காந்தி மீது வேறொரு முத்திரை நாளை குத்தப்படலாம்.

என்னைப் பொருத்தவரை இந்த முத்திரைகள் முக்கியமன்று, என்ன கூறப்படுகிறது, அது எந்த அளவு சரி/ஏற்கக்கூடியது என்பதே முக்கியம்.ஆகவே இன்று ஒருவர் காந்தி ஒரு பின் நவீனத்துவவாதி என்று எழுதினால், அதற்காவே,அதாவது பின் நவீனத்துவாதி காந்தி என்பதற்காகவே அல்லது அதை எழுதியவர் அமெரிக்கர் என்பதற்காக awesome என்று கூறி வியக்கமாட்டேன். ஏனென்றால் அந்த முத்திரை குத்தாமல் காந்தியின் சிந்தனைகளையும், பின் நவீனத்துவ சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவரின் கருத்துக்களையும் சில வாக்கியங்களில் ஒப்பிட்டு எழுதி படிக்கிறவர்களின் சிந்தனையை தூண்டும் கட்டுரையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாசித்துள்ளேன். ஜெயமோகன் தன்னுடைய கட்டுரைகளில் POSTMODERN GANDHI AND OTHER ESSAYS — Gandhi in the World and at Home: Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph; Oxford University Press, என்ற நூலினை குறிப்பிடுகிறார். ஜோதிர்மய சர்மா எழுதியுள்ள அதற்கு எழுதியுள்ள மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.
The volume rests, therefore, on a double burden, namely, postmodernism as a desirable way of understanding the world, and establishing Gandhi as a prime postmodernist. The evidence for the latter comes in the form of reading Hind Swaraj as an anti-modern text, an exchange of letters between Gandhi and Nehru in 1945 regarding economic issues, and the idea that Gandhi subverted the `ritual order of upper caste Hinduism’. While there is little by way of fresh insights into the reading of Hind Swaraj itself, the assumptions inherent in the essay are problematic.
Gandhi as postmodern thinker -JYOTIRMAYA SHARMA-The Hindu-Tuesday, Jul 04, 2006

ஜோதிர்மயி சர்மா மட்டுமே இத்தகைய கேள்விகளை எழுப்புகிறார் என்றில்லை.காந்தியின் சிந்தனைகளில் பின் நவீனத்துவ கூறுகளைக் காண்பதற்கும், காந்தியை பின் நவீனத்துவர் என்பதற்கும் உள்ள வேறுபாடு முக்கியம்.2006ல் வெளியான நூலை 2009ல் ஜெயமோகன் அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கலாம் ,ஆனால் 2006ல் வெளியான நூல் அப்போதே கவனம் பெற்று விவாதிக்கப்பட்டது. பலர் அதைப் பற்றி எழுதியுள்ளனர்.

ஜெயமோகன் இந்த விவாதங்களையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை.இத்தகைய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன, நான் இதில் இதை அதாவது காந்தி பின் நவீனத்துவர் என்பதை இன்ன காரணங்களுக்காக ஏற்கிறேன் என்று விரிவாக தன் தரப்பினை எழுதவில்லை .மாறாக அமெரிக்க பேராசிரியர்கள் சொல்கிறார்கள் என்ற அளவில் எழுதுகிறார். காந்தியை பின் நவீனத்துவர் என்று சுட்டும் போதும், காந்தியின் சிந்தனைகளை பின் நவீனத்துவ சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது பல கேள்விகள் எழும். அத்தகைய ஆய்வுக் கேள்விகள் எதுவும் அவரிடம் இருப்பது போல் தெரியவில்லை.

காந்தியத்தைக் கேள்விக்குட்படுத்தவும் பின் நவீனத்துவத சிந்தனைகளைப் பயன்படுத்தலாம். நவீனத்துவம் குறித்த பின் நவீனத்துவ விமர்சனங்களை காந்தியின் சிந்தனைகளுடன் ஒப்பிடலாம்.பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்டு காந்தியின் கருத்துக்களையும் விமர்சிக்க முடியும்.

மீள் கண்டுபிடிப்புகள்/மீள் வாசிப்புகள் என்று அழைக்கப்படுவற்றில் கூட யார் எதை எப்போது எழுதினார்(கள்), அதன்/அவற்றின் தாக்கம்/முக்கியத்துவம் என்ன என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். படிக்கின்ற நூல்கள்/கட்டுரைகளின் அடிப்படையில் இன்று இந்தக் கருத்து புதிது ஆகவே சரியானது, நாளை அந்த கருத்து புதிது ஆகவே அதுவே சரியானது என்று தாவிக் கொண்டிருப்பது எனது அணுகுமுறையல்ல.காந்தி/காந்தியதிற்கும் இந்த மீள் கண்டுபிடிப்புகள்/மீள் வாசிப்புகளுக்கும் எனது அணுகுமுறை இதுதான்.

சுந்தர ராமசாமிக்கும், தனக்கும் காந்தி குறித்து இருந்த கருத்துக்களை, நடந்த விவாதங்களை ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் படித்தவற்றில் உள்ளவற்றை, பிறர் கூறுவதை எப்படி அணுகுவது, பலவேறு கருத்துகள் காந்தி/காந்தியம் குறித்து முன் வைக்கப்படும் போது அவற்றை எப்படி புரிந்து கொள்வது, அதிலிருந்து ஒரு கண்ணோட்டத்தினை உருவாக்கிக் கொள்வது என்பது குறித்த ஆய்வு முறையை இருவரும் கைக் கொண்டது போல் தெரியவில்லை. உதாரணமாகச் சொல்வதென்றால் ஒருவர் காந்தி கூறிய கருத்தின் அடிப்படையில் ஒர் ஆய்வினை மேற்கொண்டு சிலவற்றை எழுதுகிறார். அதற்கு மறுப்பும், விமர்சனமும் வருகிறது. அவர் கூறுவதையும், விமர்சனத்தையும் படித்து அதிலிருந்து எப்படி ஒரு புரிதலைப் பெறுவது என்பதை இருவரும் யோசித்தது போல் தெரியவில்லை. அத்தகைய விமர்சனம் இருப்பது என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு தரப்பு கருத்தினைக் கொண்டே சில முடிபுகளுக்கு இருவரும் வந்தனர் என்று யூகிக்க இடமுண்டு.

ஜோதிர்மய சர்மா கூறுகிறார்
Gandhi becomes all things to all people. His interpreters have seen him variously as a traditionalist, modernist, feminist, socialist, communist, environmentalist, and so on.

காந்தியைப் பற்றிய இந்தக் கட்டுரை வேறொரு கோணத்தில் காந்தி, நவீனத்துவம்,பின் நவீனத்துவம் குறித்த கேள்விகளை அணுகுகிறது.(3). இப்படி பல பார்வைகள் இருக்கும் போது
அவற்றை மதிப்பிட்டு எதை, எந்த அளவு ஏற்க முடியும்/முடியாது என்று எப்படி தீர்மானிப்பது? constructive post-modernsim vs.deconstructive post-modernism
என்ற பாகுபாடு கொண்டு காந்தியை வேறொரு கோணத்தில் அணுக முடியுமா?. இப்படி கேள்விகள் எழுகின்றன. ஜெயமோகனின் கட்டுரைகளில் அத்தகைய கேள்விகளே இல்லை. ஏனெனில் அவரால் ஆய்வு பூர்வமாக காந்தி குறித்த மதிப்பீடுகளை,ஆய்வுகளை அணுகமுடிவதில்லை.நாளை காந்தி நவீனத்துவர்தான், அவர் பின் நவீனத்துவர் அல்ல, பின் நவீனத்துவ amorality காந்தியத்திற்கு எதிரானது என்று அமெரிக்கா/ஐரோப்பாவில் இருவர் எழுதினால் ஆமாம் அதிலிலும் இருக்குது நியாயம், காந்தி பின் நவீனத்துவர் என்பதை விட நவீனத்துவர் என்பதே சரி என்றே இன்று அறிஞர்கள் கூறுகிறார்கள் என்று அவர் எழுதக்கூடும்.அதற்கு அடுத்த நாள் காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட் என்று ஐரோப்பாவிலிருந்தோ அல்லது அமெரிக்கவிலிருந்தோ யாரவது எழுதி ஒரு நூல் வந்தால் ஆமாம் காந்தி ஒரு மாபெரும் காஸ்மோபோலிடனிஸ்ட் என்று நமக்கு அவர் அறிவிக்கக் கூடும்.

III

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு

பல சமயங்களில் காந்தி எழுதியவை அப்போது எழுந்த கேள்விகள் ,சர்ச்சைகளுக்கான பதில்கள் அல்லது நடைமுறையில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். மேலும் அவரது முக்கியமான நூலான ஹிந்த் ஸ்வராஜ் சிலவற்றை முன் வைத்தாலும், கோட்பாடு ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக அதையெல்லாம் வளர்த்தெடுத்து பின்னர விரிவாக அவர் எழுதவில்லை. காந்தியம் என்றால் என்ன- அது கருத்தியலா, வாழ் நெறியா, இரண்டும் கலந்த, ஒன்றொடு ஒன்று முரண்படாகக்கூடாத ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. பாலி(யஸ்டர்)கதர் கதரா என்பதிலிருந்து அகிம்சை இயக்கம் என்பதை எப்படி வரையரை செய்வது என்று பல கேள்விகள் இருக்கின்றன.

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்று 2009ல் எழுதலாம், யாராவது 1979ல் எழுதியிருக்கக் கூடும், யாராவது 2020ல் எழுதக்கூடும்.பொருத்தப்பாடு என்று பார்த்தால் எதனுடன், எந்த விதத்தில், எப்படி என்று துவங்கி பலவற்றைப் பேச வேண்டும். காந்தி/காந்தியம் எந்த அளவிற்கு 1948ல் தேவைப்பட்டாரோ அதை விட அதிகமாகவே அன்று அம்பேத்கரும்,நேருவும் தேவைப்பட்டனர் .புதிதாக சுதந்திரமடைந்த ஒரு தேசத்திற்கு அவர்கள் இருவரும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இந்தியா என்கிற குடியரசை உருவாக்கியதில் அவர்கள் வகித்த பங்கு மகத்தானது.அதற்கு அதாவது ஒரு குடியரசை உருவாக்க, அரசியல் சட்டத்தினை உருவாக்க காந்தியம் மட்டும் போதாது.1948ல் காந்தியும் தேவைப்பட்டார், காந்தி/காந்தியம் மட்டுமே போதும் என்ற நிலை இருக்கவில்லை.

இன்றைய உலகில் காந்தியம் தேவை அல்லது காந்தியத்தின் பொருத்தப்பாடு என்று பேசும் போது காந்திக்குப் பின் காந்தியம் குறித்த புரிதல்கள்/சிந்தனைகளையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். சமயம் காந்தியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதில் கிடைத்த அனுபவங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஷுமாக்கர் இடை நிலை தொழில் நுட்பம் (intermediate technology) என்பதை முன்வைத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில் கிடைத்த படிப்பினைகளையும் விவாதிக்க வேண்டும்.

காந்தி vs அம்பேத்கர், காந்தி vs நேரு,காந்தியம் vs நவீனத்துவம் என்று வெறும் எதிர்-எதிராக பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. நேருவின் சில கோட்பாடுகள் 1960களில் தேவையாக இருந்திருக்கலாம், இன்று அவை தேவையற்றவை என்று கருத இடமுண்டு. இதே போல் 1947ல் அம்பேத்கர் முன் வைத்த சில யோசனைகள் (உ-ம் அரசு அனைத்து விவசாய நிலங்களையும் கையக்கப்படுத்தல், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயிரிடுவோராக அரசு அதை குத்தகைக்கு விடுவது) அன்றைக்கும் சரியான தீர்வுகள்தனா என்ற கேள்வி எழுகிறது.இன்றைக்கு அம்பேத்கரியத்தை ஆதரிப்பவர்கள் இதையெல்லாம் முழுமையாக ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். அது போல் காந்தியின் சிந்தனைகளை மதிப்பவர்கள் இன்றைக்கு காந்தியம் என்ற பெயரில் முன் வைக்கப்படுவது எதுவானாலும் அதை முழுமையாக ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.ஏனெனில் அன்று பொருத்தமானதாகத் தோன்றியவை இன்று அர்த்தமற்றவை என்று கருதப்படலாம். ஆனால் ஹிந்த் ஸ்வராஜ் அத்தகைய நூல் அல்ல. அதை காந்திய சிந்தனையின் ஆணி வேர் எனலாம். இருப்பினும் அதையும் விமர்சனபூர்வமாகவே அணுக வேண்டும்.

நீ காண விரும்பிய மாற்றமாக நீ இரு என்று சொன்னவர் அவர். காந்தியம் என்பதை கோட்பாடாக கருதி பக்கம் பக்கமாக எழுதலாம். அதை நடைமுறைப்படுத்துவதில், நம் தனிப்பட்ட வாழ்வில், பொது வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள சவால்கள் அதிகம். பிறர் தேவைகளுக்காக உன் ஆசைகளை குறைத்துக் கொள் என்று சொல்லப்படும் போது யாருடையது தேவை, யாருடையது ஆசை என்று எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வி வருகிறது. உதாரணமாக எனக்கு ஒவியங்கள், ஒவியக்கலை மீது விருப்பம் அதிகம். ஒவியங்களை வாங்க,சேகரிக்க, அதை என் வீட்டில் வைத்து பார்த்து ரசிக்க எனக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக சமரசங்கள் செய்து கொண்டாவது சிலவற்றை செய்வேன் அதன் மூலம் பணம் சம்பாதிப்பேன் என்று ஒருவர் சொன்னால் அதற்கு, காந்தியவாதி, அதை ஏன் தனிச்சொத்தாக உன் வீட்டில் வைத்து பார்க்க என்று சொல்கிறாய், ஒரு பொதுச்சொத்தாக ஒரு ஒவிய் கண்காட்சியகம் அமைக்க பிறருடன் சேர்ந்து நீ பணம் திரட்டலாமே, அதற்காக உழைக்கலாமே அதுவே சரியான காந்திய அணுகு முறை என்று கூறக் கூடும். ஒவியம் என்பதற்கு பதிலாக ஆய்விற்கான நூல்களை திரட்டுவது, உலகை, மக்களைப் புரிந்து கொள்ள பயணங்கள் மேற்கொள்வது என்று வேறு சிலவற்றை முன்னிறுத்தினால் கிட்டதட்ட அதையொத்த பதில்கள் கிடைக்கலாம்.ஏன் ஒரு பொது நூலகம் நிறுவ பிறருடன் சேர்ந்து உழைக்கக்கூடாது, பயணம் மேற்கொள்ளவதையும் சிக்கனமாக செய்ய முடியுமே, அந்த அளவு பணம் சேர்த்தால் போதுமே என்றெல்லாம் பதில் வரலாம்.விரிந்தொடும் கங்கையில் குளிக்கும் போது எனக்குத் தேவை அல்லது இதில் எனக்கு உரியது இத்தனை சொம்பு நீர்தான்,அதைக் கொண்டே நீராடுவேன் என்றவர் காந்தி. வாழ்வில் சொல்லிற்கும், செயலிற்குமான இடைவெளியை தன்னால் இயன்ற அளவு குறைக்க முயன்றவர் அவர்.

எனவே காந்தியத்தை வெறும் தத்துவமாக குறைப்பது எளிது. அதை செயல்முறை (praxis) ஆக மாற்றி அதில் தொடர்ந்து முயல்வது, தன் வாழ்வையே அதற்கான சாதகமாக, பரிசோதனையாகக் கொள்வது எளிதன்று.ஆசைகளை சுருக்கி, தேவைகளையும் குறைத்துக் கொள்வதும் கடினம்; அதெல்லாம் தேவையில்லை, காந்தியத்தை பற்றி பேசினால், எழுதினால் போதும் என்றும் சிலர் கருதலாம் .அது அவர்கள் தெரிவு. காந்தி ஒன்றை சொல்லியிருக்கிறார். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“I will give you a talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test. Recall the face of the poorest and the weakest man [woman] whom you may have seen, and ask yourself, if the step you contemplate is going to be of any use to him [her]. Will he [she] gain anything by it? Will it restore him [her] to a control over his [her] own life and destiny? In other words, will it lead to swaraj [freedom] for the hungry and spiritually starving millions?
Then you will find your doubts and your self melt away.”

http://www.mkgandhi.org/gquots1.htm

ஆயிரம் பக்கங்கள் காந்தி/காந்தியம் குறித்து எழுதுவதை விட இதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் கடினம்.என்னைப் பொருத்தவரை காந்தியம், காந்தி முன்வைத்த சில கோட்பாடுகள்/கருத்துக்கள் சிலவற்றிற்கு பொருந்தும், சிலவற்றில் முடிவு செய்ய அல்லது மதிப்பீடு செய்ய அவை உதவும். அவை எங்கெல்லாம் உதவும், எப்படியெல்லாம் பயன்படும் என்பதில் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த முயலலாம்.உதாரணமாக ஒரு தொழில் நுட்பத்தினை மதிப்பிடுவதில் காந்தியம் உதவக்கூடும், அதை மதிப்பிட அது ஒன்றே ஒரே அளவுகோல் என்று இல்லாத போதும் கூட.சில போராட்டங்களுக்கு அகிம்சை வழி,சத்தியாக்கிரகம் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.அதை அனைத்து சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்குமான பொதுவான விதியாக நான் கருத மாட்டேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சே காந்தியாக மாறாதது அவர் தவறு, காந்தியத்தைக் கடைப்பிடித்திருந்தால் அப்படி செத்திருக்க மாட்டார் என்று எழுதமாட்டேன், சே, கிராம்சியை அல்லது காந்தியை நூறு முறை படிக்க் வேண்டும் என்று ‘தண்டனை’ விதிக்க மாட்டேன்.

இவான் இலிச் உடலில் கட்டி ஏற்பட்ட போது நவீன மருத்துவ முறை சிகிச்சையை நாடவில்லை. வலியைப் பொறுத்துக் கொண்டார். அநவீன மருத்துவ சிகிச்சை முறையை நாடினார். பாரம்பரிய மருத்துவர் ஒருவர் கட்டிக்குத் தேவையான சிசிச்சை பாரம்பரிய மருத்துவத்தில் இல்லை அல்லது அது போதுமானதாக/பொருத்தமானதாக இல்லை என்று கருதி நவீன மருத்துவ சிகிச்சையை நாடக் கூடும். நவீன மருத்துவ முறை குறித்த இலிச்சின் விமர்சனங்களிலிருந்து சிலவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும், அவற்றின் போதாமைகள், வரையரைகள் குறித்த புரிதலுடன். ஆனால் இலிச் எழுதியதன் அடிப்படையில் அல்லது அதற்கு ஒத்திசைவாக ஒரு நாட்டின் மருத்துவக் கொள்கையை, மருத்துவ ஆராய்ச்சிக்கான கொள்கையை உருவாக்க முடியாது.அந்த முயற்சியில் இலிச்சின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளலாம். இலக்கிற்கும் அதை அடைய உதவும் முறைகளுக்கும் உள்ள் உறவை,அதில் உள்ள அறம் சார் கேள்விகளை கருத்தில் கொள் என்று காந்தியம் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதுதான். அனைத்து அறம்சார் கேள்விகளுக்கும் காந்தியம் மூலம் தீர்வு காண முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

பாரம்பரிய வேளாண் முறைகளும் தேவை, உயிரியல் தொழில் நுட்பமும் தேவை என்று சிலர் கருதலாம். சிலர் பாரம்பரிய வேளாண்மையும், வேளாண்மையில் உயிரியியல் தொழில் நுட்பமும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவை என்று கருதலாம். சிலர் பாரம்பரிய /இயற்கை வேளாண்மை மட்டும் போதும் என்று கருதலாம். சிலர் உயிரியல் தொழில் நுட்பத்தை பொருத்தமான தொழில்னுட்பமாக (appropriate technology) மாற்ற முடியும் அல்லது அது அத்தகைய தொழில் நுட்பம் என்று கருதலாம். காந்தியம்/காந்தியக் கண்ணோட்டம் என்ற பெயரில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மை மட்டும் போதும், நவீன அறிவியல் தொழில் நுட்பத்திற்கு வேளாண்மையில் இடமிருக்க வேண்டியதில்லை என்பது ஒரு கண்ணோட்டம்.உயிரியல் தொழில்னுட்பத்தையும் தேவையான போது தேவையான வகையில் மட்டும் பயன்படுத்தலாம், அது காந்தியத்திற்கு இசைவானது என்று இன்னொரு கண்ணோட்டம் இருந்தால் இவற்றைஎப்படி காந்திய ரீதியாக மதிப்பிடுவது?. காந்திய விழுமியங்களின் அடிப்படையில் தொழில் நுட்பங்களை மதிப்பிடுவது எப்படி?. காந்திய அணுகுமுறையில் நவீன அறிவியல்- தொழில் நுட்பத்தினை எப்படி மதிப்பிடுவது?.

இவற்றிற்கு விடை காண்பதுதான் சவால். காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை இவற்றின் மூலம் பரிசோதிக்க முடியும் என்றால் எப்படி முடியும் என்று பார்க்க வேண்டும். இதை விடுத்து நவீன அறிவியல் தொழில் நுட்பம் காந்தியத்திற்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டையடியாக எழுதுவது எளிது. அது காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை அறிய உதவாது. ஏனெனில் அங்கு விவாதமே எழ வாய்ப்பில்லை. நிராகரிப்பது எளிது, அதுவும் கோட்பாட்டு ரீதியாக. நடைமுறையில் ?.

காந்தியம், நவீன விஞ்ஞானம்,தொழில் நுட்பம் குறித்து ஜெயமோகன் எழுதியவை அவர் ஏற்கனவே எழுதியவற்றின் மறு சுழற்சி செய்யப்பட்டவைகளாக உள்ளன.சில பெயர்கள்,சராம்சவாதம் போன்றவைகளைக் கொண்டு ஒரே கருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார். அவருக்கு இதில் தெளிவான புரிதல் இல்லை. தன் எழுத்தில் உள்ள முரண்பாடு கூடப் புரிவதில்லை.

காந்தியம் குறித்தும் சொல்லும் போது ஒரு கோட்பாடாக சிலவற்றை சொல்லலாம்,சில விழுமியங்களை முன் வைக்கலாம், நடைமுறை என்று வரும் போதோ அல்லது ஒரு கொள்கையை வகுப்பது என்று வரும் போதோ எழும் கேள்விகள், சவால்கள் வேறு.ஒற்றைத் தீர்வும், ஒற்றைக் கண்ணோட்டமும் பல சமயங்களில் சரியான தீர்வுகளை காண வழி வகுக்காது. சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்கு, இன்றைய உலகின் முன் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காந்தியம் அல்லது மட்டுமே போதும் என்று சொல்ல முடியாது.

காந்தியம்/காந்தியர்கள் முன்னிறுத்தும் இடைநிலைதொழில் நுட்பம் எங்கு பொருந்தும், எப்படிப் பொருந்தும் என்பதை விவாதிக்க வேண்டும். இடை நிலை தொழில் நுட்பம் என்று வரும் போது இடை நிலை என்று எதைக் குறிக்கிறோம்,எதை இடை நிலை என்று எப்படி எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறோம் என்று விவாதிப்பது தவிர்க்க இயலாதது. இடைநிலைத் தொழில் நுட்பத்தினை உருவாக்க இடை நிலை தொழில் நுட்பம்,எளிமையான கைத் தொழில்கள் மட்டுமே போதுமா என்ற் கேள்வியும் எழுகிறது. அன்று காந்தி கதரை முன் வைத்தார்.

இன்று கதர் வேறொரு பரிமாணத்தினை எட்டியுள்ளது. அதை எப்படி அணுகுவது. கதர் உடை/ஆடைகள் பாஷன் ஷோக்களில் இடம் பெறுவதை எப்படி மதிப்பிடுவது. கதரை சர்வதேச பாஷன் சந்தையில் வெற்றிகரமாக புகுத்தி, கதர் ஆடைகளுக்கான உலக சந்தையை வளர்த்து அதன் மூலம் இந்தியாவில் இத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிட்டால், காந்திய கண்ணோட்டத்தில் அதை எப்படி மதிப்பிடுவது. கதரை உலகம் ஏற்பதும், உலக சந்தையில் கதர் துணிகள்/ஆடைகள் பல லட்சக்கணக்கில் விற்கப்பட்டால் அதை காந்தியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று கொள்ள முடியுமா. அல்லது வேலை வாய்ப்பினை பெருக்க, கைத்தொழில்களை ஊக்குவிக்க இதையெல்லாம் செய்வதுதான் சரியான காந்திய அணுகுமுறை என்று கூற் முடியுமா. காந்தி முன் வைத்த சுதேசி/ஸ்வதேசி என்பதன் பொருள் என்ன?. அனைத்து உள் நாட்டுத் தயாரிப்புகளையும் சுதேசி(ய)ப் பொருட்கள் என்று அழைக்க முடியுமா?. கூட்டுறவு இயக்கம் என்பது காந்தியத்திற்கு ஏற்புடைய ஒன்று. கூட்டுறவு அமைப்பு என்பது பெரிய தொழிற்குழுமம் போல் செயல்படுவதும், தேசிய சந்தைக்கு பொருட்களை உற்பத்தி செய்வதும், சந்தைப்படுத்தி விற்க விளம்பரம் செய்வதும், மக்களின் ஆசைகளை நிறைவேற்ற புதிய பொருட்களை அறிமுகம் செய்வதும் காந்தியின் கருத்துக்களுக்கு ஏற்புடையதா?.

பொருத்தப்பாடு என்று வரும் போது அவர் கிராம சுயராஜ்யம் குறித்து எழுதியவை, கல்வி குறித்து எழுதியவை, கிராமத் தொழில்கள் குறித்து எழுதியவை, அதிகாரப் பகிர்வு என அனைத்தையும் பேச வேண்டும். காந்தி முன் வைத்த ராமராஜ்யம் என்ற கனவுலகம் உண்மையிலேயே சாத்தியமா, அது விரும்பத்தக்கதா என்பதையும் ஆராய வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு என்று வரும் போது காந்திய சிந்தனை பிரம்மாச்சாரியம் அல்லது உடல் உறவை ம/கட்டுப்படுத்தல் என்பதையே ஒரு விரும்பதக்க தீர்வாக முன் வைக்கும் என்றால் நடைமுறையில் இது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது. காந்திக்கும், மார்கரெட் சாங்கருக்குமிடையே நடந்த உரையாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுபடுத்த கருத்தடை மாத்திரைகள், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கல்,தேவையான தொழில் நுட்பங்களை கிடைக்கச் செய்தல்,குறைவான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஊக்குவித்தல் என பலவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.அதுதான் காரியவாத அணுகுமுறையாக இருக்க முடியும்.காந்தியம் இதில் எந்த அளவு உதவும்?. இன்றும் காந்திய அணுகுமுறை இதில் காந்தி அன்று சொன்னதுடன் நின்றுவிடுமா அல்லது அதன் போதாமையைப் புரிந்து கொண்டு வேறு சிலவற்றை முன்னிறுத்துமா?. அல்லது இன்றைய இந்தியாவில் மக்கள் தொகை பெரிய பிரச்சினை, அதைக் கட்டுப்படுத்த காந்தி சொன்னது மட்டும் தீர்வல்ல என்பதால் அரசு புதிய முறைகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் அவை திணிக்கப்படக் கூடாது, பெண்களின் உடல்நலத்திற்கு கேடாகக் கூடாது என்று கருதுமா. இதில் பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்தும் சிலவற்றைக் கூற முடியும், காந்தியின் நிலைப்பாட்டினை பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து விமர்சிக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் பிரச்சினை என்பதாகக் கொண்டு முன்னிறுத்தப்படும் தீர்வுகள், அறிமுகப்படுத்தப்படும் சாதனங்கள்/முறைகள் குறித்து பெண்ணிய விமர்சனமும் வைக்க முடியும். நானும் அப்படி விமர்சித்திருக்கிறேன். மேலு, இதையெல்லாம் நான் வேறொரு கோணத்திலிருந்தும் அணுகுவேன். அங்கு பின் நவீனத்துவ சிந்தனை உதவும்.

இளம் பெண்களை கவர ஆண்களுக்கு காந்தியம் எப்படி உதவும் என்று ஒருவர் எழுதினால் அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கான சான்றாக கொள்ள முடியுமா?. காந்தி இலக்குகள், அவற்றை அடையும் வழிமுறைகள், இதில் உள்ள அறம் சார் பிரச்சினைகள் குறித்து விவாதித்தவர்.சரியான இலக்கு என்றால் அதை அடைய எந்த வழிமுறையையும் மேற்கொள்ளலாம் என்று வாதிட்டவர் அல்ல.

சந்தைப்படுத்தலுக்கு உதவும் காந்தியம், நிர்வாக மேலாண்மைக்கு உதவும் காந்தியம் அல்லது காந்தியத்தைப் பயன்படுத்தி நுகர்வோரை பொருட்களை வாங்கச் செய்வது எப்படி என்றெல்லாம் எழுதப்பட்டால் ஆஹா, காந்தியத்தை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமென்றால் அதன் பொருத்தபாடு எத்தகையது என்று காந்தியத்தை அரைகுரையாக புரிந்து கொண்டவர் வியக்கலாம், அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கு சான்றாக எழுதலாம்.மாறாக இலக்கு, வழிமுறைகள் குறித்த காந்திய அணுகுமுறையை அறிந்தவர்கள் அப்படி வியக்க மாட்டார்கள்.அவர்கள் காந்தியத்தினை வெறும் கருவியாக அல்லது இன்னொரு யுக்தியாக பயன்படுத்துவத்தை கேள்விக்குட்படுத்துவார்கள்.நவீன நிர்வாக முறைகள்,ஆசைகளின் பெருக்கம், தொழிலுற்பத்தி போன்றவை தொடர்பற்றவை என்று கருத மாட்டார்கள். மாறாக நவீன பொருளாதரம், நவீன உற்பத்தி,நிர்வாக முறைகள் நுகர்வினை விரிவுபடுத்தவும், மூலவளங்களை சுரண்டவும், தேவைகளை விட ஆசைகள்க்கு முன்னுரிமை கொடுத்து, சந்தை மூலம் சமூக மதிப்பீடுகளில் பொருளாசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே விழைகின்றன என்று விமர்சிப்பார்கள். ஜெயமோகனிடம் இந்தப் புரிதல் அறவே இல்லை. இந்தப் புரிதலுடன் இந்தியர் அல்லோதாரால் எழுதப்பட்ட நூல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை போலும்.

காந்தியத்தின் போதாமைகள், பலவீனங்களையும் நாம் பேசியாக வேண்டும். ஹிந்த் ஸ்வராஜ் என்ற நூல் காந்திக்கு ஒரு லட்சிய நூலாக இருந்திருக்கலாம். ஒரு சமூகத்திற்கு/தேசத்திற்கு வழிகாட்ட அது பயன்படாது. அதன் அடிப்படையில் ஒரு சமூகம் உருவானால், காந்தியைக் குறித்து எழுதிய ஒருவரின் வார்த்தைகளை ப்யன்படுத்திச் சொன்னால் அது தார்மீக சிறையாக இருக்கும்.

யார் விமர்சித்தாலும், விமர்சிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பெரியாரியாவாதிகள்,அம்பேதக்ரியவாதிகள ஜெயமோகன் எழுதியதை விமர்சிப்பார்கள், அதை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும் என்றே தோன்றுகிறது. கடந்த 20 /25 ஆண்டுகளில் காந்தி, காந்தியம், தேசிய இயக்கம், குறித்து தலித்திய,பெரியாரிய, இடதுசாரி, பெண்ணிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவற்றையும்/விமர்சனப் பார்வைகளையும் கருத்தில் கொண்டே இன்று காந்தி/காந்தியம் குறித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும். மேலும் இன்று பலவேறு பகுதிகளில் அன்று அதாவது சுதந்திரப் போராட்ட காலத்தில் நிலவிய அரசியல் நிலைமைகள், இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் பல கிடைக்கின்றன.(3). காங்கிரஸ்மையவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்படாத இவை கவனத்திற்குரியவை. அவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது.

(1) http://www.kalachuvadu.com/issue-97/index.asp

(2) http://jamalantamil.blogspot.com/2008/04/blog-post_10.html
(3)GANDHI’S PHILOSOPHY: PREMODERN, MODERN, OR POSTMODERN?-Nick Gier (ஜெயமோகன் சமீபத்திய கட்டுரையில் இவர் எழுதிய நூலைக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கோணத்தில் அவர் காந்தியை அணுகுயிருப்பதை குறிப்பிடவில்லை)
http://www.class.uidaho.edu/ngier/gpm.htm
(4)உ-ம் Partition Politics and Achhut Identity: A Study of the Scheduled Castes Federation and Dalit Politics in U.P., 1946-48.Ramnarayan Singh Rawat

பி.கு: 1, இந்த விமர்சனம் ஒரு பூர்வாங்க விமர்சனம்தான், உதாரணத்திற்காக சிலவற்றை எழுதியுள்ளேன் பலவற்றை வேண்டுமென்றே சுட்டிக்காட்டவில்லை, விரிவாக விமர்சிக்கவில்லை. இப்போது அவற்றை எழுதினால் ஜெயமோகன் நூலில் அவைகளை கருத்தில் கொண்டு மாற்றம் செய்ய வாய்ப்பளித்தது போலாகிவிடும். இந்தக் குறைகள் இன்னாரால் சுட்டிக்காட்டப்பட்டன, இந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டன, அவற்றினை கருத்தில் கொண்டு மாற்றி எழுதியுள்ளேன் என்று வாசகர்களுக்கு உண்மையை சொல்கிற நேர்மையை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதும் விரிவான விமர்சனத்தினை இப்போது வைக்காததற்கு இன்னொரு காரணம்.
2,ராஜதுரையின் வரட்டு பெரியாரியத்தை நான் ஏற்கவில்லை. சுந்தர ராமசாமி காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது.இந்த விமர்சனக் கட்டுரையில் ஜெயமோகன் எழுதியுள்ளதையே எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன்
3,காந்தி/காந்தியம் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு. அவற்றை விரிவாக எழுதியதில்லை. பின்னர் ஆங்கிலத்தில் எழுத எண்ணம்.

http://ravisrinivas.blogspot.com

தொடரும்

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்